Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அன்பென்ற மழையிலே!- கதை திரி | SudhaRaviNovels

அன்பென்ற மழையிலே!- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
14


ஆன்லைன் மீட்டிங்கை முடித்துவிட்டு, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள் வைஷ்ணவி. லேப்டாப்பின் அருகிலிருந்த டிஜிட்டல் கேமரா அவளது கண்களில் பட்டது. எடுத்து தனது லேப்டாட்டுடன் இணைத்து அதிலிருந்த படங்களைப் பார்க்கத் துவங்கினாள்.

ஒவ்வொரு படத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்னால் ஜனனி வந்து நின்றதை அவள் கவனிக்கவே இல்லை.

“ஹேய்! வைஷு இந்த போட்டோல நீ ரொம்ப அழகா இருக்கப்பா. நான் ஏன் இவ்ளோ டல்லா தெரியறேன்” என்று அவள் பேச, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ எப்போ வந்த?” என்று மாமன் மகளைக் கேட்டாள்.

“ரெண்டு நிமிஷம் இருக்கும்” என்றவள், “எதுக்கு நீ தனியா இங்கே உட்கார்ந்து பார்த்துட்டு இருக்க? வெளியே வா டிவில கனெக்ட் பண்ணா எல்லோரும் பார்க்கலாமே” என்றவள், அவளது பதிலுக்குக் காத்திருக்காமல் கேமராவை தனியாக எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றாள்.

அவளது வார்த்தைகளைத் தாமதமாகவே உணர்ந்த வைஷு, சுதாரித்துத் தடுப்பதற்குள், ஜனனி அறையிலிருந்து வெளியேறியிருந்தாள்.

பதட்டத்துடன் அவள் பின்னால் ஓடினாள்.

“தாத்தா, பாட்டி, அத்தான், அக்கா, அத்தை, மாமா, ஸ்ரீ அண்ணா, ராஜேஷ் அண்ணா, அப்பா, அம்மா எல்லோரும் ஹாலுக்கு ஆஜராகுங்க. ஃபங்க்‌ஷன் போட்டோஸ் பார்ப்போம்” என்று அவள் ஊரையே அழைத்தாள்.

பின்னாலேயே வந்த வைஷுவின் முகம் பேயறைந்ததைப் போல ஆனது. எல்லோரும் சேர்ந்து தனக்கு எதிராகச் சதி செய்வது போலவே இருந்தது.

‘இவன் செய்து வைத்திருக்கும் வேலையை, இன்று வீடே பார்க்கப் போகிறது. ராஜேஷின் எதிரில் போன மானம் இப்போது மொத்தமாகப் போகப் போகிறது’ என்று எண்ணியவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தன.

ஓரிருவரைத் தவிர மொத்தக் குடும்பமும், ஹாலில் தான் குடியிருந்தது. நேராக டிவியும் கேமராவை ஜனனி இணைக்க, ஆர்வத்துடன் அனைவரின் பார்வையும் டிவியைப் பார்க்க, வந்த வழியே பின்னாலேயே நகர்ந்தவளை யாரோ பிடித்து நிறுத்தினர்.

திரும்பிப் பார்த்தால், ஜெயந்தி.

“மீட்டிங் முடிஞ்சிடுச்சாம்மா!” என்று அன்புடன் கேட்டார்.

“ம்ம்” என்று அவள் தலையை உருட்ட, “அப்போ, உட்காரு” என்று தன்னுடனேயே அழைத்து வந்தார்.

ஒவ்வொரு புகைப்படமும் நகர நகர, நெஞ்சத்தின் படபடப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. ‘நிறுத்துங்க’ என்று ஓவெனக் கத்தவேண்டும் போலிருந்தது.

ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒருவரின் விமர்சனமும், அதைக் கிண்டல் செய்வதைப் போல அடுத்தவரின் கேலி என்று வீடே கலகலப்புடன் இருந்தது.

அவர்களைப் பார்க்கப் பார்க்க, ‘தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என்று புரியாமல் தனது விதியை நொந்து கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால், பார்வை மொத்தமும் ஒருவித கலக்கத்துடன் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தன.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அவள் எதிர்பார்த்ததைப் போல ஒரு புகைப்படம் கூட இதுவரையில் வரவில்லை. அவ்வளவு ஏன்? தன்னை முன்னிலைப்படுத்துவதைப் போலவோ, தனியாகவே அதில் ஒரு படம் கூட இல்லை.

அச்சமும், கலக்கமுமாக பார்த்துக் கொண்டிருந்தவளது முகம் குழப்பத்தையும், யோசனையையும் ஒருசேர பிரதிபலித்தது. ஹாண்டி கேமை அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றபின் அவன்மட்டுமே எடுத்த புகைப்படங்களில் கூட, அவள் எதிர்பார்த்ததைப் போல எதுவுமே இல்லை.

நியாயமாகச் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மனத்தில் ஏதோ ஒரு வெறுமை படர்ந்தது. மெல்லத் திரும்பி அவளுக்குப் பக்கவாட்டில் சற்று பின்னால் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.

தனது பாட்டியிடம், ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருந்தவனை இமைக்காமல் பாத்தாள்.

‘தான் தான் அவனைத் தவறாக நினைத்துவிட்டோம். அவன் எத்தனை முறை சொன்னான். நான்தான் அவனது வார்த்தைகளை நம்பவே இல்லை’ என்று நினைத்தவளுக்கு, தன் மீதே வெறுப்பாக இருந்தது. முகம் சுருங்க, சட்டென எழுந்து தனது அறைக்குச் சென்றாள்.

அவனைச் சந்தித்த நேரத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் தனது நினைவிற்குக் கொண்டுவந்தாள். எந்த இடத்திலுமே அவன் மீது ஒரு சிறு தவறு கூட இல்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

இரண்டு முறை ராஜேஷ் என்று எண்ணி தான் செய்த மடத்தனத்தினால் தான் அவன் தன்னிடம் பேசியதே. அதன் பிறகும், ராஜேஷ் இல்லையென்றதால் தான் தன்னிடமிருந்த ஹாண்டிக்கேமை வாங்கினான்.

அவனிடமிருந்து ஹாண்டிக்கேமை பறித்தது, பார்க்கிங்கில் அவனிடம் தன்னைப் போட்டோ எடுத்ததாகக் குற்றம் சாட்டியது, அனுமதி இல்லாமல் அவனது பொருளைக் களவாடியது எல்லாவற்றிற்குமே தான் மட்டுமே காரணம் என்று இப்போது தெளிவாகப் புரிந்தது.

அத்துடன், அவனது தொடுகை கூட, விழ இருந்த தன்னைக் காப்பாற்ற மட்டுமே என்று உணர்ந்தவள் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

சமாளித்துக் கொண்டு எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தாள். தவறு, தன் மீது தான். எல்லாவற்றிற்கும் அவனைக் குற்றவாளியாக்கி நிற்க வைத்ததற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவளாக, ஹாலுக்கு வந்தாள்.

ஸ்ரீயின் குடும்த்தினரையும், ராஜேஷையும் தவிர அனைவரும் இருந்தனர். ராஜேஷின் திருமணப் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு தினங்களில் நாள் நன்றாக இருப்பதாகவும், அன்றே பெண்ணைப் பார்த்துக் கையோடு தாம்புலம் மாற்றிக் கொள்ளலாம். ஜனனியின் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு, திருமணம் வைத்துக் கொள்வதாகப் பேசி முடிவெடுக்கப்பட்டது.

டைனிங் டேபிளில் அமர்ந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தவளிடம், “வைஷு! எத்தனை நாள் லீவ் போட்டிருக்க?” என்று கேட்டார் வளர்மதி.

“ஒன் வீக் அத்தை!” என்றாள்.

“நீ லீவ் போட்டாலும் உன் ஆஃபிஸ்ல விடமாட்டாங்க போல. இன்னைக்கே ஆன்லைன் மீட்டிங்ல உட்கார வச்சிட்டாங்களே” என்றாள் ஜனனி.

”என்ன செய்றது? வேலையாச்சே செய்து தானே ஆகணும்” என்றாள் சிரிப்புடன்.

“அதுக்காக லீவில் கூடவா” என்ற ஹரிணி, “இந்தா, உன்னோட டிஜி கேம்” என்று கொடுத்தாள்.

“இது…” என்று ஆரம்பித்தவள், மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.

“ராஜேஷ் எங்கே?” எனக் கேட்டாள்.

“ஒரு வேலையா, ஸ்ரீ அண்ணாவோட தென்காசி வரைக்கும் போயிருக்காங்க” என்றாள் ஜனனி.

“ஓஹ்!” என்று கேட்டுக் கொண்டாள்.

“தாத்தா, பாட்டி எங்கே?”

“குடும்பத்தோடு வாக் போய்ட்டு வரேன்னு கிளம்பிட்டாங்க” என்ற ஜனனி, “திடீர்ன்னு ஏன் அவங்களைக் கேட்கற?” என்று கேட்டாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்தாங்க. இப்போ காணோமேன்னு கேட்டேன்” என்றாள்.

வீட்டின் அருகிலிருந்த ஒரு கோவிலின் குளக்கரையில் தனது கணவர், மாமனார், மாமியார் சகிதம் அமர்ந்திருந்தார் ஜெயந்தி.

‘முக்கியமான விஷயம் பேசணும். கொஞ்சம் வெளியே போய் பேசலாமா?’ என்று கேட்ட மருமகளை வியப்புடன் பார்த்தார் பத்மஜா. ‘மகன் என்று வந்ததும், தேளாகக் கொட்டுபவள் கூட, இப்படிச் சாதுவாக மாறிப் போனாளே!’ என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை அவரால்.

‘பேச வேண்டும் என்று அழைத்து வந்தவரால் பேச்சை எப்படி ஆரம்பிப்பது?’ என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயந்தி.

