Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் ‘வீடு’: ஐ.நா. அதிர்ச்சித் தகவல்
வீட்டின் நிர்வாகி, குடும்பத்தின் விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்புபடுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்று ஐ.நா. தனது ஆய்வில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஏனென்றால் கடந்த ஆண்டு உலக அளவில் பெண்கள் தங்களின் கணவனாலும், தங்களின் பெற்றோர், சகோதரர்களால் ஆணவக் கொலையாலும், வரதட்சணைப் பிரச்சினையால் உறவினர்களாலும் அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளதால், பெண்கள் வாழ்வதற்கு வீடு ஆபத்தான இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பெண்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு நடந்த வன்முறைகள் குறித்த அறிக்கையை ஐ.நா.வின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் உலக அளவில் 50 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இந்தப் பெண்கள் அனைவரும் அவர்களின் கணவரால், அல்லது முன்னாள் கணவரால்அல்லது குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரால் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சிக்குரியதாகும்.
அதாவது கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 137 பெண்கள், ஒரு மணிநேரத்துக்கு 6 பெண்கள் தங்களின் குடும்ப உறுப்பினரால், பெற்றோரால், கணவரால் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஆண்களால் தாங்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை #மீடு இயக்கம் மூலம் பெண்கள் வெளிக்கொண்டு வந்தனர். அவ்வாறு இருந்தும், இன்னும் பெண்கள் தங்களின் பெற்றோர், கணவரால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டுக்கு இடையே பெண்கள் தங்களின் கணவர்கள், குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்ட விகிதாச்சாரத்தின் அளவு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் தங்களின் கணவராலும், வரதட்சணைக் கொடுமையாலும், சாதிமாறி செய்யப்படும் திருமணத்தால் நடக்கும் ஆணவக் கொலையாலும் கொல்லப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐநாவின் போதை மருந்து மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பின் இயக்குநர் யூரி பெடோடோவ் கூறுகையில், “ ஆண்கள் கொலை செய்யப்பட்டாலும், பாலின சமத்துவத்தாலும், வேறுபாட்டாலும் பெண்களே அதிகமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
பெண்கள் உரிமைக்கான சர்வதேச அமைப்பான ‘உமன்கைன்ட் வேர்ல்ட்வைட்’ அமைப்பின் இயக்குநர் சாரா மாஸ்டர்ஸ் கூறுகையில் “ பாலின சமத்துவத்தின் விளைவுகள்தான் பெண்களுக்கு எதிரான வன்முறையாக மாறுகிறது. இந்த அறிக்கையைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28

2018 நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந்ததால், தமிழில் தேர்வெழுதிய 24,000 மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டுமென்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கில், நவம்பர் 22 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மொழிபெயர்ப்பு தவறுகளுக்காகக் கருணை மதிப்பெண்கள் வழங்க முடியாது, பிராந்திய மொழியில் படிக்கும் மாணவர்களுக்கும் போதுமான ஆங்கில அறிவு இருக்க வேண்டுமென்று தெரிவித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
கஜா: ரூ. 15,000 கோடி நிவாரண நிதி தேவை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 15,000 கோடி வழங்க வேண்டும் என்று நவம்பர் 22 அன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். நவம்பர் 16 அன்று தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலால் வீடுகள், விவசாய நிலங்கள், மரங்கள், கால்நடைகள், மின்கம்பங்கள் போன்றவை கடுமையாகச் சேதமடைந்தன. இந்தப் புயல் காரணமாகத் தமிழகத்தில் 63 பேர் உயிரிழந்தனர்.


