சகோதரி மதுஹனிக்கு,
உங்களின் நாவல் முடிவிலியின் முடிவினிலே, பற்றி சில வரிகள் சகோ. நல்ல ரசனையான, ரசிக்கும்படியான நாவல். ரொம்ப ரசித்து எழுதியுள்ளீர்கள் சகோ. நாவல் ஆரம்பிக்கும் மழை நாளின் வர்ணனையும், மண்வாசனையும் நாவல் முழுவதும் தொடர்கிறது, அது வாசகனையும் சென்று அடைகிறது. அருமை வர்ணனைகள் சகோ. வெகு அருமை.
தோழினுள் தாயினை தேடுபவனும், தோழனில் சுயத்தை தேடுபவளும் இணையும் நாவல் தான் சகோ. முக்கிய பாத்திரங்களை ஜோடிகளாக பார்த்த நமக்கு, உறவுக்கு பெயர் இல்லாத, பெயரில் அடங்காத பாத்திரங்களை பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சி. அதேபோல் நாவல் இடம் பெறும் களம், ஏற்கனவே கண்ட களம் தான் சகோ. ஆனால் இவ்வளவு விரிவாகவும், தெளிவாகவும் கண்டதில்லை. வாசகனை +2 முடித்து, ஒரு மருத்துவக்கல்லூரியில் சேர்த்து, அவன் M.B.B.S முடித்து, சிறப்பு பயிற்சி முடித்து வெளிவருவது போல் இருந்தது சகோ. அவ்வளவு நேர்த்தியான எழுத்து சகோ. தன் துறையை நேசிப்பவர் மட்டுமே, இவ்வளவு விரிவாக, விளக்கமாகவும் எழுதமுடியும் சகோ.
அங்கங்கு கியுட்டான குட்டி குட்டி ஹைகூ கதைகள் அருமை சகோ. டாக்டர்கள் பாண்டிதுரை – மீனலோசனியின் காதல், நேசங்கள். / ராஜா விஷ்ணுவர்தன் – பத்மாவதியின் பாவங்கள், பரிகாரங்கள். / சாரதா – ராஜ்வர்தனின் காதல், அதற்கான நேர்மைகள். / பாரதி – ஜெயராஜனின் அன்புகள், சுமக்கும் சுகமானபாரங்கள். / ரஞ்சினியின் துரோகம் (துரோகம் என்று சொல்வது தப்பு, அவளின் குற்றம்), முரளியின் ஒரு தலை காதல், அந்த காதலே அவர்களை சேர்ப்பது. / பூர்வி – ரஞ்சன் ஜோடிகளின் இனிமை. / கணேஷ் ராம் – வர்ஷணி காதல், / ராகவ் சைதன்யா(RC) ஆளுமை, அட்டகாசம், / கல்லூரி நண்பர்களின் சுயநலங்கள் என அழகாக சொன்னது அருமை சகோ. இன்னும் குறிப்பாக அந்த நோயாளிகள் மாமியாரின் குற்ற உணர்வு ( “என் மருமகளை காலால் உதைத்தேன், இன்று அந்த கால் போயி, அவள் தான் என்னை காப்பாற்றுகிறாள், அவளுக்கு அதிக கஷ்டம் தரதீர்கள்” என புலம்பும் போது அங்கே மனித உறவுகளின் அருமை புரியவைக்கிறீர்கள்). மற்றொரு நோயாளி தாராவின் பிரசவமும் அருமை. நாவலின் ஹீரோ – ஹீரோயின் ஹர்ஷவர்தன் (ஸ்வாதிகாதேவி) – ஹரிணியை(பாலக்கிருஷ்ணன்) பற்றி சொல்வது எனில், அவர்களின் உறவுகளை அவ்வளவு அருமையாக செதுக்கி, வடிவமைத்துள்ளீர்கள். அவர்களின் அன்பு, பாசம், நேசம், தோழமை என்று எதை சொல்வது. பாண்டிதுரை சாரின் கூற்றில் சொல்வது என்றால், “ அவன் விண்ணை தொட்டான், அவளின் துணை கொண்டு”. பொறுமையோடு மனம் கவர்ந்தவனை(ஹர்ஷா) கரம் பிடித்தாள் ஸ்வாதிகா. ஹரிணியின் வாழ்வில் காதலை உயிர்ப்பித்து, உயிரை விட்ட பாலா, நெடுநாள் நினைவில் இருப்பவர். எல்லோருமே ஒரு பாஸிடிவ் நபர்களாக இருப்பது ரொம்ப பிடித்தது சகோ.
