“காற்றில் கலைந்த ரங்கோலிகள்”
(நாவல்)
எழுதியவர் : முகில் தினகரன்
அலை பேசி : 95977 08460
அத்தியாயம் - 2
அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களிருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியேறினர்.
பைக்கில் போகும் போது செல்வியிடம் கேட்டான், “ஆமாம்...இப்ப எங்க போறோம்?”
“ம்ம்ம்...”என்று யோசித்தவள், “எங்கம்மா வீட்டுக்கு விடுங்க!...அவங்கதான் ரொம்ப நாளா “வரலை...வரலை”ன்னு புலம்பிக்கிட்டிருக்காங்க!” என்றாள்.
அவள் பேச்சைத் தட்டாதவனாய் பைக்கை அனுப்பர்பாளையம் நோக்கிச் செலுத்தினான் தியாகு.
தாயிடம், தன் மாமனார் வரப் போகும் விஷயத்தையும், அதை தன் கணவரின் அக்காமார்கள் எதிர்க்கும் விஷயத்தையும் பெரிய குரலில் சொல்லி விட்டு, சட்டென்று குரலைத் தணித்துக் கொண்டு, “இவரும் அதுக கூட சேர்ந்துக்கிட்டு அப்பாவை திருப்பி அனுப்பி விடத்தான் பார்த்தாரு...நாந்தான் வேண்டாம்!னு சொல்லி என் மாமனாரை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டேன்” என்றாள் செல்வி.
“ஏண்டி...வேலில போற ஓணானை வலியப் போய் தோள்ல ஏத்திக்கறே?...” பழுத்த அனுபவசாலியான செல்வியின் தாயார் கண்ணம்மா சொல்ல,
“என்னம்மா?...எங்க வீட்டுக்காரருக்குத்தான் புத்திசாலித்தனம் கொஞ்சம் கூட இல்லேன்னா...உனக்குமா?” தலையிலடித்துக் கொண்டு சொன்னாள் செல்வி.
“ஏண்டி அப்படிச் சொல்றே?...நான் சரியாய்த்தானே சொன்னேன்?”
“என்ன சரியாய்ச் சொன்னே?...ஏம்மா...இருபத்திரெண்டு வருஷம் சிங்கப்பூர்ல வேலை பார்த்தவரு வெறும் கையோடவா வருவாரு?...எவ்வளவு சம்பாதிச்சிருப்பாரு?....எத்தனை சொத்து சேர்த்திருப்பாரு?ன்னு யோசனை பண்ணிப் பாரு” தாய்க்கே பாடம் சொல்லிக் கொடுத்தாள் செல்வி.
கண்ணம்மா நிதானமாய்த் தலையை மேலும், கீழும் ஆட்ட,
“பொட்டைப் புள்ளைக ரெண்டும் அப்பனை ஆகாது!ன்னு சொல்லிட்ட நிலைல ஒரே பையனான இவர் ஆதரிச்சு...அடைக்கலம் குடுத்தாரு!ன்னா...மொத்தச் சொத்தும் இவருக்கு வந்திடுமே?” சொல்லி விட்டு செல்வி ஒரு கண்ணை மட்டும் மூடித் திறந்தாள்.
“ஓ...உன் கணக்கு அதுவா?” என்று சன்னக் குரலில் சொன்னவள், “த பாரு செல்வி...கஷ்டப்படாம வர்ற காசு...நமக்குக் கஷ்டத்தைக் குடுத்திட்டுத்தான் போகும்!...” என்றாள்.
“கஷ்டத்தையும் குடுக்காது...குஷ்டத்தையும் குடுக்காது...நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு சும்மா இரு அது போதும்” முகத்திலடித்தாற் போல் மகள் சொல்ல,
தனக்கு அதில் விருப்பம் இல்லை என்ற போதிலும், மகளுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாதவளாய் அந்த இடத்தை விட்டு அகன்றாள் அவள் தாய் கண்ணம்மா. ஆனாலும், அவள் உள்ளம் மட்டும் மௌனமாய்க் குமுறியது, “அடிப்பாவி...சொத்துக்காக அந்த அக்காக்கள் ரெண்டு பேருக்கும் சங்கடத்தைக் குடுத்திட்டியேடி!...ஏற்கனவே உங்க கல்யாணத்தையே அவங்க ரெண்டு பேரும் அரை மனசோட ஏத்துக்கிட்டிருக்காங்க!...இதுல புதுசா இன்னொரு சங்கடத்தையும் சேர்த்துக்கிட்டியேடி”
ஏர்போர்ட்.
பனிரெண்டரை மணி ஃபிளைட் சரியான நேரத்தில் வந்து இறங்கியிருந்தது.
அந்த அலுமினியப் பறவையின் வயிற்றிற்குள்ளிருந்து பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்து கொண்டிருந்தனர்.
வாசலருகே, கையில் பல்வேறு பெயர்ப்பலகைகளுடன் மக்கள் நின்று கொண்டிருக்க, தியாகுவும் செல்வியும் “வெள்ளிங்கிரி”என்கிற பெயர் தாங்கிய அட்டையைத் தூக்கிப் பிடித்து நின்றனர்.
தியாகுவின் மனதில் இனம் புரியாதவொரு குறுகுறுப்பு. “இருபத்திரெண்டு வருஷத்திற்குப் பிறகு அப்பாவைப் பார்க்கப் போகிறேன்!...எப்படி இருப்பார்?...ரொம்பவும் வயசாகித் தளர்ந்து போயிருப்பாரா?...இல்லை...அதே மாதிரி இருப்பாரா?...”
வயதான ஒரு மனிதர் ஒற்றை சூட்கேஸோடு இவர்களை நோக்கி வர, “இவரா?...இவரா?” பரபரத்தாள் செல்வி.
அவர் முகத்தைக் கூர்ந்து பார்த்த தியாகு, “ம்ம்ம்...இவரை மாதிரித்தான் தெரியுது!” என்றான் சந்தேகத்துடன்.
அவனது சந்தேகத்தை தெளிவாக்கும் விதமாய் அந்த மனிதர், அவர்கள் கையிலிருந்த போர்டைப் படித்து விட்டு, உதட்டைச் சுழித்துக் கொண்டு நகர, “ம்ஹூம்...இவர் இல்லை” என்று உறுதிபடச் சொன்னான் தியாகு.
ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற பின், தியாகுவைச் சுரண்டினாள் செல்வி. “ஒருவேளை உங்கப்பா...இந்த ஃபிளைட்ல வரலையோ?”
“ப்ச்...லோகு மாமா கன்ஃபர்மா சொன்னார்... “பனிரெண்டரை ஃபிளைட்டுலதான் வர்றார்”ன்னு!”என்றான் தியாகு. அவன் மனதிலும் லேசாய் ஏமாற்றம் துளிர்த்திருந்தது.
ஜிம் பாடி, “புசு...புசு”வென்றிருக்கும் வெள்ளைத் தலைமுடி, .அதிலிருந்து கொஞ்சம் எடுத்து தாடையில் ஒட்டி வைத்தது போன்ற ஒரு குறுந்தாடி, கண்களில் ரேபான் கூலிங் கிளாஸ், கீழே ஜீன்ஸ் பேண்ட், மேலே ஜெர்க்கின் போன்றதொரு மேற் சட்டை, அணிந்தபடி வந்த அந்த மனிதர், அவர்களுக்கு எதிரே சில நிமிடங்கள் நின்று தலையைச் சாய்த்துக் கொண்டு போர்டை வாசித்தார். கையில் ஒரு சிறிய சூட்கேஸ், தோளில் ஒரு லெதர் பேக்.
தியாகு அவர் முகத்தையே பார்க்க,
“நீ...நீ...தியாகுதானே?” அவர் ஆட்காட்டி விரலை நீட்டிக் கேட்டார்.
“ஆ...மா...ம்!” என்று தயக்கமாய்ச் சொன்னவனை, தாவி வந்து கட்டிக் கொண்ட அந்த மனிதர், “ஹரே...மை ஸன்!...நான்தாண்டா உன்னைப் பெத்த அப்பன்!...தி கிரேட் வெள்ளிங்கிரி” என்று உரத்த குரலில் சொல்ல,
ஆடிப் போனான் தியாகு.
அவன் எதிர்பார்த்தது, ஒரு வெள்ளை வேஷ்டி சட்டையுடன், சோடா புட்டிக் கண்ணாடியுடன், கையில் ஒரு மஞ்சள் பையுடன், ஒரு அரை வழுக்கைப் பெரியவரைத்தான். ஆனால், வந்திறங்கியவர் ஒரு அல்ட்ரா மாடர்ன் என்.ஆர்.ஐ.