கிராமங்களில் குறையும் கல்வியறிவு
யுனெஸ்கோவின் ‘2019 உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கை’ நவம்பர் 20 அன்று பெர்லினில் வெளியானது. இந்தியாவின் கிராமங்களிலிருந்து ஏழு நகரங்களுக்குக் குறிப்பிட்ட பருவங்களில் புலம்பெயரும் 80 சதவீதக் குழந்தைகளுக்குக் கல்வியறிவு கிடைப்பதில்லை என்றும் இவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கையில் உலகம் முழுவதும் பள்ளிச் செல்லும் வயதிலுள்ள புலம்பெயர்ந்த, அகதிக் குழந்தைகளின் சதவீதம் 2000-ம் ஆண்டிலிருந்து 26 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்பு
ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், அம்மாநில சட்டப்பேரவையை நவம்பர் 21 அன்று கலைத்தார். ஜூன் மாதம் மக்கள் ஜனநாயகக் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சியிலிருந்து பாஜக விலகியதால், அம்மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெகபூமா முஃப்தி தலைமையில் ஆட்சியமைக்க முயற்சி நடைபெற்றது. ஆனால், அதற்குள் சட்டசபையைக் கலைத்து ஆளுநர் உத்தரவிட்டார்.



யானை வழித்தடம்: சூழலியல் கூருணர்வு மண்டலம்

நாடு முழுவதுமுள்ள யானை வழித்தடங்களைச் சூழலியல் கூருணர்வு மண்டலங்களாக (Eco Sensitive Zones) மாற்ற வேண்டும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நவம்பர் 19 அன்று அறிவுறுத்தியது. இது தொடர்பாக முடிவெடுக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.
சர்வதேச விண்வெளி மையம்: 20 ஆண்டுகள்
சர்வதேச விண்வெளி மையம் (ISS) தொடங்கி 20 நவம்பர் 2018, அன்று இருபது ஆண்டுகள் நிறைவடைந்தது. 20 நவம்பர் 1998, அன்று அமெரிக்க நிதியில் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ‘ஸர்யா’ கட்டுப்பாட்டுத் தொகுதி கஜகஸ்தானிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சர்வதேச விண்வெளி மையம் பூமியின் சுற்றுப்பாதையில் பெரிய விண்கலமாக இயங்கிவருகிறது. இந்த மையத்தை விண்வெளியில் வசிப்பது, பணியாற்றுவது குறித்த ஆராய்ச்சிக்கு நாசா பயன்படுத்துகிறது.


மிக்கி மவுஸுக்கு 90 வயது
வால்ட் டிஸ்னி உருவாக்கிய மிக்கி மவுஸ் கதாபாத்திரம் 18 நவம்பர் 2018, அன்று தன் 90-வது பிறந்தநாளைக் கண்டது. ‘ஸ்டீம்போட் வில்லி’ அமெரிக்க அனிமேஷன் குறும்படத்தில்தான் முதன்முதலில் மிக்கி மவுஸ் கதாபாத்திரம் 18 நவம்பர் 1928, அன்று உலகுக்கு அறிமுகமானது.
மிக்கி மவுஸின் 90-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, டிஸ்னி நிறுவனம், ஷினோலா நிறுவனத்துடன் இணைந்து ‘கடிகாரம், கைக் கடிகாரம், டைரி, இதழ், பை, ஆடியோ கருவி’ ஆகியவை அடங்கிய மிக்கி மவுஸ் கலெக்ஷனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மாற்றப்பட்ட கிலோகிராமின் வரையறை
130 ஆண்டுகளுக்குப் பிறகு, கிலோகிராமின் வரையறையை உலக விஞ்ஞானிகள் மாற்றியமைத்திருக்கின்றனர். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற 26-வது ‘எடைகள், அளவைகளுக்கான பொது மாநாட்டில்’ உலகின் 60 நாடுகள் இணைந்து வாக்களித்து கிலோகிராமின் வரையறையை மாற்றி இருக்கின்றன.
இனி கிலோகிராம் மின்னோட்டம் (electric current) வழியாக வரையறை செய்யப்படும் என்று இந்த மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு 20 மே 2019, அன்றிலிருந்து உலகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.


நான்கு தவளைகள் கண்டுபிடிப்பு
வடகிழக்கு மாநிலங்களின் இமயமலைப் பகுதிகளில் நான்கு புதிய கொம்புத் தவளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ‘தவளை மனிதர்’ எஸ்.டி. பிஜு உள்ளிட்டோர் அடங்கிய குழு 14 ஆண்டுகள் ஆய்வின் வழியாக இந்த நான்கு புதிய கொம்புத் தவளைகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகம், பிரிட்டனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகம், அயர்லாந்தின் யுனிவர்சிட்டி காலேஜ் டப்ளின் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கின்றன.

