“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460
அத்தியாயம் - 5
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460
அத்தியாயம் - 5
அப்போது வாசலில் டாக்ஸி சத்தம் கேட்க, புகையைக் கையால் தள்ளியபடியே வாசலுக்குப் போய்ப் பார்த்தான் தியாகு. அங்கே, புகைக்கு நடுவில் ஒரு டாக்ஸி மிதந்து கொண்டிருந்தது.
“சார்...பிரசவத்துக்குக் கூட்டிட்டுப் போகணும்!...உடனே வாங்க”ன்னு போன் வந்திச்சு!...கிளம்பலாமா?” என்று தண்ணீரில் நீச்சலடிப்பது போல் இரு கைகளையும் ஆட்டி, புகையில் நீச்சலடித்தவாறே டாக்ஸி டிரைவர் கேட்க,
“என்னது?...நான் கூப்பிடவே இல்லையே?...யார் போன் பண்ணியிருப்பாங்க?...”யோசித்த தியாகு, “சரி...ஆபத்துக்குப் பாவமில்லை!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, செல்வியிடம் மிதந்து போய்,
“டாக்ஸி வந்திடுச்சு...கிளம்பு” என்றான்
அவர்களிருவரையும் ஏற்றிக் கொண்டு, புகை நடுவே அந்த டாக்ஸி மிதந்து செல்ல, பிரசவ வார்டுக்கு வெளியே மிதந்தவாறே காத்திருந்தான் தியாகு.
எங்கும் புகை...எதிலும் புகை.
பிரசவ வார்டின் கதவு திறக்கப்பட, டாக்டர் மிதந்து வந்தார். “இந்தாங்க உங்க மனைவிக்குப் பொறந்த குழந்தை” என்றபடி தன் இரு கைகளையும் தியாகுவின் முகத்துக்கெதிரே நீட்டினார்.
ஆசையுடன் அதை வாங்கக் கையை நீட்டிய தியாகு, அதிர்ந்து போனான்.
டாக்டரின் கைகளில் இருந்தது ஈரத்தில் ஊறிய இரண்டு கரன்ஸிக் கட்டுகள்.
“டாக்டர்...இதென்ன?...இதை எதுக்கு என்கிட்டே குடுக்கறீங்க?” கோபமாய்க் கேட்டான் தியாகு.
“நானா குடுக்கலைப்பா....உன் மனைவி குடுத்ததைத்தான் நான் கொண்டு வந்து குடுக்கறேன்!...”
“என்ன சொல்றீங்க டாக்டர்?...அவ வயித்துல வளர்ந்த என் வாரிசு இதுவா?” நம்ப முடியாமல் கேட்டான் தியாகு.
“ஆமாம்...இதேதான்...வாங்கிக்கங்க”என்று சொல்லியவாறே அவர் நீட்ட,
“அய்யோ...வேண்டாம்!...வேண்டாம்!...நான் தொட மாட்டேன்!...நான் தொட மாட்டேன்!”
கையை உதறிக் கொண்டு கத்தியவன்,
“டிங் டாங்”....“டிங் டாங்” என்று காலிங் பெல் ஒலிக்க, தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தான்.
“அடக்கடவுளே!...எல்லாம் கனவா?”
எழுந்து போய் அறைக் கதவைத் திறந்தான். “தொந்தரவுக்கு மன்னிக்கணும் சார்!...லன்ச் ஆர்டர் பண்றீங்களா?” ரூம் பாய் கேட்டான்.
“ம்ம்ம்...வேண்டாம்ப்பா...நானே வெளிய போறேன்” சொல்லி விட்டு வேகமாய்த் திரும்பிய தியாகு, பக்கத்து அறையிலிருந்து வெள்ளிங்கிரி வெளியேறுவதைப் பார்த்ததும், சட்டென்று தன்னை மறைத்துக் கொண்டான்.
வேக வேகமாய் வராண்டாவில் நடந்து சென்றவர் லிப்டிற்குள் நுழைந்து கீழே இறங்கியதும், தன் மொபைலை எடுத்து அவருக்கு கால் செய்தான் தியாகு, “அப்பா...இன்னுமா கோயிலில் இருக்கறீங்க?”
