Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28




மாஸ்கோவில் இசை நிரம்பி வழிந்த ஒரு வீட்டில் 1903-ல் சோஃபியா மொகிலேவ்ஸ்கயா பிறந்தார். தந்தை புகழ்பெற்ற இசைக்கலைஞர். குழந்தைப் பருவத்திலேயே சோஃபியாவுக்கு பியானோ வாசிக்க அவர் கற்றுக்கொடுத்தார். இசையின் மீதான அவரது விருப்பமும் காதலும் பதின் பருவத்தில் எழுத்தின்மீது திரும்பியது.
பத்திரிகையாளராக எழுத்துலகில் நுழைந்தவர், இலக்கியவாதியாக விஸ்வரூபமெடுத்தார். மாஸ்கோவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கட்டுரைகள், தேவதைக் கதைகளின் மொழிபெயர்ப்புகள், புனைகதைகள் போன்றவற்றை எழுதிக் குவித்தார். கிட்டத்திட்ட 40 ஆண்டுகள், அவருடைய அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக எழுத்து இருந்தது.
Mark of the Country Gondelupy எனும் குழந்தைகளுக்கான அவரது முதல் புத்தகம் 1941-ல் வெளியானது. அந்தப் புத்தகத்துக்குக் கிடைத்த வரவேற்பு, குழந்தைகளுக்கான கதை உலகில், அவரைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக்கியது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அனாதை ஆசிரமத்தில் பணிபுரிந்த அனுபவத்தைக்கொண்டு அவர் எழுதிய ‘House in Tsybiknur’ எனும் புத்தகம் 1949-ல் வெளிவந்து உலகின் ஆன்மாவை உலுக்கியது.
அவர் எழுதிய ‘கேர்ள்ஸ், திஸ் புக் இஸ் ஃபார் யு’, ‘டேல் ஆஃப் தி லௌட் டிரம்’ போன்றவை இன்றும் கொண்டாடப்படுகின்றன. சோஃபியாவின் 116-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக ஏப்ரல் 3 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

காலத்தில் கலந்த பன்முக எழுத்தாளர்
பரிபூரணமானவர், நேர்த்தி மிக்கவர், தற்பெருமையற்றவர், அறிவார்ந்த அணுகுமுறையாளர் என்று சிலாகிக்கப்படும் ‘இந்தியா டுடே’யின் முதல் ஆசிரியரான உமா வாசுதேவ் கடந்த மார்ச் 27-ல் மறைந்துவிட்டார். எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும்
மிகப் பெரும் ஆளுமை அவர். இந்திரா காந்தியைப் பற்றி இரண்டு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை எழுதியிருக்கிறார். உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்யும் விதமாக நேர்மையான எழுத்தால் கட்டமைக்கப்பட்ட அந்த இரண்டு புத்தகங்களும் அவரது எழுத்தின் மேன்மைக்கும் உண்மைக்கும் சான்று. அவரது எழுத்தும் வாழ்வும் ஒன்றாக இருந்தன. இசையின் பெரும் ரசிகர் அவர்.
இசையில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பெரிதும் போற்றப்படுகின்றன. எழுத்தாளராக அவர் அடைந்த உயரம் யாரும் எளிதில் அடைய முடியாதது. எண்ணற்ற ஆவணப் படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். ‘தி சாங் ஆஃப் அனசுயா’, ‘வேர் தி சைலன்ஸ் ஸ்பீக்ஸ்’, ‘பெயிண்ட்டிங்க்ஸ்’ போன்ற புத்தகங்கள் அவரது சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. மனிதத்தைக் கொண்டாடும் அவரது எல்லை பரந்து விரிந்தது.


எண்ணமும் சொல்லும்:
நான் பொய் சொல்ல மாட்டேன்

நியாய் திட்டம் மூலம் ஏழைக் குடும்பத்தில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நேரடியாகச் செலுத்துவோம். இதன்மூலம் கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பர். இந்தப் பணத்தின் மூலம் மக்கள் பொருட்களை வாங்குவர். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். நான் பொய் சொல்ல மாட்டேன். நான் ஏழ்மையின் மீது கண்டிப்பாக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துவேன். ஐ.மு. கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்படும். மத்திய அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும். புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டு மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
- ராகுல் காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர்




அமெரிக்காவின் அவலம்

அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபோது 2009 முதல் 2017வரை துணை அதிபராகப் பதவி வகித்தவர் ஜோ பிடென். இவர் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் களம் இறங்குவதற்குப் பரிசீலித்துவருகிறார். இந்நிலையில் பெண்கள் சிலர் ஜோ பிடென் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்திவருகின்றனர். நெவாடா மாகாண சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39), ஜோ பிடெனின் முன்னாள் உதவியாளரான எமி லாப்போஸ் (43) உள்பட நான்கு பெண்கள் ஜோ பிடென் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான வைல் கோனெட், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் யாலி கோல், சோபி காரசிக் ஆகிய மூன்று பெண்கள் ஜோ பிடென் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னாள் துணை அதிபர் மீது அடுத்தடுத்து ஏழு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மிசோரமின் முதல் பெண் வேட்பாளர்

1972-ல் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு, மிசோரம் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இதுவரை 12 முறை தேர்தல்கள் நடந்துள்ளன. அந்தத் தேர்தல்களில் ஒரு முறைகூட, பெண்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடவில்லை. இத்தனைக்கும் மிசோராமில், ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்களே அதிகம்.
இந்நிலையில், இப்போது முதன்முறையாகப் பழங்குடியினப் பெண், லலித் லாமுவானி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர், தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். “என்னைப் போன்ற படிக்காதவர்களே, எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, படித்த இளம் பெண்கள் அரசியலுக்கு வந்தால், என்னைவிடச் சிறப்பாகச் செயல்படலாம்” என அந்த 63 வயது வேட்பாளர் நம்பிக்கையோடு சொல்கிறார்.........