அதைப் புரிந்தவராக, “என்னம்மா விஷயம்?” எனக் கேட்டார் ஜனார்தனன்.

நிமிர்ந்து கணவரைப் பார்த்தவர், மாலையில் வளர்மதியுடன் நடந்த உரையாடலை சொன்னார்.

“நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு செய்திருக்கீங்க?” என்று மீண்டும் அவரே கேட்டார்.

“மறுக்க எங்களுக்கு எந்தக் காரணமும் இல்ல. வீட்டுக்குப் பெரியவங்க நீங்க என்ன நினைக்கறீங்கன்னும் தெரியணுமில்ல” என்றவர், “ஸ்ரீநிக்கும் அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கு” என்றார்.

‘ஹும்! ஆக மொத்தத்தில் என் பிள்ளைக்குப் பிடிச்சிருக்கு. எங்களுக்கும் சம்மதம். சொல்ல வேண்டிய கடமைக்கு உங்க ரெண்டு பேருக்கும் விஷயத்தை தெரியப்படுத்தி விட்டேன்’ என்று நாசூக்காகச் சொல்லிவிட்ட மருமகளை ஏற இறங்க பார்த்தார்.

”ம்ம், நல்ல குடும்பம். நமக்கு நல்லா தெரிஞ்ச குடும்பம். படிச்சி நல்ல வேலைல இருக்கா. எல்லாமே ஒத்துவந்தால் முடிச்சிட வேண்டியது தான். என்ன சொல்ற பத்மா?” என்று கேட்டார் ஜனார்த்தனன்.

“ம்ம், ஸ்ரீக்குப் பிடிச்சிருக்கில்ல அப்புறம் சொல்றதுக்கு என்ன இருக்கு?” என்றார் அவர்.

“அப்போ, இங்கேயே பேசிடலாமா? இல்ல…” – ஜனார்த்தன்.

“பேசிடுவோம் அப்பா! எதுக்குத் தள்ளிட்டே போகணும்? எல்லோரும் பக்கத்திலேயே இருக்காங்க. ஸ்ரீயும், வைஷுவும் பேசறதுன்னாலும் பேசி முடிவெடுக்கட்டும். அவங்களுக்கு மனசு ஒத்துப் போச்சுன்னா முகூர்த்தத்தைக் குறிச்சிடலாமே” என்றார் சுந்தரம்.

கோவிலிலும் கடைசி பூஜைக்கான மணியடிக்க, “கடவுளே உத்தரவு கொடுத்துட்டார். ஆராதனையைப் பார்த்துட்டுக் கிளம்புவோம்” என்று சுந்தரம் சொல்ல, அனைவரும் மனநிறைந்த சந்தோஷத்துடன் எழுந்தனர்.

மணி பத்தரை. தனது அறையிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்தாள். வராண்டாக்களில் ஆங்காங்கே விடிவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. கதவைப் பூட்டிக்கொண்டு ஓசை வராமல் படியேறினாள்.

அவளது வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பதைப் போல ராஜேஷின் அறையில் மட்டும் விளக்கெறிந்து கொண்டிருந்தது. மெல்லக் கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த ராஜேஷ் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“தூங்கலையா நீ?” என்று கேட்டான்.

“உன் ஃப்ரெண்ட்…”

“இருக்கானே…” என்றான்.

“யாருடா? என்றபடி அங்கே வந்த ஸ்ரீயின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்தன.

தயக்கத்துடன் அவனைப் பார்த்தவள், “ரெண்டு நிமிஷம் பேசணும். ப்ளீஸ்!” என்றாள்.

இருவரையும் பார்த்த ராஜேஷ், “அந்தப் ப்ளீஸை நீ எனக்குத் தான் சொல்லணும்” என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

அவன் மௌனமாக நிற்க, கையில் மறைத்து வைத்திருந்த டிஜி கேமை அவனிடம் நீட்டி, “சாரி!” என்றாள்.

எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டவன், “இட்ஸ் ஓகே!” என்றான் இலகுவாக.

மெல்ல விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்து, “தேங்க்ஸ்” எனச் சொல்ல, அவன் தோள்களைக் குலுக்கி, “யூ ஆர் வெல்கம்” என்றான் புன்னகையுடன்.

எப்படி எல்லாவற்றையும் இவனால் இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்று எண்ணியபடியே, “வரேன்” என்று நகர்ந்தாள்.

படியருகில் சென்றவளை, “வைஷு!” என்றழைத்தான்.

அசையாமல் நின்றவளிடம், “குட் நைட்” என்றான்.

முகத்தை மட்டும் திருப்பி, “குட் நைட்” என்றவள் ஓட்டமும் நடையுமாக தனது அறையை நோக்கிச் சென்றாள்.
 
  • Like
Reactions: Indhupraveen

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
15


அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வைஷு, தன்னை யாரோ அழைத்தபடி உலுக்குவதை உணர்ந்து

மசமசத்த விழிகளைத் திறப்பது பெரும் சிரமமாக இருக்க, யாரென்று பார்த்தாள்.

மந்தகாசப் புன்னகையுடன் அவளருகில் அமர்ந்திருந்தாள் ஜனனி.

“ஹாய்! குட்மார்னிங்!” என்றபடி எழுந்தாள் வைஷு.

“வெரி குட் மார்னிங்!” என்றவள், சோம்பல் முறித்தபடி போர்வையை ஒதுக்கி விட்டு எழுந்தாள்.

“சீக்கிரம் போய் பிரஷ் பண்ணிட்டு வா. உனக்காக காஃபி ரெடியாகிட்டு இருக்கு” என்றாள்.

‘எதற்கு இவளுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?’ என்று புரியாமல், “காலங்கார்த்தால விருந்தோம்பலெல்லாம் பலமா இருக்கு?” என்று கேட்டாள்.

“சொல்றோம் சொல்றோம். நீ சீக்கிரம் ரிஃப்ரெஷ் ஆகி வா” என்று அவளை விரட்டாத குறையாக அனுப்பி வைத்தாள்.

“என்னடி உளறட்டு இருக்க?” என்று முணுமுணுத்துக் கொண்டே குளியலறையை நோக்கி நடந்தாள்.

அவள் திரும்பி வந்தபோது, ஹரிணியும் அங்கே இருந்தாள். சகோதரிகள் இருவரும் நமட்டுச் சிரிப்புடன் தன்னைப் பார்ப்பதை குழப்பத்துடன் பார்த்தாள் வைஷு.

“காஃபி ஆறிப் போறதுக்குள்ள குடிச்சிடு” என்ற ஹரிணியின் கரிசணையான வார்த்தைகளைக் கேட்டதும், ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்ற பழமொழி தான் அவளுக்கு நினைவு வந்தது.

“என்ன விஷயம்? காலங்கார்த்தால அக்காவும், தங்கச்சியும் என் ரூமுக்கு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.

“இப்படி உட்காரு செல்றேன்” என்று ஜனனி தங்கள் இருவருக்கும் இடையில் வைஷுவை இழுத்து அமர வைக்க, “காஃபியைக் குடிச்சிக்கிட்டே கேளு” என்றபடி காஃபி கப்பை அவள் கையில் கொடுத்தாள்.

இரண்டு மிடறு விழுங்கியவளிடம், “நேத்து ஒரு விஷயம் நடந்தது தெரியுமா?” என்றாள் ஜனனி.

“என்ன?” என்றாள்.

தங்கையைப் பார்த்துக் களுக்கெனச் சிரித்த ஹரிணி, “ஜனனிக்கு நைட் தூக்கமே இல்ல. எனக்குத் தூக்கம் வரல. நீ மட்டும் நிம்மதியா தூங்கறன்னு, என்னை வந்து எழுப்பி விட்டுட்டா” என்றாள்.

“நல்ல மனசு” என்று கிண்டலாகச் சொன்னாள்.

“ம்ம், அதே நல்ல மனசோட உன்னையும் கூட்டணில சேர்த்துக்கலாம்ன்னு உன் ரூமுக்கு வந்தா பூட்டியிருக்கு” என்றாள் ஜனனி.

அதுவரை ஏதோ சொல்லப்போகிறாள் என்று கேட்டுக்கொண்டிருந்தவள், ஜனனி சொன்னதைக் கேட்டு கப்பை வாயில் வைத்தபடியே திருதிருவென விழித்தாள்.

அவளது கரத்தை கீழே இறக்கிவிட்ட ஹரிணி, “நீ எங்கே போன?” என்று கேட்டாள்.

“ந்நா..ன்.. இங்கேயே தான் இருந்தேன். தூங்கியிருப்பேன்” என்றாள் தடுமாற்றத்துடன்.

“இந்தக் கதையெல்லாம் வேணாம். நீ எப்பவும் ரூமை பூட்டமாட்டேன்னு இந்த வீட்ல இருக்க எல்லோருக்கும் தெரியும். இப்போ, காலைல கூட ரூம் பூட்டாமல் தான் இருந்தது” என்றாள் அவள் விடாமல்.

‘இப்படிக் கையும் களவுமாக மாட்டிக் கொண்டோமே’ என்று அவளுக்கு சங்கடமாக இருந்தது. மலங்க மலங்க விழித்த அவளது பார்வையைச் சகோதரிகள் இருவரும் ஆர்வத்துடன் பார்த்தனர்.

“என்னவோ கள்ளத்தனம் செய்ற… சொல்லு சொல்லு என்ன விஷயம்?” என்று இருவரும் விடாமல் கேட்க, அவள் எதுவும் இல்லை என்று சொன்னாள்.

“நானே சொல்லவா! ஸ்ரீ அண்ணாவோட ரொமான்ஸ் பண்ணத்தானே போன?” என்றாள் ஜனனி.