“ஆமாம்ப்பா!...இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திட்டு வர்றேனே?”பரிதாபக் குரலில் வெள்ளிங்கிரி கேட்க,
“நிதானமாகவே வாங்க...ஒண்ணும் அவசரமில்லை” என்ற தியாகு, அறையை விட்டு வெளியேறி, வராண்டாவிற்கு வந்து அங்கிருந்த வெண்டிலேட்டர் வழியாக கீழே நோட்டம் விட்டான். வெள்ளிங்கிரி ஹோட்டலின் மெயின் கேட்டைத் தாண்டி நடந்து கொண்டிருந்தார்.
“கரெக்ட்...இதுதான் சரியான சந்தர்ப்பம்!...இப்பவே அந்த ரூமுக்குள்ளார போயி...அவங்க யாரு?...என்ன?ன்னு விசாரிச்சிட வேண்டியதுதான்”
வராண்டாவில் யாரும் இல்லாததை உறுதிப் படுத்திக் கொண்டு, அறை எண் 108-ஐ நோக்கி முதல் அடி வைத்தான்.
“பட...பட”வென அறைக் கதவு தட்டப் பட, அசதிக்காய் படுத்திருந்த அந்த மூத்த பெண்மணி, திடுக்கிட்டு எழுந்தாள்.
சிறுமி அம்மாவைப் பார்த்து, “நான் போய்த் திறக்கட்டுமா?” என்று கேட்க,
“இரு...இரு...அவசரப்படாதே!” என்றபடி நிதானமாய் எழுந்து வந்த அந்தப் பெண்மணி கதவருகே வந்து, “யாரு?” என்று கேட்டாள்.
அவளது குரல் அந்தக் கதவைத் தாண்டி இந்தப் பக்கம் வராது போக, கதவு மீண்டும் தட்டப்பட்டது.
“யாராயிருக்கும்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு கதவைத் திறந்தாள் அவள்.
வெளியில் நின்றிருந்த தியாகு, “உள்ளே வரலாமா?” என்று சன்னமான குரலில் பவ்யமாய்க் கேட்டான்.
கதவு திறக்கப்பட்டவுடன் “விருட்”டென்று உள்ளே நுழைந்து விடாமல், நாகரீகமாய் வெளியில் நின்று, “உள்ளே வரலாமா?” என்று அனுமதி கேட்ட, தியாகுவின் செய்கை அவன் மீது அந்தப் பெண்மணிக்கு ஒரு நல்ல மதிப்பினைத் தந்து விட,
“யெஸ்...கம் இன்” என்று சொல்லி அவனுக்கு வழி விட்டாள் அந்தப் பெண்மணி.
உள்ளே வந்த தியாகுவை, மேலிருந்து கீழ் வரை நிதானமாய் ஆராய்ந்தவள், அங்கிருந்த சோபாவைக் காட்டி, “உட்காருங்க!” என்றாள்.
தியாகு உட்கார்ந்ததும், எதிர் சோபாவில் தானும் அமர்ந்தாள்.
“சொல்லுங்க மிஸ்டர்....யார் நீங்க?...என்ன விஷயமா இங்க வந்திருக்கீங்க?” என்று அந்தப் பெண்மணி தன் கம்பீரக் குரலில் தியாகுவைப் பார்த்துக் கேட்டாள். அவள் தோரணையில் ஒரு அதிகாரத்துவம் இருந்தது.
“அதே கேள்வியைத் திருப்பி உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன்... “யார் நீங்க?...எதுக்காக வெள்ளிங்கிரி அய்யாவைப் பார்க்க வந்திருக்கீங்க?” நானும் கம்பீரத்தில் சற்றும் சளைத்தவனல்ல என்று பதிலடி கொடுக்கும் விதமாய் இருந்தது தியாகு கேட்ட தொணி.
ஆனால் அதற்கெல்லாம் துளியும் அசராதவள் போல், அவள் தன் முகத்தைச் சுருக்கிக் கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்து விட்டு, “நீங்க அவரோட ஃபிரெண்டா?” கேட்டாள்.
“ம்ம்ம்...ஃபிரெண்ட் இல்லை!...ரிலேட்டிவ்!...வெரி வெரி குளோஸ் ரிலேட்டிவ்” என்றான் தியாகு.
“அப்படின்னா.....?” தலையைச் சாய்த்துக் கொண்டு அந்தப் பெண் கேட்டாள்.