ஆறாவது முறையாக தங்கம்
டெல்லியில் நவ. 24 அன்று நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் ஆறாவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். 48 கிலோ பிரிவின் இறுதிச் சுற்றில் உக்ரைன் நாட்டின் ஹன்னா ஒக்ஹோடாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மேரி. உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் வெல்லும் 6-வது தங்கம் இது. இதற்கு முன்பு 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் மேரி கோம் தங்கம் வென்றார்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அந்தக் கால புயல் சேவை
கஜா’ புயல் கரையைக் கடந்த அன்று இந்திய வானிலை ஆய்வு மையமும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமும் இரவு பகல் பாராமல் பரப்பரப்பாக இருந்தன. புயல் கரையைக் கடக்கும் நேரத்தையும் இடத்தையும் கணித்து இரண்டு மையங்களும் மக்களிடம் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருந்தன. இந்தியாவில் புயல் எச்சரிக்கைத் தகவல்கள் எப்போது முதல் பகிரத் தொடங்கினார்கள் என்று தெரியுமா?
வங்காள விரிகுடாவில் 1864-ம் ஆண்டில் மிகக் கடுமையான இரண்டு புயல்கள் இந்தியாவைத் தாக்கின. முதல் புயல் அக்டோபரில் கொல்கத்தாவுக்கு அருகேயும் இரண்டாம் புயல் மச்சிலிப்பட்டினத்தை நவம்பரிலும் தாக்கின. இந்தப் புயல் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உடைமைகள் கடும் சேதமடைந்தன.
இந்த இரு பெரும் இயற்கைப் பேரிடர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசை உஷார்படுத்தின. புயல் எச்சரிக்கை அமைப்பை உருவாக்கும் சூழ்நிலைக்கு பிரிட்டிஷ் அரசு தள்ளப்பட்டது. இதையடுத்து இதற்கான திட்டம் ஒன்றை அறிவித்து, அதை மேம்படுத்த குழு ஒன்றை அமைத்து செயல்படப் பரிந்துரைத்தது பிரிட்டிஷ் அரசு.
இந்தக் குழு 1865-ம் ஆண்டில் கொல்கத்தா துறைமுகத்தில் முதன்முதலாகப் புயல் எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்த பரிந்துரைத்தது. இந்தியாவில் வானிலை ஆய்வுத் துறையே 1875-ம் ஆண்டில்தான் உதயமானது. ஆனால், வானிலை ஆய்வு மையம் தொடங்குவதற்கு முன்பே புயல் எச்சரிக்கைத் தகவல் பரிமாற்றச் சேவை இந்தியாவில் தொடங்கிவிட்டது.
முதலில் வங்காள விரிகுடாவில் தொடங்கிய இந்த சேவை, பின்னர் அரபிக் கடல் பகுதியில் மும்பை, கராச்சி, ரத்தினகிரி, வென்குர்லா, கர்வார், கும்டா ஆகிய துறைமுகங்களில் 1880-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்தியா முழுவதும் இந்த சேவை 1886-ம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியத் துறைமுகங்கள் அனைத்தும் புயல் எச்சரிக்கைத் தகவல் பரிமாற்றம் பெறத் தொடங்கின.
இந்தியாவில் வங்காள விரிகுடாவில் உள்ள துறைமுகங்கங்களுக்கும் அரபிக் கடலில் உள்ள துறைமுகங்களுக்கும் என இரண்டு விதமான புயல் எச்சரிக்கை சிக்னல்கள் பயன்பாட்டில் இருந்தன. ஒரு கட்டத்தில் இது பெரும் குழப்பத்தை விளைவித்தது. இதன் காரணமாக 1898-ம் ஆண்டில் ஒரே சீரான புயல் எச்சரிக்கை சிக்னல்கள் இந்தியத் துறைமுகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. கொல்கத்தா துறைமுகம் எல்லாத் துறைமுகங்களுக்கும் புயல் எச்சரிக்கைத் தகவல் அனுப்பும் பொறுப்பை எடுத்துக்கொண்டது.
அன்றைய பர்மா உள்பட வங்காள விரிகுடாவைச் சுற்றிய துறைமுகங்கள் புயல்கள் பற்றிய தகவல் பரிமாற்றத்தை கொல்கத்தா துறைமுக அலுவலகத்திலிருந்தே பெற்றன. அரபிக் கடலில் புயல் எச்சரிக்கைத் தகவல் பரிமாற்றப் பொறுப்பை அன்றைய பம்பாய் வானிலை அறிக்கை மையம் எடுத்துக்கொண்டது.
இந்தியாவில் வானிலை ஆய்வு மையம் தொடங்குவதற்கு முன்பே 1865-1875 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புயல் எச்சரிக்கைப் பரிமாற்றம் நடைபெற்றது இந்திய வானிலை ஆய்வில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. 1875-ம் ஆண்டில் இந்தியாவில் வானிலை ஆய்வுத் துறை நிறுவப்பட்ட பிறகு அதன் முதல் வானிலை அறிவிப்பாளராக ஹென்றி பிரான்சிஸ் பிளான்போர்டு என்ற ஆங்கிலேயர் நியமிக்கப்பட்டார்.
அப்போது கொல்கத்தாவில் செயல்பட்ட வானிலை ஆய்வுத் துறையின் தலைமையக முதல் இயக்குநராக ஜான் எலியட் 1889-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். நிர்வாக வசதிக்காக கொல்கத்தாவிலிருந்து புனே, சிம்லா என வெவ்வேறு இடங்களுக்கு இடம் மாறிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமையகம், 1944-ம் ஆண்டு முதல் டெல்லிக்கு மாறியது.
சுதந்திரம் பெற்ற பிறகு 1949-ம் ஆண்டில் உலக வானிலை ஆய்வு அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தது இந்தியா. இந்தியாவில் சென்னை, குவஹாட்டி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், டெல்லி என ஆறு நகரங்களில் இந்திய மண்டல வானிலை ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டன. உலக அளவில் வானிலைக் கணிப்புகளை வெளியிடுவதிலும் வானிலை ஆய்வு மேற்கொள்வதிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அங்கம் வகித்துவருகிறது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஸ்பூனையே சாப்பிடலாம்..


உணவு வகைகளை விரல்களில் எடுத்து ரசித்து ருசித்துச் சாப்பிட்ட காலம் மாறி, இன்றைக்கு ஸ்பூன்களில் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் பத்து கோடிக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஸ்பூன்கள் குப்பையாகச் சேர்கின்றன.
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் பெரிய பொருட்களில் நாம் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் டீஸ்பூன், ஸ்ட்ரா போன்ற சிறிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுதான் ஆழ்கடலைக் குப்பை தொட்டியாக்கியுள்ளன என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
பிளாஸ்டிக் கழிவு, ஆழ்கடல் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே அச்சுறுத்தல்தான். போர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆழிவைவிடச் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் அழிவு பெரியது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தற்போது நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலத்தடி நீர் ஆய்வாளர் நாராயண பீசபதி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்குப் பதிலாகச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்துமிக்க ‘எடிபிள் ஸ்பூனை’ கண்டுபிடித்துள்ளார். அதாவது, இந்த ஸ்பூனில் உணவைச் சாப்பிடலாம். பிறகு, அந்த ஸ்பூனையே உணவாகவும் சாப்பிடலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ஸ்பூன், சர்க்கரை, இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, ஓமம், புதினா, கேரட், துளசி போன்ற ‘ஃப்ளேவர்’களில், விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக நாராயணன், ‘பேக்கீஸ் எடிபிள் கட்லெரி’ என்ற பெயரில் சிறிய அளவிலான தொழிற்கூடம் ஒன்றை அமைத்து, அதில் சுய உதவிக் குழு பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஒவ்வொரு வருடமும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கரண்டிகளை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்கிறார். உடலுக்கும் சூழலுக்கும் உகந்த இந்த ஸ்பூன்களை ஆன்லைனில் (http://www.bakeys.com/product/plain-spoons/) வாங்கலாம். 400 ரூபாய்க்கு நூறு கரண்டிகள் கிடைக்கும்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28

