“பரகாய பிரவேசம்”
ஆபிசிலிருந்து சீக்கிரம் கிளம்பிய மனோஜ் வீடு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்றானது. மறுநாள் விடுமுறையாதலால் அன்று சினிமாவுக்குச் செல்லலாம் என்று பிள்ளைகளுக்கு வாக்குக் கொடுத்திருந்தான்.
ஆனால் நாளெல்லாம் உழைத்து மிகவும் களைத்துப் போய்த் திரும்பியவனுக்கு எங்கும் செல்ல மனமில்லை. பிள்ளைகளோ மிகவும் உற்சாகத்துடன் வெளியில் செல்ல தயாராகிக் காத்திருந்தனர்.
மனைவி ஷாலினியும் தயாராகி இருந்தாள்.
அவர்களின் உற்சாகத்தைப் பார்த்து மனதை மாற்றிக் கொண்டான் மனோஜ்.
“ஷாலு..சீக்கிரம் ஓடிப் போய்க் காப்பிக் கொண்டு வா. நான் அதுக்குள்ளே பேஸ் வாஷ் பண்ணி ரெடியாகிடுறேன்” என்றான்.
அவள் காப்பிப் போட செல்ல, மனோஜ் விரைந்து முகம் கழுவி ஆடை மாற்றி வெளியில் செல்வதற்குத் தயாராக வந்தான்.
காபியை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டே “ நீ எத்தனை மணிக்கு வந்த ஷாலு?” என்றான்.
அவன் எதிரில் அமர்ந்தவள் “நாலு மணிக்கே வந்துட்டேன் மனோ. போன வாரம் தானே ப்ராஜெக்ட் முடிந்தது. அதனால இப்போ கொஞ்சம் ப்ரீ தான்” என்றாள்.
“ம்ம்..” என்றவன் மீதியிருந்த காப்பியை வாயில் கவிழ்த்துக் கொண்டே “நேரமாச்சு கிளம்புங்க..டிராபிக் வேற அதிகமாயிருக்கும்” என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அதற்குள் மகள் ஷிவானி அவசரமாகப் படுக்கையறைக்குள் சென்று கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைச் சரி பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.
அவர்களது நான்கு வயது மகன் சஞ்சய் செருப்பை மாற்றி மாற்றிப் போட்டு நடனமாடிக் கொண்டிருந்தான்.
கதவை பூட்ட சாவியை எடுத்துக் கொண்டு வந்த ஷாலினி மகன் முதுகில் ஒன்று வைத்து “நாலு வயசாவது இன்னும் செருப்பு போட தெரியல” என்று குனிந்து ஒழுங்காக அணிவித்து அவனை வெளியே அனுப்பி வீட்டை பூட்டினாள்.
காரிலேறி அமர்ந்து கொஞ்சம் தூரம் நகர்ந்ததும் சற்று ஆசுவாசமடைந்த மனோஜ் தனது பத்து வயது மகளிடம் “ என்னடா உங்க கிளாஸ்ல எல்லோரும் பார்த்துட்டாங்களா இந்தப் படத்தை?” என்றான்.
“இல்லப்பா! விதுவும், ரதியும் மட்டும் தான் பார்த்திருக்காங்க. கீர்த்தி இன்னும் பார்க்கல. அவ பார்க்கிறதுக்கு முன்னாடி நான் பார்த்திடுவேனே” என்றாள் குஷியாக.
அவளது பேச்சைக் கேட்டுச் சிரித்துக் கொண்ட கணவன் மனைவி இருவரும் வேறு விஷயங்களுக்குத் தாவ, பிள்ளைகள் இருவரும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
டிராபிக்கில் மிதந்து, போராடி அரைமணியில் தியேட்டரை அடைந்தனர். இரு நாட்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் புக் செய்திருந்ததால், டிக்கெட் மெசினில் பிரிண்ட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.
தங்கள் இருக்கையைத் தேடி அருகே சென்றதும் முதல் போராட்டம் ஆரம்பமானது. மகன் அம்மா அருகில் தான் அமருவேன் என்று சொல்ல, மகளோ நான் நடுவில் தான் அமருவேன் என்று அடம் பிடித்தாள். மனோஜும் அவன் பங்குக்கு ஷாலினியை தன் பக்கத்தில் தான் அமர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான்.
பத்து நிமிஷம் போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக மகளைச் சமாதனம் செய்து மனோஜ், ஷாலினி, சஞ்சய் அடுத்து ஷிவானி என்று அமர்ந்தார்கள்.அனைவரும் திரையை நோக்க மற்ற படங்களின் ட்ரெய்லர்கள் ஓட ஆரம்பித்தது.
மனோஜ் மெல்ல மனைவியின் பக்கம் சரிந்து “ அதென்ன போகன்னு பேர் வச்சிருக்காங்க படத்துக்கு. உனக்கு அர்த்தம் தெரியுமா?” என்றான்.
அவன் கேட்டது காதில் விழுந்த சஞ்சய் “ அது ஒரு தாத்தா பேரு பா” என்றான்.
அதைக் கேட்டு “தாத்தாவா?” என்று புரியாமல் ஷாலுவைப் பார்த்தான்.
“ஆமாங்க! போகர்-ன்னு ஒரு சித்தர். அவர் பேரு தான்” என்றாள்.
மேலும் குழம்பிய முகத்துடன் “அவன் தாத்தான்னு சொல்றான். நீ சித்தர்ன்னு சொல்ற. அது யாரு சித்தர்” என்று மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினான்.
அவனது கேள்வியில் கடுப்பான ஷாலினி “ம்ம்..உங்க தாத்தா தான்” என்றாள்.
“எங்க தாத்தா பேரு எனக்கே தெரியாது. உனக்கெப்படித் தெரியும்?”
கடைசியில் அமர்ந்திருந்த மகளோ தந்தையின் கேள்விகளைக் கண்டு உதட்டை மடக்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
பொங்கி வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு “உங்க அம்மா கிட்ட கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன்” என்றாள்.
“ஒ...” என்றவன் “ஆமாம் எங்க தாத்தா பேர் இவனுக்கு எப்படித் தெரியும்” என்றான்.
அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல் திரையைப் பார்க்க ஆரம்பித்தவளின் முகத்தில் தெரிந்த கோபத்தில் பேசாமல் வாயை மூடிக் கொண்டு அவனும் பார்க்க ஆரம்பித்தான்.
சிறிது நேரம் அமைதியாகப் பார்த்தவன் பொறுக்க முடியாமல் மெல்ல அவள் தோளை சுரண்டி “படத்தோட கதை என்ன? நீ விக்கி பீடியால படிச்சிருப்பியே” என்றான்.
அவன் கதையைக் கேட்டதும் அதுவரை இருந்த கோபம் நீங்கி “ம்ம்..படிச்சிட்டேங்க பரகாயப் பிரவேசம் தான் கதை” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு முழித்தவன் “அதென்ன பரகாயம்? பெருங்காயம் தெரியும்.இதென்ன புதுசா?” என்றான்.
அவன் மீது எழுந்த கடுப்பில் “ம்ம்...வெங்காயம்” என்றாள்.
மிகவும் சமாதனாமாக “எனக்குத் தெரியலேன்னு தானே கேட்கிறேன். சொல்லு ஷாலு” என்றான் பாவமாக.
அவனது கெஞ்சலை கண்டு “சரி சொல்றேன்..ஆனா, இதுக்கு மேல கேள்வி கேட்க கூடாது. பரகாயப் பிரவேசம்ன்னா கூடு விட்டு கூடு பாயுறது” என்றாள்.
அதைக் கேட்டு முகத்தைச் சுளித்தவன் “ அடடா! இதென்ன குழந்தைங்க படமா?” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு “என்ன சொல்றீங்க?” என்றாள் புரியாதவளாக
அவளுக்குப் புரியவில்லை என்றதும் தோள்களைக் குலுக்கிக் கொண்டு பெருமையாக ஒரு பார்வை பார்த்து “கூட்டில் என்ன இருக்கும். பறவை இருக்கும். சோ இந்தப் படத்தில் அனிமேஷன் கலந்து கொடுத்திருக்காங்க போல” என்றான்.
அவனது விளக்கத்தில் அரண்டு போனவள் ‘ஆண்டவா! இந்த மனுஷன் கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்து’ என்று முணுமுணுத்து விட்டு “கூடு விட்டு கூடு பாயுறதுன்னா, நம்ம உடம்பிலிருந்து வேற உடம்புக்கு மாறுவது..இப்போ நான் சேர் விட்டு சேர் பாயப் போறேன். இனி, உங்க கூட உட்கார்ந்தா படம் பார்க்க முடியாது” என்றவள் மகளைக் கூப்பிட்டு அவன் அருகில் உட்கார வைத்துவிட்டு கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
மகள் அருகில் அமர்ந்ததும் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரையை நோக்கி கண்களைத் திருப்பினான்.
படம் ஆரம்பித்துச் சிறிது நேரம் ஆனது.
மனோஜின் கையை மெல்ல தட்டினாள் ஷிவானி.
அவள் புறம் திரும்பி “என்னடா எதுக்குக் கூப்பிட்ட?” என்றான்.
“இங்கே எந்தப் பாப்கார்ன் நல்லா இருக்கும்? நார்மலா? சீசா? இல்ல சாக்லேட் பாப்கார்னா?” என்று தனது அரிய சந்தேகத்தைக் கேட்டாள்.
அதைக் கேட்டு கடுப்பானவன் “வாங்கும் போது கேட்டுக்கலாம் பேசாம படத்தைப் பாரு” என்றான்.
Last edited: