அத்தியாயம் – 48
வெளியே வந்தவள், காரின் மீது சாய்ந்து நின்றிருந்த ராஜேஷைக் கண்டதும் அவளது ஆத்திரம் இருமடங்காக அதிகரித்தது. அவனிடம் எதுவும் பேசாமல் காரில் அமர்ந்தாள். அவளது கோபத்தை எதிர்பார்த்தே இருந்த ராஜேஷ், காரை கிளப்பினான். இருவருமே வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. செல்லும் போது மௌனமாக இருந்த போதும் அவர்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான அன்பு இருந்தது. இப்போது, அதே மௌனம் தனது தமையனின் மீதிருந்த ஆத்திரத்தில் வாளாக அறுத்துக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்து இறங்கியவள் தன் கோபம் மொத்தத்தையும் காட்டி, காரின் கதவை அறைந்து சாத்தினாள். அறைக்குச் சென்றவள் தன் உடைகளை எடுத்துப் பேகில் அடுக்கியவள், "அத்தை! அத்தை!" என்று அழைத்தபடி கீழே இறங்கி வந்தாள்.
வித்யாவும், மேகலாவும் அமைதியாக நின்றிருந்தனர். "மேகலா! அம்மாவும், அத்தையும் எங்கே?" என்றாள்.
“கோவிலுக்குப் போயிருக்காங்க. நீ எங்கே கிளம்பிட்ட?" என்று அவள் கையிலிருந்த பையைப் பார்த்தாள்.
"என் வீட்டுக்குப் போறேன். அத்தை வந்தா சொல்லிடு. அம்மாவையும், அப்பாவையும் வீட்டுக்கு வரச்சொல்லிடு" என்றவள் வாசலருகில் நின்றிருந்த ராஜேஷைப் பார்த்து வெறுப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
தன்னுடைய செல்லத் தங்கையின் கையைப் பிடித்துத் தடுத்த ராஜேஷ், “மதும்மா! உன்னோட நல்லதுக்குத்தான்...." என்று தவிப்புடன் சொன்னவனை இடைமறித்தாள்.
"முதல்ல என் கையை விடு! எது... நல்லது. நீ செய்த காரியம் நல்லதா?" என்று கலங்கிய விழிகளுடன் அவள் கேட்டுக்கொண்டிருக்க, கையில் பேகுடன் தளர்ந்த கொடியாக நின்றிருந்தவளைப் பார்த்ததும் வாசலிலேயே நின்றான்.
"கூடப் பிறந்த தங்கைக்கு, ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்ன்னு எதிர்பார்க்கறது தப்பா?" என்று கேட்டான் ராஜேஷ்.
ஆத்திரத்துடன், “உன் தங்கை நல்லா வாழணும்னு நினைச்சித் தான், இந்த மாதிரி கேவலமான வேலை செஞ்சியா? உன் தங்கை வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு யாராவது கூட்டிக்கிட்டு வரச்சொன்னா, கூட்டிக்கிட்டுப் போயிடுவியா?" என்று கேட்டதும், “மது! முட்டாள் மாதிரி பேசாதே" என்று இறைந்தான்.
"என்ன? நீ சத்தமா பேசினா, செய்தது சரின்னு ஆகிடுமா? நீ என் கூடப் பிறந்த அண்ணன் தானே... எனக்கே சந்தேகமா இருக்கு. நீ செய்தது ஒரு அண்ணன் செய்யும் வேலையா? அதுக்கு வேற பேர் இருக்கு... " என்று ஆத்திரத்துடன் கத்தியவள் கன்னத்தில், ஓங்கி அறைந்தான் ராஜேஷ்.
அடுத்த அறை அவள் மீது விழும் முன், அவளை வேகமாகத் தன் பக்கமாக இழுத்த தீபக், ராஜேஷின் கையைப் பிடித்தான்.
"விடு தீபக்! அவளை என்ன செய்றேன் பார்" என்று கத்தினான்.
தீபக் கோபத்தோடு, “ராஜேஷ்! என்ன செய்றன்னு தெரிஞ்சி தான் செய்றியா. இப்படியா அவளை அடிப்ப. அவளை அடிக்க, உனக்கு என்ன உரிமை இருக்கு. அவள் கேட்டதுல என்ன தப்பு? அவதான் பிடிவாதமா இருக்கான்னா, நாமதான் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகணும். ஆளாளுக்கு அவளைப் பாடு படுத்தினா, அவள் யாரிடம் போய்ச் சொல்வா. யாரோ ஒரு சித்தார்த்துக்காக யோசிக்கிற... உன் தங்கையோட மனசைப் புரிஞ்சிக்க மாட்டேன்ற” என்றவன் கன்னத்தைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
அவள் பேசிய வார்த்தையை விட, ‘உயிருக்கு உயிரான தன் தங்கையை அடித்து விட்டோமே!’ என்ற எண்ணத்தில் மருகிக் கொண்டிருந்தா ராஜேஷ்.
ராஜேஷின் தோற்றத்தைப் பார்த்த வித்யா, “அத்தான்!" என்று அவன் தோளைத் தொட்டு ஆறுதலாகத் தட்டிக்கொடுத்தவள் தீபக்கை பார்த்து, “அண்ணா! என்ன பேசற நீ? அண்ணன், தங்கச்சி ரெண்டு பேரும் பேசிட்டிருக்கும் போது, நீ எதுக்குத் தலையிடற? ஒரு அண்ணனைப் பார்த்துக் கேட்கும் கேள்வியா இது? படிச்சவ தானே... எதுக்காக இப்படிச் செய்தாங்கன்னு புரிஞ்சிக்கத் தெரியாத முட்டாளா அவள்?" என்று கணவனுக்காக, தமையனிடம் முறைத்துக் கொண்டு நின்றாள்.
"நீ எதுவும் பேசாதே! எல்லோரும் சேர்ந்து அவளை ஏன் டார்ச்சர் பண்றீங்க. அவளுக்குத் தெரியாதா... நாம ஏன் சொல்றோம்ன்னு. அவளுக்கும் யோசிக்க நேரம் கொடுக்க வேண்டாமா" என்று பேசிக்கொண்டே, ‘எதுவும் சொல்லாதே என்று கண்களாலேயே தங்கைக்குத் தகவல் பரிமாறியவன், மதுவிடம் திரும்பினான்.
கன்னத்தை பிடித்தபடி அழுது கொண்டிருந்தவளிடம், “மது! வா வெளியே போய்ட்டு வரலாம்" என்றான்.
பயத்துடன் பின்னால் சென்றவள், "இல்ல... நான் வரமாட்டேன். எனக்கு இங்கே இருக்கவே பயமாயிருக்கு. யாரை நம்பறது? யாரை நம்பக்கூடாதுன்னே தெரியல" என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
ராஜேஷ் கண்களை மூடி, மனத்தின் வலியை மறைக்க முயன்றான். வித்யா கோபத்துடன் மௌனமாக இருக்க, கண்கள் கலங்க மதுமிதாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மேகலா.
அருகில் சென்ற தீபக், “மது, நீ அழுததெல்லாம் போதும். உன்னை மீறி எதுவும் நடக்காது. வா" என்றவன் மேகலாவிடம், “நீயும் வா" என்றான்.
"இல்லத்தான்! நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க" என்றாள்.
மதுவை அழைத்துக்கொண்டு பீச்சில் வந்து அமர்ந்தான். அவளது கண்கள் அலையை பார்த்துக் கொண்டிருக்க கைகள் மணலில் அலைந்துக்கொண்டிருந்தது.
"மது! என்ன நடந்தது எனக்குச் சொல்லு" என்றதும், நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு, “சித்தார்த் நல்லவரா இருக்கவும் ஒரு பிரச்சனையும் இல்ல. இல்லான்னா, என்னோட நிலைமை..." என்று சொன்னதும், தீபக்கிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
சற்றுநேரத்திற்குப் பின், “அப்போ, சித்தார்த் நல்லவன்னு நீ ஒத்துக்கற?" என்றான்.
"நல்லவனை, நல்லவன்னு சொல்றதுல தப்பில்லயே. எத்தனையோ முறை நான் சித்தார்த்தோடு தனியாக காரின் போயிருக்கேன். ஆபீஸ்ஸிலுல் தனியா இருந்திருக்கேன். அவரோட பார்வை ஒரு முறை கூட என்மேல தவறாக விழுந்ததில்லை" என்றதும் சிரிப்புடன் தீபக் ஏதோ சொல்லவர இடைமறித்தவள், "அதுக்காக சித்தார்த்தைக் கல்யாணமெல்லாம் செய்துக்க முடியாது” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
எழுந்தவன் பேண்ட்டில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிடும் போது, ஈர மணலில் அவள் எழுதியிருந்ததை பார்த்தவனின் மனத்தில் குப்பென சந்தோஷம் பரவ, அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“அடி முட்டாள் பெண்ணே! உன் மனத்தில் இருப்பவனின் பெயரை எழுதத் தெரிந்த உனக்கு, அவன் உன் மனத்தை வென்றுவிட்டதை அறிந்து கொள்ள முடியவில்லையே" என்று நினைத்துக்கொண்டு, மொபைலில் அதைப் படமும் எடுத்துக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்தான்.
********************
சித்தார்த் வீட்டிற்கு வரும்போது இருட்ட ஆரம்பித்திருந்தது.
சோர்ந்த முகத்துடன் வந்த மகனைப் பார்த்த தேவகி, "சித்தார்த்! என்னப்பா ஒரு மாதிரி இருக்க?" என்றார் வாஞ்சையுடன்.
"ஒண்ணுமில்லம்மா. கொஞ்சம் பிசினஸ் டென்ஷன். நான் வெளியிலேயே சாப்பிட்டுட்டேன். ரூமுக்குப் போகிறேன்" என்று அறைக்குச் சென்றவன், லாஞ்சில் வெறும் தரையில் படுத்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் சுபா குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கே வர குழந்தைகள் ஓடிவந்து அவன் அருகில் அமர்ந்துக்கொண்டு, “மாமா! ஒரு கதை சொல்லுங்க. சித்தப்பா! யானைக் கதை சொல்லுங்க” என்றதும், குழந்தைகளின் மழலையில் சிறிதுநேரம் தன்னை மறந்து அவர்களுடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தான்.
அருகில் வந்த சுபா, “கதை கேட்டது போதும். இப்போ குட் நைட் சொல்லிட்டு எல்லோரும் போய்த் தூங்குவீங்களாம். அப்போ தான் நாளைக்கு நாம எல்லோரும் வெளியே போகலாம்” என்றதும், குழந்தைகள் ஓடிச் சென்று சித்தார்த்தின் கட்டிலில் படுத்துக்கொண்டனர்.
டெல்லியிலிருந்து சுபா வந்தால், குழந்தைகள் நால்வரும் சித்தார்த்துடன் தான் படுத்துக் கொள்வார்கள். அவனும் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி கதை சொல்வது, பாட்டு பாடுவது என்று தனது ஏமாற்றத்தைச் சற்று நேரம் மறந்திருப்பான்.
இப்போதும் அவன் அதே ஏமாற்றத்துடன் இருந்தாலும், அது தற்காலிகமானது என்ற நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால், அந்த நம்பிக்கை மெய்யாக எத்தனைக் காலங்கள் ஆகுமோ! என்ற சிறு கவலை மட்டும் நெஞ்சை நெருடிக்கொண்டே இருந்தது.
குழந்தைகள் சென்றதும், அவனருகில் அமர்ந்த சுபா, “எங்கேடா அவ்வளவு அவசரமா போன?" என்றாள்.
ஆழமூச்செடுத்தவன், ஸ்ரீராமை பார்த்துவிட்டு, மதுவைச் சந்தித்து பேசியது வரை ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு தமக்கையைப் பார்த்தான்.
“பைத்தியமாடா உனக்கு? அவளே எதிலும் பட்டும், படாமலும் இருக்கா. அவளே மனசு மாறி வர மாட்டாளா? நீ ஏன்டா நடுவில் போய் இப்படிச் சொல்லிட்டு வந்திருக்க" என்று கோபத்துடன் கேட்டாள்.
"இல்ல சுபா! முதல்ல எனக்கும் ஆத்திரம் வந்தது. ஆனா, அவள் என்னைப் பார்த்தாலே பயப்படுறா. அவளோட கண்ணுல அந்தப் பயம் தெரியுது. நான் அவளைச் சந்தோஷமா வச்சிக்கணும்னு தான் நினைக்கிறேன். என்னைப் பார்த்தாலே பயப்படுறவளை, என்னால் தான் நிம்மதியே போச்சுன்னு சொல்றவளை என்ன செய்றது? அவளைப் பார்த்தா பாவமா இருக்கு.
வாழ்க்கைல நிறையவே அழுதுட்டா. போராடித் தான் ஓரளவு தேறி வந்திருக்கா. அவள் பழையபடி சாதாரணாமா இல்லனாலும், இப்படியே இருக்க என்ன வேணாலும் செய்வேன். நான் அவளோட வாழ்க்கையிலிருந்து போனால் தான், அவளுக்குச் சந்தோஷம்னா, என்னோட காதல் தான் அவளோட நிம்மதியைக் குலைக்குதுன்னா, அப்படிப்பட்டக் கல்யாணம் எனக்குத் தேவை இல்லை” என்றான் அழுத்தமாக.
“அவள் என்னைக் கல்யாணம் செய்யாமல் இருந்தாலும், ஒருவேளை அவளோட மனசு மாறி, வேற யாரையாவது கல்யாணம் செய்துகிட்டாலும், எனக்குச் சந்தோஷம் தான். அவளோட சந்தோஷத்தைப் பார்த்துக்கிட்டே நான் நிம்மதியா இருந்துடுவேன்" என்றான்.
தன் தம்பியைப் பார்த்து வருத்தப்படுவதா! இல்லை, அவனுடைய நல்ல மனத்தைப் பார்த்துச் சந்தோஷப்படுவதா என்று புரியாமல், "சித்தார்த்! உன்னோட நல்ல மனசு, நிச்சயமா அவளோட சேர்த்து வைக்கும். பார்த்துக்கிட்டே இரு... கூடிய சீக்கிரமே மது உன்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதம்ன்னு சொல்வா" என்று கண்கலங்க சொன்னாள்.
சாப்பிடாமல் வந்து விட்ட மகனுக்காக, பாலைக் காய்ச்சி எடுத்துக்கொண்டு அறைக்கு வந்த தேவகி, மகன் சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டு, கனத்த மனத்துடன் வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றார்.
பூஜையறைக்குச் சென்றவர், ‘கடவுளே! என் மகனோட நல்ல மனசை அவள் என்னைக்குப் புரிஞ்சிக்குவா? அவனுக்காக, அவனோட சந்தோஷத்துக்காக தானே நாங்க அத்தனைப் பேரும், அவனுக்கு ஆதரவா நிக்கிறோம். என் பிள்ளை மனசறிஞ்சி யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்ல. அவனோட நல்ல மனசை நோகடிச்சிடாதேப்பா! அவனுக்கு வாழ்க்கைல நிம்மதியைக் கொடு’ என்று மனமுருக பிராத்தித்துக் கொண்டார்.
****************
"அம்மா! நான் ஆபீஸ் கிளம்பறேன். வரேன் அத்தை" என்று சொல்லிக்கொண்டு கிளம்பிச் செல்பவளை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஆனால், இன்று மது ஆபீஸ் கிளம்பி செல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
சித்தார்த்திடம் பேசியதையோ, ராஜேஷிடம் சண்டை இட்டதையோ பெரியவர்கள் இதுவரை அறியவில்லை. ஆனால், வீட்டில் இருந்த ஒருவிதமான இறுக்கத்தை வைத்தே ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டனர்.
அலுவலகத்திலும் அவள் மீண்டும் வந்தது குறித்து, அனைவருக்கும் ஆச்சரியம் மட்டுமல்லாமல் சந்தோஷமாகவும் இருந்தது. தன் அறையிலிருந்தபடியே அவள் வந்திருப்பதை பார்த்தான் சித்தார்த்.
அவள் வேலையை விட்டுச் செல்லப் போவதை, யாரிடமும் சொல்லவில்லை. காலையில் விரைவாகவே வந்து விடுவதும், மாலையில் அவள் சென்ற பின்னே செல்வதும், மதிய உணவு நேரத்தில் எதாவது காரணம் சொல்லி வெளியே சென்றுவிடுவதுமாக இருவரும் மூன்று நாள்களாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.
அன்று மாலை அலுவலகம் முடியும் நேரம் நண்பர்கள் இருவரிடமும், நாளை தான் மது அலுவலகம் வருவது கடைசி நாள். அதனால், அவளுக்குப் பிரிவு உபச்சாரத்திற்குபார்ட்டிக்கு ஏற்பாடு செய்யும்படியும், மதியம் அனைவருக்கும் லஞ்ச் தன்னுடைய செலவு என்று சொன்னான்.
ரமேஷ் அதிர்ச்சியுடன், “என்னடா! என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அவள் என்னவோ சமாதானம் ஆகி வரா, நீதான் கொஞ்சம் விலகிப் போறன்னு நாங்க நினைச்சிட்டிருக்க, நீ இப்படிச் சொல்கிற" என்றான்.
சித்தார்த் எதுவும் சொல்லாமல், இரண்டு கைகளையும் கோர்த்து டேபிள் மேல் வைத்து அதில் தன் நெற்றியைப் பதித்தபடி அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்கவே, இருவருக்கும் வேதனையாக இருந்தது.
ஜீவா, “ஏன்டா அவள் திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்தா?" என்று கேட்டான்.
சித்தார்த் கண்களை மூடியபடியே, "அவள் வேலையை விட்டுப் போறதுக்குக் காரணமே நான்தான். ப்ளீஸ்! இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதீங்க" என்றவன் எழுந்து வெளியில் சென்றான்.
