Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அன்பென்ற மழையிலே!- கதை திரி | SudhaRaviNovels

அன்பென்ற மழையிலே!- கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
150
495
63
அத்தியாயம் - 19



தூரத்து மலை முகட்டைத் தழுவிக் கொண்டிருக்கும் மழை மேகங்களையும், சிலுசிலுவென வீசிக்கொண்டிருக்கும் காற்றையும், மறுபக்கத்தில் தெரிந்த பச்சைப் பசேலென்ற வயல்வெளிகளும் மனத்தைக் கொள்ளை கொள்வதாக இருந்தது.

அதைப் பார்த்தபடியே கையிலிருந்த காஃபியை அருந்திக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

இவற்றையெல்லாம் மீறி அவளது மனத்தில் ஏதோ சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை, அவளது செய்கையே உணர்த்திக் கொண்டிருந்தது. தான் இங்கே வந்து அவளருகில் நிற்பதைக் கூட உணராத அளவிற்கு, அவள் சிந்தனைவயப்பட்டிருப்பதை ஆழ்ந்து பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.

“ஹாய்! என்ன பலமான யோசனை?” என்று அவனது குரல் ஒலிக்க, கனவிலிருந்து விடுபட்டவள் போல அவனைப் பார்த்தாள்.

அவனைக் கண்டதும் அவளையும் அறியாமல் இதழ்கள் மலர, “ஹாய்!” என்றபோது, அவளது விழிகளும் மலர்ந்து விரிந்தன.

“பாதி பதில்தான் வந்திருக்கு” என்றபடி கையிலிருந்த காஃபியைப் பருகினான்.

“அது…” என்றவள், அவன் கையிலிருந்த கப்பையும், அங்கிருந்த மேஜையையும் பார்த்தாள்.

சற்றுநேரத்திற்கு முன்பு, “க்ளைமெட் செமையா இருக்கு. மாடிக்குப் போய்க் காஃபி சாப்டுக்கிட்டே இயற்கையை ரசிப்போம்” என்று தன்னை வற்புறுத்தி அழைத்து வந்த ஹரிணி, இதோ வந்து விடுகிறேன் என்று கீழே சென்றதும், இவன் இங்கே வந்து நிற்பதும் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டி விடை கண்டதும், உடல் இறுக நிமிர்ந்து நின்றாள்.

“ரிலாக்ஸ் வைஷு! காஃபியைக் குடிச்சி முடிச்சிடுங்க” என்றான்.

அமைதியாக அவன் சொன்னதைச் செய்தாள்.

காஃபியைக் குடித்து முடித்தவன், அவளிடமிருந்து காலிக் கோப்பையை வாங்க கையை நீட்டினான்.

“இல்ல… நானே…” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “இட்ஸ் ஓகே” என்று அவளிடமிருந்து காலிக் கோப்பையை வாங்கி அங்கிருந்த மேஜையின் மீது வைத்தவன், சிறிது தண்ணீரை ஊற்றி வைத்தான்.

அவனது செயல்களை ஊன்றி கவனித்துக் கொண்டிருந்தாள். இது, தன்னைக் கவருவதற்காக அல்ல என்பது அவளுக்குப் புரிந்தே இருந்தது. இப்போது மட்டுமல்ல, சாப்பிட்டால் கையுடன் தட்டை எடுத்துக் கொண்டு செல்வது, முடிந்தால் அதைச் சுத்தமும் செய்வது என்று இந்த நான்கு நாட்களில் மட்டுமல்ல, முதன்முதலில் அவனைப் பார்த்த போதும், இதையெல்லாம் அவன் செய்தவன் தான் என்றும் அவளுக்குப் புரிந்தே இருந்தது.

கற்பகமும், வளர்மதியும் கூட இதைப் பற்றி சிலாகித்துக் கொண்டது, அவளது நினைவிற்கு வந்தது.

“ம்ம்… இப்போ பேசுவோமா?” என்று கேட்டான்.

நிகழ்வுலகிற்கு வந்தவள், “என்ன?” என்றாள் தடுமாற்றத்துடன்.

“நம்ம ரெண்டு பேர் வீட்லயும் கலந்து பேசினது, உங்களுக்குத் தெரியும்ன்னு நினைக்கிறேன்” என்றவனிடம் ஆமென்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

“இன்னைக்கு, அம்மா சொல்லித்தான் தெரியும். அப்போதான் நீங்க காலைல என்னைப் பார்த்து, கொஞ்சம் நெர்வஸ் ஆனது எதனாலன்னு தெரிஞ்சுது. அப்புறமும், நீங்க ரெண்டு மூணு முறை என்கிட்ட என்னவோ சொல்ல முயற்சி செய்ததையும் கவனிச்சேன். பட், நானே அப்படி நினைச்சிக்கிறேனோன்னு ஒரு டௌட் இருந்தது. அம்மா என்னிடம் பேசின பின்னால தான், அது உண்மைன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

அதான், வீட்டுக்கு வந்ததும் உங்ககிட்டப் பேசிடணும்ன்னு முடிவெடுத்தேன். ஹரிணி மூலமாக நான்தான் உங்களை இங்கே வரவழைச்சேன். உங்ககிட்டக் கலந்துக்காம நான் முடிவெடுத்துட்டேன். இப்போதைக்கு இங்கே யாரும் வரமாட்டாங்க. அதை ஹரிணி பார்த்துக்குவா. நீங்க மனசுவிட்டுப் பேச இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமான்னு தெரியல… அதனால தான் இப்படி அதிரடியா உங்ககிட்டப் பேச வேண்டியதாக ஆகிடுச்சி. உங்களுக்கு ஓகேன்னா பேசலாம்” என்றான்.

உதட்டைக் கடித்தபடி தான் சொல்வதை மலங்க மலங்க விழித்தபடி கேட்டுக் கொண்டிருப்பவளை பார்க்கச் சிரிப்பு வந்தாலும், அவளது நிலை அவனுக்கும் புரிந்தே இருந்தது. ‘இப்படி திடுதிப்பென எதிரில் வந்து பேசு என்றால் அவளும் என்ன பேசுவாள்?’

படித்தவள், சுயமாகச் சிந்திப்பவள் என்றாலும், எதிர்பாராத நேரத்தில் ஒரு நிகழ்வைச் சந்திக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தில் அவள் இருந்தாள்.

பேசவேண்டும் என்று நினைத்தது தான். ஆனால், திடுமெனக் கேட்டால், எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று ஆயாசமாக இருந்தது. உடலை தழுவிச் செல்லும், குளிர்ந்த காற்றையும் மீறி அவளது வதனத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்தன.

துப்பட்டாவால், நெற்றியை லேசாக ஒற்றிக் கொண்டவளுக்கு, தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. எதையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் தான், இப்போது பேசாமடந்தையாக மாறியதை எண்ணி வியப்புக் கூட உண்டாயிற்று.