“மகன்!...நான் அவருடைய மகன்!...ஒரே மகன்...தியாகு”
சட்டென்று முகம் மாறிய அந்தப் பெண், “ஏய் மிஸ்டர்...என்ன வேணும் உனக்கு?...எதுக்கு இந்தப் பொய்?...கோ அவுட்” கோபத்துடன் கதவைக் கை காட்டினாள்.
“நோ...நோ...!...டென்ஷன் ஆகாதீங்க மேடம்!...உங்க கிட்டப் பொய் சொல்றதுல எனக்கு என்ன லாபம்?” சிரித்தபடி பதில் சொன்னவன், “ஒன் மினிட்” என்று சொல்லி விட்டு தன் பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்து தந்தைக்கு கால் செய்தான்.
அவர் லைனுக்கு வந்ததும் வீடியோ காலையும், ஸ்பீக்கரை ஆன் செய்தான், “அப்பா...கம்பெனிக்கு வந்துட்டீங்களா?” கேட்டான்.
“ம்...வந்திட்டேன் தியாகு...உன் ரூமுக்குப் போய் எட்டிப் பார்த்தேன்...உன்னைக் காணோமே?”
மொபைலின் திரையில் தெரிந்த வெள்ளிங்கிரியின் முகத்தை அந்தப் பெண்மணிக்குக் காட்டினான். அவள் பேயறைந்தது போலானாள்.
“கொஞ்சம் வெளி வேலை இருந்திச்சு டாடி...அதான் கிளம்பி வந்துட்டேன்!...அப்புறம் டாடி...ஏதோ மனசு சரியில்லை!ன்னு சொன்னீங்களே?...ஆர் யூ ஓ.கே.நௌ?” கேட்டான்.
“ஓ.கே....ஓ.கே.” என்றார் வெள்ளிங்கிரி.
“சரிங்க டாடி...இங்க ஒரு சின்ன வேலைதான்...ஒரு அரை மணி நேரத்துல வந்திடறேன்!...” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்து விட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்து, “இப்ப நம்பறீங்களா?” கேட்டான்.
இறுகிப் போன முகத்துடன் தரையையே நிலைக் குத்திப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அந்தப் பெண்.
“என்ன மேடம்...திடீர்னு அமைதியாயிட்டீங்க?...என்னாச்சு?” கேஷுவலாய்க் கேட்ட தியாகு, அந்தப் பெண்ணின் விழியிலிருந்து சொட்டிய கண்ணீரைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.
“மே...ட...ம்!....அழறீங்களா?” சன்னக் குரலில் கேட்டான்.
கண்களில் கண்ணீரோடு புன்னகைத்தவள், “ப்ச்....இனி அழுது என்ன பிரயோஜனம்?” என்றாள் விரக்திக் குரலில்.
சில நிமிடங்கள் அமைதியாய் அவள் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்த தியாகு, “மேடம்...நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலை” என்று ஞாபகமூட்டினான்.
“சர்ர்ர்ர்ர்”ரென்று ஓசையுடன் மூக்கை உறிஞ்சி, அதே ஓசையுடன் ஒரு பெருமூச்சை வெளியிட்ட அந்தப் பெண், “என்ன கேள்வி?” கேட்டாள்.
“யார் நீங்க?...எதுக்காக வெள்ளிங்கிரி அய்யாவைப் பார்க்க வந்திருக்கீங்க?”
“நீங்க சொல்லிட்டீங்க... “நான் அவரோட ஒரே மகன்” அப்படின்னு தைரியமா!...ஆனா என்னால அப்படிச் சொல்ல முடியலை... “ஏன்னா...நான் அவரோட ஒரே மனைவி இல்லை!...மனைவிகள்ல ஒருத்தி” என்றாள் கரகரத்த குரலில்.
ஒரு கணம் மொத்த உலகமும் “கிர்ர்ர்ர்ர்ர்”ரென்று சுழன்று, பின் நின்றது போலிருந்தது தியாகுவுக்கு.
“என்ன...சொல்றீங்க மேடம்?...நீங்க எங்க அப்பாவோட மனைவியா?” நைந்து போன குரலில் கேட்டான் தியாகு.
“ஏன் நம்ப முடியலையா?” என்றவள் தனது பேக்கைத் திறந்து, அந்தப் புகைப்பட ஆல்பத்தை எடுத்து தியாகுவிடம் கொடுத்தாள்.
அவசரமாய் வாங்கிப் பார்த்தாள்.
முதல் போட்டோவில் அந்தப் பெண்ணும், அவன் தந்தை வெள்ளிங்கிரியும் மணக் கோலத்தில்.
இரண்டாவது போட்டோவில் இருவரும் ஜாலியாக ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்தபடி,
மூன்றாவது போட்டோவில் சிறு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு,
அடுத்த போட்டோவில் வளர்ந்த சிறுமியுடன்,
தொடர்ந்து பல போட்டோக்கள், அந்தச் சிறிய குடும்பம் சந்தோஷமாய் இருந்தற்குச் சாட்சியாய்.
மொத்தப் போட்டோக்களையும் பார்த்து முடித்த தியாகு, “பட்”டென்ற ஓசையுடன் அந்த ஆல்பத்தை மூடினான்.
அவன் மனசாட்சி உறுத்தியது. “அப்படியென்றால்....சிங்கப்பூர் சென்ற முதல் வருடம் மட்டும் கடிதம் போட்டு...பணம் அனுப்பிய அப்பா...அதற்குப் பின் தன் தொடர்பை முறித்துக் கொண்டதற்குக் காரணம் இதுதானா?....அங்கேயே தனக்கொரு குடும்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு, அதிலேயே மூழ்கிப் போன காரணத்தால்தான் எங்களையெல்லாம் “அம்போ”வென்று விட்டு விட்டாரா?...கடவுளே...எங்கம்மாவுக்கு இப்படியொரு மாபெரும் துரோகத்தைச் செய்த மனுஷனுக்கு...பணத்துக்கு ஆசைப்பட்டு நான் அடைக்கலம் குடுத்திட்டேனே?”
தலையைத் தூக்கி அந்தப் பெண்மணியைப் பார்த்த தியாகு கேட்டான், “எப்படி...எப்படி இது நடந்தது?...அவரு சிங்கப்பூர் வந்தப்பவே அவருக்கு வயசு நாற்பத்தி ஐந்துக்கும் மேல் இருக்குமே?...அவரை எப்படி மணந்தீர்கள்?...அந்த வயதுக்காரருக்கு ஒரு குடும்பமும்...குழந்தைகளும் நிச்சயம் இருப்பார்கள்...என்பது உங்களுக்குத் தோணலையா?...அவசரக் காதலில் நடந்த கல்யாணமா?...இல்லை அருவருப்பான உறவில் நடந்த கல்யாணமா?...நீங்க அவரை மயக்கினீர்களா?....இல்லை அவர் உங்களை மயக்கிட்டாரா?” படபடத்தான் மகன்.
“தம்பி...உன் பேர் என்ன?” ஒரு பாசப் பார்வையோடு தியாகுவைப் பார்த்து அவள் தணிந்த குரலில் கேட்க,
“தியாகு”என்றான்.
“நீ என் கணவருடைய மகன்!...அதனால் எனக்கும் மகன்!...உன்கிட்ட நான் கேட்டுக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!...தயவு செய்து என்னைத் தவறாய் நினைக்காதே!...நான் உன் தந்தையை மயக்கவும்...இல்லை...மயக்கி மணந்து கொள்ளவும் இல்லை!...எல்லாம் அந்தக் காலகட்டத்தில் விதி நிகழ்த்திய நாடகம்!...”
தியாகு அலட்சியப் புன்னகையுடன் அவளைப் பார்க்க,
அவள், இருபத்தியொரு வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் விதி நிகழ்த்திய அந்த பழைய நாடகத்தை விவரிக்க ஆரம்பித்தாள்.
1998.
சிங்கப்பூர் துறைமுகத்தில் கண்டெய்னர்களைப் பராமரிக்கும் காண்ட்ராக்ட்டோடு, அங்கு வரும் கப்பல்களில் கன்டெய்னர்களை ஏற்றி, இறக்கும் பணிக்கான கான்ட்ராக்டையும் தன் கை வசம் கொண்டு, கடந்த இருபது ஆண்டுகளாய் அந்தத் துறைமுகத்திற்குள் ஒரு ராஜா போல் வலம் வந்து கொண்டிருக்கும் “ஒய். ராஜகோபால்” என்னும் பெரிய்ய்ய்ய காண்ட்ராக்டரிடம் சூப்பர்வைஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார் வெள்ளிங்கிரி.
பணிக்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து, தனது விகல்பமில்லா விசுவாசத்தாலும், சோம்பலில்லாத சீரிய உழைப்பாலும், முதலாளி ஒய்.ராஜகோபாலின் நன் மதிப்பைப் பெற்று வைத்திருந்தார்.
