அத்தியாயம் - 1
பால் நிலவின் குளிர்ச்சியும், தென்றலின் வருடலும், அந்த இரவை ரம்யமாகக் கொண்டிருந்தது. அவன் ஒருவனைத் தவிர.
‘இப்படியொரு இக்கட்டில் தான் சிறைப்பட்டிருப்பதை எண்ணி வருந்துவதா, இல்லை மகனுக்காக இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதா?’ என்று தெரியாமல் உணர்வுகளைக் களைந்த முகத்துடன் ஆகாயத்தை வெறித்துக் கொண்டிருந்தான் சத்ய பிரகாஷ்.
‘வாழ்க்கை எப்போதும் ஒன்று போலவே இருப்பதில்லை’ என்று புரிந்து கொண்டிருந்த சத்ய பிரகாஷுக்கு, தன்னை மீறி நடந்து கொண்டிருப்பதெல்லாம் விதியின் சதியாகத் தான் தோன்றியது.
செல்வச் செழிப்பில் வளர்ந்தவளின் அன்பில் திளைத்து, குடும்பத்தில் இணைந்து, பிள்ளையொன்றை ஈன்றெடுத்தவள் எதிர்பாராமல் இவ்உலகை விட்டுச் சென்றது ஒரு கொடுமை என்றால், உடன் வளர்ந்தவளை இரண்டாவதாகத் திருமணம் செய்யவேண்டிய கட்டாயத்தில், தனது வாழ்க்கையின் திசையே மாற்றிவிட்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டிருந்தான்.
‘மாயா! உனக்கேன் இவ்வளவு அவசரம்?’ என்று அவன் மனத்திற்குள் வெதும்பிக் கொண்டிருக்க, ஒரு கையில் வெள்ளிச் செம்பில் பாலும், மறுகையால் தோளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பிடித்தபடியுமாக அறைக்குள் வந்தாள் பவித்ரா.
பால் சொம்பை மேஜை மேல் வைத்துவிட்டுக் குழந்தையைக் கட்டிலில் இட்டவள், பால்கனிக்குச் செல்லும் வாசற்படியில் வந்து நின்றாள். அவள் வந்ததை அறிந்திருந்த போதும், அவனது கவனம் அண்டவெளியை ஆராய்வதைப் போலச் சுற்றித் திரிந்தது.
இருட்டிலிருந்த அந்த இடத்தில், அறையிலிருந்து வந்த வெளிச்சத்தினால் விளைந்த தனது நிழல், அவனது நிஜத்துடன் இணைந்து தெரிய, ஆயாசத்துடன் பெருமூச்சு விட்டாள்.
சில நொடிகள் நின்று பார்த்தவள், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருக்கறதா உத்தேசம்?” என்றாள் மெல்லிய ஆனால், அழுத்தமான குரலில்.
சொந்தத் தாய்மாமனின் மகள்தான். ஆனால், இத்தனை ஆண்டுகளில் அவள் ஒருமுறை கூட இப்படித் தன்னிடம் நின்று பேசியதில்லை என்றுணர்ந்த சத்ய பிரகாஷ், திரும்பி அவளைப் பார்த்தான்.
சந்தன நிறச் சேலையில் வாசற்படியின் இருபுறமும் கைகளை ஊன்றியபடி நின்றிருந்தவளை ஆழ்ந்து பார்த்தான். ஆனால், அந்தப் பார்வையில் துளியும் மனைவி என்ற உரிமையோ; காதலோ இல்லை.
‘நினைத்திருந்தால், இவளால் இந்தத் திருமணத்தை நிறுத்தியிருக்க முடியும். ஆயினும், அதைச் செய்யாமல் என்னுடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல், தன்னுடைய வாழ்க்கையும் அல்லவா கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறாள்’ என்ற ஆற்றாமை உள்ளுக்குள் துளிர்த்தது.
