அத்தியாயம் - 3
அலுவலக வாகன நிறுத்தத்தில், சித்தார்த் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கும் நேரம், தனது ஸ்கூட்டியில் வந்திறங்கினாள் மதுமிதா.
மாம்பழ நிற சல்வாரும், வலப்புற காதோரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒற்றை ரோஜாவுடன், புத்தம் புது மலரைப் போலப் புத்துணர்ச்சியுடன் தெரிந்தாள். அவள் அங்கிருந்து நகரும்வரை அவனது கண்கள், அவளது எழிலை ரசித்துக் கொண்டிருந்தன.
இது எதையும் அறியாதவளாக, கைப்பையுடன் அலுவலகத்திற்குச் செல்லப் படி ஏறினாள் அவள். நீண்ட மூச்செடுத்துக் கொண்டு, அவளைப் பின்தொடந்து அலுவலகக் கட்டிடத்தை நோக்கி நடந்தான் சித்தார்த்.
எதிர்பட்ட நபரைப் பார்த்துப் புன்னகைத்தபடி படியேறிக் கொண்டிருந்தவள், காலடி ஓசைக் கேட்டுப் பின்னால் திரும்பிப் பார்த்தாள். இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறி வந்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும், சற்று ஒதுங்கி நின்றாள்.
தன்னைக் கடக்கும்போது கூறுபோடுவதைப் போல வெட்டிச் சென்ற அவனது பார்வையைக் கண்டதும், அவளது விழிகள் விரிந்தன.
பழைய நினைவுகளெல்லாம் வெள்ளமெனக் கரைபுரண்டு ஓடியது. ‘அந்த வெள்ளத்தில் கரைந்து, பழைய நினைவுகளோடு கலந்து விடமாட்டோமா!’ என ஏக்கமாக இருந்தது.
இனிமையான இளமைப்பருவம், கல்லூரி காலத்தில் சந்தோஷத்துடன் சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்தது என தன்னுடைய நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
‘என்னுடைய சின்னஞ்சிறு உலகத்தில், எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன். நடக்கக் கூடாத சில விஷயங்களை நடத்தி, என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டாயே கடவுளே!’ என மனத்திற்குள் குமைந்தாள்.
மறக்க முயன்ற அனைத்து விஷயங்களையும் நினைத்து உள்ளுக்குள் மருகியதில், தலைவலி வந்ததுதான் மிச்சம். அப்படியே மேஜையின் மேல் கவிழ்ந்து கொண்டாள்.
சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த சித்தார்த், இடம் வலமாக அசைந்தபடி இருந்தான். மருண்ட விழிகளுடன் அவள் தன்னைப் பார்த்த அந்தக் காட்சியே அவனது எண்ணத்தில் தோய்ந்திருந்தது.
‘ச்சே!’ அவளிடம் ஏதாவது பேசியிருக்கலாம் சித்தார்த்!’ என்ற மனத்தை ஓங்கிக் குட்டினான்.
“என்னை என்னவோ ராட்சசன் போல நினைத்து, அப்படி மிரண்டு போய்ப் பார்க்கிறாள். அவளிடம் என்னவென்று பேசுவது!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான்.
‘தான் இத்தனைச் சீக்கிரம் வந்திருக்கவே கூடாது. சரி நான்தான் வந்தேன். இவள் எதற்காக இவ்வளவு காலையில் வரவேண்டும்? நான் சின்சியர் சிகாமணி என்று எனக்குக் காண்பித்துக் கொள்ளவா! எதுவாக இருந்தாலும் இனி, அவளது எந்த ஜாலத்தையும் நம்புவதற்குத் தயாராக இல்லை’ என்று மனத்திற்குள் சாடிக் கொண்டான்.