“உங்களுக்குச் சங்கடமாயிருந்தா, இன்னொரு நாளைக்குப் பேசுவோம்” என்றவனை வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.

‘இன்னொரு நாளைக்கா… அவன் சொன்னதைப் போலச் சந்தர்ப்பம் அமையுமா? தனக்கும் சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்க வேண்டும். அதற்குப் பேசிவிடுவது நல்லது. இல்லாவிடில், திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டவள் படபடப்புடன் அவனைப் பார்த்தாள்.

அவனும் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பேசிடுவோம். எனக்கும் சில விஷயங்களை சொல்லணும். நீங்க அதைச் சரியான விதத்தில் புரிஞ்சிக்குவீங்கன்னு நம்பறேன்” என்றாள்.

“ம்ம்… நிச்சயமா. நீங்க சொல்ற விஷயம் எப்போதும் என்னைத் தாண்டி வெளியே போகாது” என்றவனைப் பார்த்துச் சிநேகத்துடன் சிரித்தாள்.

பதிலுக்குப் புன்னகைத்தவன், “உட்கார்ந்து பேசுவோமா?” என்று கேட்டான்.

“இல்ல இப்படியே…” என்றாள்.

சரியென்பதைப் போலத் தோள்களைக் குலுக்கினான்.

தனது படிப்பு, வேலை என்று பொதுவாகப் பேசியவள், தனது திருமணம் பற்றிய பேச்சில் தனக்கும், பெற்றோருக்கும் நடந்த பேச்சு வார்த்தையைச் சொன்னாள்.

“நம்முடைய சமூக அமைப்புல திருமணம் ஒரு முக்கியமான அங்கம். ஆணோ, பெண்ணோ திருமணம் தான் அவங்களுடைய வாழ்க்கைக்கான ஒரு மைல் கல்லாக வச்சிருக்காங்க. பெத்தவங்களைப் பொருத்த வரைக்கும், தன் குழந்தைகளை செட்டில் பண்ணிட்றோம்ன்னு நினைக்கிறாங்க” என்றவளை ஆழ்ந்து பார்த்தான்.

“எனக்கும் ஒரு நேரத்துல நமக்கு வரப்போற கணவன் இப்படி இருக்கணும். இப்படியெல்லாம் வாழணும்ன்னு ஆசை இருந்தது. ஆனால், என்னோட ஃப்ரெண்ட்ஸ் சிலரோட கல்யாண வாழ்க்கை பிரச்சனைக்கு உரியதாக ஆன போது, என்னை மீறின ஒரு பயம் எனக்குள்ள வந்தது. அவங்க எல்லோருமே ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போறவங்க.

அவங்களுக்கே இந்த நிலைன்னா, நான் எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவேன். இருக்கறதை ஓபனா பேசும் ஆள். அவ்வளவு சீக்கிரம் என்னைக் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன். பிடிவாதம் கொஞ்சம் அதிகம். இந்தக் க்வாலிட்டீஸோட இருக்கும் எனக்கு எப்படி கல்யாண உறவு ஒத்துப் போகும்?” என்றவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் தாடையைத் தடவியபடி, அவள் சொல்வதை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘என்ன இவன் எதற்கும் வினையாற்றாமல் மௌனமாக இருக்கிறானே!’ என்று யோசித்தபடி மேலே பேசினாள்.

“லைஃப்ல பிரச்சனை கண்டிப்பாக வரும். ஆனால், முன்னபின்ன தெரியாத ஒருத்தரைக் கல்யாணம் செய்துட்டு, அவங்களோட சந்தோஷம், துக்கங்களை நம்முடையதாக எல்லோராலும், எல்லா நேரமும் ஏத்துக்க முடியுமா? லைஃப்ல கமிட்மெண்ட் இருக்கணும். அது கம்பல்ஷனா மாறக்கூடாது.

மனதார நான் செய்றதை, என்னைக் கட்டாயப்படுத்திச் செய்ய வைத்தால் அது எப்படி எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்? இதையெல்லாம் என் பேரண்ட்ஸ்கிட்டச் சொன்னா, நாங்களெல்லாம் இல்லையான்னு கேட்பாங்க. அவங்களுக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னும் எனக்குத் தெரியல” என்றாள்.

“ஓஹ் இப்போ என்ன செய்யலாம்? உங்களுக்கு என்னைப் பிடிக்கலன்னு சொல்லிடுங்க. இப்போதைக்குப் பிராப்ளம் சால்வ்ட்” என்றான் தீவிர பாவனையுடன்.

சிறு அதிர்வுடன் அவனைப் பார்த்தவள், “இல்ல இல்ல உங்களைப் பிடிக்காமலெல்லாம் இல்ல…” என்று இழுத்தாள்.

“ஓஹ்! அப்போ பிடிச்சிருக்கா?” என்று குறும்பாகச் சிரித்தான்.

அவனது பார்வையும் பேச்சும், அவளுக்குள் பரபரப்பையும், தவிப்பையும் அதிகமாக்கியது. சொல்லமுடியாத பாவனையுடன் அவனைப் பார்த்தாள்.

சட்டெனச் சிரித்தவன், “ஜோக்ஸ் அபார்ட்! நீங்க ரொம்பச் சீரியஸா பேசினீங்க. அதனால தான் கொஞ்சம் விளையாடினேன்” என்றவன் தீவிர பாவனைக்கு மாறினான்.

“ம்ம், வெல்! நீங்க ஓபனா என்கிட்ட பேச நினைச்சதுக்கும், என்னை நம்பிச் சொன்னதுக்கும் ரொம்பத் தேங்க்ஸ்” என்றவனைப் பார்த்து மெல்ல முறுவலித்தாள்.

“உங்க கல்யாண வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு பயம். உங்க ஃப்ரெண்ட்ஸ் லைஃப் போலவே, உங்க லைஃபும் பிரச்சனையாக ஆகிடுமோன்னு பயப்படுறீங்க. ரைட்!” என்றான்.

ஆமென்பதைப் போலத் தலையை அசைத்தாள்.

“இது, பெரும்பாலானவருக்கு வரும் சின்ன மனக்குழப்பம் தான். இதுக்கு நீங்க இவ்வளவு யோசிக்கணும்ன்னு இல்ல. உங்க பேரண்ட்ஸ் சொன்னதுல எந்தத் தப்பும் இல்லை” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“பிரச்சனை இல்லாத இடமே கிடையாது வைஷு! அதை பெரிதாக மாற்றுவதும், ஒன்றுமே இல்லாம நீர்த்துப் போகச் செய்றதும், நம்ம கைல தான் இருக்கு. நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் சொன்னதைத் தான் கேட்டிருக்கீங்க. அது அவங்க தரப்பு நியாயம். ஆனா, அவங்க மேல என்ன தப்பிருக்குன்னு வெளியே இருந்து பார்க்கறவங்களுக்குத் தெரியாது. அதுக்காக எல்லோருமே அப்படின்னு சொல்லலை.