“அப்பா...நீங்க...எனக்கு...அடையாளமே...தெரியலை” உளறினான்.
“ஹேய்ய்ய்....நெர்வஸ் ஆகாதே பாய்” என்றவாறே அவன் முதுகில் ஓங்கியடித்த வெள்ளிங்கிரி, “எங்கே உன்னுடைய அம்மா?...ஐ மீன் மை வைஃப்!...உன் கூட வரலையா?” கேட்டார். அவர் பார்வை அவர்களின் முதுகிற்குப் பின்னால் தேடியது.
“இல்லை” என்று வாயால் சொல்லாமல், தன் தலையை குறுக்கே ஆட்டினான்.
“ஓ...மை காட்!...” என்று தோள்களைக் குலுக்கிச் சொன்னவர், “ஓ.கே...எங்கே என் மகள்கள்?...அவங்களும் வரலையா?” கேட்டார். சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேட்டார்.
“இல்லை...அவங்களும் வரலை” இந்த முறை வாயால் சொன்னான்.
“வொய்?...ஓ...ஓ...அவங்களுக்கெல்லாம் என் மேல் கோபம்!...அப்படித்தானே?” சொல்லி விட்டு ஏர்போர்ட் என்று கூடப் பார்க்காமல் சத்தம் போட்டுச் சிரித்தார்.
“அக்காக்களுக்கு கோபம்!...பட் அம்மாவுக்கு கோபம் இல்லை!...ஏன்னா...அவங்க இந்த உலகத்திலேயே இல்லை!” பவ்யமாய்ச் சொன்னான் தியாகு.
“வாட்?...உன் அம்மா இறந்திட்டாங்களா?....எப்போ?...எப்போ?...” உண்மையான அதிர்வு அவர் குரலில் தெரிந்தது.
“ஆறேழு வருடங்களுக்கு முன்பே அம்மா இறந்திட்டாங்க” கரகரத்துச் சொன்னான் தியாகு.
“ஓ...மை காட்?” என்று கீழே குனிந்து கண்களை மூடித் தன் சோகத்தை மென்ற வெள்ளிங்கிரி, மெல்லத் தலையைத் தூக்க, கண்களின் ஓரம் ஈரம் உருவாகியிருந்தது.
தியாகுவுடன் ஒட்டிக் கொண்டு நின்றிருந்த செல்வியை மூலும் கீழுமாய்ப் பார்த்து விட்டு, “இது...உன் மனைவியா?” கேட்டார்.
“ஆமாம்” என்றான்.
“என்னப்பா...உன்னோட செலக்ஷன் அவ்வளவு நல்லாயில்லையே?” என்று சிறிதும் யோசிக்காமல் அவர் கூற,
பற்களை “நற...நற”வென்று கடித்துக் கொண்டாள் செல்வி.
“சரி...இப்ப நாம எங்க போகப் போறோம்?...” தியாகுவின் முகத்தைப் பார்த்து வெள்ளிங்கிரி கேட்க,
“என் வீட்டுக்குத்தான்”
“அப்ப...என் மகள்களை ஈவினிங் அவங்க வீட்டுல போய் சந்திக்கலாம்!ன்னு சொல்றே?.....அப்படித்தானே?”
அங்கு நடந்த விஷயங்களை அறியாத வெள்ளிங்கிரி, சாதாரணமாய்க் கேட்டார்.
“ம்” என்று ஒற்றை வார்த்தையில் பதிலைச் சொல்லி விட்டு முன்னே நடந்தான் தியாகு.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், அவரை ஒரு டாக்ஸியில் ஏற்றியவன், டாக்ஸி டிரைவரிடம் தன் வீட்டு முகவரியைக் கொடுத்து முன்னால் அனுப்பி விட்டு, பைக்கில் அந்த டாக்ஸியைப் பின் தொடர்ந்தான் தியாகு.
“என்னங்க...உங்க அப்பா நம்மை மாதிரி இல்லாம...வேற மாதிரியாய் இருக்கார்!” பைக்கில் போகும் போது செல்வி தியாகுவின் காதோரம் சொல்ல,
“என்னடி சொல்றே?”
“எனக்கென்னவோ அவரைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவரைப் பிடிக்கலைங்க!...ஒரு பெரிய மனுஷன் மாதிரிப் பேசாம “உன்னோட செலக்ஷன் நல்லாயில்லை”ன்னு என்னைக் காட்டிச் சொல்றார்!...ம்ஹூம்...இவரைக் கொண்டு போய் நம்ம வீட்டுல...நம்ம கூட...வெச்சுக்கறதை நினைச்சா இப்பவே அடி வயித்துல புளியைக் கரைக்குதுங்க!...மோசமான கெழவன்” அந்தக் கடைசி இரண்டு வார்த்தைகளை மட்டும் சத்தமின்றி சொன்னாள் செல்வி.
“ச்சூ...சும்மா தொண தொணக்காம கொஞ்ச நேரம் அமைதியா வா!...ஒரு வருஷம் ரெண்டு வருஷமல்ல...இருபது வருஷத்துக்கும் மேலா வெளிநாட்டுல வாழ்ந்தவர்...கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்!” என்றான் தியாகு.
அந்தப் பணக்காரக் கிழவனால் தங்களுக்குக் கிடைக்கப் போகும் பெரும் சொத்தை எண்ணி தன் வாயை அடைத்துக் கொண்டாள் செல்வி.
அதே நேரம் தியாகுவின் மனதில் ஒரு நெருடல் ஊர்ந்து கொண்டிருந்தது. “இவ சொல்றதும் ஒரு வகைல யோசிக்க வேண்டிய விஷயமாய்த்தான் இருக்கு!...எங்கப்பா இங்க இருக்கும் போது எப்படி இருந்தாரு?...எப்படி வாழ்ந்தாரு? என்பதெல்லாம் எனக்கு சுத்தமா ஞாபகத்துல இல்லை!...ஆனா...இப்ப அவரு வந்து இறங்கியிருக்கற ஷோக்கைப் பார்த்தா அவரைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் வர மாட்டேங்குதே!...என்ன பண்ணலாம்?” யோசித்தவாறே பைக்கைச் செலுத்தியவன் வீட்டை அடையும் முன் தன் நெருடலுக்கு ஒரு தற்காலிகத் தீர்மானம் போட்டு மூடி வைத்தான். “அவரு எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும்...சொத்து என் கைக்கு வர்ற வரைக்கும் அவரோட எல்லா அழிச்சாட்டியங்களையும் பொறுத்துக்குவோம்!...சொத்து கை மாறின மறுநாளே அவரை பேக் பண்ணி சிங்கப்பூருக்கே அனுப்பிடுவோம்!...“போக மாட்டேன்!”னு முரண்டு பண்ணினாருன்னா...இங்கியே ஏதாவதொரு முதியோர் இல்லத்துல கொண்டு போய்த் தள்ளிடுவோம்!”
அந்தக் கால் டாக்ஸி தியாகுவின் வீட்டு முன் நின்ற அடுத்த ஐந்தாவது நிமிடம், தியாகுவின் பைக்கும் வந்து சேர்ந்தது. கால் டாக்ஸிக்காரனுக்கு வாடகையைக் கொடுத்தனுப்பினான் தியாகு. செல்வியோ அவசர அவசரமாய்ச் சென்று கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டைத் திறந்தாள்.
டாக்ஸியை விட்டிறங்கி, வீட்டிற்கு வெளியில் நின்று அந்த வீட்டை நிதானமாய் நோட்டமிட்ட வெள்ளிங்கிரி கேட்டார், “சொந்த வீடாப்பா?”
“ஆமாம்ப்பா”
உதட்டைப் பிதுக்கியவர், “என்னப்பா வீடு இது?....சிங்கப்பூர்ல பறவைகளை வளர்க்கறதுக்கு!ன்னு ஒரு மூங்கில் வீடு கட்டுவாங்க!...அது மாதிரியல்ல இருக்கு உன்னோட வீடு?” என்றதும்,
“அப்பா...இது நான் கட்டிய வீடில்லை..ஏற்கனவே கட்டிய வீட்டைத்தான் வாங்கினேன்” உள்ளுக்குள் லேசாய்த் தலை தூக்கிய கோபத்தை விழுங்கிக் கொண்டு சொன்னான் தியாகு.
