அத்தியாயம் – 43
மறுநாள் காலையில் வித்யா, மேகலா, கீதா மூவரும் தூங்கிக்கொண்டிருக்க திடீரென பாட்டு பாடும் சத்தமும், வெளிச்சமும் கண்ணைக் கூச, எழுந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
மது தலைக்குக் குளித்துவிட்டு, அர்ஜுன் வாங்கிக் கொடுத்த பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு, தலை வாரியபடி பாடிக்கொண்டிருந்தாள். மூவருக்கும் அவளது செய்கை பயத்தைக் கொடுக்க வித்யா, "அம்மா!" என அழைத்தபடி கீழே இறங்கி ஓடினாள்.
வித்யாவின் சப்தத்தில் திரும்பிப் பார்த்த மது மேகலாவையும், கீதாவையும் பார்த்து, “குட் மார்னிங்" எனச் சொல்லிச் சிரித்தாள்.
பதில் சொல்லாமல் நிற்பதைப் பார்த்தவள், “என்னடி நின்னுகிட்டே தூங்கறீங்களா? போய்க் குளிச்சிட்டு வாங்க மணியாகுது. என்னையே அர்ஜுன் தான் போன் பண்ணி எழுப்பினார். நேத்து கல்யாண மண்டபத்தில் இருந்த மாதிரி தான் நினைவிருக்கு அப்புறம் எப்படி வீட்டுக்கு வந்தோம்ன்னு புரியவே இல்லை" எனச் சொல்லியபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.
மேகலாவும், கீதாவும் ஒருவர் கையை மற்றவர் பற்றிக் கொள்ள வித்யாவுடன் வந்த விமலாவும், ராஜியும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவா பார்த்துக்கொண்டனர்.
மதுவின் அருகில் வந்த விமலா, “மது என்னம்மா இதெல்லாம்" என கேட்க
"இப்போதான் அத்தை அவர் போன் செய்தார். முகூர்த்த நேரம் நெருங்கிட்டு இருக்கு இன்னும் தூங்கிட்டு இருக்கியேன்னு சொன்னார். சரி, நாம முதலில் ரெடி ஆகிட்டு அப்புறம் இவங்களை எழுப்பலாம்னு நினைத்தேன். ஆமாம் நீங்க ஏன் டல்லா இருக்கீங்க?”
“மது நேத்து என்ன நடந்துதுன்னு உனக்கு நினைவில்லையா?” என கலவரத்துடன் கேட்டார் ராஜி.
"நினைவிருக்கே. காலைலயிருந்து நடந்ததைச் சொல்லவா எனச் சொன்னவள் திருமண தினத்திற்கு முன் தினம் நடந்ததையும், அர்ஜுன் தன்னிடம் விடை பெற்று சென்றது வரை சொன்னாள். "அதுக்கு அப்புறம் எதோ நடந்தா மாதிரி இருக்கு. ஆனால், நினைவே இல்ல" என்றாள்.
அதற்குள் அங்கே வந்திருந்த மற்றவர்களும், மதுவின் பதிலில் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனர். அவளருகில் வந்த ராஜேஷ், மதுவின் கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான்.
“அண்ணா! எங்கே என்னை இப்படி இழுத்துட்டுப் போறீங்க" என்று அவள் கேட்க பதிலே சொல்லாமல் இழுத்துச் சென்று, ஹாலில் ஒரு ஓரத்தில் வைத்திருந்த அர்ஜுனின் புகைப்படத்தின் முன்பு நிறுத்தினான்.
"அங்கே பாரு... உன்னோட அர்ஜுனைப் பாரு" எனச் சொன்னவன், அதற்கு மேல் முடியாமல் தடுமாற.... அங்கிருந்த போட்டோவைப் பார்த்தவள் கோபத்தோடு, "யார் என் ரூம்லயிருந்து இந்தப் போட்டோவை எடுத்தது. என்ன வேலை செய்து வச்சிருக்கீங்க. மாலையெல்லாம் போட்டு, பொட்டெல்லாம் வச்சி சீ...” என்று மாலைகளைக் கழற்றித் தூக்கி வீசினாள். பொட்டை அழித்துவிட்டு அந்த போட்டோவை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
‘அர்ஜுன் எங்கே? ஸ்ரீ ராம் அண்ணா வீட்ல தானேயிருக்கார். நானே போன் செய்து பேசிக்கிறேன் என்ற போதுதான் ஸ்ரீ ராமும் அங்கே தான் இருக்கிறான் என்று கவனித்தாள். அவன் அருகில் சென்று, "அண்ணா! அர்ஜுன் எங்கே? நீங்க இங்கே இருக்கீங்க" எனத் தயக்கத்துடன் கேட்டவள், அவன் கையில் போட்டிருந்த கட்டைப் பார்த்தாள்.
