அத்தியாயம் - 12
“எல்லாம், சரியான திருட்டுக்கோட்டுங்க. எனக்குத் தெரியாம எவ்ளோ வேலை செய்திருக்கீங்க, நீங்க ரெண்டு பேரும்” உணவைப் பரிமாறியபடி சாரமாரியாக வசைபாடிக் கொண்டிருந்தாள் மதுமிதா.
“இதென்னடா கொடுமை! சாப்பாடு போட்டுட்டு கூடவே இப்படி வாங்கிக் கட்டிக்கிறதா இருக்கே. இதுதான் செவிக்கு உணவில்லாத போது…” எனப் பேசிக்கொண்டே சென்ற சுரேஷ், அவளது முறைப்பைக் கண்டதும் கப்பென வாயை மூடிக்கொண்டான்.
“என்னைக்கோ, ஒரு நாளைக்குக் கேட்கற உனக்கே இப்படி இருக்கே… தினம் கேட்கற எங்களுக்கு எப்படி இருக்கும்?” உணவை உள்ளே தள்ளியபடி பேசினான் தீபக்.
விமலாவும், சந்திர சேகரும் சிரித்துக்கொண்டே சாப்பிட, “கொன்னுடுவேன் ரெண்டு பேரையும். செய்றதெல்லாம் செய்துட்டு வாயைப் பாரு” என்றாள் கோபத்துடன்.
“ஏம்மா! நீ அண்டர்கிரௌண்ட் தாதாகூட கூட்டாளியா ஆகிட்டியா என்ன? வாயைத் திறந்தா வெட்டுக்குத்தாவே இருக்கே. இப்போ நாங்க சாப்பிடுறதா வேணாமா?” என்று பரிதாபமாகக் கேட்டான் சுரேஷ்.
“ம்க்கும். கொட்டிக்க” என்று அவனது இலையில் இன்னொரு ஜாங்கிரியை வைத்தாள்.
“ஹி ஹி! நம்ம மது பலாப்பழம் மாதிரி. மேலே தான் முள்ளு. மனசு தேன் பலா” என்று அவளுக்குத் தலையில் ஐஸ்கட்டியை வைத்தான் சுரேஷ்.
“போதும்டா! அடங்கு. ஏன் அத்தான் நீங்களாவது ஒரு வார்த்தை என்கிட்டச் சொல்லியிருக்கலாமில்ல. ரமேஷ் அண்ணாவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லியிருப்பேன். இந்தக் குரங்கால நான் இவ்ளோ நாள் அவங்ககிட்டயும் பட்டும் படாமல் பேசிட்டு இருந்தேன்” என்று சுரேஷின் தோளில் ஒரு அடி அடித்தாள்.
தீபக்கைப் பார்த்து, “சீனியர்! என்னால முடியல. இன்னைக்கு, என் காது ஜவ்வு கிழியறது உறுதி. இந்தப் பேச்சுப் பேசறா” என்றான் சற்று சலிப்புடன்.
“ஓ! நான் பேசறது சாருக்கு காது வலிக்குதாமா. சரி, இனி பேசல. நீயா வந்து சாரி மது நான் பேசினதெல்லாம் தப்பு. இனி, இப்படிப் பேசமாட்டேன்னு சொல்ற வரைக்கும் நான் பேசப்போறதே இல்ல. பார்த்துட்டே இரு. நான் ஒண்ணும் விளையாட்டுக்குச் சொல்லல…” என அவள் விடாமல் பேசிக்கொண்டிருக்க, அவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“என்னடா பார்வை வேண்டியிருக்கு? இப்படில்லாம் பார்த்தா மட்டும் பேசிடுவேனா” என்றாள் கடுப்புடன்.
“அம்மா தாயே! என்னை விட்டுடு. பேசமாட்டேன்னு சொல்லிட்டு இவ்ளோ பேசறயே. பின்னே, காது ஜவ்வு கிழியாம என்னவாகும்?” என்று சொல்ல, அவள் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
“டேய்! அவள் எதையாவது எடுத்து, உன் தலைல ஊத்தறதுக்குள்ள ஓடிடு” என்று எச்சரிக்கை குரல் கொடுத்தான் தீபக்.