ஆனாலும், மனம் நிலைகொள்ளாமல் போக்குக்காட்ட, அங்கிருக்க முடியாமல் எழுந்து வெளியே வந்தான். மனம் ஆயிரம் காரணங்களைக் கற்பித்துக் கொண்டாலும், அதையெல்லாம் சிந்திக்கிறதா இந்த அறிவு! அவளது கேபினைக் கடக்கும் போது, அவள் அமர்ந்திருக்கும் இடத்தைக் கண்கள் துழாவின.
கைகளில் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவளைக் கண்டதுமே, அன்று மருத்துவமனையில் அவள் அமர்ந்திருந்த காட்சி நினைவிற்கு வர, ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
அப்போது தான் அலுவலகத்திற்குள் நுழைந்த சிவா, தங்களது கேபினிலிருந்து வேகமாக வெளியே வந்த சித்தார்த்தைப் பார்த்தான். கடுகடுவென்றிருந்த அவனது முகத்தைப் பார்த்தவன், சட்டென அவனது கண்களில் படாதவாறு மறைவாக நின்றான். தனக்கிருந்த குழப்பத்தில் அவன், சிவாவைக் கவனிக்கவே இல்லை.
வேலையில் கவனமாக இருந்த மதுவின் அருகில் சென்று அமர்ந்தான் சிவா.
திரும்பிப் பார்த்தவள், “குட் மார்னிங் சிவா!” என முறுவலித்தாள்.
“குட் மார்னிங் மது!” நட்புடன் அவனும் புன்னகைத்தான்.
வியப்புடன் மது அவனைப் பார்த்தாலும், எதுவும் கேட்காமல் அவனிடம் சில சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஹாய் மது!” உற்சாகமாகக் குரல் கொடுத்தபடி வந்த கீதா, அங்கே சிவாவும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தாள்.
“என்ன தல? இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்தாச்சு? பஸ் ஸ்டாண்ட்ல தவம் இருக்கலையா?” வியப்புடன் கேட்டாள் கீதா.
சிவா அவர்களுக்கெல்லாம் சீனியராக இருந்தாலும், அனைவரிடமும் இயல்பாகப் பேசிப் பழகக் கூடியவன். அதிலும், கீதா அவனிடம் எப்போதும் வம்பிழுப்பதும், அவன் திருப்பிக் கொடுப்பதுமாக கலகலவென இருக்கும்.
ஆனால், அன்று அவனிருந்த மனநிலையில், கீதாவின் கேலிக்குச் சிறு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு, தனது வேலையைக் கவனிக்கலானான்.
அவளை, “ஏய் சும்மா இருடி!” மென்குரலில் அதட்டினாள் மது.
‘ஏதாவது பிரச்சனையா?’ கண் ஜாடையிலேயே தோழியிடம் விசாரித்தாள் கீதா.
‘தெரியலை’ என்பதைப் போலத் தோள்களைக் குலுக்கினாள் மதுமிதா.
சூழ்நிலையைச் சகஜமாக்க, “அப்புறம் மது! கல்யாண வேலைகள் எவ்வளவு தூரத்திலிருக்கு?" எனக் கேட்டாள் கீதா.
"ம்ம், நல்லபடியா நடந்துட்டிருக்கு" என்றாள்.
“ரொம்ப நாள் ஆச்சுடி கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு. தீபக் அண்ணா கல்யாணத்தில் ஒரு பிடி பிடிச்சிடணும்” என்றவளை முறுவலுடன் பார்த்தாள்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்தாள் லதா.
“வாம்மா மின்னல்! பத்து நாள் லீவ் போட்டது போதுமா?” கிண்டலாகக் கேட்ட கீதாவை அவள் நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை.
சிவாவின் பார்வை அவளைத் தொடர்ந்தது. சற்றுநேரம் அமைதியாக இருந்தவன், எழுந்து லதாவின் அருகில் சென்றான். அவன் வந்து பேசுவான் என்பதை அவள் யூகித்திருந்தாளோ என்னவோ… சட்டென எழுந்து கேபினின் மற்றொரு வழியாக வெளியேறினாள்.
