அத்தியாயம் - 16
நாளொரு மேனியும்; பொழுதொரு வண்ணமுமாக அவர்களது ப்ராஜெக்ட் வளர்ந்து முடியும் தருவாயை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. சித்தார்த்தின் காதலும் வளர்ந்து மொட்டவிழும் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது.
“ஹப்பா! இன்னைக்கு வேலையை முடிச்சிட்டா, நாளைக்கு ஒருநாள் நிம்மதியா ரெஸ்ட் எடுத்துக்கலாம். வரவர வீட்ல லேப்டாப்பைத் தொடுறதே இல்ல. எங்க அம்மா என்னவோ உலக அதிசயம் மாதிரி அதையே சொல்லிட்டு இருக்காங்க” சிரித்துக்கொண்டே காஃபியை உறிஞ்சினாள் கீதா.
தோழியின் பேச்சைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே காஃபியை பருகிய மதுமிதாவின் அருகில் வந்து அமர்ந்தவள், “வீட்ல எல்லோரும் என்னைக்கு குலதெய்வம் கோவிலுக்குப் போறாங்க?” என விசாரித்தாள்.
“இன்னும் நாலு நாள் இருக்கு. ஆனா, அதுக்குள்ள நான் ஒருவழியாகிடுவேன் போல. உன்னைத் தனியா விட்டுட்டுப் போறது இதான் முதல்முறை. பத்திரமா இரு. ஆஃபிஸ் கிளம்பும் போதும், வீட்டுக்கு வந்ததும் கால் பண்ணு. வீட்டைப் பூட்டிக்க. யார் வந்தாலும் சட்டுன்னு கதவைத் திறந்திடாதேன்னு ஏகப்பட்ட அட்வைஸ். இவங்கல்லாம் என்னைக்கு ஊருக்குப் போய்ட்டுத் திரும்பி வருவாங்கன்னு இருக்கு” என்றால் போலியான சலிப்புடன்.
“இப்படி ஒரு குடும்பம் கிடைச்சதுக்கு நியாயமா நீ சந்தோஷப்படணும். எப்பவும் நமக்குக் கிடைச்சிருக்கற வாழ்க்கையை சந்தோஷமா வாழ, நிறைய பேசுக்குத் தெரியறது இல்ல. இல்லாததுக்குத் தான் நாம ஒவ்வொருத்தரும் ஆளா பறக்கறோம்” என்றான் சிவா ஜாடையாக.
“என்ன தல பிலாசஃபியா? நீங்க ஆயிரம் தான் அடிச்சாலும், நாங்க எதையும் தாங்கும் இதயமா ஸ்ட்ராங்கா இருப்போம்” என்று அவர்களது பேச்சில் கலந்துகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த லதாவைப் பார்த்துக்கொண்டே சொன்னாள் கீதா.
“ஏய்! சும்மா இருடி!” என்று அவளது கரத்தில் மதுமிதா தட்ட, “நீ சும்மா இரு. கல்லு மாதிரி எப்படி உட்கார்ந்திருக்கா பாரு” என்று சற்று சப்தமாகவே முணுமுணுத்தாள் கீதா.
“உன்னால திரும்ப அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வரப்போகுது விடு” என்ற மது காஃபி கப்புடன் எழ, “ஆமாம்… என்கிட்ட நேரா வந்து பேசட்டும், அப்புறம் இருக்கு அவளுக்கு” என்று எரிச்சலுடன் சொல்லிக்கொண்டே திரும்பிய கீதா அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தவனைக் கண்டதும் சிலையென நின்றாள்.
தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. மனத்தின் ஆசையும், காதலும் அவனைக் கண்டதும் பூத்துக் குலுங்கத் தான் துடித்தன. ஆனால், ஏதோ ஒரு இரும்புத் திரை அவர்கள் இருவருக்கும் இடையில் எழுந்திருக்கிறதே! அதைத் தகர்த்து அவன் கைபிடிக்கும் தைரியம் அவளுக்கு இல்லையே!
அவன் தங்களை நெருங்குவதற்குள் அவளது மனம் உலகைச் சுற்றி வந்திருந்தது.
அவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே வந்தவன் அவர்களருகில் வந்ததும், “ஹாய் மது!” என்றான்.