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28




இந்த ஞாயிற்றுக்கிழமை காலை அந்தச் சிறுமி பட்டாம்பூச்சிகளைத் துரத்தியபடி ஓடியிருக்கலாம். நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடியிருக்கலாம். அம்மாவிடம் செல்லமாகச் சண்டையிட்டுச் சிரித்திருக்கலாம். ஆனால், அவள் பெண்ணாகப் பிறந்ததாலேயே இதுபோன்ற குழந்தைப் பருவத்தின் எந்தவொரு மகிழ்ச்சிக்கும் இந்தச் சமூகம் அனுமதிக்கவில்லை. கோவை துடியலூரைச் சேர்ந்த அந்த ஏழு வயதுச் சிறுமி, சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு உயிரோடு சிதைக்கப்பட்டு இன்று நினைவாக மட்டுமே மிஞ்சியிருக்கிறாள்.
பெண் குழந்தைகள் மீதான வன்முறையும் அதைத் தொடரும் படுகொலையும் நிகழும்போதெல்லாம் பதற்றப்படுகிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோபப்படுகிறோம். பெண் குழந்தைகள் இருக்கிற வீடுகளில் அச்சத்துடன் இது பற்றி விவாதிக்கிறோம். பாலினச் சமத்துவத்துடன் குழந்தைகள் வளர்க்கப்படுவதன் அவசியம் குறித்துப் பேசுகிறோம்.
ஆபத்து நேரத்தில் எப்படித் தங்களைத் தற்காத்துக்கொள்வது அல்லது அந்த இடத்திலிருந்து எப்படித் தப்பிப்பது எனக் குழந்தைகளுக்குக் குருவி தலையில் பனங்காயைப் போல் அறிவுரைகள் வழங்குகிறோம். ஆனால், குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் புதுப்புது வடிவத்தில் வளர்ந்து நம்மைக் கலங்ககடிக்கவே செய்கிறது. குழந்தைகளை எங்கேயும் அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டித்தான் வைக்க வேண்டுமா என்கிற தாய்மார்களின் புலம்பலையும் கேட்க முடிகிறது. ஆனால், வீட்டுக்குள்ளேயே நிகழ்த்தப்படுகிற குழந்தைகள் மீதான வன்முறையை எப்படிக் களைவது?
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி 2006-ல் ஆயிரங்களில் இருந்த குழந்தைகள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை,
2016-ல் லட்சங்களைத் தாண்டிவிட்டது. பத்து ஆண்டுகளில் 500 சதவீத அளவுக்குக் குற்றங்கள் அதிகரித்திருப்பது நாம் என்ன மாதிரியான ‘பண்பட்ட நாகரிக’ சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கடத்தலுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தை வகிப்பவை குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களே. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் குடும்ப அமைப்புக்குத்தான் இருக்கிறது. ஆனால், குடும்ப உறுப்பினராலோ உறவினராலோ அல்லது நன்கு அறிமுகமான நபராலோ தான் பெரும்பாலான குழந்தைகள் வன்முறைக்கு ஆளாக்கப்படும் நிலையில் குடும்ப அமைப்புகூடக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
கட்டற்ற பாலியல் காட்சிகள்
உலக மயமாக்கலுக்குப் பிறகு நம் உள்ளங்கைகளுக்குள் வந்தமர்ந்துவிட்ட தொழில்நுட்பத்துக்கும் அதிகரித்துவரும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் தொடர்பு இருக்கிறது. கட்டற்ற இணைய வெளியும் அதில் கொட்டிக் கிடக்கிற பாலியல் வீடியோக்களும் மனித மனங்களில் புதைந்துகிடக்கிற வக்கிரத்தைத் தூண்டிவிடுகின்றன. திரைக்கும் நமக்கும் உள்ள இடைவெளிக்கும்கூட இதில் முக்கியப் பங்கு இருக்கிறது என்று உளவியலாளர்கள் சொல்கிறார்கள்.
செல்போனை மிக அருகில் வைத்துப் பார்க்கிறபோது அவை மூளைக்குள் ஏற்படுத்துகிற மாற்றங்கள் வீரியமானவை. திரைப்படங்கள், காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் பெண்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தாராளமயமாக்கலில் ஒரு புறம் எல்லாமே எல்லைமீறிக் காணக் கிடைக்க இன்னொரு புறம் அவற்றைக் கையாளத் தெரியாமல் கூட்டம் பெருகிவருகிறது. நாள் முழுக்க இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும் நிலையில் பக்குவப்பட்ட, உணர்வைக் கையாளத் தெரிந்த ஆண் கண்ணியம் காக்கிறான். அப்படியில்லாதவனோ கைக்குக் கிடைக்கிற குழந்தைகளைத் தன் வக்கிரத்துக்கு இரையாக்குகிறான்.


பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு அவர்களின் உடையையும் செயல்பாட்டையும் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்கிறவர்கள் குழந்தைகள் விஷயத்தில் எதைக் காரணமாக்குவார்கள்? பாலியல் வல்லுறவுக்கான காரணங்கள் எனக் குறிப்பிட்டுச் சமூக வலைத்தளங்களில் பரவிய வரைபடம் இந்தக் கேள்விக்குப் பதிலாக அமையும். குட்டைப் பாவாடை, ஆண்களோடு சகஜமாகப் பேசுவது, தனியாக நடந்து செல்வது, இரவு நேரம் எனக் காரணங்களை அடுக்கிவிட்டு வல்லுறவில் ஈடுபட்ட ஆண்தான் பாலியல் வன்முறைக்கு ஒரே காரணம் என்பதாக அது அமைந்திருந்தது.