“ஓ...”என்று தாடையைத் தேய்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்த வெள்ளிங்கிரி, “ஆமாம் உனக்கு எத்தனை குழந்தைகள்?” கேட்டார்.
“இன்னும் குழந்தை பெத்துக்கலை”
“ஏன்?...கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு?” இதழோரம் ஒரு இளக்காரப் புன்னகை விரியக் கேட்ட தந்தையை விழிகளைச் சுருக்கிக் கொண்டு பார்த்த தியாகு, “ஒரு வருஷம்தான் ஆச்சு” என்றான்.
“அதனாலென்ன?...நானெல்லாம் கல்யாணம் பண்ணிப் பத்தாவது மாசத்துல உங்க பெரியக்காவைப் பெத்துட்டேன்” பெரிய சாதனையைப் போல் அவர் சொல்ல,
“நீங்களா பெத்தீங்க?...என்னோட அம்மா பெத்தாங்க” என்றான் தியாகு எரிச்சலோடு.
“ஹா...ஹா...ஹா”வென்று உரக்கச் சிரித்தார் வெள்ளிங்கிரி.
சமையலறைக்குள்ளிருந்த செல்விக்கு எரிச்சலாயிருந்தது. “ஹும்...இந்தாளெல்லாம் என்ன பெரிய மனுஷன்?...இருபத்திரெண்டு வருஷமா பொண்டாட்டி குழந்தைகளைத் தவிக்க விட்டுட்டு...எங்கியோ உருண்டு பொரண்டு திரிஞ்சிட்டு வந்து பேசற பேச்சைப் பாரு?...த்தூ...இது மூஞ்சில முழிக்கவே கேவலப்பட்டுக்கிட்டு இது பெத்த பொண்ணுக ரெண்டும் இதை உதறித் தள்ளிடுச்சுக...அது தெரியாம இது “பத்தே மாசத்துல பெரியக்காவைப் பெத்துட்டேன்....பதினஞ்சே மாசத்துல பேரீச்சம்பழத்தைப் பெத்துட்டேன்”ன்னு பேசிட்டிருக்கு”
அப்போது சமையலறைக்குள் வந்த தியாகு, “அப்பாவுக்கு லன்ச்...நீ பிரிப்பேர் பண்ணிடறியா?...இல்லை வெளிய போய் வாங்கிட்டு வந்திடவா?” கேட்டான்.
“ம்ம்ம்...அந்த வேலையே ஆகாது!...நான் வெளிநாட்டுல கண்ட கருமாந்தரங்களைத் தின்னு தின்னு நாக்கு செத்துப் போய் வந்திருக்கேன்...எனக்கு வீட்டு சமையல்தான் வேணும்!” கொஞ்சமும் லஜ்ஜையில்லாமல் சமையலறைக்குள்ளேயே வந்து நின்ற தன் அல்டாப்பு மாமனாரைப் பார்க்கப் பார்க்க உடம்பெல்லாம் எரிந்தது செல்விக்கு.
“அப்படின்னா....கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க...நானே சமைச்சுப் போடறேன்” வெளியில் புன்னகைத்துக்குக் கொண்டு, உள்ளே கொதித்துக் கொண்டு சொன்னாள் செல்வி.
“தட்ஸ் குட்” என்றவாறே வெள்ளிங்கிரி அங்கிருந்து நகர, தியாகுவை இடித்தாள். “ம்ஹூம்...எனக்கென்னமோ இந்த மனுஷன் கூட குப்பை கொட்டுறது சிரமம்!ன்னு தோணுது”
“ப்ச்...வேற வழியேயில்லை!...மொத்த சொத்தும் நமக்கே வரணும்!ன்னா...பொறுத்துத்தான் ஆகணும்!...அப்படியில்லாம நானோ...நீயோ...அவர் மேலே கோபத்தைக் காட்டினோம்!ன்னா....அவரு எப்படியாவது எங்க அக்காக்கள் வீட்டைத் தேடிக் கண்டுபிடிச்சு அங்க போய் ஒட்டிக்குவாரு!...அதுக்கப்புறம் அவ்வளவுதான்....சொத்துல ஒரு பைசா கூட நமக்குத் தேறாது!” என்றான் தியாகு.
“அதுதான் நடக்காதே?...உங்க அக்காக்கள் ரெண்டு பேரும் இவரைச் சேர்த்துக்கறதில்லை!ன்னு உறுதியாய் இருக்காங்களே?...”என்றாள் செல்வி.