சில சமயங்களில் பெரிய தொகைகளைக் கூட வெள்ளிங்கிரியிடம் கொடுத்து வங்கியில் கட்டி வரச் சொல்லுவார் ஒய்.ராஜகோபால். அந்த அளவிற்கு தன்னுடைய நம்பகத்தன்மையையும் செறிவு படுத்தி வைத்திருந்தார் வெள்ளிங்கிரி.
ஒரு மாலை நேரம்,
துறைமுகத்திற்குள்ளிருந்த முதலாளியின் அலுவலகத்திற்குள் புதிதாய் வந்திறங்கியிருந்த ஒரு கண்டெய்னர் குறித்த விபரங்களைக் கேட்கச் சென்ற வெள்ளிங்கிரி தன் முதலாளி விழியோரம் ஈரக் கசிவுடன் டென்ஷனாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஆடிப் போனார். ஒரு சிங்கம் போல பீடு நடை போடும் அந்த மனிதர் அவ்வாறு கலங்கிப் போய் அமர்ந்திருந்தது வெள்ளிங்கிரியை மிகவும் வேதனையடையச் செய்தது.
“அய்யா...உங்களுக்கு என்னாச்சு?...இதற்கு முன் உங்களை இது போன்ற ஒரு கோலத்தில் நான் பார்த்ததேயில்லையே?” படபடப்புடன் கேட்டார்.
“வெள்ளிங்கிரி!...வெளிய நாலு பேரிடம் சொல்லி ஆறுதல் அடையக் கூட முடியாத கவலையப்பா என்னோட கவலை” என்றார்.
“அய்யா...உங்களோட ஒப்பிடும் போது...நான் மிக மிகச் சாதாரணன்!...இருந்தாலும் சொல்கிறேன்!...உங்க கவலை என்ன?ன்னு என்கிட்ட சொல்லுங்கய்யா!...என்னால் முடிஞ்சதைச் செய்து...உங்களோட கவலையை நான் குறைக்கிறேன்”
அதைக் கேட்டு அகமகிழ்ந்து போன ஒய்.ராஜகோபால், “வெள்ளிங்கிரி...நான் சொல்லப் போற விஷயத்தை தயவு செய்து நீ வேற யார்கிட்டேயும் பகிர்ந்துக்காதே!...ஏன்னா....இது என் மகள் சம்மந்தப்பட்ட ஒரு விஷயம்!...கல்யாணமாகாத பொண்ணு...அவ எதிர்கால இதனால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது!” என்று சொல்ல,
“அய்யா....இனி உங்களோட பிரச்சினை...என்னோட பிரச்சினை!...அதை எப்படி நாசூக்கா டீல் பண்ண்ணுமோ...அப்படி நான் டீல் பண்ணுவேன்...என்னை நம்புங்க”
“ஓ.கே...வெள்ளிங்கிரி....நான் சொல்றேன்” என்றவர் சில விநாடிகள் கண்களை மூடி எதையோ யோசனை செய்து விட்டு, “என்னுடைய ஒரே மகள்...கனிஷ்கா...போன வருஷம்தான் கல்லூரிப் படிப்பை முடிச்சா!...அவ படிப்பை முடிச்சதும் அவளைக் கொண்டு நம்ம ஆபீஸ்லதான் உட்கார வைக்கணும்!னு நெனச்சிட்டிருந்தேன்!...ஆனா..ஆனா...என்னோட அந்த எண்ணமெல்லாம் ஒரே நிமிஷத்துல மணல் வீடு மாதிரிக் கரைஞ்சு போச்சு” கரகரத்துச் சொன்னார் ஒய்.ராஜகோபால்.
“அய்யா...நான் குறுக்கே கேட்கிறேன்!னு தப்பா நெனைக்காதீங்க அய்யா!...நம்ம பாப்பா ஏதாவது காதல்...கீதல்...ன்னு திசை மாறிப் போயிடுச்சோ?” வெள்ளிங்கிரி மிகவும் பவ்யமாய்க் கேட்டார்.