எதுவும் சொல்லாமல் இறுகிய முகத்துடன் அவன் உள்ளே வர, அவள் ஒதுங்கி வழிவிட்டு நின்றாள்.
கதவைத் தாளிட்டவள், “நடந்த எதுக்குமே, நாம ரெண்டு பேரும் பொறுப்பாக மாட்டோம் அத்தான்!” என்றாள் தணிந்த குரலில்.
அதுவரை இருந்த பொறுமை சட்டெனப் பறந்து போக, சுர்ரென கோபம் ஏறியது அவனுக்கு.
“நீ நினைச்சிருந்தா தடுத்திருக்க முடியும்!” என்றான் உறுதியான குரலில்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நீங்களும் அதைச் செய்திருக்கலாம்” என்றாள் நிதானமாக.
“புத்திச்சாலித்தனமா பேசறதா நினைப்போ?” என்றான் கடுப்புடன்.
“என்னைக்குமே… தேர்ந்தெடுக்கற உரிமை, பிச்சைக்காரங்களுக்குக் கிடையாது!” என்றாள் அவளும் சற்றுக் காட்டமாக.
“ஏய்! நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசற? உன்னைப் பிச்சைக்காரி மாதிரியா, எங்க அம்மா வளர்த்தாங்க? சொந்தப் பிள்ளை, என்னைக் கூட ஹாஸ்டல்ல விட்டுட்டு, உன்னைத் தானே பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்க. மாயா, உன்னைச் சொந்தத் தங்கை மாதிரித் தானே பார்த்துக்கிட்டா. மகாராணியா தானே இந்த வீட்டில் இருந்த. இதுல, பிச்சைக்காரி எங்கே வந்தா?” என்றான் ஆத்திரத்துடன்.
“நான் சொல்ல வந்ததை, நீங்க சரியாகப் புரிஞ்சிக்கல. இன்னைக்கு என்னோட கல்யாணம் நின்று போக நேரடியாக இல்லனாலும், நீங்கதான் காரணம்” என்று அவள் உரைக்க, அவன் இறுகிய முகத்துடன் மௌனமாக நின்றான்.
‘உண்மை தானே! மாப்பிள்ளை வீட்டில் தாங்கள் இருவரும் ஒரே வீட்டில் இருப்பதையும், முக்கியமாக நான் மனைவியை இழந்தபின் இந்தப் பெண்ணைத் தங்கள் வீட்டிலேயே வைத்திருந்ததும், குழந்தையை அவள்தான் வளர்த்து வருகிறாள் என்று அம்மா சொன்ன சொல்லும் தான் இவளது நிலைக்குக் காரணம்.
நானும் அமைதியாக இருந்திருக்கலாம். இதையெல்லாம் காரணம் காட்டித் திருமணத்திற்கு முதல் நாள் இரவு, உறவினர்கள் தவறாக பேசுகிறார்கள். அதனால், வரதட்சணையைச் சற்று அதிகம் கேட்டதும், வெகுண்டெழுந்து சண்டையிட்டதால் தானே தனது தலையும் அங்கே உருண்டது. அதற்குமேல் எதற்கும் இடம் கொடுக்காமல், அம்மாவும், மாமனாரும் சேர்ந்து தன்னையல்லவா மணமகனாக மாற்றிவிட்டனர்’ என்று கோபம் இப்போது அவர்களின் மீதும் பாயத் துவங்கியது.
அவனது மௌனம் அவளுக்குப் பலத்தை அளிக்க, “சின்ன வயசுலயே அம்மாவை பறிகொடுத்துட்டேன். அத்தைதான் எனக்கு எல்லாமா இருந்து வளர்த்தாங்க. நீங்க அத்தை மகனா இருந்தாலும், ஒரு நாளும் உங்களை எனக்குச் சொந்தமாக்கிக்கணும்னு கனவுல கூட நினைச்சதில்ல.