சிவாவிற்கு அவமானமாக இருந்ததென்றால், தோழிகள் இருவருக்கும் திக்கென்றிருந்தது. கறுத்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறியவனைப் பார்க்க வேதனையாக இருந்தது.
‘வேலைக்குச் சேர்ந்த புதிதில், அவளுக்கு ஒவ்வொரு விஷயத்தையும் நிதானமாக, புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தவன் அவன். எத்தனையோ உதவிகளை அவளுக்குச் செய்திருக்கிறான்.
உடன்பிறந்தவனான ராஜேஷிற்குத் தன்னிடமிருக்கும் அதே சகோதர பாசத்தை, அவனிடமும் உணர்ந்தாள் மதுமிதா. அப்படிப்பட்டவனுக்கு ஏன் இந்தத் துன்பம்? இது வெறும் ஊடலாகத் தோன்றவில்லை அவளுக்கு.
காலையில் தனக்கிருந்த கவலையை மறந்து, சிவாவை நினைத்து வருந்தினாள். கீதாவுடன் அவனைச் சந்திக்க டைனிங் ஹாலிற்குச் சென்றாள்.
அவர்களைப் பார்த்ததும், “ப்ளீஸ் மது! கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கணும்” என்றான்.
“இன்னும் பத்து நிமிஷத்துல ஆஃபிஸ்ல எல்லோரும் வந்திடுவாங்க. அப்புறம் எங்கேயிருந்து தனியா இருக்கறது? உங்க முகமே உங்களைக் காட்டிக் கொடுத்திடும். மனசுல இருக்கறதைக் கொட்டிடுங்க. பாரமாவது குறையும்.”
அவன் அமைதியாகவே இருக்க, “ஒருவேளை பெர்சனல்…” என்றவளை அவசரமாக இடைமறித்தான் அவன்.
“அப்படியெல்லாம் இல்லம்மா! எங்க காதல் விவகாரம் ரெண்டு பேர் வீட்டிலும் தெரிஞ்சி போச்சு. நான் கொஞ்சம் உறுதியாயிருந்து எங்க வீட்ல சம்மதம் வாங்கிட்டேன். ஆனா, லதா வீட்ல பிரச்சனை பண்றாங்க.
என்னை நம்பி வா. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னா, இவ பயப்படறா. எனக்கு எல்லோருமே வேணும்னு அழறா. எல்லோர் சம்மதமும் கிடைச்சாதான் கல்யாணம். இல்லனா, இப்படியே இருக்கேன்னா.
அதுக்குக் கொஞ்சம் கோபத்தோடு பேசிட்டேன். பத்து நாளா லீவ் போட்டுட்டு வீட்ல உட்கார்ந்துட்டா. போன் பண்ணா எடுக்கறதில்ல. ரெண்டு நாளைக்கு முன்ன வீட்டுக்குப் போனேன். பேச்சு பெரிசாகி, அவங்க அண்ணன் அடிக்க வந்துட்டார்.
நானும் கையை ஓங்கிட்டேன். இவள் ஒரேடியா உனக்கும், எனக்கும் ஒத்துவராது. அதனால நாம பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டா. என்னைப் பத்திக் கொஞ்சமாவது நினைச்சிப் பார்த்தாளா!” மனத்திலிருந்த ஆதங்கத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தான்.
சிவா, லதாவின் காதலை அவர்கள் இருவருமே அறிவர். இத்தனைக்கும், சிவாவிடம் முதலில் காதலைச் சொன்னவளே லதாதான். ஆனால், இன்று தங்களது காதலை முறித்துக் கொள்வதாகச் சொல்வதும் அவளே!