பெரும்பாலானவங்க, அடுத்தவங்ககிட்ட நம்மள நல்லவங்களா காட்டிக்கத் தான் முயற்சி செய்வாங்க. நடந்ததுக்கு நானும் ஒரு காரணம்ன்னு சொல்ல மாட்டாங்க. பலர் தனக்கு ஒரு முகமூடியைப் போட்டுட்டுத் தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. ஆனா, அது வெளியே தெரியறது இல்ல. தெரியும் போது ரொம்பக் கேவலமா இருக்கும்.

மனசாட்சிக்கு பயப்படுறவங்க தான், உண்மையைச் சொல்வாங்க. ஆனா, அவங்க தான் எல்லோராலும் விமர்சிக்கப்படுபவராகவும் இருப்பாங்க. ஈகோங்கற மூணு எழுத்து வார்த்தை தான் இது எல்லாத்துக்குமே ஆரம்பப் புள்ளி. நமக்குப் பிடிச்சவங்களைக் கூட விட்டுக் கொடுப்போம். ஆனா, எல்லா பிரச்சனைகளுக்கும் காரணக்கர்த்தாவான இந்த ஈகோவைத் தூக்கித் தூரப் போட மாட்டோம்” என்றவனை ஆச்சரியமும், ஆர்வமுமாகப் பார்த்தாள்.

அவனது அன்னைக்கும், பாட்டிக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளை எவ்வளவு அழகாக, கவனமாகக் கையாள்கிறான் என்பதை, அவளும் இடைப்பட்ட நான்கு நாட்களில் பார்க்கத் தானே செய்தாள். அவன் மீதான அபிப்ராயம் மாறுவதற்கே அன்று வளைகாப்பில் கண்ட காட்சி தானே முக்கியக் காரணம் என்ற சிந்தனையில் இருந்தவளை, அவனது குரல் மீட்டுக் கொண்டு வந்தது.

“நீங்களே உங்களைப் பற்றிச் சொன்னீங்க. எதையும் ஈசியா எடுத்துக்க மாட்டேன்… காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்... கோபம் வரும்ன்னு. ஆனா, நீங்க இந்தக் க்வாலிட்டீஸை எல்லோரிடமுமா வெளிப்படுத்தறீங்க? உங்க பேரண்ட்ஸ், ஃப்ரெண்ட்ஸ், ரிலேஷன்ஸ்…” என்றவனை அமைதியாகப் பார்த்தாள்.

“நிச்சயமா இல்லை. எங்கே உங்களுடைய சுயமரியாதை பாதிக்கப்படுதோ அங்கே… அந்த இடத்தில், அந்த நபரிடம் உங்க கோபம் வெளிப்படுது. இது, ரொம்ப நார்மலான விஷயம்” என்றவனை வியப்புடன் நோக்கினாள்.

“இதுக்கு முன்னமே நாம மீட் பண்ணியிருக்கோம். ஆனால், பெரிதா பழக்கம் இல்ல. ராஜேஷ் வீட்டில் யாருடன் பேசினாலும், எப்படியாவது உங்க பேச்சை எடுத்திடுவாங்க” என்றதும் கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.

“தப்பா இல்லங்க. நல்லவிதமாகத் தான் சொல்வாங்க. அதோடு, இந்த நான்கு நாட்களாக தான் எனக்கு உங்களோடு ஓரளவு பழக வாய்ப்பு கிடைச்சது. பார்த்த வரைக்கும் நீங்க ரொம்ப ஸ்ட்ரெய்ட் பார்வர்டான ஆள் என்று புரிந்தது. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் நடந்த நிகழ்ச்சிகளே அதுக்குச் சாட்சி” என்றவன், அவளைப் பார்த்து மிருதுவாகப் புன்னகைத்தான்.

“நாம செய்தது தப்புன்னு தெரிஞ்சாலும், எத்தனைப் பேர் அதுக்காக மன்னிப்புக் கேட்பாங்க? நீங்க கேட்டீங்க. பத்து பேர் சொல்லி, ஒருத்தரை தெரிஞ்சிக்கறதை விட, நாம நேரில் பார்த்துத் தெரிஞ்சிக்கறது அவங்க மேல ஒரு மரியாதையையும், மதிப்பையும் ஏற்படுத்தும். அந்த வகைல நீங்க என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்க” என்றான் முறுவலுடன்.

கண்கள் விரிய அவனைப் பார்த்தவள், தனது கீழுதட்டைக் கடித்தபடி மெல்லத் தலையைக் குனிந்து கொண்டாள். மனம் படபடவென அடித்துக் கொண்டது. விரல்களில் மெல்லிய நடுக்கம் பரவ கண்களையும், கைகளையும் இறுக மூடி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயன்றாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
150
495
63
அத்தியாயம் - 20


வார்த்தைகளால் வடிக்கப்படாத தனது நேசத்தை, அவள் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், தனது காதலையும் செய்கைகளால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அதற்குச் சாட்சியாக நாணத்தில் கன்னக் கதுப்புகள் சிவந்து அழகான ரோஜா நிறத்திற்கு மாறின. அதேநேரம், அவள் ஏதோ குழப்பத்தில் தவிப்பதையும் ஆதூரத்துடன் பார்த்தான்.

புரிந்து கொள்ளப்பட்ட பிரியமாக இருந்த போதும், தனது நேசத்தை அவளிடம் பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும் என்பதில் திடமாக இருந்தான். அவளது குழப்பங்கள் புரிந்த போதும், கிடைத்த வாய்ப்பைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிந்திருந்தவனுக்கு, அதை சாத்தியப்படுத்திக் கொள்ள முடிவெடுத்தான்.

“வைஷு!” என்று காதலுடன் அவன் அழைத்த குரலுக்கு, கவிழ்ந்திருந்த இமைகள் அழகான வெண் குவளை மலரைப் போன்று விரிந்தன.

வியப்பு, மகிழ்ச்சி, தயக்கம், தடுமாற்றம் என்று வானவில்லின் வர்ணஜாலத்தைப் போன்று, அந்த மலர்ந்த விழிகளில் தான் எத்தனை பாவங்கள்! ஒரு சில நொடிகள் பேச்சிழந்தவனாக, சங்கமித்த விழிகள் நான்கும் இணைய, இதயங்கள் அங்கே காதலில் கசிந்துருகிக் கொண்டிருந்தன.

“இது, சரியான நேரம் இல்ல. ஆனா, இப்போ சொல்லலன்னா, கடைசிவரை சொல்ல முடியாமலே போகலாம்” என்று நிறுத்தியவன் ஆழமூச்செடுத்துக் கொண்டு, “உன்னை, எனக்கு ரொம்பப் பிடிக்கும் வைஷு! நிச்சயமா இந்த நான்கே நாட்கள்ல நான் எதையும் முடிவெடுத்திடல. உன்னை முதன்முதல்ல பார்த்ததுமேவும் இல்ல. அதுக்குப் பிறகுதான்…” என்றவனை திகைப்புடன் பார்த்தாள்.