சொல்லப்போனா உங்களைவிட எனக்குத் தான் அதிர்ச்சியும், வேதனையும் அதிகம். எல்லாப் பெண்களுக்குமே கணவன் தனக்கு மட்டும்தான் சொந்தம்ங்கற எண்ணம் இருக்கும். ஆனா, அந்த நினைப்புக் கூட குற்றம்ங்கறது போல எனக்கு நடந்திருக்கு. என் கழுத்தில் தொங்கிட்டு இருக்க இந்தத் தாலிக்கு, நான் உரிமையானவள் தானா? அந்த உரிமை எனக்குக் கிடைக்குமா?
நீங்க, மனைவியை இழந்துட்டு நிக்கிறீங்க. உங்களுக்கு, அவங்களோட வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திடுமா? என்னால அதை மாற்ற முடியுமா? அப்படி மாத்த நான் மேனகையாவா மாற முடியும்? உங்களைவிட, என்னோட சூழ்நிலைதான் இங்கே ரொம்ப மோசமா இருக்கு” என்றவளது குரல் தழுதழுத்தது.
“யாரும் என்னை, இந்தக் கல்யாணத்துல உனக்குச் சம்மதமான்னு கேட்டெல்லாம் நடத்தி வைக்கல. இதுதான் உன்னோட வாழ்க்கைன்னு, பிடிச்சித் தள்ளி விட்டுட்டாங்க. எல்லோருக்கும் ஒரு சுயநலம். அதுல, என்னோட விருப்பு வெறுப்பெல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக்க, யாருக்கும் தோணல. எல்லாத்தையுமே விதின்னும் விட முடியல! நாளைக்கு விடியல் எப்படி இருக்கும்ன்னும் தெரியாது. இனி, ஒவ்வொரு நாளும் எனக்குப் போராட்டமாகத் தான் இருக்கப் போகுது” என்றவள் ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தாள்.
குற்ற உணர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் சத்ய பிரகாஷ்.
“ரொம்ப ஓய்ஞ்சி போயிருக்கேன். ப்ளீஸ்! நான் படுத்துக்கட்டுமா?” என்று இறைஞ்சிய குரலில் அவள் கேட்டபோது, அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.
அவன், “ம்ம்” என்றதும், “தேங்க்யூ!” என்றவள் குழந்தையை கட்டிலின் நடுவில் இட்டவள், ஒரு பக்கத்தில் படுத்தாள்.
சற்றுநேரம் நின்று அவளைப் பார்த்தவனுக்கு, தன்னைவிட பாதிக்கப்பட்டிருப்பது அவள்தான் என்று புரிய, பெருமூச்சுடன் கட்டிலின் மறுபக்கம் வந்தான். குழந்தையின் நெற்றியில் புரண்ட கேசத்தை விலக்கி முத்தமிட்டவன், விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் வீழ்ந்தான்.
மனம் இன்னமும் உலைகளமாகத் தான் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது மனைவி என்ற ஸ்தானத்தில் வந்திருப்பவளுக்கும் சேர்த்து யோசித்தது.
நாளைய விடியல், யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? இதையும், அந்த விதியினிடத்திலேயே விட்டுவிடுவது தான் புத்திசாலித்தனம்.
அத்தியாயம் – 2
ஈர இதழ்கள் தனது கன்னத்தில் அழுந்த பதிவதை அறைகுறை உறக்கத்திலிருந்த சத்ய பிரகாஷ் உணர, புன்னகையுடன் அவளை வளைத்து அணைத்தான்.
விரும்பி அவனது அணைப்பில் சிறைபட்டாலும், “அச்சச்சோ மாம்ஸ்! நான் குளிச்சிட்டேன்” என்றாள் சிணுங்கலுடன்.
அவளை இழுத்துக் கட்டிலில் கிடத்தியவன், “அப்போ எதுக்குடி என்னை வந்து உசுப்பேத்தற?” என்றபடி அவளை இறுக அணைத்தான்.
“ம்ம், இன்னைக்கு ஆஃபிஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. சீக்கிரம் கிளம்பணும்ன்னு நேத்தெல்லாம் பாட்டுப் பாடினதால” என்றபடி அவனது கன்னத்தில் மூக்கை உரசினாள்.
“அதுக்கு இப்படியா எழுப்புவாங்க?” என்றபடி அவளது கழுத்தில் முகம் பதித்தான்.
“டைம் ஆகலயா மாம்ஸ்!” என்று போலியாக அவனைச் சீண்டியவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளது குறுகுறு பார்வையைக் கண்டதும், “சரியான கள்ளிடி நீ!” என்றபடி அவளை முழுதாக ஆட்கொண்டான்.
கிர்ரென விடாமல் அலராம் அடிக்க, “மாம்ஸ்! அலராம் அடிக்குது” என்று அவள் இரகசியக் குரலில் பகர, “அதுவேலையை, அது பார்க்குது. நம்ம வேலையை, நாம பார்ப்போம்” என்றவன் அவளது இதழ்களைச் சிறைபிடித்தபடி, மொபைல் அலாரத்தை நிறுத்தத் தனது கைகளைத் துழாவினான்.
திடீரென வெளியே பாத்திரம் விழும் சப்தம் கேட்க, படாரெனக் கண்களைத் திறந்தான். தனது அணைப்பில் இருந்தவள், எதிரில் புகைப்படமாகச் சிரித்துக் கொண்டிருப்பதை, ஏமாற்றத்துடன் பார்த்தான்.
மனம் வெறுமையாக இருந்தது. வாழ்க்கையே கனவாகப் போனதை எண்ணிச் சோர்ந்த மனத்துடன், அலாரத்தை நிறுத்திவிட்டு எழுந்தான். குளித்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்லத் தயாரானவன், அவளது புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தனது வாழ்க்கையிலிருந்து மொத்த சந்தோஷத்தையும் துடைத்தெடுத்துக்கொண்டு மறைந்து போனவளின் நினைவு, எப்போதையும் விட இன்று அவனை அதிகமாகத் தாக்கியது.
கோடைக்கு முன்பான வசந்தகாலமாக தன் வாழ்க்கையில் வந்தவள், சித்திரை வெயிலெனச் சுட்டெரித்திருக்கிறாள். அதேநேரம், முன்பனியாக குளிர்விக்கவும் செய்தவள். அவளில்லாத இந்த வாழ்க்கை, அவனுக்கு இலையுதிர்க் காலமாகத் தோன்றியது.
‘நீ இல்லாத காலங்கள் கூட எனக்குப் பழகிவிட்ட நேரத்தில், வேறொருத்தியின் வரவால் செய்வதறியாமல் தவிக்கிறேனே! விருப்பமில்லாத போதும், காலத்தின் கட்டாயத்தால் என் வாழ்க்கையில் இணைந்துவிட்டவளை என்ன செய்வது? அவளுக்கான நியாயத்தை, என்னால் வழங்க முடியுமா?’ என்று யோசித்தவனுக்குக் கண்ணோரங்கள் துளிர்த்தன.
“ப்பா!” என்றழைத்தபடி காலைக் கட்டிக்கொண்ட மகனைக் கண்டதும் கண்களைத் துடைத்துக்கொண்டவன், “மனு கண்ணா!” என்றபடி தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டான்.
கன்னத்தில் குழிவிழச் சிரித்த மகனின் முகத்தில், தனது மனங்கவர்ந்தவளின் முகமே பிரதி பிம்பமாகத் தெரிய, மகனைச் சேர்த்து அணைத்துக் கொண்டான்.
எந்தச் சலனமும் இல்லாமல் சமையலறையில் சுழன்றுகொண்டிருந்த மருமகளை, வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் மனோன்மணி.
மகளைப் போலத் தன்னால் வளர்க்கப்பட்டவள், இக்கட்டான சூழ்நிலையில் தன்னாலேயே மருமகளாக, ஆக்கப்பட்டதில் அவருக்குமே வருத்தமாக இருந்தது. தனது மணவாழ்க்கைக் குறித்து ஒவ்வொரு பெண்ணிற்குமே கனவுகள் இருக்கும். அவை அனைத்தையும் சிதைத்து, தன் மகனே ஆனபோதும், இரண்டாம் தாரமாக கொண்டு வந்ததை எண்ணி முன்தினத்திலிருந்து மனத்திற்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்.
அதிலும், தாலி கட்டியதிலிருந்தே மகனின் முகத்தில் தெரிந்த கோபமும், ஆத்திரமும் அவருக்கு உள்ளுக்குள் அச்சத்தைக் கொடுத்தாலும், கடவுள் தீர்ப்பு இதுதானோ! என்று தனக்குச் சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
ஆனாலும், காலையில் எழுந்து வந்ததிலிருந்து மருமகளின் முகத்திலிருந்து எதையும் கண்டறியவும் இயலவில்லை. அவள் வழக்கம் போல இருந்தாலும், தன்னிடம் அநாவசியமாக எதுவும் பேசாதே, அவருக்குப் பெரும் அவஸ்தையாக இருந்தது.
குழந்தைக்குக் கஞ்சி காய்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் மனம் வெதும்பியது.
காலையில் எழுந்தவள், அவனை எழுப்பும் மனமின்றி ஏழரை மணிக்கு அடிக்கும்படியாக அலாரத்தை வைத்துவிட்டு வெளியே வந்தாள். ஆனால், அவள் நினைத்ததைப் போல அவன் எழவும் இல்லை. அலாரமும் நின்றபாடில்லை.
விடாமல் அலறிய அலாரத்தை நிறுத்தச் சென்றவள், காற்றில் கைகளால் துழாவிக் கொண்டிருந்தவனின் நினைவு, இப்போது அவன்வசம் இல்லை என்பதை, அவனது செய்கையே உணர்த்த எதுவும் செய்யாமல், வெளியே வந்தாள்.
அறைக்கு வெளியே இருந்த வெண்கலப் பூ ஜாடியை அவள் தட்டிவிட, படிக்கட்டில் உருண்டு பளிங்குத் தரையில் மோதி அது பலமான சப்தத்தை ஏற்படுத்தியது. சப்தத்தில் சுயநினைவிற்கு வந்திருப்பான் என்று தனது வேலைகளைப் பார்க்கத் துவங்கினாள்.
எட்டு மணியாகியும் அறையிலிருந்து அவன் வெளியே வராமல் போயிருக்க, மீண்டும் அறைக்குச் சென்றாள். அவன், மாயாவின் புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், மனத்தில் சிறு ஏமாற்றம் பரவுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மனம் கதறியது. இது தேவையில்லாத கதறல் என்று புரிந்த போதும், ஒரு பெண்ணாக அதை ஏற்க அவளால் முடியவில்லை.
ஒன்று, திருமணம் வேண்டாம் என்று மறுக்கும் தைரியம் இருந்திருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், முட்டிமோதி மண்டையை உடைத்துக் கொண்டாவது தனக்கான வாழ்வைப் பெற்றே தீரவேண்டும்’ என்று எண்ணிக்கொண்டு வேலைகளைக் கவனிக்கலானாள்.
குழந்தையை தங்கள் அறைக்கு அனுப்பிவிட்டு, சமையலறைக்கு வந்தாள். மாமியார் அங்கும் இங்கும் நடையாக நடப்பதைப் பார்த்தபோதும், இப்போது எது பேசினாலும், இருக்கும் ஆத்திரத்தில் ஏதேனும் வார்த்தைகள் தடிக்கக் கூடும் என்று மௌனமாக வேலைகளைக் கவனிக்கலானாள்.
மகனுடன் வெளியே வந்த சத்ய பிரகாஷ், பூஜையறைக்குச் சென்றான். நெற்றிக்குத் திருநீரை அணிந்துகொண்டு அவன் டைனிங்கில் வந்து அமர, அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகி வந்திருக்கும் மகனை விதிர்த்த நெஞ்சுடன் பார்த்தார் மனோ.
“என்னப்பா? ரெண்டு பேரும் வெளியே போறீங்களா?” என்று எதுவும் அறியாததைப் போலக் கேட்ட அன்னையை நிமிர்ந்து பார்த்தான்.
“முதல்ல அவளைக் கூட்டிட்டுப் போ. குழந்தையை நான் பார்த்துக்கறேன்” என்றார் சமாளிப்புப் புன்னகையுடன்.
“ஆஃபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்கும்மா!” என்றான் நிதானமான குரலில்.
“நேத்துத் தான் கல்யாணம் ஆச்சு. இன்னைக்கு ஆஃபிஸ் போகணுமா? நம்ம ஆஃபிஸ்தானே. உன் மாமனார் புரிஞ்சிக்கமாட்டாரா என்ன? அவரும் இதையே தான் சொல்வார்” என்றார்.
“அவர் இப்போ என் மாமனார் இல்ல. முன்னாள் மாமனார்” என்றான் அழுத்தமான குரலில்.
அவர்களது பேச்சைக் காதில் வாங்கினாலும், எதையும் கண்டுகொள்ளாமல் அவனுக்கு உணவைப் பரிமாறிவிட்டு, சற்றுத் தள்ளி அமர்ந்து குழந்தைக்குக் கஞ்சியை ஊட்டத் துவங்கினாள் பவித்ரா.
வேகவேகமாக உணவை உண்டுவிட்டு எழுந்தவன், கையைக் கழுவிக்கொண்டு ப்ரீஃப்கேசுடன் வந்தான். குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, “பைடா கண்ணா!” என்றான்.
“ப்பா!” என்று முத்துப்பல் தெரிய சிரித்தக் குழந்தையை ஆதூரத்துடன் பார்த்துவிட்டு, “வரேன்ம்மா” என்று அவன் கிளம்பிச் செல்ல, பவித்ராவின் மனத்திற்குள் சிறு ஏமாற்றம் பரவியது.
ஏமாற்றம் என்பதைவிட, அவமானம் என்பது தான் சரியாக இருக்கும். வேலையாட்கள் அவ்வப்போது ஜாடைமாடையாக கவனிப்பதைப் பார்த்தவளுக்கு, ஆத்திரத்தில் கண்ணீர் அரும்பியது.
‘என் மீது திணிக்கப்பட்ட வாழ்க்கை என்றபோதும், அதை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருந்தது உண்மை. ஆனால், இதற்கெல்லாம் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாத தன்மீது அவனுக்கு ஏன் இத்தனை வன்மம்? எல்லாவற்றிற்கும் காரணமான, அன்னையிடம் சொல்லிவிட்டுச் செல்ல முடிகின்றது. இதில், சம்மந்தமில்லாமல் சேர்த்துவிடப்பட்ட தன்மீது எதற்கு இந்த துவேஷம்?
வாழ்க்கை ஒரு வரம். அதைச் செம்மைபடுத்திக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்ற வார்த்தை ஜாலங்களெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், நடைமுறையில் அனுபவிப்பவற்களுக்கே அதன் வேதனை தெரியும்’ என்று நினைத்துக் கொண்டவளால் அங்கே அமர முடியவில்லை.
அதேநேரம் அங்கிருந்து எழுந்து சென்று அனைவருக்கும் காட்சிப்பொருளாக மாறவும் விரும்பவில்லை. எல்லாவற்றையும் எதிர்பார்த்தே இருப்பதைப் போலவும், இந்த உதாசீனமெல்லாம் தன்னை எதுவும் செய்யாது என்பதைப் போலவும், முகத்தை சிரிப்பதைப் போல வைத்துக் கொண்டு மகனைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
‘தாய் அறியாத சூல் உண்டா?’ மனோன்மணி, அவளைப் பெறாவிட்டாலும், தாயாக அவளைப் போற்றி வளர்த்தவருக்குத் தெரியாதா அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் மனம்படும் துயரம்.