அதேநேரம் மதுவும் தன் கேபினிலிருந்து வெளியில் வருவதைக் கவனித்தவன் அங்கே நின்றிருந்த சிவாவிடம் ஏதோ கேட்பதைப் போல திரும்பி நின்று பேசினான். ரமேஷும், ஜீவாவும் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
சித்தார்த்தின் செய்கையைக் கண்டவளுக்குச் சற்று கஷ்டமாக இருந்தது. அவள் மீண்டும் தன் இடத்திற்குச் சென்றுவிட, சித்தார்த்தும் அங்கிருந்து சென்றான். அவன் அந்த ஹாலைக் கடந்து வெளியில் செல்லும் வரை, மது அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று காலையிலிருந்தே மனத்தில் இனம் புரியாத ஒர் உணர்வு ஆட்கொண்டு, அவளை இம்சித்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் அலுவலகம் வந்த சித்தார்த் பதினோரு மணிக்கெல்லாம் முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி கிளம்பிவிட்டான். மதியம் மூன்று மணிக்கு, மதுவிற்குப் பிரிவு உபச்சார விழா நடந்தது. சித்தார்த் வரவே இல்லை. உடன் பணிபுரிபவர்கள் யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. கீதா மிகவும் வருத்தப்பட்டாள்.
சிவாவும், லதாவும் கூட வந்து பேசினார்கள். ஆனால், அனைத்துக்கும் வலிய வரவழைத்த புன்னகை ஒன்றைப் பரிசாகக் கொடுத்துவிட்டு, “என்னால் உங்க யாரையும் மறக்க முடியாது. நாம எப்போதும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் தான். இங்கேயிருந்து போனாலும் உங்களையெல்லாம் என்னால் மறக்க முடியாது" என்றாள்.
சிவாவும், லதாவும் பேசிவிட்டுச் சென்றதும் கீதா மதுவைப் பார்த்து, “நீ எங்கே போனாலும் எங்களை மட்டும் இல்ல மது, சித்தார்த்தையும் உன்னால மறக்க முடியாது" என்று சொல்லிவிட்டுச் சென்றாள். அலுவலகத்தில் அனைவரும் கிளம்பிச் சென்றிருக்க, மதுமிதா டேபிளில் தலைகவிழ்ந்து அமர்ந்தாள்.
அங்கே வந்த ஜீவா, "மதுமிதா!" என்று அழைக்க, வேகமாக எழுந்தாள்.
ஜீவாவும், ரமேஷும் நின்றிருந்தனர்.
ரமேஷ், "மது! நீ ரொம்பப் புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா, இவ்வளவு முட்டாளா இருப்பன்னு நினைக்கவே இல்ல. சித்தார்த் மாதிரி ஒருத்தன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும். அவனோட வலியையும், வேதனையையும் தனக்குள்ளயே புதைச்சிக்கிட்டு நடமாடிட்டிருக்கான். வலிய வரும் நல்ல வாழ்க்கையை உதறித் தள்ளிட்டு நீ இருக்க. முடிஞ்சா உன்னோட பிடிவாதக் குணத்தை மாத்திக்க முயற்சி செய். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல" என்றான் கவலையுடன்.
“கையில கிடைச்ச பொக்கிஷத்தை நழுவ விட்டுட்டு நிக்கிற மதுமிதா! நீ நழுவவிட்டப் பொக்கிஷம் இன்னும், உன் முன்னால தான் இருக்கு. அதைப் பாதுகாப்பா எடுத்து வச்சிக்கிறதும்; போனால் போகட்டும்ன்னு விட்டுட்டுப் போறதும் உன் கையிலதான் இருக்கு" என்றான்.
தலைகுனிந்தபடியே இருவரும் சொன்னதைக் கேட்டுக் கொண்டவள் வாயைத் திறக்கவே இல்லை. ஒரு பெருமூச்சுடன் இருவரும் சென்றதும், சித்தார்த்தின் அறையைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனைச் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வும் அவளை ஆக்கிரமித்தன. அந்த நினைவுகளின் ஆதிக்கத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள எண்ணி, வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலைகளை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் புது வேலைக்கான உத்தரவுக் கடிதத்தை எடுத்தாள். அதையே ஆழ்ந்து நோக்கியவள் சுக்குநூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சந்துரு, விமலாவின் அருகில் வந்து அமர்ந்தாள். அவளது முக வாட்டத்தைக் கண்ட விமலா, “என்னம்மா ஒரு மாதிரியிருக்க?" என்று கரிசனத்தோடு கேட்டார்.