“என்னை எங்கேயோ பார்த்திருக்கேன்னு சொன்னது நினைவிருக்கா?” என்று கேட்க, ஆமென்று தலையாட்டினாள்.

சிறு யோசனையுடன், “அது… அப்…” என்றவளை இடைமறித்து, “கொச்சின்ல பார்த்திருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால்” என்றான்.

நெற்றியைச் சுருக்கி சிந்தித்தவளுக்கு அந்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்ததும் விழிகள் பளிச்சிட, “ஆமாம்… பீச்ல...” என்று தடுமாற்றத்துடன் சொன்னாள்.

முறுவலித்தவன், “ம்ம். அன்னைக்குத் தான் உன்னை, எனக்குப் பிடிச்சிருக்குன்னு எனக்கே புரிஞ்சது. அதுக்குப் பிறகு, ராஜேஷிடம் ஜாடைமாடையா உன்னைப் பற்றி விசாரிச்சிக்குவேன். உன்னைப் பார்க்கவே, ஜனனியோட கல்யாணத்துக்கு வர ரொம்ப முயற்சி செய்தேன். ஆனா, கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத வேலையால வரமுடியாமல் போயிடுச்சி” என்றான்.

அவள் என்ன சொல்வதெனத் தெரியாமல் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். மனத்தில் அவன் மீதான மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுவதை உணர்ந்தாலும், ஏனோ அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவளோ செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தாள்.

அவர்களது மனத்தின் எண்ணத்தை பிரதிபலிப்பதைப் போலத் தூரத்தில் எங்கோ,
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்? என்ற பாடல் ஒலிக்க, இருவருக்குமே சிரிப்பு வந்தது.

“எனக்கு, உன்னைப் பிடிச்சிருக்கு. அதைச் சொல்றதுக்கான சந்தர்ப்பம் வந்ததும் சொல்லிட்டேன். அதுக்காக இப்படியெல்லாம் எமோஷனல் பிளாக்மெயில் பண்ணமாட்டேன்” என்று கடைசியில் ஒரு கொக்கியைப் போட்டு நிறுத்தினான்.

அவ்வளவு நேரம் இருந்த இறுக்கமும், தயக்கமும் மறைய முறுவலை அடக்கிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

“உனக்கும் என்னைப் பிடிக்கணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்ல இல்லயா!” என்றான்.

“ஆமாம். ஆமாம். எனக்கு எந்தக் கட்டாயமும் இல்ல. நீங்களா, என்னை லவ் பண்ணா… அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றாள் அவள் இலகுவாக.

அவள் வழக்கமான இலகுத்தன்மைக்கு வந்துவிட்டதை உணர்ந்து புன்னகைத்தான்.

“என்ன? நான் முடியாதுன்னு சொன்னதும் தாடி வளர்த்துட்டு சோக கீதம் பாடுவீங்களேன்னு ஒரு சின்ன அனுதாபம் தான் இருக்கு” என்றாள் பரிதாபமாக.

அவன் சற்றும் யோசிக்காமல், “இப்படியெல்லாம் உனக்கு நினைப்பா!” என்றான்.

அவள் வியப்புடன் அவனைப் பார்த்தாள்.

“மேடம்! காதல்ல தோற்றவனெல்லாம் தாடி வளர்த்துகிட்டு சோக கீதம் பாடிட்டு இருக்கணும்ன்னு சட்டமா என்ன? நமக்கு ஒரு விஷயம் பிடிச்சிருக்குன்னா அதைச் செய்வோம். ஒரு பொருள் பிடிச்சிருந்தா, வாங்குவோம். இப்போ, அந்த விஷயத்தைச் செய்யமுடியாமல் தடை வந்தாலோ அந்தப் பொருளை வாங்க முடியாமல் போனாலோ கதறிக் கதறி அழவா முடியும். சம்திங் இஸ் பெட்டர் தென் நத்திங்ன்னு அடுத்த சாய்ஸைத் தேடிப் போறது தானே. அப்படி நினைச்சிக்குவேன்” என்றான்.

அவன் ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்தவள், அவனது திடமான குரலையும், தீவிர முகபாவத்தையும் பார்த்து மலங்க மலங்க விழித்தாள். உள்ளுக்குள் சுர்ரென கோபம் ஏறியது.

விளக்கெண்ணெய் குடித்ததைப் போலிருந்த அவளது முகத்தைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

‘நான் என்ன பத்தோடு பதினொன்றா? என்ற ஆத்திரம் எழுந்தது. சரியான அழுத்தக் கூமுட்டை. லவ் பண்ற பொண்ணுகிட்டப் பேசற பேச்சைப் பாரு’ என்று மனத்திற்குள் திட்டிக் கொண்டவள், ‘இப்பவே நல்லா பேசிக்க. இனி, நீ இப்படிப் பேச வாய்ப்பே கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும், உன்னால பேசமுடியாது. பேசவும் விடமாட்டேன்’ என்று கருவிக் கொண்டாள்.

‘இவகிட்ட இப்படி இடக்குமடக்கா பேசினால் தான் காரியத்தைச் சாதிக்க முடியும். அதுக்குத் தான் அவளோட ஈகோவை உசுப்பி விட்டுட்டேன். நீ எப்பவும் படபட பட்டாசாவே இரு. இப்படி தயங்கித் தடுமாறி நீ பேசறது என்னவோ போலயிருக்குடி செல்லம்மா!’ என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்.

“அப்போ, நான் சம்திங்கா? எதுக்கு இவ்வளவு கஷ்டம்? இங்கே யாரும் உங்களுக்காக உருகிட்டு இல்ல. இந்த சம்திங்கை விட்டுட்டு, பெட்டரா ஒன்னைப் பார்த்துக்க வேண்டியது தானே!” என்று கண்களை உருட்டினாள்.

பேச்சை ஆரம்பித்திருந்த போதிருந்த வேகம் முடிக்கும் போது தழைந்து இறங்கிப் போனது.



‘இதேதடா வம்பு!’ என்று எண்ணியவனாக, “லைஃபை காம்ப்ளிகேட் பண்ணிக்கக் கூடாது வைஷு! நீ எனக்கு சம்திங் இல்ல… எவ்ரிதிங்” என்றான் ஆத்மார்த்தமாக.

அவள் மௌனமாக கீழ்க் கண்ணால் அவனைப் பார்த்தாள்.

“என்ன வைஷு? என் மேல் நம்பிக்கை இல்லையா!” என்ற ஸ்ரீநிவாஸின் முகம் சற்று சோர்ந்தது போலிருந்தது.