“ஐயையோ! இன்னும் அந்தப் பழக்கத்தையெல்லாம் விடலையா!” விட்டு விருட்டென எழுந்து இரண்டடி தள்ளிச் சென்று நின்றுகொண்டான்.
“போதும்டா! ஓவரா சீன் போடாதே” என்றாள் எரிச்சல்.
“கண்டுபிடிச்சிட்டியா!” என்று சிரித்துக்கொண்டே வந்து அமர்ந்தான்.
பேச்சும் சிரிப்புமாக, அவர்களது முன் இரவு நேரம் மகிழ்ச்சியுடன் கழிந்தது. சுரேஷ், மதுவிடம் பேசிக்கொண்டிருக்க, தீபக் பெரியவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
“ஓகே மது! கிளம்பறேன். மணியாகிடுச்சி” என்று எழுந்தான் சுரேஷ்.
“ஓகே பத்திரம். ஆட்டோல போறியா?” என்று கேட்டாள்.
“இல்ல, சீனியரை வீட்ல ட்ராப் பண்ணிட்டு, அவரோட வண்டியை எடுத்துட்டுப் போகச் சொன்னார்” என்றான்.
“ஓ! வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும், எனக்குக் கால் பண்ணு” என்றவள் மெதுவாக, “நீ வந்து இவ்ளோ நேரம் ஆச்சு. ஆனா, கீதாவைப் பத்தி நீ ஒரு வார்த்தைக் கூடக் கேட்கலையே!” என்றாள் எதிர்பார்ப்புடன்.
சுரேஷ் சற்றுநேரம் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தி கொண்டான். தன்னுடைய கேள்வி அவனை மிகவும் பாதித்ததை மது உணர்ந்து கொண்டாள்.
ஆழ்ந்த மௌனத்துடன் சில நொடிகளைக் கடத்தியவன், “வாழ்க்கையைப் புதுசா துவங்கணும்ன்னு இருக்கேன் மது. என் அம்மாவுக்காக, என் குடும்பத்துக்காக அவங்களோட சந்தோஷத்துக்காக வாழணும்ன்னு நினைச்சித்தான் இந்தியாவுக்கே வந்தேன். இருப்பேன்” என்றான் கீற்றான புன்னகையுடன்.
அவன் சொன்னதை சற்று சங்கோஜத்துடன் கேட்டுக்கொண்டவள், “ஆல் த பெஸ்ட் சுரேஷ். லேட்டா எடுத்திருந்தாலும், உன்னோட இந்த முடிவு ரொம்ப சரியானது” என்று வாழ்த்தி அவனை வழியனுப்பி வைத்தாள்.
புன்னகையுடன் கையசைத்து விடைகொடுத்தவளால், அதைத் தொடர முடியாமல் மௌனத்தில் அமைதியானாள்.
‘என்றாவது ஒரு நாள், எல்லாம் சரியாகிவிடும்’ என்று மனதார நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், சரியாகிவிடும் என்ற அந்த வார்த்தை இங்கே முற்றுப் பெற்றது என்றல்லவா மாறி விட்டது’ என்று எண்ணியவளுக்கு மனம் வாடியது.
*************
இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பெற்றோரிடம் மதுமிதாவைப் பற்றிப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான் சித்தார்த்.
ஒவ்வொருவராக தங்கள் அறைக்குச் செல்ல, “என்ன சித்தார்த்? தூங்கப் போகலையா?” என்று கேட்டார் தேவகி.
தயக்கமும், தவிப்புமாக தலையைக் கோதிக்கொண்டவனை, வியப்புடன் பார்த்தனர் தேவகியும், ராமமூர்த்தியும்.
“உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணும்?” என்றான்.