"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று தயங்கினாள்.
“சொல்லுமா!" என்றார் சந்துரு.
வறண்ட இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு, "நா..நான்.. வேலையை விட்டுட்டேன் அப்பா" என்றாள்.
விமலாவும், சந்துருவும் ஒருசேர அதிர்ந்தனர். "என்னம்மா சொல்ற? எங்ககிட்டக் கூடச் சொல்லாம... ஏன் இந்தத் திடீர் முடிவு?" என்று கேட்டார்.
"எனக்குப் பிடிக்கல" என்றாள்.
விமலா கோபத்தோடு, “நாங்க உன்னை வேலைக்குப் போக வேண்டாம்ன்னு சொன்ன போது, எனக்கு ஒரு மாற்றம் வேணும்ன்னு நீயாதானே வேலைக்குப் போன. இப்போ திடீர்ன்னு பிடிக்காமல் போக என்ன காரணம்? வேலைக்குப் போகப் பிடிக்கலையா? இல்லை, அங்கே இருக்கறவங்களைப் பிடிக்கலயா?” என்று கேட்க, என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.
"விடு விமலா. அவளுக்குப் போகப் பிடிக்கல விட்டுட்டா. அதை ஏன் பெரிசுப்படுத்துற?"
"இன்னுமா உங்களுக்குப் புரியல. வரவர அவள் நம்மள மதிக்கறதே இல்ல. அவளோட இஷ்டத்துக்கு நடந்துக்கறா" என்றார் கடுமையாக.
மறுப்பாக, "அப்படியெல்லாம் இல்லம்மா" என்றாள் வேகமாக.
"என்ன அப்படியெல்லாம் இல்ல? உன்னை நான் நேரடியா கேட்கறேன் சொல்லு. ஏன் சித்தார்த்தை வேண்டாம்னு சொல்ற?” என்று கேட்டதும் " சம்மந்தமே இல்லாம இப்போ எதுக்கும்மா அந்தப் பேச்சு" என்று எரிச்சலுடன் கேட்டாள்.
"சம்மந்தம் இல்லாமலா வேலையை விட்டுட்டு வந்த? இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அண்ணன் வந்திடுவான். வந்து அவனே கேட்கட்டும்" என்று சொல்லும்போதே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
"இதோ வந்தாச்சு. போ போய் நீயே கதவைத் திற" என்றார்.
‘கடவுளே! இந்த நேரம் பார்த்தா இவர்கள் வர வேண்டும்?’ என்று எண்ணிக்கொண்டே கதவைத் திறந்தாள்.
ஈஸ்வரன், ராஜி இருவரும் கல்லூரியில் அனைவருடனும் சுற்றுலா சென்றிருக்க, அவர்களைத் தவிர மற்ற நால்வரும் வந்திருந்தனர். வித்யா, இன்னமும் மதுவிடம் சரியாகப் பேசுவதில்லை.
"வாங்க" என்ற அவளது வரவேற்புக்கு தீபக், “வாய்தான் வாங்கன்னு வரவேற்குது. முகம், ஏன்டா இவங்க வந்தாங்கன்னு கேட்கறது போல இருக்கே... என்ன விஷயம்?" என்றான்.
அதற்குள், “வாங்கப்பா! அப்பா, அம்மா எப்படி இருக்காங்களாம்?" என்று கேட்டுக் கொண்டே பெரியவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்.
காரை நிறுத்திவிட்டு ராஜேஷ் அப்போதுதான் உள்ளே நுழைந்தான். மதுவிற்கு அவனைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.
"மது எப்படிடா இருக்க?" என்று வாஞ்சையுடன் கேட்டதும், “ம்ம், நல்லா இருக்கேண்ணா" என்று கண்களில் நீர் தளும்பக் கூறினாள்.
அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, “ரெண்டு நாள் லீவ் தானே. எங்கேயாவது அவுட்டிங் போகலாமா?" என்று தீபக் கேட்க, ஆளுக்கொரு இடத்தைச் சொன்னார்கள். மது மட்டும் மௌனமாகவே அமர்ந்திருந்தாள்.
மேகலா, “மது, உனக்கு நாளைக்கு ஆபீஸ் லீவ் தானே..." என்று கேட்டதும், "இனி, அவளுக்கு எப்பவுமே லீவ் தான். அவள்தான் வேலையை விட்டுட்டு வந்துட்டாளே" என்றார் விமலா ஆற்றாமையுடன்.