அவனது முகபாவனை அவளுக்கு உள்ளுக்குள் திருப்தியைக் கொடுக்க, ‘பிலாசஃபியா பேசறீங்க சார்! கொஞ்சம் நேரம் அவஸ்தைப்படுங்க’ என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டவள், “நீங்க கேட்டதுமே என்னால ஓகேன்னு சொல்ல முடியாது. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும்” என்றாள் வீராப்பாக.

‘ஓஹ்! மேடம் என்னைச் சுத்தல்ல விடுறாங்களாம். பண்ணுங்க மேடம் பண்ணுங்க’ என்று மனத்திற்குள் சிரித்துக் கொண்டவன், “ஓகே ஓகே நோ பிராப்ளம்” என்று வேகமாகச் சொன்னவனை, ‘ங்கே!’ என்பதைப் போலப் பார்த்தாள்.

“ஒரு மணி நேரம் போதுமா!” என்று தீவிரமான குரலில் கேட்டவனை உறுத்து விழித்தாள்.

“என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கா?” என்றாள் வேகமாக.

“சேச்சே! நான் அப்படியெல்லாம் நினைப்பேனா? அப்போ ரெண்டு மணி நேரம்…” என்று இழுத்தவனிடம், “ஹலோ! மிஸ்டர் ஸ்ரீநி!” என்றாள் அதிகாரமாக.

அவளது ஸ்ரீநி என்ற அழைப்பு அவனுக்கு இதமாக இருக்க, உள்ளுக்குள் உருகியவனாக, “அப்போ ஒரு மாசம்” என்றவனை மௌனமாகப் பார்த்தாள்.

“ஹும்! முடியாதா… அப்போ, ரெண்டு மாசம். அதுவும் போதாதா… சரி மூணு” என்று விரல் நீட்டி ஒவ்வொரு மாதமாகக் கூட்டிக்கொண்டே போக, அவளையும் மீறி உதடுகளில் முறுவல் தோன்ற, சிரமப்பட்டு கட்டுப்படுத்த முயன்றாலும், கண்கள் அவளைக் காட்டிக் கொடுத்தன.

முகத்தைத் துடைப்பதைப் போல லேசாகக் குனிந்து புன்னகைத்தாள்.

“மூணு மாசமும் முடியாயாதா? என்று போலியான பணிவுடன் கேட்டவனிடம், “ஓகே ஓகே” என்றாள் அலட்சியமாக.

“டன்!” என்று விரலை உயர்த்திக் காண்பித்தவன், ஏதோ கூட்டலும், கழித்தலும் போடுவதைப் போல காற்றில் விரல்களை அலைய விட்டுக் கொண்டிருந்தான்.

அவள் அவனை புரியாமல் பார்க்க, “ம்ம், கூட்டிக் கழிச்சிப் பார்த்தேன். கணக்குச் சரியா வருது. எனக்கும் ஓகே. கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும், அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். ஏன்னா, நானும் வேற ஏதாவது வழி பார்க்கணும் இல்ல” என்று கவனமாகப் பேசினான்.

புருவங்களை நெறித்தபடி, “வழின்னா…” என்றாள்.

“என்னோட லைஃப் பார்ட்னர்.நீ கடைசில வேண்டாம்ன்னு கழட்டி விட்டுட்டா என்ன செய்றது?” என்றவனை உதட்டைக் கடித்துக் கொண்டு பார்த்தாள். இல்லை இல்லை முறைத்தாள்.

‘சரியான ஜகதலப்பிரதாபன்’ என்று அவள் மனத்திற்குள் அவனை திட்ட ஆரம்பிக்க, “ஆனா, அப்படில்லாம் நடக்க சான்ஸே இல்லன்னு உன் கண்ணே சொல்லுதே” என்றவன் பளீரென புன்னகைக்க, மலரத் துடித்த இதழ்களைச் சிரமப்பட்டுக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள்.

”போதும் வைஷு இதுக்கும் மேல என்னைச் சோதிக்காதே. நான் தாங்க மாட்டேன்” என்று பெரிதாக ஒரு கும்பிடு போட்டு அவளெதிரில் குனிந்தான். அவனது செயலைப் பார்த்துச் சிரித்தபடியே அங்கிருந்து ஓடினாள்.

“ஹலோ மேடம்! இந்தச் சிரிப்பையே சம்மதமா எடுத்துக்கட்டுமா!” என்றவனைத் திரும்பிப் பார்த்தவள், “ஸ்ரீநி சார்! வாயைத் திறந்து எல்லா கேள்விக்கும் பதில் சொல்லணும்ன்னு எதிர்பார்க்கக் கூடாது. சிலதை சொல்லாமலேயே புரிஞ்சிக்கணும்” என்றாள் சிரிப்புடன்.

“இப்படி ஒரு லவ் ப்ரொபோசலை யாரும் பார்த்திருக்க மாட்டாங்க” என்று அவன் சலிப்புடன் சொல்ல, அவள் சிரித்தபடி படிகளில் இறங்கியவள் யார் மீதோ மோதிக் கொண்டாள்.

எதிரில் தாங்கள் வருவது கூடத் தெரியாமல் முகம்கொள்ளா சிரிப்புடன் ஓட்டமும் நடையுமாக வரும் மகளை தடுத்து நிறுத்துவதற்குள் கற்பகத்தின் மோதி மோதியவளை சோமநாதன் சட்டென பிடித்து நிறுத்தினார்.

கனவிலிருந்து விடுபட்டவளைப் போல பெற்றோரையும், அவர்களுக்குப் பின்னால் ராஜேஷையும் கண்டவள் திருதிருவென விழித்தாள்.

“கண்ணுமண்ணு தெரியாம எங்கேடி ஓடி வர்ற?” என்ற கற்பகம், மேல் படியில் கையில் காபி கப்புகள் அடங்கிய ட்ரேயுடன் வந்து நின்ற ஸ்ரீநிவாஸைக் கண்டதும் மலங்க மலங்கப் பாத்தார்.

”என்னடா நடக்குது இந்த வீட்ல?” என்று ராஜேஷ் புலம்புவது போல நடித்தான்.

அவனது குரலில் சுதாரித்துக் கொண்ட கற்பகம், “என்ன தம்பி நீங்க இதையெல்லாம்…” என்றவர் மகளிடம், “ஏண்டி இதையெல்லாம் எடுத்துட்டு வரக்கூடாதா?” என்றவர், “நீங்க கொடுங்க தம்பி” என்று அவனை நோக்கி நடந்தார்.

“உங்க மாப்பிள்ளை தானேம்மா. பழகிக்கட்டும்” என்று சொன்னவள் அங்கிருந்து சிட்டாகப் பறந்து செல்ல, கற்பகம் வருங்கால மாப்பிள்ளையையும், தனது கணவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

“மச்சான்! கடைசில நீயும் மாட்டிக்கிட்டியா” என்று ராஜேஷ் நண்பனைத் தோளோடு அணைத்துக் கொள்ள, ஸ்ரீநிவாஸின் பார்வை படிகளில் துள்ளித் துள்ளி இறங்கிக் கொண்டிருந்த தனது தேவதையின் படிந்திருந்தது.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
150
495
63
அத்தியாயம் – 21

வைஷு ஹாலுக்குள் பிரவேசித்த போது, வீட்டிலிருந்த அனைவரும் அவளது வருகையை எதிர்பார்த்து அங்கே கூடியிருந்தனர். சிரிப்புடன் வந்தவளது பார்வை, அனைவரையும் கண்டதும் திகைப்பும், தவிப்புமாக மாறியது.

கூடத்துத் தூணில் சாய்ந்து நின்றிருந்த ஜெயந்தி, தன்னையே குறுகுறுவெனப் பார்ப்பதைக் கண்டவள், சிரிப்பதா! வேண்டாமா? என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். ‘இப்படித் தன்னைச் சிக்க வைத்து விட்டாளே இந்த ஹரிணி’ என்று மாமன் மகள் மீது பொய்க் கோபம் பெருகியது.

முன்னால் வந்த பத்மஜா பாட்டி, “வாடிம்மா, பேரன் பொண்டாட்டி!” என்று அவளது கையைப் பற்றி அழைத்தார்.

தயக்கத்துடன், ஓரக்கண்ணால் ஜெயந்தியைப் பார்த்தாள். அவர் மென்னகை புரிந்ததும், மனத்திலிருந்த தயக்கம் மறைய, சிறு புன்னகை புரிந்தாள்.

“கடைசில, வழிக்கு வந்துட்டா நம்ம வைஷு!” என்று ஹரிணி கலகலத்தாள்.

அவளை உறுத்து விழித்தாலும், அதிலிருந்த போலித்தனம் மெல்லக் கட்டவிழ்ந்து புன்னகையாக மாறியது.

“ஆல் க்ரெடிட்ஸ், கோஸ் டூ ஸ்ரீ அண்ணா!” என்று அங்கே வந்த ஸ்ரீநிவாஸின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் ஜனனி.

“அதெப்படி! இந்த மேட்ச் மேக்கிங்கில், பெரிய பங்கு எனக்கும் இருக்கு. அண்ணா! எனக்கும், உங்க க்ரெடிட்ல பங்கு வேணும்” என்றபடி அவனது மற்றொரு கரத்தைப் பிடித்துக் கொண்டாள் ஹரிணி.

“கல்யாண க்ரெடிட்ல ஒரு பங்கு தான். ஆனா, நான் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டிட்டு, செய்ததோடு கடைசில எல்லோருக்கும் போட்டும் கொடுத்திருக்கியே, அந்த மொத்தக் க்ரெடிட்டும் உனக்கு மட்டுமே தான்” என்று ஸ்ரீநிவாஸ் அவளது காதைப் பற்றித் திருகினான்.

“ஆ..அண்ணா!” என்று போலியாக அலறியவள், “பின்னே, நீங்க ரெண்டு பேரும் என்னைக்கு வீட்ல சொல்லி, மத்த வேலைகளெல்லாம் ஆகறது” என்று அலுப்புடன் சொன்னவளை, தோளோடு அணைத்துக் கொண்டான்.

“அது உண்மைடாம்மா!” என்று தீவிர பாவனையுடன் சொன்னவன், “எப்போ ஓகே சொல்லி, அதை வீட்ல சொல்லி, மத்ததெல்லாம் பேசி…” என்று சொல்லிக் கொண்டே வைஷ்ணவியைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

அவள் திடுக்கிட்டுச் சுற்றும் முற்றும் பார்க்க, அதைக் கண்டவர்கள் மௌனமாகச் சிரித்துக் கொண்டு வேறு ஏதோ மும்முரமாகப் பேசுவதைப் போலப் பாவனை செய்தனர்.

“மூணு பேரும் கூட்டணி போட்டு கலாய்க்கறீங்களா? எங்க வைஷுக்கு நான் இருக்கேன்” என்று ராஜேஷ் அவளருகில் வந்து நிற்க, “நானும் என் மருமகளுக்குத் தான் சப்போர்ட்” என்று ஜெயந்தியும் அவளருகில் வந்து நின்றார்.

அவள் பெருமிதத்துடன் அவனைப் பார்த்துப் புருவத்தை உயர்த்த, “ஐ லவ் யூம்மா!” என்றவன், அன்னையை அணைத்துக் கொண்டு மீண்டும் அவளைப் பார்த்துக் கண்களைச் சிமிட்ட, அவள் மெல்ல உதட்டைச் சுழித்துச் சிரித்தாள்.

அங்கிருந்த அனைவரின் மனமும் சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. ஜெயந்தி, வளர்மதியிடம் ஏதோ சொல்ல, புன்னகையுடன் தலையசைத்தவர் பூஜையறையிலிருந்து குங்குமச் சிமிழைக் கொண்டு வந்தார்.

“வைஷ்ணவி, இங்கே வா!” என்ற ஜெயந்தி, சிமிழைத் தனது மாமியாரிடம் நீட்டினார்.

பத்மஜாவின் விழிகள் பளபளக்க, பேரனின் வருங்கால மனைவியின் நெற்றியில் திலகமிட்டவர், “நீண்ட ஆயுளோடும், சகல ஐஸ்வர்யங்களோடும், தீர்க்கச் சுமங்கலியா வாழணும்மா” என்று ஆத்மார்த்தமாக ஆசீர்வதித்தார்.

அவள் பெரியவர்கள் இருவரையும் நிற்க வைத்து கால்களில் விழுந்து வணங்க, “அப்படியே என்னையும்” என்றபடி ஸ்ரீநிவாஸும், அவளுடன் இணைந்து விழுந்து பணிந்தான்.

ஹரிணி அனைவருக்கும், ஸ்ரீ வாங்கி வந்திருந்த திருநெல்வேலி அல்வாவை கிண்ணங்களில் வைத்துக் கொடுத்தாள்.

“கல்யாணம் நிச்சயமான சந்தோஷத்தைக் கொண்டாட, அல்வா கொடுத்த ஒரே ஆள், நம்ம ஸ்ரீ அண்ணாவா தான் இருக்கும்” என்று ஜனனி அவனைக் கலாய்க்க, அங்கே கலகலவென சிரிப்பொலி எழுந்தது.

இரவு உணவிற்குப் பிறகு, தங்கள் அறைக்குச் செல்ல முயன்ற வைஷ்ணவியின் கையைப் பற்றி, “ஹே வைஷு! இன்னைக்கு, எங்க ரூமுக்கு வா!” என்ற ஜனனி, “அத்தை! வைஷு எங்களோட படுத்துக்கட்டும்” என்றாள் கற்பகத்திடம்.

“சரிம்மா” என்ற கற்பகம் வேறு வேலையை கவனிக்க, “இது, அத்தைக்குச் சொன்ன விஷயமா தெரியலையே!” என்று ராஜேஷ் மென்குரலில் அவளை வம்பிழுத்தான்.

“அண்ணா!” என்று அவனைச் செல்லமாக முறைத்தவள், வைஷ்ணவியை தள்ளிக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள்.

ஸ்ரீநிவாஸ் தனது தாத்தா, பாட்டி, அப்பாவிடம் எதையோ தீவிரமாக விவாதித்துக் கொண்டிருப்பதை, படியில் ஏறும்போது கவனித்தாள். ஆனால், அவள் தங்களைப் பார்த்ததை, ஸ்ரீநிவாஸ் கவனிக்கவில்லை.

“சைட் அடிச்சது போதும்” என்று மேலிருந்து ஹரிணி குரல் கொடுக்க, சிறு முறைப்புடன் அவளைப் பின்தொடர்ந்தாள் வைஷு.

மாடியின் பின் பகுதியிலிருந்த பெரிய தாழ்வாரத்தில் மூன்று பெண்களும் அமர்ந்தனர். மகிழ்நன்னுடன் விளையாட்டு, மாமன் மகள்களுடன் சிரிப்பு, பேச்சு என்று ஒரு மணிநேரம் ஓடிப்போனது. ஹரிணி தனது கைகளுக்கிடையில் கொட்டாவியை வெளிவிட்டாள்.

“உங்க அம்மாவுக்குத் தூக்கம் வந்திடுச்சி. குட்டிப் பட்டு, நீங்க இன்னும் தெம்பா விளையாடிட்டு இருக்கீங்க” என்று ராகமிழுத்து குழந்தையிடம் கொஞ்சலாகப் பேசிக்கொண்டிருந்தாள் வைஷு.

சோஃபாவின் மீதிருந்த உருளை தலையணையை எடுத்துப் போட்டு சாய்ந்த ஹரிணி, “இன்னும் ஒரே வருஷம், குட்டிப் பட்டுவோட அத்தையும், இப்படித்தான் திணறப்போறாங்க” என்றாள் சிரிப்புடன்.

நாணத்தில் கன்னம் சிவக்க, “ஏய் ஹரிணி!” என்று போலியாக அவளை அடிப்பதைப் போலச் செய்கை செய்தாள் வைஷு.

“நீயும் முறைக்கணும், அடிக்கணும்ன்னு ட்ரை பண்ற. ஆனா, உன் குறுகுறு கண்ணும், சிவக்கற கன்னமும் உன் திருட்டுத்தனத்தை பட்டவர்த்தனமா காட்டுது” என்று ஜனனி அவளைக் கலாய்க்க, மேலும் முகம் சிவக்க, “ஹய்யோ!” அழகாகச் சிரித்துக்கொண்டே முகத்தை மூடிக்கொண்டாள் வைஷு.

“சரி சரி இந்த வெட்கம், சிரிப்பையெல்லாம் ஸ்ரீ அண்ணாக்காக மிச்சம் வச்சிக்க” என்று ஹரிணி கிண்டலடிக்க, “அதெல்லாம், நிறையவே ஸ்டாக் வச்சிருப்பா” என்று ஜனனி அவளைச் செல்லமாகச் சீண்டினாள்.

“ஹே! போதும் ஓவரா போறீங்க ரெண்டுபேரும். இப்படியே பேசிட்டு இருந்தா நான் இங்கேயிருந்து போயிடுவேன்” என்றபடி எழுந்தவளை, “அத்த…” என்று சிணுங்கியபடி அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டான் மகிழ்.

அவனது அன்பில் நெகிழ்ந்து குழந்தையை வாரியணைத்தவள், “நான் மகிழை விட்டு என்கேயும் போகலடா தங்கம்” என்றவள் அவனது கன்னத்தில் முத்தமிட, குழந்தையும் அவளது அன்பில் மூழ்கி சிரிப்புடன் அவனது அத்தையின் கன்னத்தில் முத்தமிட்டான்.

வைஷுவின் கண்கள் கலங்கின. “எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்புக்கு, ஈடுஇணையே கிடையாது வைஷும்மா! அவங்க நம்மள மதிக்கிறது இல்ல. மரியாதை இல்லன்னு நம்ம ஈகோவை உசுப்பி விட்டுட்டு இல்லாம, அவங்களுக்கு நீ மரியாதையையும், அன்பையும் கொடுத்துப் பாரேன். ஒருநேரம் நீ ஓரடி விலகி நின்னாலும், உன்னைத் தாங்க கட்டாயம் வருவாங்க” என்று அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் அவளது காதுகளில் ஒலித்தன.

குழந்தையின் கன்னத்துடன் கன்னத்ஹ்தை இழைத்தவள், “குழந்தைங்க எப்பவுமே அழகுதான் இல்ல” என்றாள் புன்னகையுடன்.

“ம்ம், குழந்தைங்க இருந்தா வீடே அழகா இருக்கும்ங்கறதெல்லாம், சிரிச்சி அழகா விளையாடுற வரைக்கும் தான். அழுது அட்டகாசம் பண்ணும் போது, அடக்குட்டிச் சாத்தான்களான்னு தோணும்!” என்றாள் ஜனனி.

“நீயும், ஒரு குட்டிச் சாத்தானா தான் இருந்திருப்ப. அத்தையைக் கேட்டால் தானே, அந்தக் கதை தெரியும்” என்றாள் வைஷு கிண்டலாக.

“உன்னை விடவா? நாங்களாவது சின்ன வயசுல அப்படிப் பேர் வாங்கியிருப்போம். ஆனா, மேடம் கல்யாணத்துக்குச் சம்மதிக்க, எவ்ளோ ஆட்டம் காட்டினீங்க. இப்போ என்னவோ தழுதழுக்கற, அன்பைப் பொழியற” என்றாள் அவள் விடாமல்.

அவளது வார்த்தைகள் உண்மையாக இருந்தபோதும், வைஷுவின் முகம் கன்றிச் சிவந்தது.

அதுவரை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஹரிணி, அவளது முகமாறுடலைக் கவனித்துவிட்டு, “ஏய் ஜனனி!” என்று மென்குரலில் அதட்டியபடி எழுந்தவள், “வைஷு! அவள் கிண்டலாகத் தான் சொன்னா” என்று சமாதானமாகச் சொன்னாள்.

ஆழ மூச்செடுத்த வைஷு, “ஜனனி! நீங்க வளர்ந்த விதம் வேற. உங்களைச் சுத்தி எப்போதும் சொந்தமும், பந்தமும் இருந்தது. தாத்தா, பாட்டி அத்தை, சித்தின்னு எப்போதும் ஒரு கலகலப்பான சூழல்லயே வளர்ந்தீங்க. அதுவும் இல்லாம, உனக்குக் கூடவே ஹரிணி இருக்கா. கல்யாணம், பண்டிகை, திருவிழான்னு நிறைய பார்த்திருக்கீங்க.