அமைதியாக இருந்தாலும், எதையும் படாரென உடைத்துப் பேசும் மகனின் இந்த பதற்றமும், அவனது மாற்றமும் தேவகிக்குப் புன்னகையை வரவழைத்தது.
“ஏம்பா! உன் அம்மாகிட்ட தனியா பேசணுமா? இல்ல…” என்று ராமமூர்த்தி வேண்டுமென்றே கேட்க, “என்னப்பா நீங்க? ரெண்டும் பேர்கிட்டயும் தான்” என்றான் சங்கோஜத்துடன்.
“என்ன தேவகி! உன் பையன் இந்த நெளி நெளியறான்? மூக்கணாங்கயிறு போடுற நேரம் வந்துடுச்சிப் போல” என்றார் சிரிப்புடன்.
“அப்பா ப்ளீஸ்!” என்று தலையைக் கோதிக்கொண்டவனின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“பாருடா! ம்ம், ஆம்பளைங்களுக்கு வெட்கப்படத் தெரியாதுன்னு எவன் சொன்னான்? இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்று மகனின் தோளைத் தட்டிக்கொடுத்தார் அவர்.
“அவனே எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாம திணறிட்டு இருக்கான். நீங்க வேற கிண்டல் பண்ணிக்கிட்டு” என்ற தேவகி, “நீ சொல்லு கண்ணா!” என்று மகனைச் சொல்லும்படி ஊக்குவித்தார்.
அலுவலகத்தில் தன்னிடம் வேலை செய்பவள் என்றும், அவளது பெயரையும் மட்டும் சொன்னான். பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவன் சற்று பரிதவிப்புடன் அவர்களது பதிலுக்காகக் காத்திருந்தான்.
“என் பிள்ளைங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. உங்க எல்லோருக்குமே, நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கோம். உங்க வாழ்க்கைல முக்கியமான முடிவுகளை எடுக்க, சுதந்திரமும் கொடுத்திருக்கோம். அந்த முடிவு நல்லதா இருக்கும்பட்சத்தில் ஆதரவும் கொடுத்திருக்கோம். இந்த விஷயத்திலும், எங்களுக்கு எந்தத் தடையும் இல்ல. அந்தப் பொண்ணுக்கிட்டப் பேசிட்டியா?” என்று கேட்டார் அவனது தந்தை.
“இல்லப்பா! உங்ககிட்டத் தான் முதல்ல சொல்றேன்” என்றான்.
“முதல்ல அங்கே இல்ல நீ பேசியிருக்கணும்” என்ற தந்தையை சங்கடத்துடன் பார்த்தான்.
“என் பிள்ளையைப் பிடிக்கலன்னு சொல்ல என்ன இருக்கு? நல்லா படிச்சான், கை நிறைய சம்பாதிச்சான், இப்போ சொந்தமா தொழில் செய்றான். இந்தக் காலத்துப் பிள்ளைங்க ரொம்பப் புத்திசாலி. எதையும் ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சித்தான் முடிவெடுப்பாங்க” என்று மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார் தேவகி.
“புத்திசாலியா இருந்தா பிரச்சனை இல்ல தேவகி. ஓவர் ஸ்மார்ட்டா இருந்தாதான் பிரச்சனையே” என்று சிரித்தார் அவனது தந்தை.
“ஹும்! உங்க வாதத் திறமையெல்லாம் கோர்ட்டோட நிற்கட்டும். பிள்ளை சங்கடப்படறான் இல்ல” என்று கணவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், “நாங்க இப்போ என்ன செய்யணும்? அவங்க வீட்டில் பொண்ணு கேட்கணுமா?’ என்று கேட்டார்.
“இப்போ வேண்டாம்மா! முதல்ல மதுகிட்டப் பேசிட்டு, நல்ல பதிலா சொல்கிறேன்" என்றான் சந்தோஷத்துடன்.