“வாப்பா! ஊர்லயிருந்து வந்துட்டுப் போனவருக்கு, ஒரு போன் கூடச் செய்ய முடியலை” என்றாள் கிண்டலாக.
அவன் அவளுக்கு ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டே அவளுடன் நடக்க, அவர்கள் இருவரும் சரளமாகப் பேசிக்கொண்டே செல்வதை வியப்பும், கோபமுமாகப் பார்த்தாள் கீதா.
சற்றுநேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தவன், அவளை அழைத்துக்கொண்டு சித்தார்த்தின் அறைக்குச் சென்றதை அவள் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் திரும்பி வந்தவன், வேகமாக கீதாவின் அருகில் சென்றான்.
குழப்பத்துடன் அலுவலக அறைக்கு வெள்ளியே நின்றிருந்த கீதாவிடம் சிரிப்புடன் ஏதோ சொன்னவன், “பை!” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப, அவன் பின்னாலேயே வந்த மதுமிதா, “போடா!” என்றாள் முறைப்புடன்.
“உன் ஃப்ரெண்டை ஒண்ணும் சொல்லல. வரேன். நாளைக்கு வந்திடு” என்றவன் விடைபெற்றுக் கிளம்பினான்.
கீதாவின் வெறித்த பார்வை, சுரேஷை தொடர்வதை பார்த்தவளுக்குப் பாவமாக இருந்தது. இவன் இப்படி அதிரடியாக வந்து அவளுக்கு அதிர்ச்சி அளித்திருக்க வேண்டாம். இப்படிச் செய்யத்தான் நான் வந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொன்னானோ!’ என்று எண்ணிக்கொண்டே கீதாவின் தோளைத் தொட்டாள்.
ஆத்திரத்துடன் அவளது கரத்தைத் தட்டிவிட்டவள், "ஏன்டி! உனக்கு நான் ஃப்ரெண்டா; இல்ல, அவனா! அவன் வந்திருப்பது உனக்குத் தெரியும். ஆனாலும், என்கிட்டச் சொல்லல. என்னைவிட, சுரேஷ் உனக்குப் பெரிசா போய்ட்டான் இல்ல?" என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.
“ஏய்! பைத்தியம் எதுக்கு நீ இப்படி அழற? கண்ணைத் துடை யாராவது பார்க்கப் போறாங்க. அவன் வந்ததைச் சொல்லக்கூடாதுன்னு இல்ல. எல்லாத்தையும் மறந்துட்டேன். புதுசா வாழ்க்கையைத் தொடங்கியிருக்கேன்னு சொல்றவனை, என்னன்னு சொல்றது? அவனும், இல்லாதவன் இல்லாதவனாகவே இருக்கேன். நீ யாரிடம் வந்திருக்கேன்னு சொல்லவேணாம்ன்னு சொன்னான். இப்படி திடுதிப்புன்னு வந்து நிற்பான்னு எனக்கென்ன தெரியும்?” என்றாள் அவளைச் சமாதானப்படுத்தும் விதமாக.
“என்னை மறந்து போனதால தானே, அவனால அப்படிப் பேச முடிஞ்சது…” என்றவளுக்குக் கண்ணீர் பெருகியது.
“அவனுக்காக நான் சாரி கேட்டுக்கறேன். அப்படி என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.
“நான் நல்லா... இருக்கேனான்னு கேட்டுட்டு, இனி இங்கே தான் இருப்பேன். உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். உனக்குக் கல்யாணாம் நிச்சயமானா சொல்லு. அப்படி நீ சொல்லாட்டாலும், கண்டிப்பா நான் வருவேன்னு சொன்னான்" என ஆவேசமாக ஆரம்பித்து அவன் சொன்னது போலவே சொன்னவள் சொல்லி முடித்ததும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
அதைக் கேட்ட மதுமிதாவின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.
‘ப்ராடு! இருக்கு அவனுக்கு’ என மனத்திற்குள் கறுவிக்கொண்டாள். அன்று முழுவதும் அவனுக்குப் போன் செய்தும், அவனைப் பிடிக்க முடியவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காலையில் மதுமிதாவை, தீபக் அழைத்துக்கொண்டு சுரேஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். கல்யாண வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால், தான் சாவதானமாக ஒருநாள் வருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.
அவளுடன் பேசிக்கொண்டே அபிராமி சமையலறைக்குச் செல்ல, அவளும் பின்னாலேயே சென்றாள்.
“ப்ராஜெக்ட், ஒரு நாள் தான் ரெஸ்ட்ன்னு கதை சொல்லக் கூடாது. ஈவ்னிங் வரைக்கும் இங்கே தான் இருக்கணும். நான் ரமேஷைக் கூட்டிட்டுப் போய் விடச்சொல்றேன்” என்று அவர் அன்புக் கட்டளையிட, அதற்குக் கட்டுப்பட்டுச் சிரித்தாள்.
“சுரேஷ் எங்கே ஆன்ட்டி?” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
“கடைக்குப் போயிருக்கான். வந்திடுவான்” என்று சொல்ல, அவனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்றுநேரம் அபிராமிக்கு சமையலறையில் உதவி செய்துகொண்டிருக்க, ரமேஷ் அவரை அழைத்தான்.
“இவன் ஒருத்தன்! மேலயும், கீழேயுமா வீட்டைக் கட்டிட்டு நமக்கு நடக்கவே நேரம் சரியா இருக்கு” என்று அலுப்புடன் எழுந்தவர், “மதும்மா! இந்த பாட்டில்ல தண்ணி பிடிச்சி வச்சிடு. இதோ வரேன்” என்று அங்கிருந்து சென்றார்.
அவர் சொன்னதைச் செய்துவிட்டு, சமைக்க தண்ணீர் பாத்திரத்தை எடுத்து வசதியாக மேடையில் அவள் வைக்கவும், வாசலில் பைக் வந்து நிற்கும் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
‘துரை வந்தாச்சு போலிருக்கே. இன்னைக்கு இவனை...’ என்று நினைத்துக்கொண்டே சுற்றி பார்வையை ஓடவிட்டவள் பார்வையில் தண்ணீர் பாத்திரத்தில் தான் தெரிந்தது.
அழைப்பு மணி ஒலிக்கவும், கதவைத் திறந்தவள் அதே வேகத்தில், ‘யார் நிற்கிறார்கள்?’ என்று கூடப் பார்க்காமல், பாத்திரத்தில் இருந்த மொத்த தண்ணீரையும் அங்கே நின்றிருந்தவன் மேலே ஊற்றினாள்.
எதிர்ப்பாராத இந்தத் தாக்குதலில் தடுமாறி, சமாளித்து முகத்தைத் துடைத்தபடி நின்றவனைப் பார்த்தவள், "ஐய்யய்யோ!" என்றபடி, கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே போட்டுவிட்டு உள்ளே ஓடினாள்.
சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று ஓடிவந்த ரமேஷ், சித்தார்த் நின்று கொண்டிருந்த கோலத்தைப் பார்த்துச் சிரித்தவன், “வாடா!” என்று வரவேற்றான்.
"நல்ல வரவேற்புடா!” என்றபடி உள்ளே வந்தான் சித்தார்த்.
ரமேஷ், சிரித்தபடி துண்டு ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். அங்கே வந்த அபிராமி, "வா சித்தார்த், என்ன இப்படி நனைந்து போய் வந்திருக்க?" என்றார்.
“எனக்கு மட்டும் உங்க வீட்டு வாசலில் மழை பெய்தது" என்றவனது பார்வை அதற்குக் காரணமானவளைத் தேடியது.
அவள் தனது செயலை நினைத்து தலையிலேயே அடித்துக்கொண்டு சமையலறையில் நின்றுகொண்டிருந்தாள்.
"மது! பயப்படாமல் வா. நம்ம சித்தார்த் தானே ஒண்ணும் சொல்லமாட்டான்" என்றான் சிரிப்புடன்.
"ஆமாம்டா! நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். ஏன்னா, சித்தார்த் ஒரு கேனையன்னு என் நெத்தியிலே எழுதி ஒட்டியிருக்கே... அப்புறம், எதுக்குப் பயப்படணும்?" என்றான் போலியான எரிச்சலுடன்.
அவனது பதிலைக் கேட்டுச் சிரித்தவள், மெல்ல அபிராமியின் பின்னால் வந்து நின்றாள்.