“ஏய்...மனுஷ மனசு எல்லா நேரமும் ஒரே மாதிரி...ஒரே உறுதில...இருந்திட்டா அது மனுஷ மனசே இல்லைடி!...எங்க அக்காக்களையும் நம்ப முடியாதுடி!...நான் எப்படி அங்க ஒரு மாதிரிப் பேசிட்டு வந்திட்டு...இங்க வேற மாதிரி நடந்துக்கறேன்!...அதே மாதிரி மத்தவங்ளும் நடந்துக்க மாட்டாங்க!ன்னு என்னடி நிச்சயம்?” தெளிவாய் விளக்கினான் தியாகு.
சில விநாடிகள் யோசித்த செல்வி, “ஆமாங்க...அப்படிக் கூட நடந்தாலும் நடக்கும்!...அதனால நாம உங்கப்பாவை மேக்ஸிமம் பொறுத்துக்குவோம்” என்றாள்.
“சரி...சரி...பேசிட்டே நிக்காதே...அப்பா இன்னொரு தரம் கேட்கறதுக்கு முன்னாடி சமையலை ஆரம்பிச்சிடு” என்றான் தியாகு.
“ஓ.கே.!...ஓ.கே.”
*****
இரவு ஏழு மணி வாக்கில், வெள்ளிங்கிரி கேட்டார். “ஏம்பா...என் மூத்த பொண்ணு சரசு வீடு இங்கிருந்து ரொம்ப தூரமா?”
“அப்பா...சரசக்கா இருக்கறது காரமடையிலே...ஆனா இப்ப இங்க வந்திருக்காங்க!...திலகாக்கா வீட்டுல இருக்காங்க” என்றான் தியாகு.
“ஓ...நான் வருவேன்!...என்பதற்காக வந்திருக்காளா சரசு?” ஆசையோடு கேட்டார் வெள்ளிங்கிரி.
“ம்ம்ம்...உங்க மூஞ்சில காறித் துப்பறதுக்காக வந்திருக்கா” செல்வியின் மைண்ட் வாய்ஸ் கூவியது.
“ஆமாம்ப்பா” என்று சும்மாவாகிலும் சொன்னான் தியாகு.
“திலகா வீட்டுலதான் சரசுவும் இருக்கான்னா ரொம்ப சௌகரியமாய்ப் போச்சு...ஒரே நேரத்துல ரெண்டு பேரையுமே பார்த்திடலாமே?...என்ன சொல்றே?” என்றார் வெள்ளிங்கிரி.
அவரது அந்தக் கேள்விக்கு சரியானதொரு பதிலைச் சொல்ல முடியாமல் இறுக்க முகத்தோடு தியாகு உட்கார்ந்திருக்க, “என்னப்பா...என்னாச்சு?...ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கே?” கேட்டார்.
“அப்பா...அது வந்து...சரசு அக்காவும் சரி...திலகா அக்காவும் சரி...உங்களைப் பார்க்கவோ...உங்க கூடப் பேசவோ...உங்க கூட உறவைப் புதுப்பிச்சுக்கவோ விரும்பலை!...நீங்களே வலியப் போய் பேசினாலும், “நீங்க யாரு?ன்னு தெரியலை”ன்னு உங்க மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்லக் காத்திட்டிருக்காங்க!...” உண்மையைப் போட்டுடைத்தான் தியாகு.
சில நிமிடங்கள் அமைதியாய் யோசித்த வெள்ளிங்கிரி, “அவங்க கோபமும் நியாயம்தான்!...இருபது...இருபத்திரெண்டு வருஷமா பொண்டாட்டியும்...குழந்தை குட்டிகளும் என்ன ஆனாங்க?ன்னு கூடப் பார்க்காம எங்கியோ கண் காணாத தேசத்துக்குப் போய் ஒளிஞ்சுக்கிட்ட அப்பாவை எந்தப் பொண்ணுகளுக்குத்தான் பிடிக்கும்?...” தன்னிலையை உணர்ந்து பேசினார்.