அவன், அவளை எந்த அளவிற்கு நேசித்தான் என்பது, மதுவிற்கு நன்றாகவே தெரியும். திடீரென, அவள் இப்படிப் பின்வாங்குவது அவளுக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
"கவலைப்படாதீங்க சிவா! பிரச்சனைன்னு வந்தா, அதுக்கு முடிவுன்னு ஒண்ணு இருக்கும். இந்தத் தற்காலிகப் பிரிவுகூட, உங்களுக்குச் சாதகமா முடியலாம். இதையும், பாசிடிவ் அப்ரோச்லயே எடுத்துக்கலாமே” என அவனைத் தேற்றினாள்.
“எதையும் சொல்றது ஈஸி. நமக்கு நடக்கும் போதுதான், அந்த வலி தெரியும்” என்றான் விரக்தியுடன்.
அவனது பதில், அவர்களது மனத்தைச் சுருக்கென தைத்தது.
“நல்லதே நடக்கும்னு கொஞ்சம் நம்புவோமே. உண்மையான காதலுக்குச் சக்தி அதிகம். என்னைக்குமே அது பொய்க்காது” என்றவளை, விழிகள் விரியப் பார்த்த மதுவிற்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது.
“நான் எத்தனையோ முறை யோசிச்சிருக்கேன். காதல் நிறைவேறலன்னா, ஏன் தற்கொலை செய்துக்கணும்னு? இன்னைக்கு நான் அனுபவிக்கும் போதுதான், அந்த வலி என்னன்னு புரியுது. மனசுக்குப் பிடிச்சவங்களோட உதாசீனத்தைத் தாங்கவே முடியாது” சொல்லிக்கொண்டே அங்கிருந்து அகன்றான்.
சிவாவின் பேச்சு, மதுவின் சங்கடத்தை அதிகப்படுத்தியது. ஏற்கெனவே இருந்த தலைவலி, இப்போது இன்னும் அதிகமானது போலத் தோன்ற அலுவலக வராண்டாவில் வந்து நின்றாள்.
பின்னாலேயே வந்த கீதா, "என்ன மது?” சற்று பயத்துடன் கேட்டவளிடம், “நீ போ. நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்” என்றாள் அழுத்தமாக.
“நீ யாரைப் பத்தி நினைச்சிட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியும். தேவையில்லாததை நினைக்காதே. எல்லாமே முடிஞ்சி போனது” என்றாள்.
மது எதுவும் சொல்லாமல், வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள்.
"நீ சுரேஷைப் பத்தித் தானே நினைச்சிட்டிருக்க" கீதா தயங்கத்துடன் கேட்க, மது கோபத்தில் விழிகளை உருட்டினாள். கைகளை மடக்கித் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தினாள்.
"போதும் கீதா நான் எதுக்காக அவனைப் பத்தி நினைக்கணும்? அவன் செய்த வேலைக்கு அவனை... என்னுடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காதவங்களை நான் ஏன் மதிக்கணும்? இது எல்லாத்தையும் விட, வேண்டியவங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு எதுக்கு?" கோபத்துடன் கடைசி வாக்கியத்தை அழுத்திச் சொல்லி விட்டுச் சென்றாள்.
அலுவலகத்திற்குள் இருக்க முடியாமல் மொட்டை மாடியில் உலவிக்கொண்டிருந்த சித்தார்த் நேரமாதை உணர்ந்து கீழே வந்தான். வராண்டாவில் நின்றிருந்த மதுவையும், அவளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த கீதாவையும் பார்த்ததும் அப்படியே நின்றான்.
சுரேஷ் என்ற பெயர் அவனது காதில் விழ, விறைப்புடன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். மது பேசப் பேச அவனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது.
‘இவள் என்ன சொல்கிறாள்? வேண்டியவங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கு எதற்கு? இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்? அப்படியானால்... அன்றைக்கு நான் பார்த்தது, கேட்டது எல்லாமே பொய்யா? இல்லை, இப்போது இவள் பேசியதை, நான் சரியாகக் கேட்கவில்லையா? ஒருவேளை நான்தான் அன்று நடந்ததைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டேனோ! அப்படியிருந்தால்…’ அந்த நினைவே அவனுக்குப் பயமாக இருந்தது.