சட்டங்களால் தடுக்க முடியாதா?
தவறு நிகழ்ந்த பிறகு குற்றவாளிக்குத் தண்டனையளித்து அதன் மூலம் குற்றங்களைத் தடுப்பதைத்தான் சட்டங்கள் செய்யும். தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சமே பிறரைத் தவறு செய்ய விடாமல் காக்கும். ஆனால், தவறு செய்துவிட்டுத் தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இங்கே பலரும் குற்றமிழைக்கிறார்கள்.
அனைத்துவிதமான பாகுபாடுகளோடு செயல்படும் காவல்துறையே பெரும்பாலான குற்றவாளிகளுக்கு அந்தத் துணிச்சலைத் தருகிறது. ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வருகிற வழக்குகளில் மட்டும் துரித நடவடிக்கையை எடுக்கிற காவல்துறை, மற்ற வழக்குகளில் அதே வேகத்தைக் காட்டுவதில்லை.
விரைந்து கிடைக்க வேண்டும் நீதி
விசாரணை, வழக்கு என அலைக்கழிக்கப்படுவோம் என்பதற்காகவே வீட்டில் திருடுபோனால்கூடச் சிலர் புகார் தரத் தயங்குவார்கள். சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் துறையின் மீது நம் மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையின் வெளிப்பாடே இது. இப்படியொரு சூழலில் குழந்தைகளை எதற்கு அலைக்கழிக்க வேண்டும் என்றே பெரும்பாலானோர் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த குற்றத்தைக் காவல் துறையின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதில்லை.
பொதுவாகக் குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதி மன்றம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மகிளா நீதி மன்றங்களே குழந்தைகளுக்கான சிறப்பு நீதி மன்றங்களாகவும் செயல்படுகின்றன. “குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கக் காவல் துறையில் சிறப்புக் குழு இருக்க வேண்டும்.
ஆனால், மற்ற வழக்குகளை விசாரிக்கும் காவலர்களே இவற்றையும் கையாள்கிறார்கள். அதனாலேயே இதுபோன்ற வழக்குகளில் நீதி கிடைப்பது தாமதமாகிறது. காவல்துறை எந்தச் சார்பும் இல்லாமல் நேர்மையாக விசாரணை நடத்துகிறதா என்பதை அனைவரும் அறிவர்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.
பெண்களுக்கு எதிரான ஊழல்
ஏற்கெனவே உடலாலும் மனத்தாலும் பாதிக்கப் பட்டிருக்கும் குழந்தைகளை மேலும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காகத்தான் சில நெறிமுறைகளை ‘போக்ஸோ’ சட்டம் முன்வைக்கிறது. விசாரணை அதிகாரிகள் அந்த நெறிமுறைகளைச் சரிவரக் கடைப்பிடிக்கிறார்களா என்பதும் சந்தேகமே. அவர்களுக்கு இது குறித்துப் பயிற்சி நடந்தபடியே இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், விசாரணை நடப்பதையும் வழக்குகள் நிறைவடைவதையும் பார்த்தால் அப்படி எதுவும் நடப்பதுபோல் தெரியவில்லை. ‘போக்ஸோ’ சட்டப் பிரிவின் கீழ் பதிவாகும் வழக்குகளில் சொற்ப வழக்குகளே நீதிமன்றத்தை அடைந்திருக்கின்றன என்பதே விசாரணையின் வேகத்தைச் சொல்கிறது.
சட்டத்தின் துணையோடு சமூக மாற்றமும் அவசியம் என்கிறார் அஜிதா. “குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை வெளியே சொல்லத் தயங்கும் மனநிலையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கைகள் நடத்தப்பட்டதற்கும் இன்று அந்த அணுகுமுறை மாறியிருப்பதற்கும் மக்களிடையே அதிகரித்த விழிப்புணர்வே காரணம். அப்படியொரு விழிப்புணர்வு குழந்தைகள் மீதான குற்றங்களிலும் தேவைப்படுகிறது.
அனைத்தையும்விட அரசின் பங்கு இதில் அத்தியாவசியமானது. இப்படியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழந்தைகள் மீதான குற்றங்களைக் குறைக்கவும் அரசு பட்ஜெட்டில் எவ்வளவு ஒதுக்குகிறது, அந்தப் பணம் சரியான வகையில்தான் செலவு செய்யப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியே. இதில் நடைபெறும் ஊழல் என்பது ஊழல் மட்டுமல்ல. அது சமத்துவமின்மைக்கும் சாதியத்துக்கும் அதிகாரத்துக்கும் ஆதரவானது; பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரானது” என்கிறார் அஜிதா.
குற்றவாளிகளை அம்பலப்படுத்துவோம்
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வல்லுறவு, கொலை போன்றவை மட்டுமே வன்முறையல்ல. குழந்தைகளை விரும்பத்தகாத முறையில் தொடுவது, பேசுவது, பாலியல் படங்களை அவர்களுக்குக் காட்டுவது, குழந்தைகளின் முன்னால் ஆடைகளைக் களைவது உள்ளிட்ட பாலியல் தொடர்புடைய பல செயல்களும் பாலியல்ரீதியான வன்முறையே.
பயத்தின் காரணமாக இவற்றைப் பெரும்பாலான குழந்தைகள் வெளியே சொல்வதில்லை. தனக்கு எது நடந்தாலும் அதைத் தயக்கமின்றி வீட்டில் சொல்லக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கிறோமா என்று நம்மைப் பரிசீலனை செய்துகொள்ள வேண்டியதும் அவசியம். நாம் சொன்னால் வீட்டில் நிச்சயம் நம்புவார்கள் என்ற உறுதியைக் குழந்தைக்கு ஏற்படுத்தித்தர வேண்டியதும் நம் பொறுப்பே.