“அப்படிப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை!...அவளுக்குப் பிடிச்சவனைத தானே லவ் பண்றா?...பண்ணிட்டுப் போகட்டும்!னு விட்டுடுவேன்!...அந்தஸ்து...வயசு...எதைப் பற்றியும் யோசனையே பண்ணாமல் கல்யாணமும் பண்ணி வெச்சிடுவேன்!...ஆனா இவ போற பாதை வேற மோசமான பாதை”
முதலாளி அப்படிச் சொன்னதும் வெள்ளிங்கிரியின் மூளை வேறு விதமாய்ச் சிந்தித்தது. அவர் சொன்ன வார்த்தைகளை மறுபடியும் ஒரு முறை தன் மனதிற்குள் சொல்லிப் பார்த்தார், “அப்படிப் போயிருந்தால் கூடப் பரவாயில்லை!...அவளுக்குப் பிடிச்சவனைத் தானே லவ் பண்றா?...பண்ணிட்டுப் போகட்டும்!னு விட்டுடுவேன்!...அந்தஸ்து...வயசு...எதைப் பற்றியும் யோசனையே பண்ணாமல் கல்யாணமும் பண்ணி வெச்சிடுவேன்!”.
அதில் தனக்கான ஏதோ ஒரு ஆதாயம் ஒளிந்திருப்பதாய் அவருக்குப் பட, முதலாளியின் அருகில் வந்து அவர் தோளைத் தொட்டு, “அய்யா...எதுவானாலும் என் கிட்டச் சொல்லுங்கய்யா...நான் எதுக்கு இருக்கேன்?...உங்களுக்காக என் உயிரையும் கூடக் குடுப்பேன்” என்றார்.
மிகவும் நெகிழ்ந்து போன ஒய்.ராஜகோபால், “என் மகள் கனிஷ்கா...போதை மாத்திரைகளுக்கும், போதை ஊசிக்கும் அடிமையாயிட்டா வெள்ளிங்கிரி!...நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன்...என்னால் அவளைத் திருத்தவே முடியவில்லை!...அம்மா இல்லாத பொண்ணாச்சே?ன்னு ரொம்பச் செல்லம் குடுத்து வளர்த்து நான்தான் அவளைக் கெடுத்திட்டேன்!...ஹும்....சின்னப் பொண்ணா இருந்தா அடித்துத் திருத்தலாம்...இருபத்திரெண்டு வயசுப் பொண்ணைக் கை நீட்டி அடிக்கவா முடியும்?...அப்படி அடிச்சு...அவ பாட்டுக்கு கோபத்துல ஏதாச்சும் செஞ்சுக்கிட்டாள்ன்னா...அது வேற மாதிரிப் பிரச்சினையாயிடும்!...நான் இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரித் தவிக்கறேன் வெள்ளிங்கிரி” என்று சோகமான குரலில் சொல்லி முடித்தார்.
“அய்யா...பாப்பா கிட்ட நான் பேசிப் பார்க்கட்டுமா?...” வெள்ளிங்கிரி கேட்க.,
உதட்டைப் பிதுக்கினார் ஒய்.ராஜகோபால், “அவ நிலைமை இப்ப அதையெல்லாம் தாண்டி எங்கியோ போயிடுச்சு!...எந்த நேரத்துல என்ன நடக்குமோ?...எங்கிருந்து போன் வருமோ?...“உங்க மகள் அளவுக்கதிகமான போதைல இங்க கிடக்கறா...வந்து அள்ளிட்டுப் போங்க”ன்னு யார் கூப்பிட்டுச் சொல்லுவாங்களோ?...ன்னு ஒவ்வொரு நிமிஷமும் கதி கலங்கிப் போய் உட்கார்ந்திருக்கேன் வெள்ளிங்கிரி.
“அய்யா...நான் என்ன பண்ணணும்?னு மட்டும் சொல்லுங்க!...அதை அப்படியே செய்ய நான் தயாராயிருக்கேன்” நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னார் வெள்ளிங்கிரி.
“எனக்காக ஒண்ணு மட்டும் செய் வெள்ளிங்கிரி...நீ...இந்த ஹார்பர்ல சூப்பர்வைஸர் வேலை பார்த்தது போதும்...இனிமேல் என் மகளுக்கு சூப்பர்வைஸரா இரு...”