“ஏய்! வாயை மூடு. ஏதாவது உளறாதே. அவரோட டிஜி கேம் என்கிட்ட இருந்தது. அதைக் கொடுக்கப் போனேன்” என்றாள் அவள்.

“ம்ம், அப்படியா! அதை, ஈவ்னிங் நான் உன்னிடம் திருப்பிக் கொடுக்கும் போதே என்னிடம் சொல்லியிருந்தா, நானே அண்ணாகிட்ட கொடுத்திருப்பேன். எதையோ சொல்ல வந்து பாதியில நிறுத்திட்டு வாங்கிக்கிட்ட. அப்போ எனக்கு எதுவும் தோணல. ஆனா, இப்போ…” என்று முறுவலித்தாள்.

சலிப்புடன், “நீ நினைக்கறது போல எதுவும் இல்ல. ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கால…” என்று ஆரம்பித்து தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை மட்டும் விட்டுவிட்டு, அவனிடமிருந்து கேமராவை வாங்கி வந்ததையும், அதை ஜனனி எடுத்துச் சென்றதையும் சொன்னாள்.

‘நீ சொன்ன எதையும் நாங்கள் நம்பவில்லை’ என்பதைப் போன்ற பாவனையுடன் சகோதரிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நடந்ததைச் சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்றாள் எரிச்சலுடன்.

“சரி சரி நாங்க நம்பறோம். அதுக்காக அழுதிடாதே. ஆனா, நீ இவ்ளோ ஃபீல் பண்ணத் தேவையே இல்ல” என்று ஹரிணி சொல்ல, “ஆமாம். ஆமாம்” என்று ஒத்திசைப் பாடினாள் ஜனனி.

அவள் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, “மூணு பேரும் இங்கே தான் இருக்கீங்களா?” என்றபடியே வந்தார் வளர்மதி.

“நல்ல வேளை அத்தை! இந்தப் பைத்தியங்ககிட்டயிருந்து என்னைக் காப்பாத்திட்டீங்க” என்று சிறு நிம்மதி அடைந்தாள் வைஷு.

”ஹேய்! நாங்க பைத்தியம்ன்னா, நீ யாராம்?” என்று அவளுடன் மல்லுக்கு நின்றாள் ஜனனி.

“ஏய்! அறிவு கெட்ட ஜனனி! எதுக்கு இப்படிக் குதிக்கிற? பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க” என்று செல்லமாக மிரட்டினார் வளர்மதி.

“ம்ம், இந்த அம்மாவுக்கு எப்பவும் வைஷுன்னா ஸ்பெஷல். அவளை மட்டும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றாள் கடுப்புடன்.

”நாங்களெல்லாம் ரொம்ப ஸ்மார்ட்டாக்கும். உன்னை மாதிரி இல்ல” என்று அவள் சிரிக்க, ஜனனி அவளை மேலும் சீண்ட என்று அந்த இடமே சிரிப்பும், வம்புமாக மாறியது.

“ஹப்பா! வைஷு உன் சப்தம் தெரு வரைக்கும் கேட்குது” என்றபடி அங்கே வந்த கற்பகம் மகளின் முகத்தில் தெரிந்த சிரிப்பை மனங்குளிர பார்த்தார்.

அதைக் கவனித்தவள், “போச்சு. எங்கம்மா இப்போ ஃபீலிங்க்ஸ் மோடுக்குப் போறாங்க. நான் எஸ்கேப்” என்றபடி குளியலறையை நோக்கி ஓடினாள்.

அன்று முழுவதும் சிரிப்பும், பேச்சுமாகவே கழிந்தது. ஸ்ரீயை இரண்டு மூன்று முறை நேருக்கு நேராகச் சந்திக்க நேர்ந்த நேரத்தில் சிறு முறுவலுடன் அவனை இயல்பாகக் கடக்க முடிந்தது அவளால்.

ஆனால், ராஜேஷிடம் மட்டும் சிறு இடைவெளியைக் கடைபிடித்தாள். அவன் இருக்கும் இடத்தில் இருந்தால் வேறு ஏதோ வேலையில் இருப்பதைப் போலவும், முடிந்த வரை அவனது கண்களில் படாமலும் இருந்து கொண்டாள்.

நாள் முழுவதும் அவளது கண்ணாமூச்சி ஆட்டத்தை இரசித்துக் கொண்டிருந்த ராஜேஷி, அன்று மாலை தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தவள் எதிரில் சென்று நின்றான்.

அவனைச் சற்றும் எதிர்பார்க்காதவள், சமாளிப்பாகச் சிரித்துவிட்டு அவனைச் கடந்து செல்ல, “ஏய்! நில்லு” என்றான்.

மாட்டிக்கொண்ட உணர்வுடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“இங்கே வா” என்று அவளை கிணற்றின் அருகில் அழைத்துச் சென்றவன், “எதுக்கு என்னைப் பார்த்து ஓடுற?” என்று கேட்டான்.

“யாரு! நானா? இப்போ கூட நீ கூப்பிட்டதும் வந்து நிக்கிறேனே!” என்றவளை கிண்டலாகப் பார்த்தான்.

அவளுக்கும் தனது செயலை நினைத்துச் சிரிப்புவர, “உன்னை அவாய்ட் பண்ணணும்ன்னு நினைக்கலப்பா! ஆனா, கொஞ்சம் நெர்வஸா இருக்கு” என்றவள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள விரல்களை கோர்ப்பதும், பிரிப்பதுமாக இருந்தாள்.

வாய்விட்டு நகைத்தவன், “இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல. பண்றதையெல்லாம் பண்ணிட்டு நெர்வஸா” என்றான்.

செல்லமாகச் சிணுங்கியவள், “இதுக்குத் தான் ஓடினேன். நான் வேணும்னே எதுவும் செய்யல ராஜேஷ்” என்றவள் காலையில் அவனைத் தேடி அறைக்கு வந்தது முதல் நடந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன், “ம்ம், தெரியாமல் தானே இத்தனையும் நடந்தது. நீ வேணும்ன்னு எதுவும் செய்யலையே…” என்றான்.

அவன் இவ்வளவுச் சுலபமாக எடுத்துக் கொள்வான் என்று எதிர்பார்க்காதவள், அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“நீ என்னைத் தப்பா நினைக்கலையா ராஜேஷ்!” என்று கேட்டாள்.

“ஹேய்! எனக்கு உங்க ரெண்டு பேரையுமே நல்லா தெரியும். அதிலும், நீ நினைப்பது போல அவனும் இல்லை. ரொம்ப ஜென்யூன். ரெஸ்பான்சிபில் பெர்சன். அவனை மிஸ்டேக் பண்ணிக்காதே. இல்லன்னா, நம்ம வீட்ல அவனும் ஒருவனா இருக்க, அப்பா, அம்மா சம்மதிப்பாங்களா?” என்றான்.

உண்மைதான் என்பதைப் போல தலையை ஆட்டியவள், “அதில்லப்பா! காலைல நடந்தது கூட ஓகே. ஆனா, ஈவ்னிங் நீ என்னை…” என்றவள் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“ஓஹ் இருவரையும் அறைக்குள் பார்த்ததும், தான் சிரித்தது தான் அவளை இப்படி ஓட விட்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, “சொன்னேனே… உங்க ரெண்டு பேரையும் எனக்கு நல்லாவே தெரியும்” என்றான்.

“தேங்க்யூ!” என்றாள்.

“ம்ம்… என்றவன், “ஆனா, ஒரே நாள்ல அவனை நீ கதற விட்டுட்ட” என்று அவன் சிரிக்க, அவளும் சிறு நாணத்துடன் புன்னகைத்தாள்.

அப்போது தான் நினைவு வந்தவளாக, “உன் ரூமை எப்போ சௌண்ட் ப்ரூஃப் பண்ண?” என்று கேட்டாள்.

“சௌண்ட் ப்ரூஃபா! எதுக்கு பண்ணணும்? அதுவும் என் ரூமை? யார் சொன்னது?” என்று அவன் புரியாமல் கேட்க, அவள் திருதிருவென விழித்தாள்.

உதட்டை அழுந்த கடித்தவள், “யாரோ சொன்னது போல நினைவு” என்று சொன்னவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

ஆனால், அவன் தன்னை பயமுறுத்த சொன்ன விஷயத்தை எண்ணி மெல்லப் புன்னகைத்தவள், “ஃப்ராடு!” என்று முணுமுணுத்தாள்.
 
  • Like
Reactions: Indhupraveen

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் - 16


முன்தினம், ராஜேஷிற்குப் பெண் பார்க்க வீட்டில் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். ஜனனியும், வைஷுவும் மட்டும் வீட்டில் இருப்பதாகவும் மற்றவர்கள் சென்று வருவதாகவும் ஏற்பாடு.

அன்று தனது பெற்றோருடன் ஸ்ரீநிவாஸ் வெளியில் சென்றுவிட பாட்டியும், தாத்தாவும் அவர்களுக்குத் துணையாக வீட்டிலேயே இருப்பதாகச் சொல்லி முடிவானது.

பெண்ணை அனைவருக்கும் பிடித்துவிட, அவர்களும் மறுநாளே மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து பேசி நிச்சயத்திற்கும் நாளைக் குறித்தனர். எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. அவர்கள் கிளம்பும் நேரத்தில், பெண்ணின் சின்ன அத்தை வைஷ்ணவியைப் பற்றி கற்பகத்திடம் விசாரித்தார்.

கற்பகமும் மகளைப் பற்றிச் சொல்ல, “ரொம்ப சந்தோஷங்க. எங்க அக்கா பையன் சௌதில இருக்கான். ரெண்டே பசங்க தான். பெரியவனுக்கு முடிஞ்சிடுச்சி. சின்னவனுக்குப் பார்த்துட்டு இருக்காங்க. உங்களுக்குச் சம்மதம்ன்னா சொல்லுங்க. அடுத்த மாசம் பெரியவனோட கல்யாணத்துக்கு இந்தியா வராங்க. அப்போ மேற்கொண்டு பேசலாம்” என்றார்.