சிறு வயதில் பாலியல் சீண்டலுக்குள்ளாகும் பெண்கள் வளர்ந்த பிறகும் ஆளுமைச் சிக்கலுக்குள்ளாவதையும் மூன்று பெண்களில் இருவர் சிறு வயதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாலியல்ரீதியான துன்புறுத்தலை அனுபவித்தவர்கள் என்பதையும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்களைப் பாலியல் சீண்டல் குறித்த அச்சத்துடனோ அருவருப்புடனோ வாழ நிர்பந்திப்பது ஆரோக்கிய சமூகத்துக்கான அடையாளமல்ல.
குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களை அடையாளப்படுத்தி, குற்றவாளிகளை அம்பலப்படுத்துவது; அவர்களுக்குக் காலம் தாழ்த்தாமல் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தருவது; இதுபோன்ற வன்முறைகள் குறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்துவது போன்றவற்றின் மூலம் குழந்தைகள் மீதான வன்முறையை ஓரளவு தடுக்க முடியும். அனைத்துக்கும் மேலாக அறமும் சுய ஒழுக்கமும் வீட்டு ஆண்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறதா என்பதையும் பெண்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28




விண்வெளியில் பெண்கள் பயணம் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டாலும் கரையைத் தாண்டி கடலுக்குள் செல்லப் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில பெண்களுக்கே அப்படியான மனத்தடை இருப்பதையும் மறுப்பதற்கில்லை. உலக அளவில் இதுபோன்ற பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள் நிலவிவரும் சூழலில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ரேஷ்மா நிலோஃபர் நாகா, நாட்டின் முதல் பெண் கப்பலோட்டி என்ற சரித்திரச் சாதனையைப் படைத்திருக்கிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ரேஷ்மா நிலோஃபர் நாகா, தற்போது கொல்கத்தாவில் உள்ள பொறுப்புத் துறைமுகக் கழகத்தில் கப்பலோட்டியாகப் (MARINE PILOT) பணியாற்றிவருகிறார். படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் என அனைத்திலும் ஆல் ரவுன்டராக வலம்வந்தவருக்குப் பெரும்பாலான மாணவர்களைப் போல் பொறியியல், மருத்துவம் போன்றவற்றைப் படிப்பதில் ஆர்வமிருந்திருக்கவில்லை. அவற்றுக்குப் பதில் வேறு ஏதாவது வித்தியாசமான படிப்பைத் தேர்வுசெய்து படிக்க வேண்டும் என ரேஷ்மா திட்டமிட்டார்.
விளம்பரத்தால் மாறிய பயணம்
அப்போது நாளிதழ் ஒன்றில் உலகின் மிகப் பெரிய சரக்குப் பெட்டகக் கப்பல் நிறுவனமான ‘ஏபி மாலர் மெர்ஸ்க்’ சார்பில் நிதியுதவி, வேலைவாய்ப்புடன் கூடிய ஐந்தாண்டு கால பி.இ. மரைன் டெக்னாலஜி படிப்பதற்கான விளம்பரத்தைப் பார்த்துள்ளார். “படிப்பதற்கு ஆகும் மொத்தச் செலவையும் ஏற்றுக்கொள்வதுடன் படித்து முடித்தபிறகு வேலைவாய்ப்பும் அளிக்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பெற்றோரைத் தொந்தரவு செய்யாத அதேநேரம் நான் எதிர்பார்த்ததைப் போல் வித்தியாசமான படிப்பாகவும் அது இருந்தது. உடனே பி. இ. மரைன் டெக்னாலஜிக்கு விண்ணப்பித்து, சென்னையில் உள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் படித்தேன். இந்த ஐந்தாண்டு காலப் படிப்பில் முதல் மூன்று ஆண்டுகள் மட்டும் கல்லூரி வளாகத்துக்குள் கப்பல்கள் குறித்துக் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இறுதி இரண்டு ஆண்டுகள் முழுவதும் கப்பல்களில் செயல்முறை விளக்கத்தோடு பாடம் நடத்தப்படுகிறது. செயல்முறை வகுப்பின்போதுதான் அவ்வளவு பெரிய கப்பலை முதன் முதலாகப் பார்த்தேன்.
அதற்கு முன்புவரை அவ்வளவு பிரம்மாண்ட கப்பலைப் பார்த்ததில்லை. கப்பலின் பிரம்மாண்டத்தைவிட அதில் இருக்கும் பெரிய இன்ஜின்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஆனால், அந்த பிரம்மாண்ட இன்ஜின்களைக் கண்டு அஞ்சாமல் அதில் எப்படி வேலைசெய்வது என்பதுதான் என் முதல் கடமையாக இருந்தது” என்கிறார் ரேஷ்மா.
இறுதி ஆண்டுப் படிப்பில் சரக்குப் பெட்டகக் கப்பல்களில் உலகைக் வலம்வந்த ரேஷ்மா, ஆஸ்திரேலியாவின் கடற்பரப்பைத் தவிர்த்து மற்ற சர்வதேசக் கடல்களில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
மகளிர் தினத்தில் கிடைத்த விருது
ஐந்தாண்டு காலப் படிப்பை முடித்த ரேஷ்மா, ஏழு ஆண்டுகளாகப் பயிற்சி கப்பலோட்டியாகக் கடுமையான பணிகளைச் செய்துள்ளார். 2018-ல்தான் ரேஷ்மாவுக்குக் கப்பலோட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட்டது. தான்தான் இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டி என்பதே அப்போதுதான் ரேஷ்மாவுக்குத் தெரியவந்தது.