"அண்ணா! உங்களைத்தான் கேட்கிறேன் அர்ஜுன் எங்கே?" என்று கத்த ஸ்ரீராம் ஏதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான். “ஏன் யாரும் எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க. எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும் போலிருக்கு" என்று வீடே அதிர கத்தினாள்.
“மது! அர்ஜுன் இனி, திரும்பி வரமாட்டான்" எனச் சொல்லிவிட்டுச் சேலைத் தலைப்பில் வாயை மூடிக்கொண்டார்.
"என்ன அத்தைச் சொல்றீங்க? நீங்க சொல்வதுக்கு என்ன அர்த்தம்? நீங்க யார் சொல்றதையும் நான் நம்ப மாட்டேன்” ஈஸ்வரனிடம் சென்றவள் “மாமா! நீங்க சொல்லுங்க. அர்ஜுன் எங்கே மாமா சொல்லுங்க?" என்று கேட்க, கண்களில் நீர் தளும்ப, "மதும்மா அவங்க சொல்வது உண்மைதான்டா..." என்றார்.
தன்னையறியாமல் இரண்டடி பின்னால் சென்றவள், "நான் நம்ப மாட்டேன் நீங்க எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாத்தறீங்க. அண்ணா நீயாவது சொல்லு... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு” என்று ராஜேஷின் தோளில் சாய்ந்து கொள்ள, அவன் முகத்திலேயே அறைந்து கொண்டு அழுதான்.
“ஐயோ! அவன் மேல இப்படி உயிரையே வச்சிருக்கியே. உன்கிட்ட நான் எப்படிடா சொல்லுவேன்? இனி, அவன் திரும்பி வரமுடியாத இடத்துக்குப் போய்ட்டான்னு, என் வாயால் என் தங்கைகிட்டச் சொல்ல வச்சிட்டியே கடவுளே!" என்று கதறி அழுதான்.
ராஜேஷின் வார்த்தைகளைக் கேட்டவள் போட்டோவை நழுவவிட இறுகிப் போய் நின்றாள். ராஜேஷ் அவள் தோளைப் பிடித்து உலுக்கினான்.
"மது அழுதுடு. உன் மனசுலயிருக்கும் துக்கமெல்லாம் கண்ணீரா வெளியே வரட்டும் அழுடா. நீயும் இப்படியே இருந்து எங்களைக் கொல்லாதே அழும்மா அழு. அர்ஜுன் ஒருவன் எங்களை அழவச்சது போதும், நீயும் எங்களை வதைக்காதேடா" என அவளை உலுக்கினான்.
"அண்ணா... அர்ஜுன்...” என்றவள் கீழே விகுந்து கிடந்த அர்ஜுனின் போட்டோவைப் பார்த்தபடி , “இப்போவும் என்னை ஏமாத்திட்டுப் போய்ட்டீங்க இல்ல அர்ஜுன், என்னைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போய்ட்டீங்களே அர்ஜுன்!" எனப் பெருங்குரல் எடுத்து கதறியபடி போடோவின் மீது விழுந்தாள்.
போடோவில் இருந்த கண்ணாடி சில்லும், அவளது வளையல்களும் உடைந்தும் அவள் கைகளில் கீறி காயத்தை ஏற்படுத்த, அந்த உணர்வு கூட இல்லாமல் அவன் போட்டோவை அணைத்தபடி அழுதவளை ராஜியும், விமலாவும் வந்து அணைத்துக் கொண்டு அழுதனர்.