"வாங்க மேடம்! இப்படி ஒரு வரவேற்பை இதுவரைக்கும் யாரும் எனக்குக் கொடுத்ததும் இல்ல. நான் எங்கேயும் பார்த்ததும் இல்ல?" என்றான் கிண்டலாக.
"சாரி! நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. சுரேஷுன்னு நினைச்சித் தான்...” என முடிக்காமல் இழுத்தாள்.
"நல்லவேளை! தண்ணியோட போச்சு. என்ன… தெரிந்திருந்தா, குளிக்காமலேயே வந்திருப்பேன்" என்றதும், ரமேஷும், அபிராமியும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றனர்.
ரமேஷ் ஒரு டி-ஷர்ட்டுடன் அங்கே வரவும், ஹெல்மெட் அணிந்தபடியே சுரேஷ் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. வாசலில் இருந்த தண்ணீரும், தலையைத் துவட்டிக்கொண்டிருந்த சித்தார்த்தையும் பார்த்தவுடனே, நடந்ததை அவனுக்குப் புரிய வைத்துவிட, சிரிப்பை அடக்கிக் கொண்டு மதுமிதாவைப் பார்த்தான்.
“ஒரு பயங்கரமான ரியாக்ஷனை எதிர்பார்த்து வந்தா, இங்கே ஆக்ஷன் வேற இடத்துக்கு மாறியிருக்கு” என்று சொல்லிக்கொண்டே சிரித்தான்.
‘இருக்குற கடுப்புக்கு… உன்னை’ என எரிச்சலுடன் எண்ணிக்கொண்டே அவள் உள்ளே செல்ல, நிம்மதி பெருமூச்சுடன் இருக்கையில் அமர்ந்தான் சுரேஷ்.
"ஏன்டா இன்னும் ஹெல்மெட்டைக் கழட்டாம, முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி உட்கார்ந்திருக்கே" என்றான் சித்தார்த்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றியவன், “உங்களுக்குத் தெரியாது. ஏற்கெனவே என் மேல கடுப்புல இருந்தா. போதாக்குறைக்கு இப்போ இதுவேற... இன்னைக்கு என்னை ஒரு வழி பண்ணிடுவா” என்றான் பரிதாபமாக.
ரமேஷ், "சரிவிடு. இதெல்லாம் உனக்குப் புதுசா என்ன?” என்றான் கிண்டலாக.
“யூ டூ ப்ரூட்டஸ்” என்று கடுப்புடன் சொன்னவன், “ஆனா, என்னால் இன்னைக்கு சித்தார்த் அண்ணாவுக்கு ஒரு குட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சிருக்கு. கல்யாணத்துக்குப் பின்னால, உங்களுக்கு யூஸ் ஆகும்" என்றான் தீவிரமான பாவனையுடன்.
“எழுந்து போடா! இவன் அவகிட்ட வாங்காம அடங்கமாட்டான்” என்றான் ரமேஷ்.
“ம்ம், பெரிசா நமக்கு ஏதாவது ஆப்பு ரெடி பண்றதுக்குள்ள, சமாதானக்கொடியை பறக்க விட முடியுதான்னு பார்க்கிறேன்” என்றபடி அவளைத் தேடிச் சென்றான்.
சுரேஷ், சமையலறையை எட்டிப் பார்த்தான். அவள், பூரிக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தாள்.
தொண்டையைச் செருமிக்கொண்டவன், “கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத் தோழி! என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்புத்தோழி!" எனப் பாவனையுடன் பாட, அவனை முறைத்துக்கொண்டே மாவைக் குத்தினாள்.
"இன்னைக்குப் பூரி பயங்கர சாஃப்ட்டா வரும் போலிருக்கே. என்மேல விழவேண்டிய குத்தெல்லாம், மாவு மேலே விழுதே. மது... மது... மது செல்லம்... என்னடா கோபமா?" என்றான் கொஞ்சலாக.
கோபத்துடன், “டேய்! மரியாதையா, இங்கேயிருந்து போயிடு. இல்ல இந்தப் பூரி கட்டையாலேயே உன் தலையில் நாலு போடுவேன்" என்றாள்.
“நோ வயலன்ஸ்! ப்ளீஸ் ஐயம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஃபர்கிவ்மீ" என்றபடி தனது கைக்குட்டையை எடுத்துச் சமாதானக் கொடியை ஆட்டினான்.