நாவல் முழுவதும் உங்களின் அட்டகாசம் தான் சகோ. / அந்த இருதய ஆப்ரேஷன் போது எதோ பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் ஒரு உணர்வு. / நொடிப்பொழுது போதும் ஓர் நாடித்துடிப்பு அடங்கும் காலம் என்ற அந்த மருத்துவ கவிதை எவ்வளவு உண்மை. / அங்கங்கு தமிழ் எவ்வளவு நேர்த்தியாக புகுத்தி உள்ளீர்கள். ( நாவலின் தலைப்புக்கு, கனலி கண்ட கமலி என பலவற்றிக்கு என் கவிதை சகோதரி மீராவிடம் அர்த்தம் கேட்க ஓடிவிட்டேன்). / மருத்துவத்தின் முக்கியம், அந்த படிப்பின் நேர்த்தி, அதற்கு தரும் மரியாதை, / மென்மையான கல்லூரிரேக்கிங், / ஒரு நல்ல சர்ஜனின் கூற்று. / ஹரிணி வளர்ப்பு பெண் என்பதன் மூலம் பெற்றால் தான் பிள்ளையா? என்ற விளக்கம். / கடலையும் ஒரு பாத்திரமாக ஆக்கிய முறை, / பலவீனத்தை யாரிடமும் காட்டாதே, அதை கொண்டு அடிமை படுத்த நினைப்பான் என்ற எச்சரிக்கை, ,/ மாதா, பிதா, குருவை தொழுபவன் வெற்றி கனியை ஈஸியாக பறிப்பான் என வழி சொன்ன விதம் / கோபம் ஒரு நெருப்பு பந்து, அது முதலில் உன் கையே எரித்துவிடும் என அறிவுறுத்தல் என பல பல இடங்களில் உங்களின் ஆளுமை சகோ. இன்னும் இன்னும் பல இடங்கள் நினைவுகளில் சகோ. கடிதத்தின் நீளம் கருதி சுருங்க சொல்ல வேண்டியதாகிறது.
குறிப்பாக அந்த மனோரஞ்சிதக்கவிதை, “ ஏதோ ஒரு கடலில் சங்கமிக்கும் வரை தானே கரையோடு நதியின் பந்தம்”. இதை அவரவருக்கு, அவரவர் பார்வையில் பொருள்படும் சகோ. எனக்கு, என் மகள், அவளின் திருமணம் வரை தானே இந்த இரு கரையின்( எனக்கும் , என் மனைவிக்கும்) பந்தம் என்பது போல் இருந்தது சகோ.
செல்வநிலை, புகழ், அதிகாரம் என இருந்தாலும் தன் மகனை சாரதா அவர்கள் கணவனின் ஆசைபடி வளர்ப்பதை நினைக்கும் போது ஒரு ராஜா புத்திரர் கதை நினைவுக்கு வருகிறது சகோ. ஒரு தாயிக்கு பிள்ளை பேறு காலம் நெருங்கிவிட்டது, ஆனால் ஜோதிடர்கள், “இந்த பிள்ளை, நாளை, காலை பிறந்தால் உலகம் போற்றும் வீரனாவன், ஆனால் விதி இன்று இரவே பிறந்து விடுவான், என்ன செய்வது,” என்று கூறி சென்றார்கள். அதை கேட்ட அந்த தாய், என் மகன் உலகம் போற்றும் வீரன் ஆகவேண்டும் என்று நினைத்து, இரவு முழுவதும் தலைகீழ் நின்றார்கள். அப்படி நின்று தன் விரும்ப படி மகனை மறுநாள் பெற்றர்கள். அந்த தாயின் தியாகத்துக்கு, அந்த பிள்ளை, இன்றும் உலகம் போற்றும் வீரர் ஆவார். அவர் தான் சத்ரபதி வீரசிவாஜி. சாரதாவை நினைக்கும் போது அந்த கதை நினைவு வருகிறது சகோ. இப்படி பல நினைவுகளுடன் இந்த நாவல் படித்தேன் சகோ.
இந்த நாவலில் சில இடங்கள் மனதில் தோன்றியவை சகோதரி. சாதாரணமாக எடுக்கபட்ட ரத்தபரிசோதனையில், வளர்ப்பு பெற்றோர் என தெரியுமா சகோ. அந்த இடம் எனக்கு கொஞ்சம் புரிபடவில்லை சகோ. RCயை ஜோடி சேர்த்து, ஒரு நிறைவை செய்துயிருக்கலாமே என தோன்றியது சகோ. (இரண்டாம் பாகத்திக்கு வழி உண்டா சகோ). நல்ல சிந்தனை, 16 பதிவு வரை நாவல் இப்படித்தான் சொல்லும் என்ற வாசகனின் எண்ணத்தை, ஒரே பதிவில் மாற்றிய சாமர்த்தியம், சில முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என நினைக்கும் போதே புதியவர்களை புகுத்தி புரட்டிப்போட்டது என நாவலை அதகளப்படுத்திள்ளீர்கள் சகோதரி. நல்ல நாவலுக்கு வாழ்த்துகள்.