“ஏன் வேலையை விட்ட மது?" என்று ராஜேஷ் கேட்டும், அவள் எதுவும் சொல்லாமல் கலவரத்துடன் அமர்ந்திருந்தாள்.
"இன்னைக்குக் கூடச் சித்தார்த்கிட்டப் பேசினேனே. அவன் என்னிடம் ஒண்ணுமே சொல்லலையே” என்றவன் அழுத்தமாக அமர்ந்திருந்தவளை எரிச்சலுடன் பார்த்தான்.
“நீ செய்றது எதுவும் சரியில்ல. இப்படிக் கேட்கறதுக்கு எதுக்கும் பதிலே சொல்லாம தலை குனிஞ்சி உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? அன்னைக்கு வீட்டுக்கு வந்த சித்தார்தோட அப்பா, அம்மாவிடம் மட்டும் வாய் கிழியப் பேசின இல்ல. இப்போ வாயைத் திறக்க முடியலையா? சொல்லு” என்று அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தினான்.
அவள் கோபத்தோடு, “எனக்குப் போக இஷ்டம் இல்ல. அவ்வளவு தான். ஒரு வேலையை விட்டுட்டு வந்ததுக்கா இவ்வளவு கேள்வி? நீங்க இதைச் சாக்கா வச்சி என்ன பேசுவீங்கன்னு எனக்குத் தெரியாதா?" என்றாள்.
“மது! ஒரு குடும்பம்ன்னு இருந்தா, அதில் இருக்கும் எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது இயல்பு தானே. நாங்கலாம் எங்களுக்குன்னு ஒரு துணையோடு இருக்கும் போது நீயும் அப்படி இருக்கணும்ன்னு நினைக்கறதுல தவறு இல்லயே" என்றான் தீபக்.
"எனக்கு புதுசா எந்தத் துணையும் வேண்டாம். நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்" என்றாள் தவிப்புடன்.
ராஜேஷ் ஆதங்கத்துடன், "அறிவிருந்து தான் பேசறியா? ஏம்மா, இப்படியிருக்க? எங்களோட ஏக்கத்தை புரிஞ்சுக்கவே மாட்டியா? நீ புருஷன், குழந்தைகள்னு உன் குடும்பத்தோடு சந்தோஷமா இருப்பதைப் பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்றான்.
கண்ணீரை அடக்கியபடி, “வேண்டாண்ணா! உன் தங்கைக்கு அந்தக் கொடுப்பினை இல்லன்னு நினைச்சிக்கோ. எனக்கு நீங்க இத்தனைப் பேர் இருக்கீங்க. யாராவது எனக்கு மூணு வேளை சாப்பாடு போட மாட்டீங்களா? உங்களுக்குப் பிறக்கப் போற குழந்தைகளைப் பார்த்துக்கிட்டு உங்க எல்லோருடனும் சந்தோஷமா இருந்துட்டுப் போறேனே" என்றாள் கெஞ்சலாக.
ராஜேஷ் வெறுப்புடன், “குழந்தைகளா! அது எப்படி வரும்? உனக்காக, உனக்கு ஒரு குடும்ப வாழ்க்கை அமையும் வரை நமக்கு குழந்தை வேண்டாம்ன்னு இருக்கா வித்யா. அவளை விடு. அவளாவது உனக்கு மாமா பொண்ணு. ஆனா, மேகலா... அவ என்ன பாவம் பண்ணினா? அவளுக்குத் தலையெழுத்தா? கல்யாணமாகி இதுநாள் வரைக்கும், ரெண்டு பேரும் தனித்தனியா தான் இருக்காங்க. தெரியுமா உனக்கு? இதெல்லாம் யாருக்காக? உனக்காக. உன் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கவங்களை நீ எவ்வளவு வேதனைப் படுத்துறன்னு புரிஞ்சிக்க" என்றான்.
மதுவின் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. விமலாவும், சந்துருவுமே இதைக் கேட்டு உறைந்திருந்தனர்.
"ஏன் எல்லோரும் என்னைக் கொல்லாம கொல்றீங்க? நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ, இந்த ஜென்மத்தில் மனசுல நிம்மதியே இல்லாம இருக்கேன். நீங்களும் சேர்ந்து ஏன் என்னை வதைக்கிறீங்க" என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
"மது! நம்ம மூணு குடும்பத்து சந்தோஷமும் உன் கையில் தான் இருக்கு. நீ உன் கல்யாணத்திற்குச் சம்மதம்ன்னு ஒரு வார்த்தைச் சொல்லு. உன்னோட அந்த ஒரு வார்த்தைக்காக, எத்தனைப் பேர் ஏங்கிட்டு இருக்காங்க? தெரியுமா" என்றான் தீபக்.