கற்பகத்திற்குச் சட்டென என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அவரது பார்வை ஹாலில் ராஜேஷிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீநிவாஸின் பக்கமாகச் சென்றது. அவனுக்கு அருகில் நின்றிருந்த வைஷ்ணவி அவன் சொன்ன ஜோக்கிற்கு சிரித்துக் கொண்டிருந்தாள். அவரது மனத்திற்குள் ஏதோ ஒரு தெளிவு பிறந்ததைப் போலிருந்தது.

புன்னகையுடன் திரும்பியவர், “எங்களுக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவளை அவ்வளவு தூரத்தில் கொடுத்துட்டு, நான் கூட இருந்திடுவேன். ஆனா, என் வீட்டுக்காரரால முடியவே முடியாதுங்க. தப்பாக எடுத்துக்காதீங்க” என்றார் நாசுக்காக.

“பரவாயில்லங்க. வயசுப் பிள்ளைங்க வீட்ல இருந்தா, இதெல்லாம் சகஜமாக பேசிக்கறது தானே. எனக்குப் புரியுது” என்று அவரும் இயல்பாகவே எடுத்துக் கொண்டார்.

வந்தவர்கள் மதிய உணவையும் முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். அன்று முன் மாலைப் பொழுதில் வளர்மதியிடம் வந்தார் ஜெயந்தி. அவர் சொன்னவற்றைக் கேட்டதும், வளர்மதியும் சரி என்றார்.

வீட்டின் வெளிப்புறமிருந்த லானில் அமர்ந்திருந்த பெற்றோரின் எதிரில் சுந்தரம் அமர, அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றார் ஜெயந்தி.

பெரியவர்கள் இருவரும் அவர்களைப் பார்க்க, “அம்மா, ஜெயந்தி உங்ககிட்டப் பேசணும்ன்னா” என்றபடி மனைவியைப் பார்த்தார்.

பத்மஜா மருமகளைப் பார்க்க, “இன்னைக்கு ஈவ்னிங் வைஷ்ணவி வீட்ல பேசலாம்ன்னு இருக்கோம். பெரியவங்க நீங்க முன்னால நின்னு, உங்க பேரனுக்காகப் பேசி நல்லபடியா நடத்திக் கொடுங்க” என்றார்.

பெரியவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, “சந்தோஷமா செஞ்சிடலாம்” என்றார் ஜனார்த்தனன்.

“இன்னைக்கு ஆறுமணிக்கு மேல பக்கத்துத் தெருவிலிருக்கிற அம்மன் கோவில்ல அவங்க அப்பா, அம்மாகிட்டப் பேசிக்கலாம்ன்னு முடிவெடுத்திருக்கோம்” என்றார் சுந்தரம்.

“சரிப்பா. நாங்க தயாரா இருக்கோம்” என்றார் பத்மஜா.

வந்த காரியம் முடிந்தது என்பதைப் போல, ஜெயந்தி அங்கிருந்து செல்ல, ‘பிள்ளைக்குன்னதும் உச்சாணிக் கொம்பிலிருந்து இறங்கி வந்துட்டாளே!’ என்று மருமகளை மெச்சிக் கொண்டார் பத்மஜா.

கோவிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு பிரகாரத்தில் வந்து அமர்ந்தனர். குடும்பத்திற்கு மூத்தவராக ஜனார்த்தனன், சோம நாதனிடம் பெண் கேட்டார். அவர் தாய்மாமனான தயாளனைப் பார்த்தார்.

“பையனுக்கு நான் கேரண்டி மாப்பிள்ளை. அதே போல பொண்ணுக்கும் நான் கேரண்டி சுந்தரம்” என்று சந்தோஷத்துடன் சொன்னார் தயாளன்.

“ஆமாண்ணா! அவங்க ரெண்டு பேருமே எங்க வீட்டுக் குழந்தைங்க. நிச்சயமா அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். எங்களுக்குப் பரிபூரண சம்மதம்” என்ற வளர்மதி, ஆதரவுடன் கற்பகத்தின் கரத்தைப் பற்றிக்கொண்டார்.

கற்பகமும் விகசித்த முகத்துடன் கணவனைப் பார்த்தார். அனைவருக்கும் பரம திருப்தி என்பதை அவர்களது முகமே சொல்லிவிட, ஜெயத்திக்கு சந்தோஷமாக இருந்தது.

சோமநாதனுக்கும், கற்பகத்திற்கும் சம்மதமாக இருந்தாலும், மகளை நினைத்துச் சிறுகலக்கம் மனத்திற்குள் இருக்கவே செய்தது.

காலையில் ராஜேஷின் வருங்கால மாமனாரின் வீட்டிலிருந்த வந்திருந்த போது, வைஷுவை பெண் கேட்ட விஷயத்தை, பேச்சு சுவாரசியத்தில் ஜனனி போட்டுடைத்து விட்டாள்.

“ம்ம், வைஷு நீ வேணாம் வேணாம்னாலும் மாப்பிள்ளை லைன் கட்டித் தான் வராங்க. யாருக்காவது சட்டுன்னு ஓகே சொல்லிடு. யாருக்கானாலும்” என்று அந்த யாருக்கானாலுமில் சிறு அழுத்தத்தைக் கூட்டிச் சொன்னாள்.

வைஷுவோ, அவள் தனக்குச் சொன்ன யாருக்கானாலுமை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அன்னையை ஆழ்ந்து நோக்கியவள், மௌனமாக அறைக்குச் சென்றாள். அப்போது தான் வளர்மதி அன்று மாலை கோவிலில் வைத்து பேசலாம் என்றதை கற்பகத்திடம் சொல்லியிருந்தார்.

இந்த நேரத்திலா ஜனனி இவளிடம் வம்பளக்க வேண்டும் என்று அவர் நினைத்தபடி மகளிருந்த அறைக்குச் சென்றார்.

எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த மகளின் தோளில் கைவைத்து, “வைஷு!” என்றார்.

அதுவரை மௌனமாக இருந்தவள், “ஏன்ம்மா! எல்லோரும் இப்படியே இருக்காங்க? பெண்களுக்குன்னு எந்த இலட்சியமும், ஆசைகளும் இருக்கக் கூடாதா? இருபது வயசுல கல்யாணம் செய்து அடுத்த வருஷமே குழந்தையும் பெத்துட்டா இவங்கள்லாம் நிம்மதியா இருப்பாங்களா?” என்று எரிச்சலுடன் சொன்னாள்.

”இதெல்லாம் சகஜம் வைஷு! உனக்குச் சம்மதமில்லாம எந்த விஷயமும் நடக்கப் போறது இல்ல. கல்யாண விஷயத்துல நான் உன்னிடம் கொஞ்சம் வற்புறுத்தினாலும், உனக்குச் சம்மதமில்லன்னு கட்டாயப்படுத்தலையே. உனக்கு ஆசை, இலட்சியம் கனவு எல்லாம் இருக்கலாம்.

அதுக்கு மேல, பெத்தவங்களுக்குன்னு சில கடமைகள் இருக்கு. அதை, உன்னை மாதிரி பிள்ளைகளும் புரிஞ்சிக்கணும். எதையும் எடுத்தேன்; கவிழ்த்தேன்னு பேசாதே. அவங்க கேட்டதுமே உன்னைக் கலந்துக்காம, நாங்க முடிவு செய்திடலயே. உனக்கான சுதந்திரத்தோடு தான், உன்னை வளர்க்கிறோம். அதை, நினைவு வச்சிக்க.

ஹரிணியும், ஜனனியும் இல்லயா? அவங்க கல்யாணத்துக்குப் பிறகு படிக்கலையா? ஹரிணி கல்யாணத்துக்குப் பின்னால தான் டெய்லரிங் கத்துக்கிட்டா. இப்போ பொட்டிக் வைக்க அவங்க வீட்டுக்காரர் முயற்சி பண்ணிட்டு இருக்காருன்னு எவ்வளவு பெருமையா சொல்லிக்கிறா. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்ன்னு சொல்லியிருக்காங்க. புரிஞ்சிதா!” என்று சற்று அழுத்தமாகவே கேட்டார்.

அவள் தலைகுனிந்து மௌனமாக இருக்க, “நீ எங்க பொண்ணு வைஷு! உன் மேல, உன்னை விட எங்களுக்கு அக்கறை இருக்கு” என்றார் திடமான குரலில்.

அன்னையின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், புரிந்தது என்பதைப் போலத் தலையை ஆட்டினாள்.

“சரி, முகத்தைக் கொஞ்சம் சிரித்தது போல வெளியே வா” என்று மகளின் தாடையைப் பற்றி பிரியத்துடன் சொல்ல, அவளும் மெலிதாக முறுவலித்தாள்.

இதெல்லாம் இப்போது நினைவிற்கு வர, தயக்கத்துடன் கணவரைப் பார்த்தார்.

மனைவியின் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்தவராக, “நமக்கெல்லாம் திருப்தியாக இருந்தாலும், சம்மந்தப்பட்ட ரெண்டு பேரிடமும் கேட்கணும் இல்லையா!” என்றார் சோமநாதன்.

“நிச்சயமா. இந்த வாரம் முழுக்க நாள் நல்லாதான் இருக்கு. நம்ம பிள்ளைங்ககிட்டப் பேசுவோம். விருப்பப்பட்டா அவங்க ரெண்டு பேரும் பேசட்டும். சரின்னா, முகூர்த்தத்தைக் குறிச்சிடுவோம்” என்றார் சுந்தரம்.

தங்களுக்குப் பரிபூரண சம்மதம் என்றபோதும், மகளின் வார்த்தை சம்மதமாக இருக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு இருவருக்குமே இருந்தது.

