வியப்புடன் அவளைப் பார்த்தவன், “அம்மா, அப்பா எங்கே?” என்று கேட்டான்.
இவனுக்குத் தெரியாதோ!’ என்று எண்ணியவள், அவனது அன்னை சொன்ன அனைத்தையும் அவனிடம் ஒப்பித்தாள்.
காஃபியை உறிஞ்சியவன், “நைஸ் காஃபி!” என்று சிலாகித்தவன், “அப்போ நீயும், நானும் மட்டும் தான் வீட்ல இருக்கோமா?” என்று ரகசியக் குரலில் கேட்க, வைஷ்ணவியின் முதுகுத் தண்டு சில்லிட்டது.
இத்தனை ஆண்டுகளில் அவனுடன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் தனியாக வீட்டில் இருக்க நேரிட்டிருக்கிறது. அவனுடன் பைக்கில், பயணித்திருக்கிறாள். ஆனால், இப்படியொரு பார்வையையும், பேச்சையும் அவன் மறந்தும் அவளிடம் பேசியதில்லை.
‘கடவுளே! இவனது மனத்திலும் தன் மீது ஏதும் அபிப்பிராயம் இருக்குமோ!’ என்ற எண்ணம் தோன்ற அவளுக்கு வியர்த்து வழிந்தது.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “என்னாச்சு? இப்படி வியர்க்குது உனக்கு? உள்ளே ஏசில உட்காரலாமா?” என்று கேட்டான்.
அவன் சொன்னது தான் தாமதம், “வேணாம் வேணாம். இங்கே முற்றத்திலேயே உட்காரலாம்” என்று அவசரமாக அவனெதிரில் அமர்ந்தாள். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கமாக இருந்தது.
‘அடேங்கப்பா! எவ்வளவு பயம் இவளுக்கு!’ என்று எண்ணியவன், இன்னும் சற்று நேரம் அவளிடம் வம்பிழுக்கும் ஆர்வத்துடன், “நம்ம வீட்டுப் பெரியவங்களுக்கும், இப்படி ஒரு எண்ணம் இருக்கும்ன்னு எனக்குத் தெரியாம போச்சு. லைன் க்ளியர்” என்றான் புன்னகையுடன்.
அவனது பேச்சைக் கேட்டவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
‘பெரியவங்களுக்கும் என்றால்… இவனுக்கும் அப்படியொரு எண்ணம் இருக்கிறதோ!’ என்று எண்ணியதும் செய்வதறியாமல் தவிப்பாக இருந்தது.
“ரா..ஜே..ஷ்…” என்று அவனது பெயரைச் சொல்வதற்குள் மலையைப் புரட்டிப் போடுவதைப் போன்ற அயர்வு தோன்றியது.
கண்களை மூடி சற்று நிதானித்தவள், “எனக்கு உன் மேல எந்த அபிப்ராயமும் இல்ல. உன்னை என் அண்ணன் மாதிரி நினைச்சிட்டு இருக்கேன்னுலாம் சொல்லல. ஆனா, உன்னைக் கல்யாணம் செய்துக்கறதெல்லாம் முடியாத விஷயம்” என்று வேகமாகச் சொல்லி முடித்தாள்.
அவள் சொல்வதைக் கேட்டு அமைதியாகப் பார்த்தான்.
“நீ நினைக்கறதையே நானும் நினைக்கணும்னு எந்த அவசியமும் இல்லயே!” என்று கிண்டலாகக் கேட்டான்.
“நான் அப்படிச் சொல்லல. அதேநேரம் நீ நினைக்கறதுக்கெல்லாம் நான் பொறுப்பெடுத்துக்க முடியாதில்லையா?” என்றாள் வெளிபடையாக.
கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன், “அப்போ பெரியவங்களோட ஆசைக்கு நீ கொடுக்கற மதிப்பு இதானா?” என்றான்.
நெற்றியைத் தடவிக் கொண்டவள், “பெரியவங்களுக்கு ஆயிரம் ஆசைகள் இருக்கலாம். ஆனா, அவங்களோட விருப்பத்தைப் பார்த்தா, நம்ம வாழ்க்கைதான்…” என்றவள் சற்று நிறுத்தி, “சாரி என் வாழ்க்கை தான் நரகமா இருக்கும்” என்றாள்.
“அப்போ என் மனசுல இருக்கற காதலை நான் என்ன செய்றது?” என்று கேட்டான்.