வெறுக்கப்பட்ட ராணியும் அவரின் முத்து மாலையும் - ஏலத்தின் கதை
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
வெறுக்கப்பட்ட ராணியின் முத்து மாலை
பிரான்ஸ் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ராணியான மேரி ஆன்டொவ்னெட்டின் முத்து மாலை 36 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதற்கு முன்பாக ஒரு முத்துமாலை இந்த அளவு தொகைக்கு எடுக்கப்பட்டதில்லை.
ஆஸ்திரேய இளவரசியான மேரி ஆன்டொவ்னெட் பிரான்ஸ் அரசர் பதினாறாம் லூயிஸை மணந்தார். மக்கள் ஒரு வேளை உணவுக்காக சிரமப்பட்டு கொண்டிருந்த போது, இவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்தார் என பிரான்ஸ் மக்களால் தூற்றப்பட்டார். பிரஞ்ச் புரட்சிக்கு மக்களின் இந்த கோபங்களும் ஒரு காரணம். பிரஞ்ச் புரட்சியின் போது 1793ஆம் ஆண்டு கில்லட்டின் கொண்டு இவர் கொல்லப்பட்டார் .
ஐந்து ட்வீட்டுகள்
ஐந்து கேலி ட்வீட்டுகளை பகிர்ந்ததற்காக 41 வயது நபர் கடந்த ஒரு மாதாமாக சிறையில் இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர் அபிஜித் ஐயர் மித்ரா ஒடிசாவில் உள்ள 13ஆவது நூற்றாண்டு காலக்கட்டத்தை சேர்ந்த கோனார்க் கோயில் சிற்பங்கள் குறித்து ஆபாசமாக ட்வீட் செய்தார்.
இந்த ட்வீட்டுகள் ஒடிசாவில் உள்ள 4 கோடி மக்களின் புண்படுத்துவதாக கூறி, இருவர் வழக்கு பதிந்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவருக்கு பிணையும் மறுக்கப்பட்டுள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று இவருக்கு ஆதரவாக செயற்பாட்டாளர்கள் பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
காசுகளின் சுல்தான்
'சுல்தான் ஆஃப் காயின்ஸ்' என்றழைக்கப்பட்ட இரான் நாணய வர்த்தகர் ஒருவர் அதிக அளவு தங்க நாணயங்கள் பதுக்கி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார்.வாஹித் மஸ்லாமியன் என்ற அந்த வணிகருக்கும், மற்றொரு நாணய வர்த்தகருக்கும் 'உலகில் ஊழலை வேகமாக பரவச் செய்தனர்' என்ற குற்றச்சாட்டின் பேரில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தீர்க்கமான நடவடிக்கைகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பிரக்ஸிட் தொடர்பான பேச்சுவார்த்தையில் தலைமை வகிக்கும் மிக்கேல் பார்னியர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இறுதி ஒப்பந்தம் தீர்க்கமான முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறுகிறார். புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த 585 பக்க வரைவு அறிக்கை, "இந்த (பிரெக்ஸிட்) பேச்சுவார்த்தையை கொண்டுவருவதற்கான முக்கிய படி" என் று கூறி உள்ளார்.
மெலனியா டிரம்புடன் மோதல்
அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்புடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மிரா ரிகார்டெல் பதவி விலகியுள்ளார். வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் மிரா ரிகார்டெல் நிர்வாகத்தில் வேறு ஒரு புதிய பொறுப்பில் அமரவிருப்பதாக வெள்ளை மாளிகையின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் தகுதி இனி மிரா ரிகார்டெலுக்கு இல்லை என்று மெலனியா டிரம்ப் இந்த வாரத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஆப்ரிக்கா சுற்றுப்பயணத்தின் போது இவ்விருவருக்கும் மோதல் இருந்ததாக கூறப்படுகிறது.
'பல ஆண்டுகள் ஆகும்'
காட்டுத்தீயினால் சூறையாடப்பட்ட கலிபோர்னியா நகரை மீண்டும் முழுவதுமாக நிர்மாணிக்க பல ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்காவின் அவசரகால சேவை முகமையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தான் பார்த்த பேரிடர்களிலேயே இதுதான் மிகவும் மிக மோசமான பேரிடர் என்று மத்திய அவசர மேலாண்மை நிறுவனத்தின் (ஃபெமா) நிர்வாக அதிகாரியான புரோக் லாங் இது குறித்து வர்ணித்துள்ளார். தற்போது கலிபோர்னியா மாநிலம் முழுவதும் தீயை அணைக்க ஏறக்குறைய 9000 தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.