சோம நாதனைப் பொருத்தவரை படிப்பு, அழகு, வேலை, அந்தஸ்து என்று எதிலும் ஸ்ரீநிவாஸைக் குறைத்து மதிப்பிடும் அளவிற்கு எந்த விஷயமும் இல்லை. தனது மகளுக்கேற்ற ராஜகுமாரன் என்று அவர் அடிக்கடிச் சொல்லும் வார்த்தைக்குச் சற்றும் குறைவில்லாமல் இருந்தான்.

அதே போல கற்பகத்திற்கும், வீட்டிற்கு ஒரே பிள்ளை. அனைவரிடமும் பழகும் விதம். உறவு, சுற்றம் என்று அனைவரிடமும் அனுசரித்துச் செல்லும் விதம். எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் இயல்பு. நிதானமான, கலகலப்பான சுபாவம் என்று எல்லா விதத்திலும் அவரை வெகுவாக ஈர்த்திருந்தான்.

தான் எப்படியெல்லாம் மருமகன் வரவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அத்தனை அம்சத்துடனும் வந்திருப்பவனை மணக்க மகள் சம்மதிக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு அளவிற்கு அதிகமாகவே இருந்தது.

அதிலும், மதியம் ராஜேஷின் வருங்கால மாமனார் வீட்டிலிருந்த வந்தவர்கள் அவளைப் பற்றி விசாரித்ததை எப்படி தெரிந்து கொண்டாளோ! அதிலிருந்து முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு அமர்ந்திருப்பவளை பார்த்துவிட்டுத் தானே வந்திருக்கிறார்.

ஆனால், ஸ்ரீநிவாஸுடன் இதுவரையில் நன்றாகத் தான் பேசிக் கொண்டிருக்கிறாள். ஒருவேளை அவன் மாப்பிள்ளை என்று தெரிந்தால், அவனுடன் சாதாரணமாகப் பேசும் மகள் இந்தத் திருமணத்திற்கு சரியென தலையாட்டி விடுவாள் என்று கண்மூடிக் கொண்டு நம்பிவிடவும் அவர் தயாராக இல்லை.

அதேநேரம், எல்லா தகுதியுடன் வரும் சம்மந்தத்தை விட்டுவிட அவருக்கு சற்றும் சம்மதம் இல்லை. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து மகள் சம்மதித்து விட வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு பொய்த்து விடக்கூடாதே என்றும் எண்ணினார்.

ஹாலிலேயே அமர்ந்திருந்த ஹரிணியும், ஜனனியும் அவர்களை ஆவலுடன் பார்த்தனர். அவர்கள் இருவருக்குமே விஷயம் தெரியும் என்பதால், எதிர்பார்ப்பும், ஆர்வமுமாக அன்னையின் முகத்தைப் பார்த்தனர்.

வளர்மதி சிரிப்புடன், ‘உஷ்!’ என்று மகள்களை எச்சரித்தார். இருவரும் சிறு சிரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் தலையை ஆட்டிக் கொண்டனர்.

“வைஷு எங்கே?” என்று கேட்டார் வளர்மதி.

“அவள் ரூம்ல இருக்கா” என்றாள் ஹரிணி.

“ஏதோ போன் வந்தது. நல்லாதான் பேசிட்டு இருந்தாள். திடீர்ன்னு கொஞ்சம் கவலையா பேசினா. அப்படியே ரூமுக்குப் போனவள் தான்” என்றாள் ஜனனி விளக்கமாக.

வளர்மதியும், கற்பகமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அர்ச்சனைத் தட்டை பூஜையறையில் வைத்தார் வளர்மதி.

அவர் பின்னாலேயே வந்த கற்பகத்திற்கு ஏனோ சட்டெனக் அழுகை வந்துவிட, அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“எதுக்காக இப்படிக் கண்கலங்கற? மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. கடவுள் மேல பாரத்தைப் போடு. எனக்கென்னவோ, இந்தக் கல்யாணத்துக்கு வைஷு நிச்சயம் சம்மதிப்பான்னு உள்ளுணர்வு சொல்லுது. ரெண்டு பேரும் நேரம் பார்த்து வைஷுகிட்டப் பேசுங்க” என்றார் வளர்மதி.

கிணற்றின் மீதிருந்த சிமெண்ட் சிலாப் மீது கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த வைஷு தூரத்தில் தெரிந்த நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள். மெலிதான தென்றல் காற்று மேனியைத் தீண்டுவதை இரசிக்கும் மனநிலையில் இல்லை என்பதை அவளது வெறித்த பார்வையே சொன்னது.

“நமக்கே நமக்குன்னு ஒருத்தர் வேணும் வைஷு! அவங்க மனசு நம்மையே சுத்தி வரும் போதும், நமக்காக மட்டுமேன்னு யோசிக்கும் போதும் வர்ற ஃபீலே தனி. நான் அதை இப்போ முழுசா அனுபவிச்சிட்டு இருக்கேன்” என்று போனில் தோழி சொன்ன வார்த்தைகள் இப்போதும், அவளது காதுகளில் ஸ்பஷ்டமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் - 17


“கற்பகம் வைஷு ஏதாவது மறுத்துச் சொன்னாலும், நீ ஏதாவது பேசிடாதே. கொஞ்சம் பொறுமையாக இரு. நான் அவளுக்குப் பக்குவமா பேசிப் புரிய வைக்கிறேன்” என்றார் சோமநாதன்.

‘அவளை ஏதாவது பேச வேண்டுமென்று எனக்கென்ன ஆசையா!’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாலும், சரியென்பதைப் போல தலையை மட்டும் அசைத்தார் கற்பகம்.

கதவைத் தட்டிவிட்டு எட்டிப் பார்த்த மகளை, “வாம்மா” என்றார்.

“ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்களேப்பா! என்ன விஷயம்?” என்றவள், தந்தை சொல்லப் போகும் விஷயத்தை ஓரளவு கணித்து வைத்திருந்ததால் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

“உட்காருடா!” என்று தன்னெதிரில் மகளை அமரவைத்துக் கொண்டார்.

“அப்பா முதல்ல பேசிடுறேன். நான் முடிச்சதுக்குப் பிறகு நீ உன்னோட கருத்தைச் சொல்லு” என்றார் நிதானமான குரலில்.

இடமும் வலமுமாகத் தலையை ஆட்டியவளுக்கு தான் எதிர்பார்த்த அதே விஷயம் தான் என்பது விளங்கியது.

“உனக்கு நல்ல வரன் வந்திருக்கும்மா. அவங்க எல்லோருக்கும் உன்னை ரொம்பவே பிடிச்சிருக்காம்” என்றார்.

தவிப்பும், தயக்கமுமாக பெற்றவர்களை மாற்றி மாற்றிப் பார்த்தவள், உதட்டைக் கடித்துக் கொண்டு மௌனமாக இருந்தாள்.

மற்ற நேரமாக இருந்தால் அவளது உணர்வுக் கொந்தளிப்பு வேறுவிதமாக இருந்திருக்கும். மதியம் அன்னை சொன்ன அறிவுரை, தோழியின் வார்த்தைகள் இரண்டும் அவளது உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

மகளிடமிருந்து இதுவரை எழும் வழக்கமான முகச்சுருக்கமோ, சலிப்போ, எதுவுமே வெளிப்படாமல் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதே அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எங்களுக்கும் இந்த வரனையும், அவங்க குடும்பத்தையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. நமக்கேற்ற குடும்பம்” என்றதும் யோசனையுடன் தந்தையைப் பார்த்தாள்.

“ஆனால், உனக்குப் பரிபூரண சம்மதம் என்றால் மட்டும் தான் கல்யாணம்ன்னு சொல்லிட்டோம்” என்றார் திடமான குரலில்.

விழிகள் விரிய அவர்களைப் பார்த்தாள்.

‘மதியம் அன்னையும் இதே வார்த்தைகளைத் தான் சொன்னார். என்னவோ அவ்வளவு தூரத்தில் கொடுக்க சம்மதமில்லை என்று அவர்களிடம் சொன்னதாக ஜனனி சொன்னாளே. இப்போது அப்பாவே சம்மதித்து விட்டாரே’ என்று நினைத்துக் கொண்டாள்.

“உன்னை மாதிரியே வீட்டுக்கு ஒரே வாரிசு” என்றதும் நெற்றியைச் சுருக்கினாள்.

‘மதியம் வந்த சம்மந்தம் இது அல்லவே! அப்படியெனில், இந்த வரன் வேறா! இதற்குத் தான் ஜனனி லைன்ல வராங்க என்று கேலியாகச் சொன்னாளோ!” என்றெண்ணியபடி யோசனையுடன் தந்தையைப் பார்த்தாள்.

மகளின் அமைதியே கற்பகத்திற்குப் போதுமானதாக இருக்க, “எதுக்கு இப்படி சஸ்பென்ஸ் வச்சிப் பேசிட்டிருக்கீங்க? அந்த வரன் யாருன்னு சொல்லுங்க. அப்போதானே அவளும் ஒரு முடிவுக்கு வரமுடியும்” என்றார்.

“ம்ம், அதுவும் சரிதான்” என்றவர், “நம்ம ராஜேஷோட ஃப்ரெண்ட் ஸ்ரீநிவாஸுக்குத் தான்ம்மா கேட்டிருக்காங்க” என்றதும், சட்டென உடலில் புது ரத்தம் பாய்வதைப் போல நிமிர்ந்து அமர்ந்தாள்.

மனத்திற்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்றதொரு உணர்வு. சில நொடிகள் கண்களை மூடினாள். ஸ்ரீநிவாஸின் குறும்பு தவழும் சுந்தர வதனம், சற்றும் பிறழாமல் அவளது கண்களுக்குள் தெரிந்தது.