“புரியலை அய்யா”
“என் மகள் தினமும் ஈவினிங்... “டத்தோ ராஜவேலு தெரு”வில் இருக்கற கிளப்புக்கு தன்னோட பாய் ஃபிரண்ட்ஸோட டான்ஸிங் பண்ணப் போவா!...அவனுக எல்லோருமே போதைப் பொருளுக்கு அடிமையான பொறுக்கிப் பசங்க!...“அவங்க கூடவெல்லாம் போகாதே...போகாதே”னு நானும் கரடியாய்க் கத்திப் பார்த்திட்டேன்!...அவ கேட்கவே மாட்டேங்கறா!...ஹூம்...இப்பக் கூட அவ அங்கதான் போயிருப்பா!...என்னைக்காவது ஒரு நாள்..எவனாவது ஒரு பொறுக்கி...போதைல இருக்கற அவளைக் கெடுத்து வயித்துல புள்ளையைக் குடுத்துவானோ?னு நெனச்சு...நான் என் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத் திரியறேன்!” பெரிய பணக்காரனாய், அந்தச் சிங்கப்பூரில் பெரும் புள்ளியாய், விளங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய மனிதரின் சோகப் பின்னணி வெள்ளிங்கிரிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“டேய் வெள்ளிங்கிரி...நீ மட்டும் இதை சரியான முறைல பயன் படுத்திக்கிட்டேன்னா...இந்த ஒய்.ராஜகோபாலோட சொத்து முழுவதையும் நீ சொந்தமாக்கிக்கலாம்!...”என்று அவர் மனம் அவரை உசுப்பியது.
“அய்யா...நீங்க உங்க கவலையை என்கிட்ட சொல்லிட்டீங்கல்ல...இனி அதை மறந்திடுங்க!....நான் இப்பவே டத்தோ ராஜவேலு தெருவுக்குப் போறேன்...அங்கிருக்கற உங்க மகளைக் கூட்டிட்டுப் போய் உங்க வீட்டுல விட்டுட்டு வர்றேன்!...அதே மாதிரி...இனிமேல் எல்லா நேரமும் அவ கூடவே ஒரு பாடிகார்டு மாதிரி இருக்கேன்!...முடிந்த போதெல்லாம் அவளுக்கு அட்வைஸ் பண்றேன்!...அவ்வளவு சீக்கிரம் அவளை அந்தப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்க முடியுமோ...அவ்வளவு சீக்கிரத்துல மீட்டுடறேன்!...” வெள்ளிங்கிரி ஆவேசமாய்ச் சொன்னார்.
“ஆஹா....வெள்ளிங்கிரி...நீ சொன்னதைக் கேட்கும் போதே என் மனசு குளிருதுப்பா!...” தன்னுடைய உயர் நிலையை மறந்து, தன்னிடம் சூப்பர்வைஸராக வேலை பார்க்கும் வெள்ளிங்கிரியைக் கையெடுத்துக் கும்பிட்டார் ஒய்.ராஜகோபால்.
வாழ்க்கையில் ஒரு பண வெளிச்சம் கண்ணுக்கெதிரில் தெரிய, சந்தோஷமாய் அங்கிருந்து கிளம்பினார் வெள்ளிங்கிரி.
“ம்ம்ம்...வெள்ளிங்கிரி...எதுல போகப் போறே?”
“அய்யா...டாக்ஸிலதான்”
“வேண்டாம்!...உனக்குத்தான் டிரைவிங் தெரியுமல்ல?...என்னோட காரையே எடுத்திட்டுப் போ!...”என்றபடி அவர் கார் சாவியை நீட்ட,
“அய்யா...அப்ப நீங்க....?”
“எனக்கென்னப்பா...வீட்டுல மூணு கார் நிக்குது!...டிரைவரை வீட்டுக்கு அனுப்பி வேறொரு காரை எடுத்திட்டு வரச் சொல்லிடறேன்...நீ கிளம்பு...உனக்கு கனிஷ்காவை அடையாளம் தெரியுமல்ல?”
“ம்...ஒரு தடவை உங்களோட ஒரு மால்ல பார்த்திருக்கேன் சார்”
“ஓ.கே...பார்த்து ஜாக்கிரதையா டீல் பண்ணு!” என்றார் அந்த பணக்காரத் தந்தை.
“சரிங்க அய்யா” என்று சொல்லி விட்டு நடந்த வெள்ளிங்கிரி, அவர் பார்வையில்...அந்த விநாடியில்...தன் மகளைக் காக்க வந்த ரட்சகன் போலத் தெரிந்தார்.
பாவம், அந்த ரட்சகனுக்குள்ளிருக்கும் ராட்சஸ குணம் அவருக்கு எப்படித் தெரியும்?.
(தொடரும்)