அவனது செய்கை அவளுக்குச் சிரிப்பை வரவழைக்க, "ஹப்பா! மீ கிரேட் எஸ்கேப்" என்றான் மகிழ்ச்சியுடன்.
அபிராமி அங்கே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “நீ எதுக்கு நேத்து கீதா கிட்ட அப்படிப் பேசின? பாவம். எப்படி அழுதா தெரியுமா?" என்றாள் பரிதாபமாக.
சற்று மௌனமானவன், “நானும் மனுஷன் தான் மது! இன்னமும் அவள் மேல நான் வச்சிருந்த நேசம் அப்படியே தான் இருக்கு. நான் இங்கே வந்ததே, அவளுக்காகத் தான்” என்றவனை விழிகள் அகல பார்த்தாள்.
“அன்னைக்கு என்னென்னவோ சொன்ன...” என்றாள் வேகமாக.
“உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கச் சொன்னேன். ஏன்னா, அம்மாவுக்கு நிச்சயமா விருப்பம் இருக்காது. ஆனா, மனசு கேட்கமாட்டேன்னுது மது! சீக்கிரமே புரிய வச்சிடுவேன். சித்தார்த் அண்ணாவும், பெரிம்மாவும் அம்மாகிட்டப் பேசறேன்னு சொல்லியிருக்காங்க. இந்த முறை யாரோட மனசையும் காயப்படுத்திடக் கூடாதுன்னு ரொம்பக் கவனமா இருக்கேன்” என்றான் தீவிரமாக.
புன்னகைத்தவள், “ரொம்பச் சந்தோஷமா இருக்கு சுரேஷ். என்னால முடிஞ்சதை நானும் செய்றேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.
மனத்தில் சந்தோஷமும், நிம்மதியும் இருக்கும்போது அந்த இடமே சொர்க்கமாகத் தோன்றும். அப்படித்தான் அன்றைய பொழுது அவளுக்குக் கழிந்தது. மதியம் ஜீவாவும் வந்துவிட, வீடே கலகலவென இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
ரமேஷை எப்போதிலிருந்து அலுவலகத்திற்கு வரப்போகிறாய் என்று சித்தார்த்தும், ஜீவாவும் மாற்றி மாற்றிக் கேட்டு உலுக்க, “வரேன் அம்மாகிட்டப் பேசிட்டுச் சொல்றேன்” என்றவனை, அவர்கள் விடுவதாக இல்லை.
“டேய்! மூணு பேரும் பேசினபடி சேர்ந்து தான் பிஸ்னஸ் பண்ணப் போறோம். நாங்க முடிவு செய்துட்டோம். நீ வர்ற” என்றான் ஜீவா.
“அம்மா வேண்டாம்ன்னு சொல்லப் போறதில்ல. இந்தப் ப்ராஜெக்ட் முடிஞ்சதும், ஒரு வாரம் உனக்கு டைம். வந்து சேர்ற” என்று திட்டவட்டமாகச் சொன்னான் சித்தார்த்.
ரமேஷுக்கும் அந்த எண்ணம் இருந்த போதும் தயக்கமும் இருந்தது. இப்போது அவர்களே கேட்கவும், தனது சம்மதத்தையும் தெரிவித்து விட்டான்.
மாலையில் மதுமிதா விடைபெற்றுக் கொள்ள, சித்தார்த்தும் கிளம்பினான்.
“சித்தார்த்! மதுவை அவங்க வீட்ல ட்ராப் பண்ணிடேன்” என்றான் ரமேஷ்.
அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் அசௌகர்யத்துடன் நின்றிருந்தாள்.
“கார்ல வந்திருந்தா கூட்டிட்டுப் போயிருப்பேன். பைக்ல வந்திருக்கேன். சுரேஷை விட்டுடச் சொல்லு” என்று நண்பனிடம் கூறியவன், “சாரி மது!” என்று அவளிடம் சொல்லிவிட்டு அபிராமியிடம் விடை பெற்றான்.
இறுக்கம் தளர்ந்தவளாக புன்னகைத்தவளுக்கு, அவன் மீதான மரியாதையும், அபிமானமும் பன்மடங்காகப் பெருகியது.
“நைஸ் ஜெண்டில்மேன்!” என்று அவளது இதழ்கள் முணுமுணுத்தன.