படக்கென கண்களைத் திறந்தாள். அவளையும் அறியாமல், கண்ணீர்த் துளியொன்று அவளது கையில் பட்டுத் தெறித்தது. பெற்றவர்கள் கண்ணில் படும்முன் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வேகமாக எழுந்து கதவருகில் சென்றாள்.

இருவரும் மகளையே பார்த்தனர். அவளது செய்கை, சோமநாதனின் மனத்திலிருந்த நம்பிக்கையை வேரோடு பிடுங்கியதைப் போலிருந்தது.

கதவைத் திறந்தவளுக்குத் தவிப்பாக இருந்தது. அவளது மனம் இரண்டாக பிரிந்து நின்று அவளைக் கேலியாகச் சிரித்தது. தான் என்ன நினைக்கிறோம்? என்ற முடிவிற்கே வர முடியாமல் தவித்தாள். ஆயினும், ஏனோ அங்கிருந்து அவளால் வெளியேறவும் முடியவில்லை.

தனக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால், அது ஒரு நண்பனாகவா! அன்றி தன் வாழ்க்கையையே அவனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கா! என்று அவளால் பகுத்தறிய முடியவில்லை.

இதுவரையில் வந்த வரன்களைத் தட்டிக்கழித்ததைப் போல ஏன் என்னால் மறுக்க முடியவில்லை? இதென்ன இப்படியொரு அவதி? என்றெண்ணியவள் தயக்கத்துடன் திரும்பி பெற்றோரைப் பார்த்தாள்.

கட்டிலின் கைப்பிடியில் முழங்கையை ஊன்றி நெற்றியைத் தடவியபடி சோமநாதன் அமர்ந்திருந்தார்.

தாய் அறியாத சூலா! பெற்றோரின் பார்வையில் தனது கண்ணீர் பட்டுவிடக்கூடாது என்று அவள் செய்த பிரயத்தனமெல்லாம் கற்பகத்தின் பார்வைக்குத் தப்பவில்லை. கற்பகம் தீர்க்கமான பார்வையுடன் மகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

மகள் நிச்சயம் இந்தத் திருமணத்தை மறுக்கப் போவதில்லை என்பதைப் போன்றதொரு உறுதியான முடிவில் இருந்ததைப் போல அவரது முகம் சிறு புன்னகையை ஏந்தியிருந்தது.

தந்தையின் அருகில் வந்தவள், “அப்பா!” என்று மென்குரலில் அழைத்தாள்.

நிமிர்ந்து தன்னைப் பார்த்தவரின் முகத்தைப் பார்க்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது. தனது கை விரல்களை ஆராய்வதைப் போன்று பார்த்துக் கொண்டே, “எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்ப்பா! ப்ளீஸ்!” என்றாள்.

அவளது அந்த வார்த்தைகளே திருமணத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டதைப் போல இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

“சரிடாம்மா! உன்னோட சந்தோஷம் தான் எங்களோட சந்தோஷம்” என்ற தந்தையின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், “தேங்க்யூப்பா!” என்ற போது அவளது குரல் வெகுவாக தழைந்து நெகிழ்ந்திருந்தது.

தன் அறைக்கு வந்தவளால், ஓரிடத்தில் அமர முடியாமல் பரபரவென இருந்தது. அவளது எண்ணம் முழுவதையும் ஸ்ரீநிவாஸே பிடிவாதமாக ஆக்கிரமித்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். ஆனாலும், மனத்திலிருக்கும் குழப்பம் தெளியாமல் அவளால் ஒரு முடிவிற்கு வரமுடியாது என்பது புரிய படுக்கையில் விழுந்தாள்.

‘உறக்கம் மட்டும் வருவேனா!’ என்று அவளை அலைகழித்துக் கொண்டிருந்தது. சிறுவயதில், தினம் காலைல எழுந்து குளிச்சிட்டு நெத்திக்கு விபூதியை வச்சிக்கிட்டு சஷ்டியைச் சொன்னா, மனசுல இருக்க குழப்பமெல்லாம் பறந்து போயிடும். நமக்கு எப்பவும் நல்லதே நடக்கும், அந்தக் கடவுளே நம்மளோட இருக்கறது போல இருக்கும்’ என்று பாட்டி சொன்ன வார்த்தைகளைத் தொடர்ந்து கடைபிடித்து வருபவள்.

இப்போதும் மனத்திற்குள் சஷ்டியைச் சொல்லியபடி படுத்திருந்தவள், தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

“வைஷு! வைஷு!” என்று அழைத்த அன்னையின் குரல் அவளுக்குத் தாலாட்டை போலிருந்தது போலும்.

“ம்ம்” என்றாள் பின்பாட்டாக.

“ஹேய் வைஷு! மணி ஏழரை ஆகுது. எழுந்திரு” என்று கற்பகம் மகளை உலுக்கினாள்.

ஏழரை என்றதும் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து, “என்னம்மா இவ்வளவு நேரம் தூங்க விட்டுட்டீங்க!” என்று குறைபட்டுக்கொண்டே குளியலறைக்குள் நுழைந்த மகளை புன்னகையுடன் பார்த்தார்.

தயாராகி அறையிலிருந்து வெளியில் வந்தவள் முதலில் பார்த்தது ஸ்ரீநிவாஸைத் தான்.

“ஹாய் குட் மார்னிங்!” என்றான் உற்சாகத்துடன்.

சற்று தடுமாறியவள், “குட் மார்னிங்!” என்றபடி அவனைக் கடந்து சென்றாள்.

‘நேற்று வரை நன்றாகத் தானே பேசிக்கொண்டிருந்தாள். இப்போதென்ன ஆனது?’ என்று எண்ணி புருவங்கள் நெறிய கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தவன், ‘என்னவோ’ என்பதைப் போலத் தோள்களைக் குலுக்கிக் கொண்டு நகர்ந்தான்.

சமையலறைக்குள் நுழைந்தவளிடம், “காஃபி கலக்கட்டுமா வைஷு!” என்று கேட்டார் வளர்மதி.

“இல்லங்கத்தை! நேரமாகிடுச்சே. நேரா டிஃபனே சாப்பிட்டுட்றேன்” என்றாள்.

“ஒரு அரை மணி நேரம் ஆகும்மா” என்றார் அவர்.

“பரவாயில்லங்கத்தை” என்றாள்.

உறக்கம் கலைந்து கலையாமலும் சிணுங்கிக் கொண்டிருந்த மகனை இடுப்பில் சுமந்தபடி வந்தாள் ஹரிணி.

“காலைலயே ஆரம்பிச்சிட்டான்” என்று சலித்துக் கொண்டவள், “வைஷு! இவனைக் கொஞ்சம் பிடியேன். கொஞ்சம் சமாளி. கஞ்சி காய்ச்சி எடுத்துட்டு வரேன்” என்று குழந்தையை அவள் கையில் திணித்து விட்டுச் சென்றாள்.

“அம்மா…” என்று சிணுங்களுடன் ஆரம்பித்தவனை, “மகிழ் கண்ணா! இங்கே பாரு யார் இருக்காங்கன்னு” என்று டைனிங் டேபிளில் வந்தமர்ந்த ராஜேஷின் அருகில் சென்று அமர்ந்தாள்.

“என்னடா மகிழ்! காலைலயே பாட்டு க்ளாஸ் ஆரம்பிச்சாச்சா?” என்று குழந்தையை வாங்கினான்.

தூக்கம் கலைந்த எரிச்சலில் இருந்த குழந்தை, மேலும் அழுகையை உச்சஸ்தானிக்குக் கொண்டு செல்ல, அவனைத் தூக்கி விளையாட்டு காட்டினான். ஆனால், எதற்கும் அசராமல் தனது ஸ்வரத்தைக் கூட்டிக் கொண்டே சென்றான்.

“சரிடா சரிடா அழக்கூடாது. மகிழ் குட்டிக்கு என்ன வேணும்? பசிக்குதா?” என்று வைஷு குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் விம்மிக் கொண்டிருக்க, ஹரிணி கெட்டியாகக் காய்ச்சிய கேழ்வரகுக் கஞ்சியுடன் வந்தாள்.

“வைஷு கஞ்சியை அவனுக்கு ஊட்டிடுறியா? உங்க அண்ணன் ஆஃபிஸ் விஷயமா கொஞ்சம் வெளியே போகணும்னாம். நான் அவரைப் பார்த்துட்டு வரேன்” என்றாள்.

“ம்ம்… ம்ம்ம்…” என்று கேலியாகக் கண்களைச் சிமிட்ட, “ஹும்! இங்கே யாரு குழந்தைன்னு தெரியவே மாட்டேன்னுது” என்று கிண்டலாகச் சொல்லிக் கொண்டே வைஷுவின் அருகில் அமர்ந்தாள் ஜனனி.

“போதும்டி! உங்க வீட்ல மட்டும் என்னவாம்? ஜனி ஜனின்னு உன் வீட்டுக்காரர் உன் முந்தானையையே பிடிச்சுட்டுச் சுத்தறது இல்லயா!” என்றாள் ஹரிணி.

“ஜனனியே இத்தணூண்டு பேர். இதில் செல்லமா ஜனியா” என்று சிரித்தாள் வைஷு.

உடன் சேர்ந்து புன்னகைத்த சகோதரியை கடுப்புடன் பார்த்தவள், “நாங்களாவது பரவாயில்லை. உங்க வீட்ல நடந்த ஜலக்கிரீடை கூத்தைச் சொல்லவா!” என்று ஜனனி ஆரம்பிக்க, “ஏய் கொன்னுடுவேன்” என்று தங்கையின் வாயைப் பொத்தினாள் ஹரிணி.

அவளது கரத்தை விலக்கி, “உனக்கு அப்புறமா சொல்றேன் வைஷு” என்றாள் கடமையாக.