“இப்பவே என் பிள்ளை என் வழியைப் பின்பற்ற ஆரம்பிச்சிட்டான் பார்த்தியா தேவகி” என்ற கணவரை செல்லமாக முறைத்தவர், “சரி கண்ணா! நீ, பேசிட்டுச் சொல்லு. மத்ததை நாங்க பார்த்துக்கறோம்” என்று நிறைந்த மனத்துடன் சொன்னார் தேவகி.
தலையை ஆட்டிவிட்டு இரண்டடி சென்றவன் திரும்பி வந்து, “ரொம்பத் தேங்க்ஸ்ம்மா!” என்று அன்னையின் கரத்தைப் பற்றிக்கொண்டான்.
தேவகி மகிழ்ச்சியுடன் அவனைப் பார்க்க, “டேய் மகனே! இங்கே அப்பன்னு ஒருத்தன் இருக்கேன்டா” என்று ராமமூர்த்தி சொல்ல, “தேங்க்ஸ்ப்பா!” என்றவன் தலையைத் தடவியபடி தனது அறையை நோக்கித் துள்ளலுடன் நடந்தான்.
மகன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த மனைவியைத் தட்டி அழைத்தவர், “என்ன ஏதாவது வேண்டுதல் பண்ணிட்டு இருக்கியா?” என்றான் கிண்டலாக.
“புதுசா என்ன வேண்டிக்கப் போறேன்? என் குழந்தைகளைக் கடைசி வரைக்கும் இப்படியே சந்தோஷமா வச்சிக்கன்னு வேண்டிக்கிறேன்” என்றார்.
“அது சரி. எப்பவும் இனிப்பையே சாப்பிட்டுட்டு இருக்க முடியுமா?” என்றவரது வாயைப் பொத்திய தேவகியின் விழிகள் கலங்கியிருந்தன.
“என்ன தேவகி? நெருப்புன்னா வாய் வெந்திடுமா?” என்றார் சமாதானமாக.
“இந்த ரெண்டு வருஷமா, அவன் எப்படி இருந்தான்னு பார்த்தீங்க தானே. எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. அவனா சொல்லட்டும்னு இருந்தேன். இப்பவும், அவன் முழுசா நம்மகிட்ட விஷயத்தைச் சொல்லலை. சித்தார்த் சொல்றதை வச்சிப் பார்க்கும் போது, எனக்கென்னவோ அந்தப் பொண்ணை இவன் இதுக்கு முன்னாடியே பார்த்துப் பழகியிருக்கணும்னு தோணுது” என்றார்.
“ஓஹ்! அப்படிச் சொல்றியா?”
“எதுவா இருந்தாலும் என் பிள்ளையோட நல்ல மனசுக்கு எந்தக் குறையும் வராது. நான் பூஜிக்கிற என்னோட பாபா, என்னைக்கும் என் குழந்தைகளுக்குத் துணை இருப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.
அறைக்கு வந்த சித்தார்த்திற்கு வானமே வசப்பட்டதைப் போல அவ்வளவு சந்தோஷம். அவனது சந்தோஷத்தில் பங்குகொள்வதைப் போல, அவனது கைப்பேசி ஒலித்தது.
சிரிப்புடன் எடுத்தவன், “சுபா!” என்றான் சந்தோஷம் பொங்க.
மறுமுனையில் இருந்த அவனது சகோதரி, “சித்தூ! நீயா பேசற… உண்மையிலேயே நீதானா!” என்றாள் நம்பமுடியாமல்.
“உனக்கென்ன சந்தேகம்?” என்றான் சிரிப்புடன்.
“ரொம்ப நாளைக்குப் பிறகு பழைய சித்தார்த்தோட குரலைக் கேட்கறேனே!” என்று சுபா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஆஹ்ஹ்!” என்ற அலறல் கேட்டது.
“என்னாச்சு சுபா?” என்றான்.
“என்னாச்சா! காண்றது கனவில்லன்னு தெரிஞ்சிக்க, என்னைக் கிள்றா உன் அக்கா” என்று அவர்களது பேச்சில் இடைபுகுந்தார், அவனது சகோதரியின் கணவர் ஹரி பிரசாத்.