பணி நிரந்தரம் பெற்று கொல்கத்தா பொறுப்புத் துறைமுகத்தில் கப்பலோட்டியாகப் பணியாற்றிவருகிறார். நாட்டின் முதல் பெண் கப்பலோட்டி என்ற சாதனையை மட்டுமல்லாமல் மிக இளம் வயதிலேயே கப்பலோட்டியவர் என்ற பெருமையையும் ரேஷ்மா நிலோஃபர் நாகா பெற்றுள்ளார். இவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி, மகளிர் தினமான மார்ச் 8 அன்று குடியரசுத் தலைவர் கையால் ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ அளிக்கப்பட்டது.
சவாலான நதியில் பயணம்
பொதுவாகக் கப்பல்களில் கேப்டன்களைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எவ்வளவு பெரிய கப்பல்களை இயக்கும் கேப்டனாக இருந்தாலும் ஒரு நாட்டின் துறைமுகத்துக்குள் நுழைவதற்கு அந்தத் துறைமுகத்தில் உள்ள கப்பலோட்டியின் உதவியில்லாமல் கப்பலை மேற்கொண்டு செலுத்த முடியாது. அப்படிப்பட்ட பணியைத்தான் ரேஷ்மா செய்துவருகிறார்.
“நேரம், காலம் பார்க்காமல் செய்யும் இந்தப் பணியில் வேலையின் மீது இருக்கும் ஆர்வமும், குடும்பத்தின் ஆதரவும்தான் அவசியம்” என்கிறார் எழுத்தாளர் அமரந்தா, நடராஜன் தம்பதியின் மகளான ரேஷ்மா. பறந்து விரிந்து காணப்படும் ஹூக்ளி நதியில்தான் கொல்கத்தா துறைமுக எல்லை அமைந்துள்ளது. இது கடற்பரப்பில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. “உலகில் சவால்கள் நிறைந்த நதிகளில் ஹூக்ளியும் ஒன்று. இங்கே எப்போதும் நீரோட்டம் அதிகரித்தபடியே இருக்கும்.

எப்போது மணல் திட்டு ஏற்படும் என்பதை ஊகித்த பின்னர்தான் கப்பல்களை ஹால்டியா துறைமுகத்துக்குள் கொண்டுவர முடியும்” என்கிறார் அவர். பல கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றுக்கும் சுழித்தோடும் அலைகளுக்கு நடுவிலும் ஹூக்ளி நதியில் ஒவ்வொரு நாளும் சென்று, கப்பல்களைத் துறைமுகத்துக்குள் கொண்டுவந்து நங்கூரமிடுகிறார் ரேஷ்மா.
இதற்காகத் தினமும் இரவு பகல் பாராது 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு நதியில் சிறு படகில் பயணம் செய்கிறார். பின்னர் கப்பல்களின் வெளியே கட்டப்பட்டிருக்கும் தொங்கும் ஏணியில் ஏறி, கப்பல்களை துறைமுகத்துக்கு அழைத்துவருகிறார். “ஒவ்வொரு நாளும் கப்பலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு வெளியேறும்போது அப்பாடா எனப் பெருமூச்சுவிடுவேன். இப்படியொரு மனநிறைவான வேலையைச் செய்வதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.
நாம் செய்யும் வேலையில் சவால் இருந்தால்தான் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் எனத் தோன்றும். அதிலும் ஒரு பெண்ணாக இந்தத் துறையில் என் திறமையை ஆண்களுக்கு நிகராக அல்லாமல் அதற்கும் மேலாகச் செய்துகாட்டினால்தான் என் உழைப்பு மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படும். இந்த வித்தியாசமான அனுபவம்தான் என்னை இந்தத் துறையில் நிலைத்திருக்கச் செய்கிறது” என்கிறார் ரேஷ்மா.
பிற்போக்கைப் புறக்கணிக்கலாம்
சவால்கள் நிறைந்த நதியில் பயணம் சென்று, கப்பல்களைத் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துவதற்கு பத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரமாகும்.
ஆண்கள் சூழ்ந்த இந்தத் துறையில், ‘பெண்களுக்கு எல்லாம் எதற்கு இந்த வேலை? ஒழுங்காக வீட்டைப் பார்த்துக்கொண்டால் என்ன?’ எனக் கூறியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் எனக் கூறும் ரேஷ்மா, அப்படிச் சொல்கிறவர்களின் வார்த்தைக்குத் தான் மதிப்பு கொடுத்ததும் கிடையாது என்கிறார்.
“எந்தத் துறையாக இருந்தாலும் நம்முடைய திறமையும் உழைப்பும்தான் நாம் யார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்லும். எதிர்மறையாகவும் பிற்போக்குத்தனத்துடனும் பேசுபவர்களின் வார்த்தைகளுக்குக் காது கொடுக்காமல் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற லட்சியம் மட்டும்தான் என் கண் முன்னால் தெரிந்தது.
இந்தத் துறையில் முதல் பெண்ணாக இருப்பதே எனக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஏனென்றால் மற்றவர்களைவிட என்னுடைய திறமையை இரட்டிப்பாக நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்தத் தலைமுறைப் பெண்களுக்குச் சுதந்திரமான சூழலும் ஊக்கமும்தான் தேவை. இந்த இரண்டையும் ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் சுயமாக முன்னேறுவார்கள்.
என்னைப் போல் மேலும் பல பெண்கள் இந்தத் துறையில் இணைந்து பணியற்றுவதை நான் விரும்புகிறேன். இங்கே எனக்குப் பல தோழர்கள் இருந்தாலும் ஒரு தோழியின் வருகைக்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் ரேஷ்மா.
எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் முதல் அடியை எடுத்துவைப்பதுதான் சற்றுச் சிரமமாக இருக்கும். ஒருவர் முன்னேறிவிட்டால் மற்றவர்களின் வருகையை எளிதில் தடுக்க முடியாத...