அந்தச் சரியான நேரத்தில் தன் புருஷனின் பெருந்தன்மைக் குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாய் செல்வி சொன்னாள். “அவங்க இவரையும் அதே மாதிரி இருக்கச் சொல்லி கட்டளை போட்டிருக்காங்க!...இவரும் அவங்க கிட்ட “சரி”ன்னு சொல்லிட்டு வந்துட்டாரு!...ஆனா...ரெண்டு நாள் ராத்திரி தூங்காம யோசிச்சு...யோசிச்சு...கடைசில, “என்ன இருந்தாலும் என்னைப் பெத்த அப்பன் அல்லவா?...அவருக்கு என்னை விட்டா வேற யார் இருக்கா?...இன்னிக்கும் நான் போடற “வி”ங்கற இனிஷியல் அவரோட பேர்தானே?...அட்லீஸ்ட் அந்த நன்றிக்காகவாது அவரை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தே ஆகணும்”ன்னு பிடிவாதமா முடிவு பண்ணினார்”என்றாள்.
திரும்பி, தன் மகனைப் பெருமையோடு பார்த்து, இறுக கட்டிக் கொண்டார்.
“பெருமையாய் இருக்குப்பா!” அவர் குரல் தழுதழுத்தது.
“அப்பா...அதுக்காக நாம அந்த அக்காக்களை ஒதுக்கிட வேண்டாம்!...வெய்ட் பண்ணுவோம்...அவங்க சூடு இன்னிக்கு இல்லாட்டியும் என்னிக்காச்சு ஒரு நாள் மாறும் அப்ப போய்ப் பார்ப்போம்....பேசுவோம்” நல்லவனைப் போல் பேசினான் தியாகு.
“சரிப்பா...சரிப்பா” என்றார் வெள்ளிங்கிரி.
“அப்பா...உங்களுக்கு அந்த லெப்ட் சைடு ரூமை ரெடி பண்ணியிருக்கேன்...அங்க படுத்துக்கங்க”என்று அந்த அறையைக் கை காட்டினான் தியாகு.
“ம்ம்” என்றவாறே தன் சிறிய சூட்கேஸை எடுத்துக் கொண்டு அந்த அறை நோக்கி நடந்தார் வெள்ளிங்கிரி.
அவர் முதுகிற்குப் பின்னால் அவரது நடையை பரிகாசம் செய்தாள் செல்வி.
காஸ் அடுப்பில், குக்கர் “உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று பெரிதாய் உஷ்ண மூச்சை வெளியேற்ற, அதை விட ஆவேசமாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் திலகா.
“அத்தனை தூரம் சொன்னோம்...மண்டையை மண்டையை ஆட்டிக் கேட்டுக்கிட்டு கடைசில பொண்டாட்டியோட நேரில் போய் ஏர்போர்டிலேயே அப்பனை வரவேற்று...வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் வெச்சிருக்கான் தியாகு!...இவனையெல்லாம் என்ன பண்ணினாத் தகும்?”
“எனக்கென்னமோ இதெல்லாம் அவனா பண்ணின மாதிரித் தெரியலை...அதான் காதல் பொண்டாட்டி ஒருத்தியைக் கூட வெச்சிருக்கானே?...அவதான் சொல்லிக் குடுத்துப் பண்ண வெச்சிருப்பா” இது சரசுவின் கருத்து.
“அம்மா செத்த போது கூட வராத அந்த மனுஷனை வீட்டுக்குள்ளார சேர்த்தா பாவம் பிடிச்சுக்கும்” திலகா சொல்ல,
சமையலறைக்குள்ளிருந்து ஹால் வரை கேட்கும் அந்தப் புலம்பல் சத்தங்களைக் கேட்டு, பேப்பர் படித்துக் கொண்டிருந்த திலகாவின் கணவர் ஞானமூர்த்தி எழுந்து வந்தார். “த பாருங்க....உங்க தம்பியோட தொழில் என்ன?” வந்தவுடன் கேட்டார்.
“ம்ம்ம் ஃபைனான்ஸ்”என்றாள் திலகா.
“அப்படின்னா என்ன?...தெளிவாய்ச் சொல்லு”
“வட்டிக்குப் பணம் குடுத்து வாங்கறது” விளக்கினாள் திலகா.
“கரெக்ட்...அதனாலதான் அவன் இந்தப் பிரச்சினையையும் ஃபைனான்ஸியலாவே பார்த்திருக்கான்!”
பெண்கள் இருவரும் எதுவும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள,
(தொடரும்)