அர்ஜுன் இறந்த துக்கம் ஒருபுறம் இருக்க, மதுவைத் தேற்றுவதே பெரும் பாடாக இருந்தது. அன்றெல்லாம் அழுது அழுது ஜுரம் வந்துவிட, ஜுர வேகத்திலும் அர்ஜுன், அர்ஜுன் எனப் புலம்பிக்கொண்டிருந்தாள். பத்து நாள்களுக்குப் பிறகு, ஓரளவு தெளிந்தது போலயிருந்தாள். ஆனால், நினைத்த நேரத்தில் மல்லிப்பந்தலின் கீழே அமர்ந்து கொள்வதும், அங்கேயே படுத்துக்கொள்வது. திடீரென சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருப்பது என இருந்தாள். யாரிடமும் சரியாகப் பேசாமல் அர்ஜுனின் உடைகளை அணைத்தபடி படுத்துக் கொண்டிருப்பாள்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, சந்துரு தாங்கள் டெல்லி கிளம்புவதாக தெரிவிக்க, ஈஸ்வரனும் சரி என்றார். தன் அறைக்குச் சென்ற மது அந்த அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். தன் பிறந்த நாள் அன்று அர்ஜுன் அவள் அறைக்கு வந்தது முதல், அவன் நின்ற இடம், அமர்ந்த இடம் என்று ஒவ்வொரு இடத்தையும் தொட்டுப் பார்த்து அழுதாள்.
சூட்கேசை எடுத்துத் தன் துணிமணிகளை அடுக்கத் தொடங்கினாள். மதுவிற்கு மாத்திரை எடுத்துக்கொண்டு அவளறைக்கு வந்த ராஜி, என்ன என்று விசாரிக்க, தானும் அவர்களுடன் டெல்லி போகப் போவதாகவும் இனி, அவர்களுடன் தான் இருக்கப் போவதாகவும் சொன்னாள்.
அனைவரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேளாமல், “அர்ஜுன் என்னை நம்பிச் சொல்லி இருக்கார். இனி, அவங்க எனக்கு அத்தை மாமா இல்லை அப்பா அம்மா” எனச் சொல்ல, விமலா கண்ணீரோடு அவளை அணைத்துக் கொண்டார். அடுத்த நான்காம் நாள் அவர்களுடன் கிளம்பி டெல்லி வந்து சேர்ந்தாள். அர்ஜுனின் அறையிலேயே தாங்கிக் கொண்டாள்.சுபாவும், ஹரியும் அடிக்கடி வந்து அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
ஒருநாள் விமலா சமையலறையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கிச் சரிய, மது துடித்து விட்டாள். டாக்டர் மாசிவ் அட்டாக் எனச் சொல்லிவிட, பெரும் போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றிப் பிழைக்க வைத்தனர். அன்று முதல் விமலாவை விட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் செல்வதில்லை அவள். ஓரளவு உடல் தேறியும் டாக்டர் பயணம் செய்யலாம் என்று சொன்னதும், அனைத்துச் சொத்துக்களையும் விற்றுவிட்டு, பெசென்ட் நகரில் ஒரு வீடு வாங்கி அங்கே குடிவந்தனர்.
நடுவில் மதுவின் ரிசல்ட் வர அர்ஜுனிடம் சொன்னபடியே கோல்ட் மெடல் வாங்கினாள். மெடலை வாங்கிக்கொண்டு வந்து அர்ஜுனின் படத்தின் முன்பு வைத்துவிட்டு அழுதாள். “என் கூடவே இருப்பேன்னு சொன்னீங்களே! நான் என்னோட வாக்கைக் காப்பாத்திட்டேன். ஆனா, நீங்க என்னை ஏமாத்திட்டீங்களே" என அழுதாள்.
"அவன் உன் கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருப்பான் மது அழாதே " எனு சந்துரு ஆறுதல் கூறினார்.
அர்ஜுன் இறந்து ஆறுமாதத்திற்குப் பிறகு, மதுவிற்கு வரன் பார்ப்பது பற்றி பேச்சுவர, அவள் மறுத்துவிட்டாள். அதில் கொஞ்சம் ராஜேஷுக்கு வருத்தம். அந்த நேரம் வெளிநாடு செல்லும் வேலை வர. அடுத்த பத்து நாட்களில் கிளம்பிவிட்டான்.
மதுவிற்குச் சென்னை வந்த பின், அடிக்கடி ஹோமிற்குச் சென்று வந்தாள். ஹோமிற்காக நிறைய சாரிட்டி ப்ரோக்ராம் செய்தாள். மதுவை இரண்டு மூன்று முறை ஹோமிலும், சாரிட்டி ப்ரோக்ரமிலும் பார்த்த ஒருவன் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வந்து சந்த்ருவிடம் பேசினான்.
அவர்கள் மகிழ்ச்சியுடன் மதுவிடம் சொல்ல, அவனுடைய வீட்டிற்குப் போன் செய்து தன்னைப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட, அத்துடன் அந்தக் கல்யாணப் பேச்சு நின்று போனது.