மகனிடம் பேசவேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு, எட்டிஎட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வேலையாட்களை அழைத்து வேலைகளை ஏவியபடி அங்கிருந்து செல்ல, பவித்ராவிற்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது.
அந்த ஆசுவாசத்தில் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. கன்னங்களை நனைத்த ஈரத்தை அவள் துடைக்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தை, “ம்மா!” என்றபடி சிணுங்கியபடி அவளது கண்ணீரைக் காண முடியாமல் எழுந்து அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
பெறாத மகனின் பாசத்தில், அவளது கண்கள் பொலபொலவெனக் கண்ணீரைப் பொழிந்தன.
“மனு கண்ணா! ஒண்ணுமில்லடா. இங்கே பாரு அம்மா சிரிக்கிறேன் பாரு” என்று அவள் மகனுக்காக சிரிக்க, குழந்தையும் அவளது கன்னத்தைத் தட்டித் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்த, அவள் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுச் சிரித்தாள்.
விட்டுவிட்டுச் சென்ற ஃபைல் ஒன்றை எடுப்பதற்காக வீட்டிற்கு வந்த சத்யா, இந்தக் காட்சியைப் பார்த்ததும் மனம் துடிக்க நின்றான். தனக்காக இல்லாவிடினும், குழந்தைக்காக இவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவனறியாமலே மனத்திற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.
**************
பவித்ரா, குழந்தையிடம் பிஸ்கெட் ஒன்றைக் கொடுத்து விட்டு புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்தாள். திடீரென, “ப்பா! ப்பா!” என்று குழந்தை இறங்கி ஓட, அப்போது தான் வாசலில் காரின் சப்தம் கேட்பதை உணர்ந்தாள்.
திரும்பி மணியைப் பார்த்தாள். நான்கு தான் ஆகியிருந்தது. அவன் இத்தனை விரைவாக வருவது அபூர்வம் தான். இன்று என்ன விசேஷம்? என்று நினைத்துக் கொண்டு எழுந்தாள்.
“ஹேய் குட்டிப் பையா!” என்று உற்சாகமாக அழைத்தபடி, மகனைத் தூக்கிக் கொண்டு சிரிப்புடன் வீட்டிற்குள் வந்தவனை, ஆச்சரியத்துடன் பார்த்தாள் பவித்ரா.
மகனின் வரவைக் கண்டு மனோன்மணியும் ஹாலுக்கு வந்தார்.
“அம்மா! மாமா வராங்க. டிஃபன் ரெடி பண்ணுங்க” என்றான் மெல்லிய குரலில்.
அவனது உற்சாகத்திற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட பவித்ராவின் மனத்தில், ஏமாற்றம் சூழ்வதைத் தடுக்க முடியவில்லை.
அடுத்த அரைமணி நேரத்தில் அவன் சொன்னபடியே மாயாவின் தந்தை விஸ்வநாதன் வர, பின்னாலேயே வெள்ளித் தட்டில் பழம், பூ, இனிப்புகள் அடங்கிய தட்டை டிரைவர் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றார்.
சம்பிரதாய உபசரிப்பிற்குப் பிறகு, “சம்மந்தியம்மா! முறைப்படி மாப்பிள்ளையையும், பொண்ணையும் மறுவீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வந்திருக்கேன்” என்றார் விஸ்வநாதன்.
தாயும், மகனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “உங்களுக்குத் தெரியாதது இல்ல… பவியும், உங்க பொண்ணுதான் அப்பான்னு, மாயா அடிக்கடிச் சொல்வா. என் பொண்ணு இருந்தபோதும் சரி, இல்லாத இந்த ரெண்டு வருஷத்துலயும் பவித்ராவும் என்னை அப்பாவா தானே நினைச்சிட்டு இருந்தா. அவள் இருந்திருந்தா நிலைமையே வேற” என்றவருக்கு மகளின் நினைவில் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.