பனை மரத்திலுள்ள பயனுள்ள உணவுப் பொருட்களில் நுங்கு முதன்மையானது. கோடைக்காலத்தில் பரவலாகத் தமிழகத்தில் கிடைக்கும் நுங்கு பல்வேறு கோடை நோய்களுக்கு அருமருந்து. வெப்பத்தைத் தணித்து உடலைக் குளிர்ச்சி பெறச் செய்வதற்கு நுங்கைவிடச் சிறந்த எளிய உணவு கிடையாது. நுங்கு முதிராத பனம்பழம் என்பதால், இவற்றை அளவோடு பயன்படுத்துவது பனை மரப் பரவலாக்கத்துக்கு உதவியாக இருக்கும்.
நுங்கு சார்ந்து பல்வேறு உணவுப் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. பல்வேறு சமூகத்தினர் தங்களுக்கான உணவை நுங்கிலிருந்து பெற்று கோடையின் வெம்மையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்கின்றனர். பாரம்பரிய இயற்கை உணவுப் பொருட்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில் நுங்குக்கும் அந்தக் கிராக்கி வந்துள்ளது. அதன்படி சென்னை பல்லாவரம் 200 அடி சாலையில் ஷெல் பெட்ரோல் அருகில் உள்ள நுங்கு இளநீர்க் கடை முக்கியமான ஒன்று.
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த தேவகோட்டை தாலுகா, வெள்ளைவயல் கிராமத்தைச் சார்ந்தவர் கனகராஜ் (52). சென்னையில் 23 வருடங்களுக்கும் மேலாக இளநீர்க் கடை வைத்து நடத்திவருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நுங்கு விற்க முயற்சிகள் எடுத்து, சொந்த ஊரிலிருந்து எடுத்து வந்து விற்றுவந்திருக்கிறார். அப்போது நுங்கையும் இளநீரையும் இணைத்து இவர்கள் கண்டுபிடித்ததுதான் நுங்கு இளநீர்ப் பானம்.
நுங்கையும் இளநீரையும் ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் இட்டு சிறிது சர்க்கரையும் ஐஸ் கட்டியும் சேர்த்து அடித்து விற்பனை செய்கிறார். நினைத்தாலே இனிக்கும் இந்தக் கலவை இரட்டிப்பான பயன் தர வல்லது. புத்துணர்ச்சி ஊட்டக்கூடியது. வெம்மையிலிருந்து விடுதலை தரக்கூடியது.
வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றையும் இணைத்துப் பருகக் கொடுத்திருக்கிறார். ஆனால் மக்களிடம் வரவேற்பு இல்லை. மக்கள் ஆதரவு அளித்தால் கருப்பட்டியும் இணைந்த ஒரு அருமையான பானத்தை இவர்களால் உருவாக்கித்தர இயலும்.
இவர்கள் பனை உணவுப் பொருட்களைக் கொண்டு புது கண்டுபிடிப்பை மட்டும் செய்யவில்லை, இந்த உணவுத் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் முயற்சிகளையும் எடுத்துவருகிறார். கோடைக்காலத்தில் மட்டும் கிடைக்கும் நுங்குகளை எல்லாக் காலத்திலும் கிடைக்கும்படியாக அவர் செய்திருக்கும் வலைப்பின்னலே இந்த வியாபாரத்தின் வெற்றியெனக் கருதுகிறேன்.
இவ்வெற்றிக்குப் பனை சார்ந்த பருவம் குறித்த அவதானிப்பும் தொடர் உழைப்பும் கண்காணிப்பும் இன்றியமையாதது. குறிப்பாக, அருகில் நுங்கு கிடைக்காத பருவங்களில் கன்னியாகுமரிவரை சென்று நுங்கு எடுத்து வருகிறார் கனகராஜ். இவ்வித நேரங்களில் லாபம் குறைவாகக் கிடைத்தாலும் தனது வாடிக்கையாளர்களுக்காக இன்முகத்தோடு இதைச் செய்கிறார். தற்போது வாடிக்கையாளர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கப் பனை ஓலைப் பட்டையிலும் இந்தப் பானத்தை ஊற்றிக் கொடுத்து மகிழ்விக்கிறார்.
- கட்டுரையாளர், பனை ஆய்வாளர்