தீபக் தான் அவளிடம் சண்டையிட்டான். அவன் பேசி முடிக்கும் வரை எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டாள். அவ்ன் ஓய்ந்து போய் அமர்ந்துவிட, “நீயே நினைத்து பாரு ஒருத்தனைக் காதலிச்சிட்டு, கல்யாணம் வரை வந்து அந்த மாப்பிள்ளை இறந்து போனால், அந்தப் பொண்ணை யாரு முழு மனதோடு ஏத்துக்குவாங்க? என்னால எப்படி இன்னொருவரோடு சேர்த்து குடும்ப வாழ்க்கை வாழ முடியும்?
ஒண்ணு அந்தப் பொண்ணை அவன் புரிஞ்சிக்கிட்டு விட்டுக்கொடுத்துப் போற நல்ல மனசு இருக்கணும். இல்ல, அந்தப் பொண்ணுக்கு அவன் மேல காதல் வரணும். ரெண்டுமே நடக்கப் போறதில்லை. அப்படிப் பெருந்தன்மையா நடந்துக்க இங்கே யாரும் கிடையாது. என்னால இன்னொருத்தரோட வாழ்கை பாழாக வேண்டாம் " எனச் சொல்லிவிட்டு எழுந்து சென்றாள்.
தீபக்கிற்குள் ஒருவாரமாக இதே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. ஒருவழியாக ஒரு முடிவை எடுத்துவிட்டுத் தன் மாமாவை போன் செய்து சென்னைக்கு அழைத்தான். அவரும் கல்யாணம் பற்றிப் பேச அழைத்துள்ளனர் போல என்று எண்ணியபடி கிளம்பி வந்தார்.
மது வீட்டில் இல்லாத நேரத்தில் தீபக் தன்னுடைய முடிவை அனைவரிடமும் சொல்ல, விஷயத்தை கேட்ட அனைவரும் திகைத்துப் போயினர்.
மேகலாவின் அருகில் சென்ற தீபக், “சாரி மேகலா! எனக்கு வேற வழி தெரியல" எனச் சொல்லிவிட்டு அமர்ந்தான்.
மேகலாவின் தந்தை மகளின் வாழ்க்கை இப்படி திரிசங்கு சொர்க்கமாக ஊசலாடுவதை எண்ணி வேதனையுடன் சண்டையிட்டார்.
“அப்பா ஒண்ணும் சொல்லாதீங்க அப்பா! அத்தான் எடுத்த முடிவு சரிதான். அவர் முடிவுக்கு நானும் சம்மதிக்கிறேன். மதுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்னு நாம நினைக்கிறோம். அதுக்கு அத்தானே அவளைக் கல்யாணம் செய்துக்கறது தான் சரி. அவரால் தான் அவளைப் புரிஞ்சிக்க முடியும்" எனச் சொல்ல, கோபத்தோடு அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினார் அவளது தந்தை.
அன்று அர்ஜுனின் முதலாம் ஆண்டு நினைவு நாள். மது கிளம்பி ஹோமிற்குச் சென்று குழந்தைகளுடன் இருந்து தன் மனதை சற்று அமைதி படுத்திக்கொண்டாள். அன்று மாலை, மாமா வீட்டிற்கு வந்து அங்கேயே தங்கிவிட்டாள். மறுநாள் காலையில் போன் ஒலிக்க மாடியில் அவள் போனை எடுத்த அதேநேரம், கீழே ராஜியும் போனை எடுத்தார்.
மேகலா அழுதபடி தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளைப் பார்ப்பதாகச் சொல்ல, மது செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தாள்.
ராஜி பேசிவிட்டுப் போனை வைத்ததும், வேகமாக அவரிடம் வந்து கேட்டாள். ராஜியும் மேகலா வந்தது, தீபக்கின் முடிவு என அனைத்தையும் சொல்லிவிட கோபத்தோடு தீபக்கைத் தேடிச் சென்றாள். ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவன் கையிலிருந்து பேப்பரைப் பிடுங்கி எறிந்தாள்.
அவளது கோபத்தைக் கண்டவன், “என்ன மது?" என்றதும் அவன் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்கினாள்.
"உன் மனசுல, நீ என்னடா நினைச்சிகிட்டு இருக்க? பெரிய தியாகியா நீ! யாரைக் கேட்டு என்னைத் தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு சொன்ன? நீ சம்மதித்தால் போதுமா? என்னோட சம்மதத்தைக் கேட்டியா? வார்த்தைக்கு வார்த்தை தங்கச்சின்னு சொல்வியே… இதானா அது" என்றவள் மேலும் அவன் பதில் சொல்ல முடியாத கேள்வியைக் கேட்டுவிட்டு, "சொல்லு மேகலாவுக்கு என்ன பதில் சொல்லப் போற?