ராஜேஷ், "மது! சித்தார்த்துக்கு என்ன குறை? படிச்சிருக்கான்; அழகாயிருக்கான்; புத்திசாலி; நல்லவன் எல்லாத்துக்கும் மேலே, உன்னை அளவுக்கு அதிகமா நேசிக்கிறான். இதுக்கு மேல என்னடா வேணும்?" என்று தங்கையின் கரத்தைப் பிடித்துக்கொண்டு உருக்கத்துடன் பேசினான்.
"நான்தான் கல்யாணம் வேண்டான்னு சொல்றேனே. ஏன் என்னைத் திரும்பத் திரும்ப வதைக்கறீங்க" என்றவள், தன் அறைக்குச் செல்ல முயன்றவளைப் பிடித்து வேகமாகத் திருப்பினான்.
“லூசா நீ! கிளிப்பிள்ளைக்குச் சொல்றா மாதிரி சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடானா உன் விருப்பப்படி இருக்க. அதென்ன அப்படி ஒரு பிடிவாதம் உனக்கு" என்றான் சீற்றத்துடன்.
அவளை இழுத்துச் சென்று விமலா, சந்துரு எதிரில் நிற்க வைத்து, "இவங்க யாரு? உனக்கும், இவங்களுக்கும் என்ன சம்மந்தம்? அர்ஜுனைப் பெத்து, வளர்த்து, ஆளாக்கி பிள்ளைக்குக் கல்யாணம் செய்து வைக்கணும் என்ற நேரத்தில், மொத்தமா அவனை இழந்துட்டு நிற்கிறாங்க.
அவங்களே மனசைத் தேத்திக்கிட்டு இல்லயா? தன்னோட பிள்ளை, உன்னை ஆசைப்பட்டான்னு... அவன் சொன்ன ஒரு சொல்லுக்காக, அவனோட விருப்பத்தை நிறைவேத்த, உன்னை அவங்க பொண்ணா ஏத்துக்கிட்டு உனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கணும்னு நினைக்கிறாங்களே... அவங்களைப் பத்தி ஒரு நாளாவது நினைச்சிப் பார்த்தாயா?
அவங்களோட கெஞ்சல், கொஞ்சமாவது உன் காதுல விழுதா? நீ செய்வதை எல்லாம் பொறுத்துக்கொண்டு போறாங்க. சொல்லப்போனா, நீ இழந்தது ஒண்ணுமே இல்ல. ஆனா, அவங்க வாழ்க்கையோட மொத்தச் சந்தோஷத்தையும் அர்ஜுனோட இழப்போடுச் சேர்த்து இழந்துட்டு நிக்கிறாங்க” என்று சொன்னதும் குமுறிக் குமுறி அழுதாள்.
"நீ என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கல்யாணம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம். என்னால சித்தார்தோட வாழ்க்கையே நரகம் ஆகிடும். உன் பிரெண்டோட வாழ்க்கையே நாசம் ஆகிடும். அது தான் உனக்கு வேண்டுமா?" என்றாள் அழுகையோடு.
தீபக், “மது எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். என் கல்யாணம் நடக்க, நான் போட்டக் கண்டிஷனை நீ இன்னும் மறந்துதிருக்க மாட்டேன்னு நினைக்கிறேன். நான் சொன்னதைச் செய்வேன் மது. ரெண்டு நாள் யோசி நல்ல முடிவா எடு" என்றான்.
"ஐயோ...! என்னை ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க? எனக்குக் கல்யாணம் வேண்டாம். சித்தார்த்தோட வாழ்க்கை, என்னால கெட வேண்டாம். சித்தார்த் சந்தோஷமா இருக்கணும். என்னைக் கல்யாணம் செய்துகிட்டா அவருக்குப் பிரச்சனை தான். என்னை வற்புறுத்தி கல்யாணம் செய்து வச்சி, அவரோட வாழ்க்கையைச் சூனியமா ஆக்கிடாதீங்க" என்றவள் வேகமாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
நடந்த அனைத்தையும் நடுவில் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர்கள் இருவரும் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.
விமலா கண்கலங்க அதைக் கண்ட தீபக், "ஆன்ட்டி, ப்ளீஸ் அழாதீங்க! அவ கூடிய சீக்கிரமே நல்ல பதிலா சொல்லுவா. நாங்க கிளம்பறோம். வரோம் அங்கிள்” என்று விடைபெற்றனர்.