குழந்தைக்குக் கஞ்சியை ஊட்டியபடியே, “அம்மா தாயே அந்தச் சென்சார் கதையெல்லாம் எனக்கு வேணாம்” என்றாள் வைஷு.

“எருமைங்களா!” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவள், “ஹனி!” என்ற குரலில் திடுக்கிட்டு நின்றாள்.

ஜனனி அடக்கமட்டாமல் சிரிக்க, தலையிலேயே அடித்துக் கொண்டாள் ஹரிணி.

“பழக்க தோஷத்துல அத்தான் இன்னும் ஏதாவது சொல்லிக் கூப்பிடுறதுக்குள்ள ஓடு ஓடு” என்றாள் ஜனனி.

”இந்த மனுஷன் இருக்காரே…” என்று மென்குரலில் சலித்துக் கொண்டு, “வரேங்க” என்றவள், முகத்தில் சிறு வெட்கமும் சிரிப்புமாக அங்கிருந்து ஓடினாள்.

அத்தை மகளும் மாமன் மகளும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

அங்கே வந்த ஸ்ரீநிவாஸ், “என்ன ஒரே சிரிப்பா இருக்கீங்க? எனி குட் நியூஸ்!” என்றான்.

வைஷு சட்டென அமைதியாகிவிட, “அது ரகசியம். அப்படி உங்களுக்குத் தெரியணும்னா, வைஷு சொல்வா” என்றாள்.

“ஏய்!” என்றாள் வைஷு ரகசியக் குரலில்.

“ம்ச்சு! உன்னை ரகசியக் குரல்ல பேசச் சொல்லலடி. அண்ணாக்கு அப்புறமா அந்த ரகசியத்தைச் சொல்லிடு” என்றாள் வேண்டுமென்றே.

கண்களை உருட்டி அவளை முறைத்தாள்.

இருவரையும் பார்த்தவன், “இதைத்தான் சொல்றாங்களா லேடீஸ்கிட்ட ரகசியம் தங்காதுன்னு” என்று தீவிரபாவனையுடன் கேட்டான்.

வைஷு என்ன சொல்லியிருப்பாளோ, அந்த நேரத்தில் பாட்டி அங்கே வந்து அமர பெண்கள் இருவரும் அமைதியாக இருந்தனர்.

“என்ன பாட்டி? ரெண்டு பேரும் ஜாலியா வாக்கிங் போய்ட்டு வரீங்களா?” என்று கேட்டான் அவன்.

“நாங்க வாக்கிங் போனது இருக்கட்டும். நீ நைட் எப்போ வந்த? உன் அம்மா உன்னிடம் முக்கியமா ஏதோ பேசணும்ன்னு சொல்லிட்டு இருந்தா” என்றவர் குறிப்பாக வைஷுவைப் பார்த்தார்.

அவளோ கவனமாக குழந்தைக்கு உணவைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“நைட் ஷோ போயிருந்தோம் பாட்டி. திடீர்ன்னு தான் படம் பார்க்கலாம்ன்னு தோணுச்சி. ராஜேஷும் போகலாம்ன்னான். சரின்னு தியேட்டர் உள்ளே நுழைஞ்சாச்சி” என்றான்.

‘அப்படியானால், இவனுக்கு இன்னும் விஷயம் தெரியாது போலும். அதனால் தான் காலையில் இயல்பாகத் தன்னிடம் பேசினானோ!’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளை, “ஐ! பத்தர் ப்ளை” என்ற குழந்தையின் குரல் நினைவுக்குக் கொண்டு வந்தது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
அத்தியாயம் - 18

“அத்தை! பத்தர் ப்ளை!” என்று கைக் கொட்டிச் சிரித்த குழந்தையை ஆசையுடன் பார்த்தாள்.

“அத்தை! தம்பிக்கு பத்தர் ப்ளை வேணும்” என்று குழந்தை கேட்டதும், “மகிழ் குட்டிக்கு இல்லாததா?” என்றபடி கஞ்சி கிண்ணத்துடன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள்.

வானவில்லின் வர்ணஜாலத்தைப் போல வெவ்வேறு வண்ணங்களில் சிறகடித்துக் கொண்டிருந்த பட்டாம் பூச்சிகளைக் கண்டவளின் மனமும் மகிழ்ச்சியில் பூரித்தது.

“மகிழ் குட்டி! உங்களுக்காக எவ்ளோ பட்டர்ப்ளைஸ் வந்திருக்கு பாருங்க” என்று சொல்ல, கைக்கொட்டிச் சிரித்த குழந்தையின் கன்னக்குழியில் அழுந்த முத்தமிட்டாள்.

குழந்தையுடன் சேர்ந்து தானும் குழந்தையாக மாறினாள். குழந்தை வேகமாகக் கையை நீட்டி அவற்றைப் பிடிக்க முயல, வண்ணத்துப் பூச்சிகள் வேகமாக வேறு பக்கமாகப் பறந்தன.

“அத்தை! வேணும்…” என்று பூவின் மீது அமர்ந்திருந்த ஒரு வண்ணத்துப் பூச்சியைக் கைநீட்டிக் கேட்டான்.

“நீங்க இந்தக் கஞ்சியைக் குடிப்பீங்களாம். அத்தை பிடிச்சிக் கொடுப்பேனாம்” என்று சமாதானமாகப் பேசிக்கொண்டே இரண்டு ஸ்பூன் ஊட்டினாள்.

அதற்குமேல் தாக்குப் பிடிக்காமல், அவன் மீண்டும் ஆரம்பிக்க வேறு வழியின்றி வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க முயன்றாள். அவளால் முடியவில்லை. “அச்சோ! பறந்து போச்சுப்பா” என்றவளின் குரலுக்குச் செவி சாய்க்காமல், “பத்தர் ப்ளை வேணும்” என்று பிடிவாதமாகச் சொன்னவன், அவளது கரத்தைத் தட்டிவிட்டான்.

‘என்ன கொடுமைடா!’ என்று நினைத்துக் கொண்டு குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்று முடியாமல் அவனைக் கீழே இறக்கிவிட்டாள்.

குழந்தை காலை உதைத்துக் கொண்டு அழ, தோட்டத்தைக் கடந்து சென்ற ஸ்ரீநிவாஸ், வைஷ்ணவியின் சமாதானக் குரலைக் கேட்டு அங்கே வந்தான்.

“மகிழ்! எதுக்கு அழறீங்க?” என்று கேட்டுக் கொண்டே குழந்தையைத் தூக்கிக் கொண்டான்.

குழந்தையுடன் மல்லுகட்டியதில், ஒரு பக்கமாக தரையில் புரண்டு கொண்டிருந்த துப்பட்டாவை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு சற்று தள்ளி நின்றாள்.

மீண்டும் பத்தர்ப்ளை புராணம் ஆரம்பமாக, “மகிழ் குட் பாய் தானே! இப்படி அழலாமா? ப்ரேவ் பாய்லாம் அழமாட்டாங்களே!” என்று ஏதேதோ பேசியவன், குழந்தையைத் தனது தோளின் இரு பக்கமும் காலைப் போட்டு அமர வைத்துக் கொண்டான்.

“அடே! மகிழ் மாமாவை விட உயரமாகிட்டானே!” என்று உற்சாகத்துடன் சொல்ல, இரு கைகளையும் சந்தோஷத்துடன் தட்டிய மகிழ், “அத்தை!” என்று ஆரவாரமாக சொல்லி தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டினான்.

குழந்தையை இறக்கி விடுவதும், மீண்டும் தூக்கித் தோளில் அமர வைப்பதுமாக விளையாட்டு காட்டியதில், பட்டாம்பூச்சியை அவன் மறந்தே போனான்.

சற்று நேரத்தில் மீண்டும் வண்ணத்துப் பூச்சிகளின் கூட்டம், பூக்களை மொய்க்க ஆரம்பிக்க, வைஷு அதில் ஒன்றை பிடிக்க முயன்றாள்.

அதைக் கண்ட ஸ்ரீ, “வேண்டாம் வைஷு! அவன் டைவர்ட் ஆகிட்டான். விட்டுடுங்க” என்றான்.

“குழந்தை விருப்பப்பட்டுக் கேட்டான்” என்றாள் அவள்.

“குழந்தைங்க கேட்கறாங்கன்னு எல்லாத்துக்கும் சரின்னு சொல்லக் கூடாது. ஏன் வேண்டாம்ன்னு கேட்டா, அதுவும் நம்மை போல ஒரு ஜீவன். அதை அதன் போக்கில் சுதந்திரமா விடணும். கைல பிடிச்சா நமக்கு சந்தோஷமா இருக்கும். ஆனால், அந்த உயிருக்கு வலிக்கும்ன்னு சொல்லிக் கொடுக்கணும்” என்றான்.

அவனை ஆழ்ந்து பார்த்தவள், “இதெல்லாம் பல பெரியவங்களுக்கே புரியறது இல்ல. இதில் குழந்தைக்குப் புரியுமா?” என்றாள் கிண்டலாக.

“குழந்தைங்களுக்குத் தான் சுலபமா புரியும். மனிதன் தன்னோட ஆயுட்காலத்துல கத்துக்கற விஷயங்கள்ல 50% தன்னோட ஐந்து வயசுக்குள்ள கத்துக்கறது தான். அடுத்து வரும் தலைமுறை மனிதாபிமானமுள்ளவர்களா உருவாகணும்ன்னா, அதுக்கான விதையை நாம தான் விதைக்கணும்” குழந்தையுடன் விளையாடிக்கொண்டே இவையனைத்தையும் அவளுடன் பேசிக்கொண்டிருந்தான்.

அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். திடீரென மனத்தில் ஒரு எண்ணம் எழ, அவனிடம் பேச வாயைத் திறந்த நேரம், “ஸ்ரீ!” என்றபடி அங்கே வந்தார் ஜனார்த்தனன்.

“சொல்லுங்க தாத்தா!” என்றான்.

அவர் ஏதோ பேங்க் பற்றிய விவரங்களை அவனிடம் பேச ஆரம்பிக்க, அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்றெண்ணி, குழந்தையுடன் வேறு பக்கமாக நகர்ந்தாள். ஆனால், அவ்வப்போது அவளது பார்வை சிந்தனையுடன், அவன்புறமாகவே சென்று வந்தது.

மனத்தில் திடமான முடிவு ஏற்பட்ட போதும், அதை எப்படி நிறைவேற்றுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. தான் எடுத்த முடிவைச் செயல்படுத்த அவள் நேரம் பார்த்துக் கொண்டிருக்க, அதற்கான நேரம் மட்டும் வாய்க்காமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.

காலை உணவிற்குப் பிறகு, ஸ்ரீநிவாஸ் தனது பெற்றோருடன் வெளியே கிளம்பிச் சென்றுவிட்டான். அவன் கிளம்புவது தெரிந்ததும், அதற்குள் அவளுக்குச் சப்பென்றானது.

இருந்தும், ‘அவனது பெற்றோர் இன்னமும் அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்றே தெரிகிறது. இந்த நேரத்தில் நான் சென்று என்னவென்று ஆரம்பித்து விஷயத்தைச் சொல்வது. முதலில் அவனுக்குத் தெரியட்டும். பின்பு பேசிக் கொள்ளலாம்’ என்று தனக்கே சொல்லிக் கொண்டாள்.

என்னதான் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், அவனிடம் இதைப் பற்றிப் பேசி ஒரு தீர்வு கிடைக்கும் வரை தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று தொன்றியது.

வேலைகளெல்லாம் நம் அவசரத்திற்கு நடந்துவிடுமா என்ன?

ஐந்தருவியில் ஒரு குளியல் போட்டுவிட்டு உடையை மாற்றிக்கொண்டு தன்னருகில் வந்தமர்ந்த மகனைப் புன்னகையுடன் பார்த்தார் ஜெயந்தி.

தலையைத் துடைத்துக் கொண்டிருந்த மகனின் கையிலிருந்த துண்டை வாங்கி, அவனது தலையைத் துவட்டி விட்டார்.

“அப்புறம்மா! என்ன விஷயம் பேசணும் என்கிட்ட?” என்று கேட்டான்.

“விஷயமா! என்ன விஷயம்?” என்றவர் மர்மமாகக் கணவரைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“இந்த மழுப்புறதெல்லாம் வேணாம். என்னை இன்னைக்கு வெளியே கூப்பிடும்போதே ஏதோ விஷயம் இருக்குன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சி. சொல்லுங்க” என்றபடி அவரது முகத்தைப் பார்த்தபடி அமர்ந்தான்.

“ஏன் உன் தாத்தா, பாட்டி எதுவும் சொல்லலையா?” என்றார் வீம்பாக.

அவரை ஆழ்ந்து பார்த்தவன், “அம்மா!” என்றான் சலிப்புடன்.

ஜெயந்தி மகைப் பார்த்தார். அவனது முகத்தில் லேசான எரிச்சல் எட்டிப்ப்பார்த்தது. இன்னும் அவனிடம் விளையாட்டாகப் பேசுவதாக நினைத்துப் பேசினால், கடித்து வைப்பான் என்று புரிய, “அவங்களோட செல்லப் பேரனாச்சே சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன்டா” என்றார்.

இது எதிலும் தலையிடாமல் தனது கைக்கடிகாரத்தைக் கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தந்தையைக் கடுப்புடன் பார்த்தான்.

“அம்மா! அவங்களுக்கும் அவங்களோட லிமிட் எதுன்னு தெரியும்” என்றான் அழுத்தமானக் குரலில்.

மனத்திற்குள் சிறு எரிச்சல் வந்தாலும், “சரிப்பா! தப்புத் தான். உன் தாத்தா, பாட்டியை நான் எதுவும் சொல்லலை. போதுமா!” என்றார் தாங்கலுடன்.

அன்னையின் முகம் சோர்ந்து போனதைக் கண்டவன், “அம்மா! நான் உங்களை மன்னிப்பெல்லாம் கேட்கச் சொல்லல. எல்லாத்திலேயும் நீங்களே ஒரு முடிவை யூகிச்சிக்காதீங்கன்னு சொல்றேன்” என்றபடி அன்னையின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

“இப்போ சொல்லுங்க. என்னை இப்படிச் சொல்லாம கொள்ளாமல் தள்ளிட்டு அந்து தனியாக பேசும் அளவுக்கு ரகசியமான அந்த விஷயம் என்ன?” என்றான் சமாதானக் குரலில்.

ஜெயந்தியும் மேற்கொண்டு எந்த இடக்குமில்லாமல், முந்தினம் நடந்தவற்றை அவனிடம் விலாவரியாகச் சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு யோசனையுடன் தாடையைத் தடவினான்.

“என்னடா! எவ்வளவு முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருக்கேன். நீ எந்த ரியாக்‌ஷனும் இல்லாமல் இருக்க?” என்றார்.

“ம்ம்… சந்தோஷமான விஷயம்தான்ம்மா. ஆனா, அவங்க கிட்டப் பேசறதுக்கு முன்ன என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்” என்றான் நிதானமாக.

பெற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீதானேடா அவளைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன. அதனால தானே பேசினோம். இன்னைக்குக் காலைல கூட அவளிடம் தோட்டத்தில் பேசிட்டுத் தானே இருந்த என்று ஆற்றாமையுடன் கேட்டார்.

“ஆமாம்மா சொன்னேன்…” என்று அவன் பேசி முடிக்கும் முன்பே, “அப்புறம் இப்போ என்ன உனக்கு?” என்றார்.

“சம் இஷ்யூஸ்ம்மா! நான் பேசிட்டுச் சொல்றேன்” என்றான்.

“யார்கிட்ட?” கூர்மையுடன் வந்தது அவரது கேள்வி.

அன்னையை ஊன்றி நோக்கியவன், “என் ஆஃபிஸ்ல பேசணும்மா. ட்ரெயினிங் அனுப்புவாங்க போல…” என்றான்.

“இது உனக்கு முதலிலேயே தெரியாதா?” என்ற ஜெயந்தியின் கேள்வியில் நம்பமுடியாத பாவனை தெரிந்தது.

“ஆர்டர் வந்ததும் சொல்லலாம்ன்னு இருந்தேன்” என்றான்.

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? எப்படியும் பேச வேண்டிய விஷயம் தானே. இதுக்கு எதுக்கு இவ்வளவு வருத்தப்படுற?” என்றார் வேகமாக.

அவன் பதில் சொல்லாமல் இருக்க, மகனை ஆராய்ச்சியுடன் பார்த்தார் ஜெயந்தி.

அவர் மேறிகொண்டு ஏதோ கேட்கத் துவங்குவதை கவனித்த சுந்தரம், “ஜெயந்தி! அவன் குழந்தையில்ல. இப்படித் துருவித் துருவி கேள்வி கேட்கணுமா? பேசிட்டோம். அவங்களும் பொண்ணுகிட்டப் பேசணும். அவங்க முடிவும் தெரியணும். என்ன மூணு மாசத்துக்குள்ள நடக்கற கல்யாணம் மேற்கொண்டு ஆறு மாசம் ஆகப் போகுது அவ்வளவு தானே” என்றார் அவர்.

‘எனக்கென்னவோ இவன் பேச்சில் முழுதாக நம்பிக்கை வரவில்லை’ என்று நினைத்துக் கொண்டாலும், அதற்கு மேல் அவர் எதுவும் பேசவில்லை.

காரில் வரும் வழியில், “ஏன் ஸ்ரீநி! இதைப் பற்றி வைஷுகிட்ட நீ ஏதாவது பேசினியா?” என்று கேட்டார்.

காரைச் செலுத்திக் கொண்டிருந்தவன், “அம்மா! பொறுப்பை உங்ககிட்டக் கொடுத்துட்டேன். நானே பேசறதுன்னா, இந்நேரம் பேசியிருப்பேன்” என்று சிரித்தான்.

சமாதானமாகத் தலையாட்டிக் கொண்டவர் சற்று நேரத்திற்கெல்லாம், “ஒரு வேளை உன்னை அவளுக்குப் பிடிக்குமான்னு சந்தேகமா?” என்றவரை ரியர்வியூ மிரர் வழியாகப் பார்த்தான்.

“சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது. உன்னை எப்படிப் பிடிக்காமல் போகும்?” என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார்.

தந்தையும், மகனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவனுக்குச் சிரிப்புத் தான் வந்தது.

“அம்மா! நான் உங்க பையன்ங்கறதுக்காக, எல்லோருக்கும் என்னைப் பிடிக்கணும்ன்னு இல்ல” என்றான் புன்னகையுடன்.

“போடா! உன்னை மாதிரி ஒரு புருஷன் கிடைக்கிறான்னா கசக்குமா என்ன?” என்றார்.

“அது சரி. உங்க பையன் எப்படின்னு உங்களுக்குத் தெரியும். என்னைக் கட்டிக்கப் போறவளுக்குமா தெரியும்? ஆனாலும், இந்த அம்மாக்களுக்குத் தன்னோட பிள்ளைங்க மேல இவ்வளவு அநியாயத்துக்கு நம்பிக்கையும், பாசமும் இருக்கக் கூடாது” என்று வாய்விட்டு நகைத்தான்.

“நீ ஆயிரம்தான் சொல்லு… என் பிள்ளைக்கு நிகர் அவன் மட்டும் தான்” என்ற அன்னையின் வார்த்தைகள் அவனுக்கு இதமாக இருந்தாலும், இந்த எண்ணம் என்னவெல்லாம் செய்யும் என்ற சிறு அச்சமும் அவனுக்குள் எழுந்தது.