அங்கிருந்த அனைவரது நிலையும் அவரது மனநிலையை ஒத்தே இருந்தது.
தன்னைச் சமாளித்துக் கொண்ட விஸ்வநாதன், “நல்ல விஷயத்துக்கு வந்த இடத்துல, என்னென்னவோ பேசிட்டிருக்கேன். என் பொண்ணு, மாப்பிள்ளைக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்ய வேணாமா? அதான், மறு வீட்டுக்கு அழைச்சிட்டுப் போக வந்திருக்கேன். முன்னமே சொல்லியிருக்கணும்…” என்றார்.
மனோன்மணி மகனைப் பார்க்க, அவன் குழந்தையின் தலையை வருடிக் கொடுத்தபடி எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
சுதாரித்த மனோ, “ரொம்பச் சந்தோஷம் அண்ணா! உங்க பொண்ணையும், மாப்பிள்ளையையும் அழைக்கறீங்க” என்றவர், “சத்யா! நீதான் இப்போ பதில் சொல்லணும்” என்று மகனே சமாளிக்கட்டும் என்று அவனை பேச்சில் இழுத்தார்.
நிமிர்ந்து பார்த்தவன், “வரோம் மாமா! காலைல ஆஃபிஸ்ல முக்கியமான வேலை இருந்ததால பவித்ராவைக் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகல. நாங்க போய்ட்டு நேரா வீட்டுக்கு வந்திடுறோம்” என்று தனது சம்மதத்தையும், அவளைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் சொல்லிவிட்டான்.
மனோன்மணிக்கு உச்சிக் குளிர்ந்து போனது.
பவித்ராவிற்கோ, ‘எதற்காக இந்த வேஷம்?’ என்று உள்ளுக்குள் எரிச்சல் மண்டியது.
எழுந்தவன், “பவி! மாமாவுக்கு டிஃபன் வை. நான் டிரெஸ் மாத்திட்டு வந்திடுறேன்” என்று அவளது கண்களை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டு அறைக்குச் செல்ல, அவள் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தாள்.
பெரியவருக்கு சிற்றுண்டியைப் பரிமாறியவளிடம், “அம்மாடி! நீ போய் ரெண்டு நாளைக்குத் தேவையானதை எடுத்து வச்சிட்டு, கிளம்பி வா. நான் பார்த்துக்கறேன்” என்று மருமகளை அனுப்பி வைத்தார் மனோன்மணி.
அவள் சென்றதும், “ரொம்ப சந்தோஷம் அண்ணா! நானே உங்ககிட்டப் பேசணும்ன்னு இருந்தேன். எப்படின்னு கொஞ்சம் தயக்கமா இருந்தது. நல்லவேளை நீங்களே அவங்களை மறுவீட்டுக்குக் கூப்பிட்டுட்டீங்க” என்றார் மகிழ்ச்சியுடன்.
“ம்ம், தெரியும்மா! யாருமே எதிர்பார்க்காம நடந்த கல்யாணம். ஆனா, பாதிப்பு அவங்க ரெண்டு பேருக்கும் தான் அதிகம். எல்லாமே சீக்கிரமே சரியாகிடும்மா” என்று நம்பிக்கையுடன் சொல்ல, அதை ஆமோதிப்பதைப் போலப் புன்னகைத்தார் மனோ.
“சரி அவங்களைக் கிளம்பச் சொல்லிட்டு நீங்க என்ன செய்றீங்க? கிளம்புங்க. அவங்களுக்காகச் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு” என்றார் பூடகமாக.
‘அவர் எது செய்தாலும், தனது மகனின் நன்மைக்காகவே’ என்று உணர்ந்திருந்த மனோன்மணி புன்னகையுடன் தலையசைத்தார்.