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28






நீண்ட தூர ஓட்டப் பந்தயங்களில் மிகவும் கடினமானது பிரிட்டனில் நடத்தப்படும் ‘ஸ்பைன் ரேஸ்’. மலைப்பாங்கான பகுதிகளில் தொடர்ச்சியாக 268 மைல் தொலைவுக்கு ஓட வேண்டும். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த 136 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 125 பேர் ஆண்கள்; 9 பேர் பெண்கள். அவர்களில் ஜாஸ்மின் பாரிஸ், 14 மாதக் குழந்தைக்குத் தாய்.
தாய்ப்பாலைச் சேமித்து வைத்துவிட்டு, குழந்தையிடமும் கணவரிடமும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார் ஜாஸ்மின். ஓடுவதில் இருந்த அதீத ஆர்வத்தால் போட்டியில் கலந்துகொண்டாலும் சில மைல் தொலைவைக் கடந்தவுடன் குழந்தையின் பிரிவு அவரை வாட்டியது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆர்வத்தையும் வேகத்தையும் குறைத்தது. சக போட்டியாளர்கள் அவரைத் தாண்டி வெகு தொலைவில் சென்றுகொண்டிருந்தார்கள்.
போட்டியிலிருந்து பின்வாங்க ஜாஸ்மின் முடிவெடுத்தார். 50-வது மைலில் இளைப்பாறும் இடம் இருந்தது. அதுவரை ஓடித்தான் ஆக வேண்டும். தாமதிக்காமல் சென்றால், குழந்தையைச் சீக்கிரம் சந்தித்துவிடலாம் என்று தோன்றிய உடனே அவருக்குப் புத்துணர்வு கிடைத்தது. ஓட்டத்தின் வேகமும் அதிகரித்தது. மேடு, பள்ளம், மழை, சகதி எல்லாம் கடந்து இளைப்பாறும் இடத்தை அடைந்தார். பாலைப் பீய்ச்சி, குழந்தைக்குச் சேமித்துவைத்தார். கொஞ்சம் சாப்பிட்டார். களைப்பு நீங்கியது.
ஓடும் தூரத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கடந்துவிட்டதை நினைத்தபோது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அவரது கால்கள் ஓட ஆரம்பித்தன. அடுத்த இளைப் பாறும் இடத்தில் பாலைச் சேமிக்கலாம் என்ற எண்ணமே ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது.
“ஓட ஆரம்பித்தபோது குழந்தை பற்றிய எண்ணம் என்னைப் பின்வாங்கச் செய்தது. ஓரளவு ஓடிய பிறகு, குழந்தைக்குப் பால் சேமிக்க வேண்டும், குழந்தையை வெகு விரைவில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணங்களே என் னைத் தளராமல் ஓடவைத்தன. உண்மையில் என் மகள்தான் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தாள்” என்றார் ஜாஸ்மின்.
நம்பிக்கை ஓட்டம்
அன்று இரவு உணவு சாப்பிட்ட பிறகு, படுத்தார். போட்டியாளர்கள் இவரைக் கடந்து ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டதும் உறக்கம் வரவில்லை. தலையில் டார்ச் விளக்கு, கையில் வரைபடத்துடன் முதுகில் பையை மாட்டிக்கொண்டு ஓட ஆரம்பித்தார். இருளில் பாறைகளும் மரங்களும் ஏதேதோ விலங்குகளின் உருவங்களாகப் பயமுறுத்தின. உடனே மகளின் சிரிப்பையும் குறும்புகளையும் நினைத்துக்கொண்டார். இப்போது வெளியுலகம் அச்சத்தைத் தரவில்லை. நம்பிக்கையோடு ஓட முடிந்தது.
இரண்டாம் நாள் விடிந்தது. வழியில் முன்பின் தெரியாத மக்கள் ஜாஸ்மினுக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். பழங்களையும் சாக்லெட்களையும் கொடுத்தனர். உற்சாக மான வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்தனர். சக போட்டியாளர்கள் தூங்கும் நேரத்தில் பாதியைக்கூட ஜாஸ்மினால் தூங்க முடியாது. பாலைப் பீய்ச்சுவதே பெரிய வேலையாக இருந்தது. அதற்குப் பிறகு தூக்கம் வர மறுத்தது. கணவரிடம் மகளைப் பற்றி விசாரித்துவிட்டு, ஆடையை மாற்றிக்கொண்டு ஓட ஆரம்பித்துவிடுவார்.
நான்காவது நாள் இலக்கை அடையப் போகிறோம்; மகளைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே அற்புதமாக இருந்தது. போட்டியில் வெல்ல வேண்டும் என்றெல்லாம் ஜாஸ்மின் நினைக்கவில்லை. இலக்கை அடைந்தால் போதும்; குழந்தையின் முகத் தைப் பார்த்தால் போதும். அதைவிட வேறெதுவும் பெரிய விஷயம் இல்லை.
முயன்றால் முடியும்
83 மணி நேரம், 12 நிமிடங்களில் ஜாஸ்மின் இலக்கை எட்டினார். உற்சாகக் கூக்குரல்கள் அதிர்ந்தன. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இதுவரை ஆண்கள் மட்டுமே இலக்கை எட்டி, வெற்றி பெற்ற போட்டியில் முதன்முறையாக ஒரு பெண்ணாகச் சாதனைப் படைத்திருந்தார் ஜாஸ்மின்! அவரால் இந்தச் செய்தியை நம்பவே முடிய வில்லை. தனக்கு முன்னால் பலர் இலக்கை அடைந்திருப்பார் கள் என்று நினைத்தி ருந்தார். மகிழ்ச்சிக் கடலில் நீந்தி, தன் மகளை வாரி அணைத்தார். பால் புகட்டினார்.
பலரிடமிருந்தும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார். சற்று நேரம் இளைப்பாறினார். ஏற்கெனவே ஸ்பைன் ரேஸில் வெற்றி பெற்ற ஸ்பெயின் நாட்டு வீரர் யூஜினி ரோசெல்லோ சோல், 15 மணி நேரத்துக்குப் பிறகே இலக்கை வந்தடைந்தார். வெற்றிக்கோட்டுக்கு நான்கு மைல் தொலைவில் வந்தபோது, கடுமையான வானிலை காரணமாக அவர் உடல் பாதிக்கப்பட்டதால், மருத்துவம் செய்துகொண்டு, ஓட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மற்ற போட்டியாளர்கள் பாதியிலேயே பின்வாங்கிவிட்டனர்.
“ஓடுவது பிடிக்கும் என்றாலும் 25 வயதுக்குப் பிறகே ஓட்டப் பந்தயங்களில் கலந்துகொண்டேன். இந்தப் பத்து ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். ஸ்பைன் ரேஸ் மிகவும் கடின மான போட்டி. இதில் குழந்தை பெற்ற பிறகு, அதுவும் பால் சுரந்துகொண்டிருக்கும் போது ஓடுவது இன்னும் கடினம். ஆனாலும், இந்த ஆண்டே போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
என் கணவரும் என்னைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிகாலை நான்கு மணிக்கு மலைப்பாங்கான பகுதிகளில் ஓட்டப் பயிற்சியை ஆரம்பித்துவிடுவேன். குழந்தை எழுவதற்குள் திரும்பிவிடுவேன். பிறகு விலங்குகளுக்கு மருத்துவம் பார்க்கக் கிளம்பிவிடுவேன். இப்படித்தான் பயிற்சி செய்துகொண்டிருந்தேன். பெண், தாய், தாய்ப்பால் என்று எந்த நிலையிலும் முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நானே இந்தப் போட்டியின் மூலம் அறிந்துகொண்டேன்” என்கிறார் ஜாஸ்மின் பாரிஸ்.
431 கி.மீ. தொலைவை 83 மணி நேரத்தில் கடந்த இவர், ஏழு மணி நேரம் மட்டுமே ஓடாமல் இருந்திருக்கிறார். இதில் மூன்று மணி நேரத்தை மட்டுமே தூங்குவதற்காகச் செலவிட்டிருக்கும் ஜாஸ்மின் பாரிஸ், குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டும் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்!
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28




ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓவியக் கலையின் புது அத்தியாயம் எழுதப் பட்டது. அந்த மறுமலர்ச்சிக் காலத்தை ‘ரெனையஸ்சன்ஸ்’ என ஐரோப்பாவில் அழைத்தார்கள். ரூபென்ஸ், ரெம்பிராண்ட் எல்லோரும் அந்தக் காலத்தின் மதிப்புமிக்க ஓவியர்கள். இரண்டு ரெம்பிராண்ட் ஓவியமும் உங்களிடம் இருந்தால் நீங்கள் அனில் அம்பானியின் கடனை அடைத்துவிடலாம். நானும் தேடித்தேடிப் பார்த்தேன்.
எங்கே பெண்கள்? பெண் ஓவியர்கள் இல்லவே இல்லையா? மிகக் குறைவு. கவிதை எழுதிய பெண்களைவிடக் குறைவு. ஐரோப்பாவில் மட்டுமல்ல; இந்தியாவிலும் அதே கதைதான். ஆண் ஓவியர்கள் வரைவதற்கு மாடல்களாய் நின்றதுடன் அவர்களின் கலைப்பணி முடிந்ததா?
பெண்களை வரைந்த விரல்கள்
நீண்ட காலம் கழித்து இந்திய ஆண் ஓவியர்களின் நடுவே முதல் பெண்ணாக அம்ரிதா ஷெர்கில் வந்தார். ஹங்கேரியில் பிறந்து, இந்தியாவில் ஓவியரானவர்.
நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டுக்குள் திடீரென்று ஒரு குருவி பறந்து வந்தது. அங்கும் இங்கும் பறந்து, நாங்கள் மின்விசிறியை நிறுத்துவதற்குள் அடிபட்டு இறந்து விழுந்தது. அதன் இறகுகள் வீடெங்கும் சிதறிக்கிடந்தன. அம்ரிதாவின் வாழ்க்கையும் அந்தக் குருவி மாதிரிதான். சிதைந்துபோன வாழ்வு.
அம்ரிதாவின் ஓவியங்கள் அன்றைய பிரபல ஓவியர்களான அபனீந்திரநாத் தாகூர், ஜமினி ராய் ஆகியோரின் ஓவிய வரிசையில் வைத்துப் போற்றப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால், உயிரோடு வாழ்ந்தவரையில் அவரின் ஓவியங்களுக்குப் பெரிய வரவேற்பு இல்லை. அன்றைய மகாராஜாக்கள் இவரின் சித்திரங்களை நிராகரித்து ரவிவர்மாவின் ஓவியங்களை வாங்கினார்கள்.
இத்தனைக்கும் அம்ரிதா, ஐரோப்பிய பாணியை மறுதலித்து நம் பண்டைய எல்லோரா பாணிக்கு இந்திய ஓவியங்களைத் திருப்பியவர். ஒருமுறை ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்த அம்ரிதாவிடம் சிலர் நேருவை ஓவியமாகத் தீட்டச் சொன்னார்கள். “ரொம்ப அழகானவர்களை நான் வரைவதில்லை” என்று அம்ரிதா மறுத்துவிட்டார். இந்தியாவின் விளிம்புநிலை உழைக்கும் மகளிர்தாம் அவரால் மறுபடி மறுபடி வரையப்பட்டார்கள்.
நிராகரிப்புகள், கொந்தளிப்புகள், பல உறவுகள், பல பிரிவுகள் என அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கை; 28 வயதில் திடீர் மரணம். கணவர் கொன்றுவிட்டார் என்று தாய் சொன்னார். அம்ரிதா செய்துகொண்ட கருக்கலைப்புதான் காரணம் என்றார்கள். எதுவோ என்னவோ ஒரு தூரிகையை விறகில் வைத்துவிட்டார்கள்.
அர்டிமீசியாவுக்கு நேர்ந்த அநீதி
ஐரோப்பாவிலாவது பெண் ஓவியர்கள் இருந்தார்களா? 400 ஆண்டுகளுக்கு முன் ரோம் நகரில் வாழ்ந்த அர்டிமீசியா ஜென்டிலெஷ்கி இன்று அதிகம் பேசப்படுகிறார். வாழும் காலத்தில் எத்தனையோ அவமானங்கள்.
யாருக்கு இல்லை? ஓவியர் வான்கா கஷ்டப்படவில்லையா? பாரதி, ஜமீனின் பார்வைக்குச் சீட்டுக்கவி அனுப்பவில்லையா? எந்தக் கவிஞனை, கலைஞனை வாழ்க்கை மண்டிபோடாமல் அனுப்பிவைத்தது? அர்டிமீசியாவுக்கு நேர்ந்த அவமானம் வேறுவிதம்.
ஆண்டு 1612. அர்டிமீசியாவுக்கு 19 வயது. அவளுடைய தந்தையின் நண்பரும் அவளுக்கு ஓவியம் கற்றுத்தர நியமிக்கப்பட்ட ஆசிரியருமான அகோஸ்டினோ டாசி, அர்டிமீசியாவைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார். டாசி மீது அர்டிமீசியா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை பற்றிய தகவல்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வழக்கில் ஏகப்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்து வந்த அர்டிமீசியாவை அனைவருமே அருவருப்பாகப் பார்த்தனர். இரண்டு செவிலியர்கள், நீதிபதியின் முன் அர்டிமீசியாவின் உடலைப் பரிசோதித்தனர். விரல்களைக் கயிற்றால் முறுக்கித் துன்புறுத்தியபடியே விசாரணை நடத்தினர். “நான் சொல்வது உண்மை, உண்மை, உண்மை” என்று மும்முறை அலறுகிறாள் அர்டிமீசியா. அப்புறம்? அப்புறமென்ன, வழக்கம்போலத்தான். டாசி உடனே விடுவிக்கப்படுகிறார்.
சுசானாவும் முதியவர்களும்
பாலியல் தொந்தரவு கொடுத்த பெண்ணின் கண் முன்னாலேயே குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது. அர்டிமீசியா அதற்குப்பின் வெறியுடன் வரைய ஆரம்பித்தார். ஆனால், ஓவிய உலகில் அவரது பெயர் வேறு மாதிரி நிலைத்துவிட்டது. பாலியல் வல்லுறவு புகாருக்காக நீதிமன்றத்துக்குப் போனவர் என்றே அவர் அறியப்படுகிறார்.
விவிலியக் கதைகளில் ஒன்றான ‘சுசானாவும் முதியவர்களும்’ (டேனியல் கதை) கதையின் ஒரு காட்சியை அன்றைய ஓவியர்கள் அதிகம் வரைந்தார்கள். கதையே சுவாரசியமானது. பேரழகியும் நல்லவளுமான சுசானா குளிக்கப்போகும் இடத்தில் இரு முதியவர்கள் அவளை இச்சையோடு எட்டிப் பார்க்கிறார்கள்.
தங்களுக்கு இணங்காவிட்டால், அவள் கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டுக் காதலனைச் சந்திக்கிறாள் என்று பொய்சாட்சி சொல்லிவிடுவதாக மிரட்டுகிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பே பிளாக் மெயில்! சுசானா எதிர்த்து நிற்கிறாள். இரு முதியவர்களும் அவள் மீது வழக்குப் போடுகிறார்கள். கடவுளின் கருணைபெற்ற டேனியல் தீர விசாரித்து நீதி வழங்குகிறான். சுசானா பழியிலிருந்து விடுவிக்கப்படுகிறாள்.
பெண் வரைந்த பெண்
இந்த பைபிள் கதையைப் படமாகத் தீட்டிய ஆண் ஓவியர்கள், சுசானாவின் ஆடையற்ற உடலையும் உணர்ச்சியே இல்லாத முகத்தையும் எட்டிப்பார்க்கும் ஆண்களின் கண்களின் இச்சையையும் வரைந்தனர். அர்டிமீசியா வரைந்த ஓவியத்திலோ சுசானாவின் முகச்சுளிப்பும் அருவருப்பும் ஆதரவற்ற நிலையின் பரிதாபமும் தன்னை மறைக்க முயலும் தவிப்பும் தெரிகின்றன. பெண் வரையும் பெண்ணுக்கும் ஆண் வரையும் பெண்ணுக்கும் இருக்கும் வேறுபாடு அது.
அர்டிமீசியாவின் சுசானாவைப் பாருங்கள். பொள்ளாச்சியில் ஒலித்த பெண்களின் கதறல் கேட்கும். ‘ஒரு அஞ்சு நிமிஷம் வெளியே இருங்க அண்ணா..’ என்கிற கதறல். இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஓலம். அர்டிமீசியா, சுசானாவை வரைந்தாரா தன்னையே வரைந்துகொண்டாரா எனத் தெரியவில்லை. ‘ஆன்மாவில் படியும் தூசைக் கழுவிச்செல்லும் கலை’ என்று ஓவியக் கலையைப் பற்றி பிகாசோ சொன்னார். ஆனால், தங்கள் உடல் மீதான வன்முறைகளைக் கழுவிச்செல்லும் கலையாகத் தான் ஓவியத்தைப் பெண்கள் பார்த்தார்களோ என்னவோ.
- பாரதி பாஸ்கர்