ஆனா, நான் அப்படி ஒரு சூழல்ல வளரல. சிட்டி கல்சர்ன்னு ஒரு கூட்டுக்குள்ளேயே இருந்தேன். ஸ்கூல், படிப்பு, ஃப்ரெண்ட்ஸ்… இதைவிட்டால், எனக்கு எதுவுமே தெரியாது. தனியாவே இருந்ததால, எப்பவும் புக்ஸ் தான் எனக்கு உலகம். வளர வளர எதிர்காலத்தைப் பத்தி எனக்குள்ள எதிர்பார்ப்பும், ஆசையும் இருந்தது உண்மை. இல்லன்னு மறுக்கல. ஆனால், அதைப் பகிர்ந்துக்கற அளவுக்கு அது முதன்மையான விஷயமாக எனக்குப் படல.

பொண்ணுக்கு படிப்பும், வேலையும் தான் தன்னம்பிக்கை கொடுக்கும்ன்னு, விடாப்பிடியா அதைப் பிடிச்சிக்கிட்டேன்.படிப்பு, வேலைன்னு அதைத் தாண்டி யோசிக்க முடியலன்னு சொல்றதைவிட, யோசிக்கத் தெரியலன்னு தான் சொல்லணும்.

வேலைக்குப் போன பின்னால, நான் பார்த்த லவ் அஃபேர்ஸ், லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப், காதல் கல்யாணம், விவாகரத்து எல்லாம், கல்யாண வாழ்க்கை மேல், ஒரு பயத்தைத்தான் கொடுத்தது. என்னோட பெர்சனலை நான் யாரிடமும் விவாதிக்கும் விருப்பமும் எனக்கு இல்ல.

இதைப் பத்தி அம்மாவிடம் பேசணும்ன்னு தோணினது இல்ல. எனக்கும், உங்களைப் போலக் கூடப் பிறந்தவங்க யாராவது இருந்திருந்தா, நானும் கல்யாணக் கனவுகளோடும், ஆசையோடும், எதிர்பார்ப்புடனும் வளர்ந்திருப்பேனோ என்னவோ!” என்றாள் ஆழ்ந்த குரலில்.

“நீ எங்ககிட்டப் பேசியிருக்கலாமே வைஷு!” என்றாள் ஹரிணி தாங்கலாக.

முறுவலித்தவள், “நான் எதைச் சொன்னாலும், அதை, எந்தவிதமா சொல்றேன்னு யோசிக்காம, எடுத்ததும் கிண்டல் பண்ணுவீங்க. இதுல, எங்கே உங்ககிட்டப் பேசறது? நான் இங்கே வருவதே இல்லன்னு என்னைக் குறை சொல்ற நீங்க, எத்தனை முறை லீவ்ல சென்னை வந்திருக்கீங்க? அப்படியே வந்தாலும் ஒரு நாள் முழுசா இருக்கறதும் அதிசயம்” என்றவளை இருவரும் தயக்கத்துடன் பார்த்தனர்.

ஹரிணியும், ஜனனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவள் சொல்லும் உண்மை, அப்போது தான் அவர்களுக்குப் புரிந்தது.

“சாரி வைஷு! நாங்க, உன்னை ஹர்ட் பண்றோம்ன்னு தெரியாமலே செய்திருக்கோம். வெரி சாரிப்பா!” என்று சகோதரிகள் இருவரும் அவளின் கரத்தைப் பற்றிக் கொண்டனர்.

“ஹேய்! ஏன் பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க? நமக்குள்ள என்ன? நானும் தான் என் ஈகோவை விட்டுக் கொஞ்சம் இறங்கி வந்து ஓப்பனா உங்ககிட்டப் பேசியிருக்கலாம்” என்றாள் இலகுவாக.

ஆனாலும், அவர்கள் இருவரும் சமாதானமாகவில்லை என்பது, அவர்களது முகத்திலேயே தெரிந்தது.

“சரி விடுங்க. அதான் எல்லாம் சரியாகிடுச்சே” என்றாள்.

“இருந்தாலும், நாங்க உன் நிலைலயிருந்து யோசிச்சிருக்கணும்” என்ற ஹரிணியின் கரத்தைப் பற்றி, “லீவ் இட் ஹரிணி. எல்லா விஷயங்களுக்கும் ஒரு நேரம் வரணும்ன்னு சொல்வாங்க இல்லயா! நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, இப்போ கூடச் சொல்லியிருக்க மாட்டேன்” என்றாள் அவளைச் சமாதானப்படுத்துவதைப் போல.

“நாம் எப்பவும் அடுத்தவங்களைப் பத்தி நினைக்காம, நம்ம கம்ஃபோர்ட் சோன்லயே தான் திங்க் பண்றோமில்ல” என்று ஜனனி கேட்க,

“மனுஷங்கன்னா அப்படித்தான். எல்லோரும் சூழ்நிலை கைதிங்க தான். செய்ற தப்பை உணரணும். இல்லன்னா, காலம் பூரா மத்தவங்களோட பார்வைல, நாம இளக்காரமா தெரிவோம்” என்றாள் ஆழ்ந்த குரலில்.

சகோதரிகள் இருவரும் அதை ஆமோதிப்பதைப் போல தலையசைக்க, “நாம் சந்தோஷமா பேசலாம்ன்னு வந்துட்டு, இப்படி பிலாசஃபி பேசிட்டு இருக்கோம். பாரு, மகிழ் குட்டியே நம்ம பேச்சுல டயர்ட் ஆகிட்டான்” என்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டாள் வைஷு.

குழந்தையின் கன்னத்தில் அவள் முத்தங்களைப் பதிக்க, மகிழ் சிரிப்புடன் அவற்றை வாங்கிக் கொண்டிருந்தான்.

“ஹும்! பார்த்துடி. இங்கேயே எல்லாத்தையும் கொடுத்துடாதே” என்று சொல்லி ஜனனி சிரிக்க, “ச்சீ! எருமை திரும்ப ஆரம்பிக்காதே” என்று பக்கத்திலிருந்த குஷனை சிரிப்புடன் அவள் மீது தூக்கியெறிந்தாள் வைஷு.

“ஹேய்! உண்மையிலேயே நீ, ஸ்ரீ அண்ணாவை நினைக்கவே இல்லன்னு சொல்லு பார்ப்போம்” என்று ஹரிணி வம்பிழுப்பதைப் போலச் சொல்ல, “அதெல்லாம் ஒண்ணும்…” என்று மறுக்க ஆரம்பித்தவள், அவர்களை நோக்கி வந்த ஜெயந்தியைக் கண்டதும், குழந்தையுடன் எழுந்து நின்றாள்.


தொடரும்...