போதும்! ஒரு மதுமிதா போதும் இந்த வீட்டுக்கு. மேகலாவையும் அதே போல ஆக்கிடாதே. என் ஒருத்திக்காக நம்ம மூணு பேர் வாழ்க்கை பாழ் ஆவதை நான் விரும்பல. தயவுசெய்து மேகலாவைக் கல்யாணம் செய்துக்கோ. அவளை ஏமாத்திடாதே" என்று அவன் மார்பிலேயே சாய்ந்து அழுதாள்.
அவளை விலக்கி நிறுத்தியவன், “உன்னை ஆசைப்பட்டு நான் கல்யாணம் செய்துக்க நினைக்கல. உனக்கும் ஒரு பாதுகாப்பு தேவை. அந்த ஒரே ஒரு காரணம் தான். சரி, உன் இஷ்டப்படியே நான் மேகலாவைக் கல்யாணம் செய்துக்கறேன். ஆனா, எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து கொடு" என்று மதுவின் முன் தன் கையை நீட்டினான்.
"என்ன செய்யணும் சொல்லு" என்றாள் வேகமாக.
"நான் மேகலாவைக் கல்யாணம் செய்துக்கணும்னா; அதுக்கு முன்னால் நீ யாரையாவது கல்யாணம் செய்துக்க சம்மதிக்கணும். இதுக்க்கு நீ சரின்னு சொன்னா எனக்கும், மேகலாவுக்கும் கல்யாணம் நடக்கும்" என்றான்.
அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். சற்று யோசித்தவள், “சரி முதல்ல உங்க கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் நான் சம்மதிக்கிறேன்" என்றாள்.
"பேச்சு மாறக்கூடாது மது! நீ அப்புறம் கல்யாணத்துக்குச் சம்மதிக்கலைன்னா, நான் மேகலாவை அவங்க வீட்டுக்கு அனுப்பிடுவேன். இல்ல, இதே வீட்டில் அவ தனியா இருப்பா" என்று மிரட்ட, அவள் வேதனையுடன் தலையை ஆட்டினாள்.
விஷ்யம் அறிந்த ராஜேஷ் மேகலாவிற்குப் போன் செய்து, “நீ கவலைப்படாதே நான் உன் கல்யாணத்தை முன்னால் நின்று நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல, மேகலாவும் அன்று காலையில் நடந்ததை, ராஜி போன் செய்து மேகலாவிடம் சொன்னதாகச் சொன்னாள்.
முதலில் மேகலாவின் தந்தையின் கோபத்தை குறைக்க வேண்டும் என முடிவெடுத்து அடிக்கடி அவரிடம் பேசினான் ராஜேஷ். மது அப்போதுதான் ஜீவாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேந்தாள். கீதாவும் அங்கேயே இருந்தது அவளுக்கு மற்றொரு ஆறுதலாக இருந்தது. கீதா, சிவா, லதாவின் நட்பு அவளைக் கொஞ்சம் மாற்றியது என்றாலும், அந்தப் பழைய துள்ளலோ, துரு துரு பேச்சோ இல்லை.
மெல்ல தன் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்த மது கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். விளக்கைப் போட்டவள் மணியை பார்க்க, மணி எட்டு. ஐயோ ... அம்மாவுக்கு ஒன்பது மணிக்கு மாத்திரை கொடுக்கணுமே என எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு கீழே வந்தாள்.
விமலா கட்டிலில் படுத்திருக்க, சந்துரு ஈசி சேரில் அமர்ந்தபடி ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கிச்சனில் புகுந்தவள் மளமளவென் சப்பாத்தி, குருமா செய்துவிட்டு இருவரையும் சாப்பிட அழைத்தாள். அவர்களும் மறுப்பு ஏதும் சொல்லாமல் வந்து அமர்ந்தனர். ஆனால், மூவருக்கும் இருந்த மன நிலையில் உணவு இறங்கவில்லை. பேருக்குச் சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றனர். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவும் இல்லை.
மது சிறிதுநேரம் கழித்து அவர்கள் இருவருக்கும் மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு கையுடன் கொண்டு வந்திருந்த விமலாவின் தூக்க மாத்திரையில் ஒன்றைப் போட்டுக்கொண்டு படுத்தாள்.
முதல் பாகம் முற்றும்.