சித்தார்த் சிரிக்க, “இது வலிச்சிடுச்சா உங்களுக்கு. என்ன விஷயம்ன்னு நான் மட்டும் தெரிஞ்சிக்கிறேன்” என்று வேண்டுமென்றே சொன்னவள் ஸ்பீக்கரை நிறுத்திவிட்டும், “சொல்லு சொல்லு என்ன விஷயம்?” என்று ஆரவத்துடன் தம்பியிடம் கேட்டாள்.
அவன் மெல்ல விவரத்தைச் சொல்ல, எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டவள், “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடா! நீ கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம். சரி விடு. யாரா இருந்தாலும், அந்த நேரத்துல இப்படித்தான் நடந்துட்டு இருப்பாங்க” என்று அவள் சொன்னதும், அவன் மௌனமாக இருந்தான்.
தொடர்ந்து, “ஆனா, உன்னோட லவ் ரொம்பச் ஸ்ட்ராங் தான். இல்லன்னா, திரும்ப அதே பொண்ணு உன் வாழ்க்கைல வருவாளா?” என்றாள் தம்பியைச் சமாதானம் செய்யும் பொருட்டு.
ஆழ்ந்த மூச்சு விட்டவன், “என்னோட தப்பைப் புரியவைக்கவும் மன்னிப்புக் கேட்கவும் தான், மது என்னோட வாழ்க்கைல வந்திருக்கா” என்றான் தழுதழுப்பாக.
அவளுக்குத் திக்கென்றது. “என்ன சொல்ற? மதுகிட்ட மன்னிப்பு கேட்கப் போறியா?” என்றாள் எரிச்சலுடன்.
“இல்லன்னா, என்னோட மனசு ஆறாது சுபா” என்றான் பரிதாபமாக.
“அட உண்மை விளம்பி! உனக்கு மூளையே இல்லையா? ஒரு பொண்ணு எதை வேணும்னாலும் தாங்கிப்பா. நீ அவளைச் சந்தேகப்பட்டேன்னு தெரிஞ்சிது, உன்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டா நினைவு வச்சிக்க. ஏதாவது உளறி வச்சி, உனக்கு நீயே முட்டுக்குகட்டையைப் போட்டுக்காதே. முதல்ல கல்யாணம் முடியட்டும். புரிஞ்சுதா?” என்றாள் கட்டளையாக.
அரை மனத்துடன், “ம்ம்” என்றான்.
அவனைச் சமாதானம் செய்யும் வகையில், “ரெண்டு பேருக்கும் பெயர் பொருத்தம் சூப்பரா இருக்கு!” என்றாள்.
அவன் அமைதியாக இருக்க, “ரொம்ப யோசிக்காதே சித்தார்த்! உன்னோட நல்லதுக்காகத் தான் சொல்றேன். சரி, மதுவோட போட்டோ அனுப்பேன். என் தம்பியோட வருங்கால வைஃபை நாங்களும் பார்ப்போமில்ல” என்றாள்.
“போட்டோலாம் இல்ல சுபா!” என்றான் முறுவலுடன்.
“இதை நான் நம்பணுமா?” என முறைப்பாகக் கேட்டாள்.
“அது உன் விருப்பம். இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணா நீயே நேர்ல பார்த்துடலாம்” என்றான் அவன்.
“ம்க்கும். அது எங்களுக்குத் தெரியாதாக்கும். எனிவே, ஆல் த பெஸ்ட்! சொன்னதை மறந்துடாதே. சீக்கிரமே அவகிட்ட பேசிட்டு, எங்களுக்கெல்லாம் நல்ல விஷயம் சொல்லு” என்றாள்.
“கண்டிப்பா! மாமாகிட்டச் சொல்லு. நான் நாளைக்கு அவருக்குப் பேசறேன். பாப்பாவைப் பார்த்துக்க” என்று தமக்கையிடன் பேசிவிட்டுப் போனை வைத்தபோது அவனது உள்ளம் நிறைந்திருந்தது.
ஆனாலும், மனதோரம் சிறு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது.