Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நம்பாடுவானை ஆட்கொண்ட நின்ற நம்பி | SudhaRaviNovels

நம்பாடுவானை ஆட்கொண்ட நின்ற நம்பி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
திருகுறுங்குடிக்கு மேற்க்கே மகேந்திரகிரி என்ற மலையடிவாரத்தில் நம்பாடுவான் என்னும் பாணன், எம்பெருமான் மீது பரமபக்தி கொண்டவராய் வாழ்ந்து வந்தார். சதாநேரமும் இறைவனை தொழுது கொண்டும் கைசிகம் என்ற பண்ணை இசைத்துக் கொண்டும் பாடிப் பரவசமாய் வாழ்ந்தார்.

அவரது பக்தியை உலகிற்க்கு உணர்த்த குறுங்குடி நம்பி ஆசைப்பட்டார். ஒருநாள் நம்பாடுவான் மலையடிக்காட்டில் சஞ்சாரம் செய்து வந்தபோது திடீரென்று ஒரு பிரம்ம ராட்சசன் மரத்திலிருந்து குதித்தான். நம்பாடுவான் கழுத்தைப் பிடித்து, இப்பொழுதே நீ எனக்கு உணவாக வேண்டுமென்று கர்ஜித்தான்.



அந்நிலையிலும் நம்பாடுவான் புன்னகைத்துக் கொண்டே "இந்த உடல் எதற்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்தேன். ஆனால், உனக்கிது உதவும் என்றால் எடுத்துக்கொள். ஆனால், நான் எம்பெருமாள் நம்பியின் பொருட்டு ஏகாதசி விரதம் பூண்டுள்ளேன். விரதத்தை முடித்தப் பிறகு நீ என்னை புசிக்கலாம். கொஞ்சம் வழிவிட்டால் நான் பூஜைமுடித்து உடனே திரும்புவேன்" என்று கூற, அந்த ராட்சசன் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தான்.

"இதோ பாரப்பா, நான் திருமாலின் திவ்ய பக்தன். ஒருநாளும், போய் சொல்லேன். என் திருமண் மீது ஆணை" என கைப்பிடித்து சத்தியம் செய்தார் நம்பாடுவான்.

ராட்சசன் வழிவிட, நம்பாடுவான் தன் வழியில் தொடர்ந்து நடந்தார்.

குறுங்குடி கோவிலுக்குள் நுழைய முடியாத துக்கத்துடன் வழக்கம் போல் கோயிலுக்கு எதிரே இருந்த கொடிமரம் அருகில் போய் நின்றார்.

"அனைத்து உலகங்களிலும் ஒலி வீசும் திகழ் சக்கரமே, இதுவே என் கடைசி வாய்ப்போ? இனி உனை காண்பது இயலாதோ? நீயே முடிவு செய்து கொள்" என்று நெக்குருகி நின்றார்.
 
Last edited:

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவரெதிரே பெருஞ்சக்தி ஒன்று மையம் கொண்டிருப்பதை உணர்ந்தார். எதிரேயுள்ள கொடிமரம் மேலும் கீழும் வலுவாய் அதிர்ந்தது. பளிச்சென்று விலகி வேரோடு பிடுங்கி ஒதுங்கிய நெடுமரம்போல் நகர்ந்து வழிவிட்டு நின்றது.

இப்போது நின்றநம்பியும் நம்பாடுவானும் நேருக்கு நேரானர்கள். கருவறையிலுள்ள குறுங்குடி நம்பி பெருமான் நெடுதுயர்ந்து நின்றார். அப்படியே நின்றநம்பியை நம்பாடுவான் கண்கள் பணிக்கப் பார்த்தார். எம்பெருமானின் கருணை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தார். களிக்க-களிக்க அதிலேயே கிடந்தார். மீண்டும், நம்பாடுவான் தன்வாக்கைக் காக்க காடு நோக்கி நடந்தார்.

பிரம்மராட்சசனை சந்தித்த நம்பாடுவான், "இதோ நான் வந்துவிட்டேன், என்னை எடுத்துகொள்" என்றார்.

"இல்லை நம்பாடுவானே, உன்னை பார்த்தது முதல் எனக்கு பசியே எடுக்காததுபோல் தோன்றுகிறது. என்னால் என்னை உன்னை உண்ண முடியவில்லை. ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் முற்பிறவியில் யோகா சர்மா என்ற பிராமணனாகப் பிறந்து யாகத்தை இழிவாகவும், உண்மையான சிரத்தியில்லாமலும் செய்ததால் இப்படியொரு ராட்சச உருவம் வந்துவிட்டது. உம்மைப் போன்ற ஹரிபக்தனின் தரிசனத்தினாலும், ஸ்பரிசத்தினாலும் மட்டுமே விமோசனம் கிடைக்கும். நீயே எனக்கு கதி" என்று நம்பாடுவான் பாதங்களில் விழுந்தான் பிரம்மராட்சசன். நம்பாடுவானும் தான் பாடிவந்த கைசிகப் பண்ணை பாட குறுங்குடி நாதர் அவ்விருவரையும் ஆட்க்கொண்டார்.

வைகுண்ட ஏகாதசி போல் கைசிக ஏகாதசி இங்கு விசேஷமாய் கொண்டாடப்படுகிறது. இத்தளத்தில் மூலவராக சுந்தரபரிபூரணநம்பி, தாயார் வல்லிநாச்சியார் என்னும் திருநாமங்களோடு அருளாட்சி செய்கிறார்கள். மேலும் இத்தல பெருமான் நின்றநம்பி, இளநம்பி, கிடந்தநம்பி, குறுங்குடிநம்பி, மலைமேல்நம்பி என்று இந்து திருகொலங்களில் சேவை சாதிக்கிறார்.

ஹரிஷ்....(தினகரன் இதழில் வெளி வந்தது)
 
Last edited: